யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

கற்களின் காவியம் - எல்லோரா - இறுதிப்பகுதி

Published by யாத்ரீகன் under , , , , , on புதன், ஜனவரி 16, 2008
"கற்களின் காவியம் - எல்லோரா" தொடரை தொடர்ந்து படித்து வந்தவர்களுக்கும் , பின்னூக்(ட்ட)மளித்தவர்களுக்கும் மிக்க நன்றி . இத்தொடரில் வந்தவை மட்டும் எல்லோரா அல்ல, இதை விடவும் அறிய , அழகிய சிற்பங்கள் இருந்திருக்கலாம், எங்கள் கண்களில் தென்படாமல் போயிருக்கலாம். பலரை இந்த இடங்களுக்கு போக தூண்டுவதே இந்த தொடரின் நோக்கமாக வைத்து முயற்சி செய்தேன்.

இதன் முந்தைய பகுதிகள் இங்கே ...

முதல் பகுதி
இரண்டாம் பகுதி
மூன்றாம் பகுதி
நான்காம் பகுதி
ஐந்தாம் பகுதி

நாம் பார்த்த பிரமாண்டமான சிலைகள் உள்ள குகை இருந்த சுற்றம் எப்படி இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள் ? வேறொன்றும் இல்லாத அடர்ந்த காடாகவா ? சற்றே கிழே பாருங்க. இந்த புகைப்படம் , இதுதான் குகையின் பின்புறம்.



பச்சை பசேலேன்ற புற்களும் , அருகில் பெரிதாய் விழும் நீர்வீழ்ச்சியும் என எவ்வளவு இரசனையை இருக்கின்றது இந்த இடம். இதெல்லாம் பார்க்கும்போது , சத்தியமாய் கூண்டுக்குள் இருப்பது போல ஒரு வீட்டை நினைத்துப்பார்க்க கூட முடிய வில்லை :-)

அடர்ந்த கானகத்தினுள், குதிரையின் லாடத்தைப்போன்ற வடிவத்தில் இருக்கும் ஒரு பள்ளத்தாக்கு . அந்த பள்ளத்தாக்கின் ஓரத்தில் ஒரு மிகப்பெரும் நீர்வீழ்ச்சி, பள்ளத்தாக்கின் கிழே அந்த நீர்வீழ்ச்சியினால் உருவான ஆறு ஓடிக்கொண்டிருக்க, அந்த பள்ளத்தாக்கின் சுவற்றில்தான் அஜந்தா குகைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன ..

கிழே உள்ளது , அந்த குகையின் உள்ள ஒரு பின் வாசல், இந்த வாசற்படிகள் , நீர்வீழ்ச்சியினால் உருவாகும் தடாகத்திற்கு கொண்டு செல்கின்றது .

நீண்ட மலைத்தொடரில், பல வருடங்களாக தொடர்ந்து நடந்த கடின உழைப்பு தான் அஜந்தா - எல்லோரா குகைகள் (சிலைகள் / ஓவியங்கள் ). அருகே நீர்வீழ்ச்சியும், பள்ளத்தாக்கும், அடர்ந்த கானகமும் என நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பார்ப்பவர்க்கு அருமையான சூழல்கள், ஆனால் இதை உருவாக்கியவர்களுக்கு ? அந்த முகம் / பெயர் தெரியாத கலைஞர்களுக்கும், இது சாத்தியமாயிருந்த அனைவருக்கும் நன்றிகள்.

வெளிநாட்டில் எல்லாம் ஊர் சுற்றி விட்டு, நம் ஊருக்கு வந்த உடன், சத்யம் , சிட்டி சென்டர் , பெசன்ட் நகர் , பெரிய விடுமுறை விட்டால் உடனே சொந்த ஊருக்கு போவது என பழக்கம் குறைந்து விட்டாலும், அப்படி இருக்கும் சிலரை இந்தியாவிலும் பார்க்க வேண்டிய இடங்கள் எவ்வளவோ உள்ளது என நினைக்க வைத்திருந்தால் மகிழ்ச்சியே ..

பாட புத்தகத்தில் மட்டுமே படித்தால் வரலாறு சத்தியாமாய் கசக்கத்தான் செய்யும், (அருமையான ஆசிரியர் ஆசான் (நன்றி : இராம.கி ஐயா) இல்லாத நிலையில்). கோடை சுற்றுலாதலங்கள் தவிர்த்து உங்கள் மகன்/ மகள்களை இப்படி சுற்றுலா கூட்டிச்செல்லுங்கள், வெளிச்சத்தை நீங்கள் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினால், இருட்டை விட்டு வெளியே சீக்கிரம் வருவார்கள் ..

புத்தகம் படிக்கும் பழக்கம் , தாய்மொழியை நேசிக்கும் பழக்கம் , மற்றவற்றை மதிக்கும் பழக்கம் என்பதோடு .. உலகத்தை கண்களாலும், செவிகளாலும் , மனதாலும் பார்க்க இத்தகைய பயணங்கள் பயன்படும்.

வாருங்கள் பயணிக்கலாம் .... :-)

பி.கு:
அடுத்த பயணத்தொடர், இதுவும் எல்லோரா குகைகளில் ஒன்றான குகை எண் 16 -ஆன "கைலாசநாதர் கோயில்" எனப்படும் குகைக்கோயில். வாயைப்பிளக்கும் ஆச்சர்யத்தை உருவாகிய குகைக்கோயில் என்பதாலும், நீண்ட தொடர் என்ற அயர்ச்சி தவிர்க்கவும், இது தனியொரு தொடராக பதிவிட முயல்கின்றேன்.

கற்களின் காவியம் - எல்லோரா - 5

Published by யாத்ரீகன் under , , , , , on ஞாயிறு, ஜனவரி 13, 2008
நம் நாட்டிலேயே உள்ள கலைச்செல்வங்களை பலரும் அறியும் வகையில் பகிர்ந்து கொள்ளும் தொடர்களில் , எல்லோரா குகைச்சிற்பங்களைப்பார்த்தோம். பல நாள் கழித்து மீண்டும் இந்த தொடரை தூசி தட்டி , அடுத்த தொடருக்கான வழி வகுக்க வேண்டிய நேரம் இது.

இதன் முந்தைய பகுதிகள் இங்கே ...

முதல் பகுதி
இரண்டாம் பகுதி
மூன்றாம் பகுதி
நான்காம் பகுதி


இதற்கு முன் சிவனின் ருத்ர தாண்டவத்தை பார்த்திருந்தோம் , இங்கே பார்ப்பது சிவனின் ஆனந்த தாண்டவம். சிலையின் முகத்தில் இருக்கும் சிரிப்பிலிருந்தே அதை நீங்கள் புரிந்து கொண்டிருபீர்கள்.

குகைக்குள்ளிருக்கும் மிகக்குறைந்த ஒளியுடன் , என்னிடமிருந்த சாதரண பாயிண்ட் அன்ட் சூட் காமிராவும் தன் கடைசி காலத்தில் இருந்ததனால் [சில்கா ஏரியினுள் விழுந்ததால் :-( ] , இந்த புகைப்படம் பயங்கர ஆட்டம் கண்டிருக்கின்றது மன்னித்துக்கொள்ளுங்கள்.

எட்டு கரங்களுடன் நடனமாடும் சிவன். ஒவ்வொரு கையிலிருக்கும் பொருளுக்கும், முத்திரைக்கும் பல விளக்கங்கள் பல இடங்களில் படித்திருப்போம், அவை மிக அழகாக வடிக்கப்பட்டிருந்தது. முக்கியமாய் தலையில் சூட்டியிருக்கும் கிரீடம், மிகவும் நுணுக்கமாய் கலையம்சம் கொண்டதாய் செதுக்கப்பட்டிருக்கின்றது.

சுற்றி இருக்கும் மற்ற கடவுளர்கள் ஒவ்வொருவரும் பல வகையான வாகனங்களில் இருப்பதும், சிலர் இசைக்கருவிகள் மீட்டுவதும், சிவனுக்கு சாமரம் வீசுவதும் என நீள்கின்றது இந்த சிற்பம்.


நாம் கோயில் வாசல்களில் துவாரக பாலகர்கள் எனப்படும் வாயில் காவலர்களின் சிலைகளை பார்த்திருப்போம். என்றாவது யோசித்திருக்கிறீர்களா ஏன் பெண் சிலைகள் வாயிற் காவலர்களாய் இல்லையென்று ?

இங்கே கிழே இருப்பது அங்கிருக்கும் லிங்கத்தின் சன்னதியில் வாயிற் காவலர்களை இருக்கும் நந்தினிகள் அங்கிருக்கும் துவாரக பாலர்களுக்கு சிறிதும் குறையாதவர்கள். நாங்கள் இவர்களின் முட்டியளவு கூட இல்லை .



இவர்களின் சிகையலங்காரத்தை பாருங்கள் எவ்வளவு அலங்காரங்கள் , சிலையை விட காதணியே பெரிதாய் இருக்கின்றது ;-)

இவ்வளவு பிரமாண்டமான குகைச்சிற்பங்கள் இருக்குமிடத்தை காக்கும் நிஜ காவலர்கள் எவ்வளவு கம்பீரமாய் , கவனமாய் இருக்க வேண்டும் , காவலிருக்கும் மற்ற காவலர்களுடன் எவ்வளவு Synchronize செய்து காவல் செய்ய வேண்டும். அவையெல்லாமே இந்த சிங்க காவலர்கள் செய்து விடுகின்றார்கள்.

எப்படி என்று கேட்கிறீர்களா ? ஒரு வாயிலில் சிங்கத்தின் சிலையருகே இருந்து இன்னொரு வாயிலைப்பார்த்தால் எந்த ஒரு தூணும் பார்வையை மறைக்காமல் இதற்கு குறுக்கே (Diagonal) இருக்கும் வாயிலில் உள்ள சிங்கத்தை பார்க்க இயலும். இத்தனை பருமனான , உயரமான தூண்களை , பரந்து விரிந்த இடத்தில் நிறுவும் போது இத்தகைய விஷயத்தையும் கருத்தில் கொண்டு செதுக்கியிருப்பது அவர்களின் கலை நுணுக்கம் மட்டுமின்றி, அறிவியல்/பொறியியல் அறிவையும் ஆற்றலையும் காட்டுகின்றது.



இங்கே கீழிருப்பது இந்திரனின் மனைவியான இந்திராணியின் மரம். ஒரே மரத்தில் பல வகையான கனிகளும் , அதை பார்த்து உண்ண வந்திருக்கும் மந்திகளும் , பறவைகளும் என உங்களால் கண்டு பிடிக்க முடிகின்றதா ?



இந்தரலோகம் என பெயரிடப்பட்ட குகையொன்று , அதன் உச்ச கட்டத்தில் மிகவும் வண்ண மயமாய் இருந்திருக்க வேண்டும் .. அதிலிருக்கும் தூண்களின் வேலைப்பாடுகளும் , இன்னும் மறையாமலிருக்கும் வண்ணங்களும் என இன்னும் நம்மை பிரமிக்க வைக்கின்றது. இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்பதற்கு முன் இந்திரலோகத்தில் எங்கள் சீனி :-)



80 டன் எடையுள்ள கற்கள் மிக உயரமுள்ள கோபுரத்தின் மேலிருப்பதும் , ஆயிரம் வருடங்களில் அழியாத வண்ணங்களும், நேரத்தை துல்லியமாய் கணக்கிட சூரிய கடிகாரத்தை கோயிலின் / தேரின் சக்கரமாய் வடிவமைப்பது .. என .. சொல்லிக்கொண்டே போகலாம் , இந்த நாட்டில் இருந்த அறிவும், ஆற்றலும், கலை நுணுக்கமும் .. எங்கே போனது அவையெல்லாம் ? பரம்பரை அறிவாய்கூட வழி வரவில்லையா ? இரண்டு தலை முறைக்கு முன் என் முன்னோர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என இப்பொழுதுதான் கேள்வி எழுகின்றது , அதற்கு முழுதாய் பதிலளிக்கவும் என் தந்தையால்/தாயால் முடியவில்லை ..

மிகப்பெரும் அடையாளங்களை விட்டுச்சென்ற தலைமுறைக்கே இந்த கதி என்றால் , வெறும் கண்ணாடிக் கோபுரங்களும் , வசூல் வேட்டைக்கென உருவாகும் ஆன்மீக தங்கக்கோபுரங்களும் மட்டும் உருவாக்கிக் கொண்டிருக்கும் நம் தலைமுறையின் அடையாளம் எப்படி இருக்கும் ?