யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

எழுத்து நடை

Published by யாத்ரீகன் under on வெள்ளி, டிசம்பர் 30, 2011
இரு நாட்களுக்கு முன் குளிரும், பனிசார்ந்த இடமாக இருந்த சென்னை நேற்றுமுதல் புயல் காற்றும், மழை சார்ந்த நிலமாக உருவெடுத்திருக்கிறது. நேற்று இரவே மின்சாரம் போய்விட்டது, எவ்வளவு எரிபொருள்தான் apartment-இல் சேர்த்து வைத்திருப்பார்கள், அதுவும் தீர்ந்துபோய்விட இரவின் இருளோடு, apartment இருளும் கரைந்துவிட்டது.

தொடர்ந்து எழுத ஆரம்பித்திருப்பதை பற்றி நேற்று அலுவலகம் செல்லும்போது யோசித்துக்கொண்டிருந்தேன். இங்கே எழுதுவது என்ற வினைச்சொல்லை தட்டச்சுவது என்று கருதிக்கொண்டு படிக்க மறந்துவிடாதீர்கள்.

முதலில், எழுதிக்கொண்டிருக்கும்போதே வரும் பிழைகள். இவற்றில் பெரும்பாலும் 'அஞ்சல்' முறை பயன்படுத்தி எழுதிக்கொண்டிருக்கும்போது வரும் பிழைகள். எழுதும்போதே கண்டுகொண்டு அவ்வப்போது சரிசெய்துவிட்டாலும், பாறைகளின் இடுக்கே கசியும் நீரைப்போல தவிர்க்கமுடிவதில்லை.

அடுத்து வருவது, comma, semi-Colan, ஆச்சரியக்குறி போன்றவைகளின் சரியான  பயன்பாடு. முன்பே இவற்றின் பயன்பாடு பற்றி ஐய்யம் இருப்பினும், நாம் எழுதுவதென்ன இலக்கியமா, கிறுக்கல்தானேவென்று கண்டுகொள்வதில்லை. ஆனால், 750 எழுத ஆரம்பித்தவுடன் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த குறையை சரிபடுத்திக்கொள்ளலாமென நினைத்திருக்கிறேன். இதோடு தொடர்புடைய ஒரு கேள்வி, கல்வெட்டுக்களில்/ஓலைகளில் என பழங்கால தமிழ்மொழிப்பயன்பாட்டில் இத்தகைய குறிகள் இருக்காதென கேள்விப்பட்டிருக்கிறேன், அது உண்மையா ? இல்லை, இந்த குறிகளுக்கு இணையான வேறு பயன்பாடு இருக்கிறதா ? அதுவும் இல்லையெனில் பின்னர் எப்படி வாசித்தார்கள் ? யாராவது வாசகர்கள் (இதை படித்தால்) எதாவது சுட்டி கொடுத்தால் நன்றி நவில்வேன்.

இவற்றுக்கு அடுத்து அதிகம் இருக்கும் பிழைகள், சந்திப்பிழைகள். இது குறைவாகவே இருக்கென நினைக்கிறேன். முதல் இரண்டு வாசிப்பிலும் விடுபட்டுப்போகின்றன, காரணம் ஒரு வார்த்தையை கண்டதும் மூளை அதை உடனே அடையாளம் கண்டுகொண்டுவிட்டதாய் நினைத்துக்கொண்டு வாசித்துவிடுகிறது. சில சமயம், 4/5 வாசிப்புக்கு பிறகும் சரிபார்த்த ஒன்றை, 2 நாட்களுக்கு பிறகு பார்க்கும்போது கண்ணில் படும் பிழைகளை கண்டால், என்னை என்ன செய்வதென்றே தெரியவில்லை.

பிறகு, பிறமொழிக்கலப்பு. ஆங்கிலம், கிரந்தம் என முடிந்தவரை தவிர்த்து, அதே நேரம், படிக்க இலகுவானதாய் எழுத்து இருக்கவேண்டுமென்பது என் எண்ணம். சில நேரங்களில் தமிழில் இணை சொற்கள் இல்லாத வார்த்தைகளை அப்படியே எழுதுவது வாசிப்புக்கு இலகுவானதாக இருக்கும். இந்த இடத்தில் பலருக்கு கருத்துவேறுபாடு இருக்கலாம். நான் இன்னும், ஒரு மதில் மேலிருக்கும் பூனையின் நிலையை ஒத்திருக்கிறேன்.

எல்லாவற்றுக்கும் அடுத்து, நடை. ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனித்துவமான எழுத்து நடை உண்டு. 10 நாட்கள் ஒருவர் தொடர்ந்து எழுதுவதை படித்தால் அவரின் அடுத்த எழுத்து எப்படி இருக்குமென எளிதில் ஊகித்துவிடலாம். நாம் படிக்கும் பலவற்றிலிருந்து ஒரு நடை தனித்து தெரிந்து நம்மை கவராவிட்டால், பத்தோடு பதினொன்றான குப்பைபோல, படிக்காமல் subscribe செய்து குவிந்துவிட்ட rss/atom feed-களாகின்றது. இந்த இறுதி விஷயமே வெற்றிக்காண காரணம். இல்லாவிட்டால், எழுதும் அத்தனைபேருமே ஒரு எஸ்.ரா-வாகவோ, ஜெ.மோ-வாகவோ,சாருவாகவோ பலரை சேர்ந்துவிடலாமே.

ஒவ்வொருவரும் தங்களுக்கான எழுத்துநடையை செயற்கையாக உருவாக்காமல் இருப்பதிலும்  வெற்றி இருக்கிறது, செயற்கையானது எளிதாக யாரையும் கவர்ந்துவிடாது, மேலும் அதை தக்கவைத்துக்கொண்டிருப்பதும் கடினமானதொன்று.

முன்பு ஒருகட்டத்தில், எஸ்.ரா போலவே இருக்கனுமென்று முயற்சி செய்து மொக்கையாய்போனது நினைத்தால் சிரிப்புத்தான் வருது.

தனித்துவமான எழுத்துநடை என்று சொன்னதும் எனக்கு உடனே நினைவுக்கு வருவது இவை (இவற்றில் பல, நான் அதிகம் படித்த/தொடர்ந்து படிக்கும் இணைய எழுத்தாளர்கள்)

பாலகுமாரன் - முன்/பின் என இவரின் நடை மாறும் காலகட்டத்தையும் சொல்லலாம். 'இரும்பு குதிரைகள்' மூலம் இவரின் வசீகரம் உருவானது. சமீபத்தில், 'உடையார்'-இல் அந்த வசீகரம் சிதைந்துபோனது.

எஸ்.ரா - இவரின் 'துணையெழுத்து' தொடரே என்னை மறுபடியும் தீவிர வாசிப்புக்கு உட்படுத்தியது. அப்போது படித்தக்கொண்டிருந்தவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. முக்கியமாக அவரின் உவமைகள். நிகழ்வுகளையும், உணர்வுகளையும் சொல்ல அவர் கையாளும் வித்தியாசமான உவமைகள் திரும்பிப்படிக்க வைத்தது. பயணம் சார்ந்த எழுத்து அதற்கு மேலும் ஒரு காரணமாக இருக்கலாம் :-)

இளவஞ்சி - அருகிலிருந்து பேசும் இயல்பான நகைச்சுவை மூலம் பலரை தன்பக்கம் ஈர்த்துக்கொண்டவர். முன்னால் இணைய எழுத்தாளர், இப்போது என்ன செய்கிறாரென தெரியவில்லை. என்னுடைய reader feed-களையும் நான் பார்க்காததால் இவர் எழுதிகிறாரவெனவும் தெரியவில்லை.

டுபுக்கு/உருப்படாதது/kg jawarlal/பாரா/சொக்கன் - சுதாஜா touch இருப்பினும், அதை உணராமல் படிக்கச்செய்துகொண்டிருப்பார்கள். இதில் 'உருப்படாதது' மற்றவர்களைவிட serious-ஆன பலவற்றை, நமக்கு தெரிந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஒன்றை சுவாரசியமாக-நகைச்சுவையோடு சொல்லி இவ்வளவு இருக்குதடாவென நினைக்கவைத்துவிடுவார். தனியேயின்றி, இந்த வரிசையில் பாரா-சொக்கன் இருவரையும் சேர்த்தற்கு பலரும் எதிர்க்கலாம், நான் இவர்களின் வலைத்தளத்தை மட்டும் படித்த அனுபவத்தை வைத்து சேர்த்துள்ளேன்.
மேலே சொன்ன வகையில் பல பதிவர்கள் இருக்கிறார்கள், உடனே தோன்றியது மேலுள்ளவர்கள்.

அ.முத்துலிங்கம் - சமீபத்தில்தான் இவரின் வலைத்தளம் அறிமுகமானது. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல நகைச்சுவைதான் இவரின் வலிமை. இவரின் கட்டுரை வாழைப்பழம் முழுக்க ஊசிகள்தான்.

அக்கரைச்சீமை 'பாலா'/hollywood bala - எனக்கு தெரிந்து வலைத்தளங்களில் பலரும் திரைவிமர்சனங்களை குவிப்பதற்கு ஒரு காரணமாக இவர் இருக்கலாம்.

மரு. புரூனோ - பலருக்கும் பல கருத்து வேறுபாடுகள் இருப்பினும், இவர் ஒரு தகவல் சுரங்கம் என்பதில் வேறுபாடு இருக்காது :-)  , எழுத்தில் தெரியும் அசாத்திய பொறுமையும், எளிமையோடு கொண்ட தகவல் செழுமையும் அருமை.

வினவு (ஒருகாலத்தில்) - சொல்லவந்ததை மனதில் மற்றுமல்ல இரத்தத்திலும் சூடேற்றுவதில் இவர்கள் எழுத்து மிக வேகமானதாய் இருந்தது. தற்போது அதை செயற்கையாக செய்வதைப்போலதொரு தோற்றம் வந்துவிட்டதால் இரசிக்க முடியவில்லை.

750 எழுதிக்கொண்டிருக்கையில், எனக்கான எழுத்து நடையை அடையாளம் கொண்டுகொள்வேணாவென தெரியாது, ஆனால் அதை செயற்கையாய் புகுத்தக்கூடாது என்று மட்டும் எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.

0 மறுமொழிகள்:

கருத்துரையிடுக