யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

வாழ்வின் மிச்சம்

Published by யாத்ரீகன் under , on செவ்வாய், ஏப்ரல் 16, 2013


                     சூடான சாதத்தோடு எலுமிச்சை பழத்தை பிழிந்து, பிசைந்து கொண்டிருக்கையில் பாதியில் அம்மா நகர்ந்தபோது, குளிக்க போன நான், அம்மா பார்க்கும்முன் அவசர அவசரமாய் ஒரு விள்ளல் சாதத்தை எடுத்து, சூடு தாங்காமல் உருட்டி வாயில் போட்டுக்கொண்டு விலகினேன்.

                    கொஞ்சமும் உப்பேயில்லையென எரிச்சல்படத்துவங்குகையில், மெல்ல எலுமிச்சையின் புளிப்பு படரத்துவங்குகிறது, அந்த சுவையை இரசிக்கத்துவங்கி சில நொடிகளில் கரைந்த உப்பின் சுவை. மென்றுகொண்டேயிருக்கையில், சிறு பச்சை மிளகாய்த்துண்டொண்று பல்லிடுக்கில் அரைந்துவிட, அவசர அவசரமாய் காரம் பரவுகிறது. புளிப்பும் காரமும் கலந்து புலன்களை சுழற்றி அடிக்கின்றது. இந்த உணவு இத்தனை சுவையா ? கொஞ்சம் கூட பிடிக்காத உணவான (உப்புமாவை நான் உணவாகவே கருதுவதில்லை) எலுமிச்சை சாதம் இவ்வளவு சுவையை  விட்டுச்சென்றதேயில்லை. மற்ற நாட்களுக்கும் இன்றுகும்மான வேற்றுமை, எந்த சுவையும் கண்டிராத,  தூக்கத்திலிருந்து எழுந்த நாக்காவென தெரியவில்லை.

                   காலையில் Indian Express பத்திரிக்கை நிருபர்களின் தரம் திரு. P.B.சிரினிவாஸ் அவர்களின் மரணச்செய்தியில் பல்லிளித்துக்கொண்டிருந்தது. திடீரென அவளைக்கண்டு 'காலங்களில் அவள் வசந்தம்... ' என காதல் பொங்க பாட ஆரம்பித்தேன். வெட்கத்தை மறைக்க முடியாமல் சிரித்துக்கொண்டே என்னாச்சு என்றாள். எத்தனை பேருக்கு இப்படியான அருமையான நினைவுகளை உருவாக்கித்தந்திருப்பார். எங்கோ FMயில் 'அவள் பறந்து போனாளே...' என்று பாடிக்கொண்டிருந்தார். எத்தனை இளைஞர்களின் இனிமையான, மோசமான தருணங்களில் துணைக்கிருந்திருப்பார்.

                 மரணம் அவரை தன் துணைக்கு அழைத்துக்கொண்டபொழுது 82 வயதென்று படித்தேன், அவ்வப்போது கேட்ட/படித்த அவரை சந்தித்தவர்களின் அனுபவமும், நல்ல வாழ்வு வாழ்ந்திருக்கிறார் என சிறு நிம்மதியைத்தந்தது. இறந்துவிட்டார் என்ற துக்கம் என்பதைவிட, எவ்வளவு பேரின் நல்ல நினைவுகளுக்கு காரணமாயிருந்திருக்கிறார் என்பது போன்ற எண்ணங்களே இருந்தன. வாழ்ந்துவிட்ட அவரின் முதுமையா, மரத்துப்போன என் மனதா, சுயநலமான ஆசைகளுடனே வாழத்துவங்கிவிட்ட என் இயந்திர வாழ்க்கையா.. வராத கண்ணீருக்கும், வருத்தப்படாத மனதுக்கும் எது காரணமென யோசித்து களைத்துப்போனேன்.

                ஆனால் அவரின் மரணச்செய்தி wikipedia-விலிருந்து copy-paste செய்யப்பட்டு, வேறொருவடன் குழப்பிக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்த அவசர வாழ்வில் மரணத்துக்கான மரியாதை. இதைவிட, அவருக்காக சிந்தப்படும் கண்ணிரைவிட, இன்று முழுவதும், அவரின் பாடல்கள் கேட்டு மனமெங்கும் பரவிய மகிழ்ச்சியே அவருக்கான மரியாதை.

                     இதோ, இதை தட்டச்சிக்கொண்டிருக்கையில் மறுபடியும் 'காலங்களில் அவள் வசந்தம்.. " பாடல் கானாபிரபாவின் ரேடியோஸ்பதியில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

                   

TOGAF Prep Material

Published by யாத்ரீகன் under , , , on செவ்வாய், மார்ச் 12, 2013


                      The TOGAF training at work gave us 'Student Guide Volume' books, an abridged version of the TOGAF Specification from The Open Group. After reading through them, i wanted to have a cheat-sheet (a more abridged version), where i could refer the complete spec within 10 pages.

        I ended-up creating 2 cheat sheets, one for each of 'Student Guide Volume I & II'.

TOGAF9_CheatSheet_Part_1.pdf
TOGAF9_CheatSheet_Part_2.pdf

       But still, i wasn't satisfied. I wanted an even more abridged version, like a 1 Pager, where i could quickly re-collect all the Input/Outputs of all Phases. And hence made this 1 pager in Visio.

TOGAF_ADM_Input_Outputs.pdf

        Indeed, they all came very handy on the day before exam & during the day of exam (of-course not during the exam :-). The thought of sharing this with a wider audience resulted in this blog. I hope people looking forward for their Foundation & Certification exam might find this handy.

        Thanks to Fite Klub for the idea to create cheat-sheets.

        Please feel free to point out any mistakes to be corrected or additions to be done in these documents.

Disclaimar: This is a document created for my personal use for the purpose of studying. There is no intention of violating any copyright. And please use it with your own discretion.

Dream of Pi

Published by யாத்ரீகன் under , on செவ்வாய், நவம்பர் 27, 2012
ஏனோ இன்று மனம் முற்றிலும் ஆராவாரமற்றிருக்கின்றது. Life Of Pi -இல் சொல்லப்படும் அந்த french swimming pool போல தெளிவான மனம். குறிப்பிடத்தக்க நிகழ்வேதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விடியற்காலையிலிருந்து மதியம் வரை, 20-30 பேர் கொண்ட உறவினர் குழு சூழ அதீத ஓசையுடனிருந்த சூழலிருந்து விடுபட்டதாலா ? இல்லை வேலை ஏதுமில்லாததாலா ? எனக்கென்னவோ, இவையெல்லாம் just environment மட்டுமே, ஆனால் அமைதியை தூண்டிவிட்ட catalyst, Cinema Paradiso & The Legend of 1900 இரண்டிற்குமான பின்னணியிசை தொகுப்புதானென தோன்றுகிறது.

நம்மூர் இசையராசா இசையில் இல்லாத அமைதியா என்று துடிக்கும் இரசிகர்கள் அமைதி காக்கவும், ஏனோ அவரின் திரையிசையை கேட்கும்போது, அங்கிங்கு நினைவிருக்கும் பாடல் வரிகள், காட்சிகள், பாடல் நினைவுபடுத்தும் வாழ்க்கை நிகழ்வுகள் என பல கலக்கங்க ள். மேலே குறிப்பிட்ட இரண்டு படங்களுக்குமான வசதி, என் மறதி + 1 முறை மட்டுமே பார்த்தது.

மறதி என் வரமென்றால், கனவுகள் என் மற்றொரு வரமென்பேன். நேற்று முதல் முறை சந்தித்த நண்பர்கள் சிலரை, என் கனவின் சாகசப்பயணங்களில் (நேற்று கண்ட Life Of Pi படம் போன்ற) சந்தித்ததை மனைவியிடம் சொன்னபோது, "அதெப்படி நேற்றுதானே முதல் முறை சந்தி த்தீர்கள், நெசமாத்தான் சொல்றீங்களா.. " என கற்றது தமிழ் அஞ்சலியாய் மாறி கேட்கும்போது, நானும் Pi போல மாறி, "So you want a story that you can believe ? .. " என கேட்கலாமென நினைத்து அமைதியானேன்.

Life Of Pi பலருக்கு என்ன வாழ்க்கை தத்துவம் சொல்லித்தந்ததோ தெரியவில்லை, பலரும் அதை குறிப்பிட்டு சொன்னதால்தான் இந்த கேள்வி. கல்கத்தாவிலிருந்தபோது இதன் புத்தக வடிவத்தை பார்த்த நினைவு. புலி-புல்லுக்கட்டு கதையோ என்றெண்ணி படிக்காமலே போனது. இதற்கு ஏன் புதுச்சேரியில் zoo அமைக்கவேண்டுமென தெரியவில்லை, ஒருவேளை இந்(து)திய மத பின்னணிக்காகவா ?

193 வார்த்தைகளுக்கே தள்ளுது. சோம்பேறித்தனம் என பழிபோட்டு தப்பிக்க விரும்பவில்லை, திமிர் என்றே சொல்லுவேன். வெட்டி முறித்த வேலை என்றோ அடங்கிப்போனது, இருந்தும் ஒவ்வொரு தினமும் எழுதவதற்கான inspiration வரி தோன்றுவதும், அதை அப்புறம்-அப்புறம்-அப்புறம் என கடத்திவிட்டு, அடுத்த நாளுக்கான குற்றவுணர்வை, குற்றவுணர்வில்லாமல் கடந்து செல்ல கற்றுக்கொண்டிருந்தேன்.

இவ்வளவு நாளாய் இல்லாத அக்கறை, இன்றைக்கென்ன புதிதாய் என தோன்றலாம். இதே திமிரென்ற ஒட்டகத்தின் திமில் ஓட்டத்திலும் நுழைந்து வேலையைக்காட்டிவிட்டது. வரும் ஞாயிறு 10k ஓட பதிவு செய்திருந்தும், தொடர்சியாய் 2k கூட ஓடமுடியாத நிலையில்தான் என் பயிற்சி இருக்கின்றது. 4 நாட்களில் என்ன செய்ய முடியுமென தெரியவில்லை, ஆனால் இதை வளரவிட்டால், வேறெங்கோ வளர்ச்சி வெளிப்படையாய் தெரிகின்றது. குனிந்து shoe lace போட முடிவதில்லையென lace-less shoe வாங்குவதற்கு பதில், ஓட்டத்தை அதிகரிக்கவேண்டும்.

இத்தனைக்கும் நடுவே மனதை அறுத்த அந்த facebook மின்னஞ்சலை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. முதல் முறை, தெரியாமல் செய்வது மட்டுமே தவறு, அதன் பின்.....

வேகம்

Published by யாத்ரீகன் under on திங்கள், மார்ச் 19, 2012
காலையில் அலுவலகம் செல்லும்போது சாலையோரம் வெள்ளைத்துணிகொண்டு மூடிவைக்கப்பட்டிருந்த உருவமொன்று, ஆணா பெண்ணாவென தெரியவில்லை, இளவயதா முதியவராவென தெரியவில்லை. அருகே அநேகமாய் அந்த உருவம் சென்ற இரு சக்கர வாகனமாயிருக்கலாம், கைப்பிடி உடைந்து நெளிந்திருந்தது. இரத்தம் சிதறியிருந்ததாவென நினைவில்லை. இதை தாண்டிச்சென்ற வாகனங்கள்  ஒரு நொடி நிற்கக்கூட முடியாமல், மெல்ல நகர்ந்துகொண்டே முகத்தை முதுகில் சில நொடிகள் நிப்பாட்டிக்கொண்டிருந்தன்.

 நாள் முழுதும் இதைப்பற்றியே நினைவுகள்தான் மனதை ஆக்கிரமித்திருந்தன. இறந்தவரை சார்ந்து யாரிருந்திருப்பார் ? சில மணிநேரம் வீட்டிலிருந்து கிளம்புகையில் என்ன நினைத்திருப்பார்கள் ? விபத்து இவருடைய தவறா இல்லை இடித்தவருடையதா ? மரணம் நிகழ்ந்த அந்த நொடி என்னவெல்லாம் எண்ணங்கள் ஓடியிருக்கும்.

இதைப்போலத்தான், சில வாரங்களுக்கு முன், சிறுசேரி அலுவலகத்துக்கு மாற்றமாகி வந்த முதல் நாள், இரவு வீட்டுக்கு திரும்பும்போது லாரி மோதி இளைஞர் ஒருவர் பலியானார். திருமணமாகதவர் என்று கேள்விப்பட்டதும் ஏதோ ஒரு உணர்வு.

(ஒருவகையில்) எதிர்பார்த்த மரணங்கள் தரும் வலியைவிட, இப்படி கொஞ்சமும் எதிர்பாராத மரணங்கள் தரும் வலி நினைத்தும் பார்க்க முடியவில்லை.


31,568,400 நொடிகள்

Published by யாத்ரீகன் under on திங்கள், ஜனவரி 30, 2012
பளபளக்கும் பட்டுப்புடவை, நெருக்கி கட்டிய மணக்கும் மல்லி, சரசரக்கும் பட்டு வேட்டி, ஒரு நாளே ஆனாலும் உறுத்திக்கொண்டிருக்கும் சங்கிலி, உறவினர் வீடோ/விசேஷமோ/கோயிலோ/கடைத்தெருவோ எங்களையே பார்க்கும் கண்கள், வீட்டில் கிடைக்கும் கவனிப்பு, முதல் நாள் உணர்வு, திகட்டத்திகட்ட ஊஞ்சல் ஆட்டம், திருமணமண்டபத்தை கடக்கும் நினைவுகள், குடும்ப வாழ்கையின் அடுத்த  கட்டத்துக்கான விசாரிப்புகள், சொதப்பிய பயணத்திட்டம், ஜிகிர்தண்டா, எங்களுக்குள்ளான பிரத்தியேக கொசுவர்த்திச்சுருள் பேட்டி பதிவு ...  என 31,568,400 நொடிகளை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்..


வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி :-)

எழுத்து நடை

Published by யாத்ரீகன் under on வெள்ளி, டிசம்பர் 30, 2011
இரு நாட்களுக்கு முன் குளிரும், பனிசார்ந்த இடமாக இருந்த சென்னை நேற்றுமுதல் புயல் காற்றும், மழை சார்ந்த நிலமாக உருவெடுத்திருக்கிறது. நேற்று இரவே மின்சாரம் போய்விட்டது, எவ்வளவு எரிபொருள்தான் apartment-இல் சேர்த்து வைத்திருப்பார்கள், அதுவும் தீர்ந்துபோய்விட இரவின் இருளோடு, apartment இருளும் கரைந்துவிட்டது.

தொடர்ந்து எழுத ஆரம்பித்திருப்பதை பற்றி நேற்று அலுவலகம் செல்லும்போது யோசித்துக்கொண்டிருந்தேன். இங்கே எழுதுவது என்ற வினைச்சொல்லை தட்டச்சுவது என்று கருதிக்கொண்டு படிக்க மறந்துவிடாதீர்கள்.

முதலில், எழுதிக்கொண்டிருக்கும்போதே வரும் பிழைகள். இவற்றில் பெரும்பாலும் 'அஞ்சல்' முறை பயன்படுத்தி எழுதிக்கொண்டிருக்கும்போது வரும் பிழைகள். எழுதும்போதே கண்டுகொண்டு அவ்வப்போது சரிசெய்துவிட்டாலும், பாறைகளின் இடுக்கே கசியும் நீரைப்போல தவிர்க்கமுடிவதில்லை.

அடுத்து வருவது, comma, semi-Colan, ஆச்சரியக்குறி போன்றவைகளின் சரியான  பயன்பாடு. முன்பே இவற்றின் பயன்பாடு பற்றி ஐய்யம் இருப்பினும், நாம் எழுதுவதென்ன இலக்கியமா, கிறுக்கல்தானேவென்று கண்டுகொள்வதில்லை. ஆனால், 750 எழுத ஆரம்பித்தவுடன் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த குறையை சரிபடுத்திக்கொள்ளலாமென நினைத்திருக்கிறேன். இதோடு தொடர்புடைய ஒரு கேள்வி, கல்வெட்டுக்களில்/ஓலைகளில் என பழங்கால தமிழ்மொழிப்பயன்பாட்டில் இத்தகைய குறிகள் இருக்காதென கேள்விப்பட்டிருக்கிறேன், அது உண்மையா ? இல்லை, இந்த குறிகளுக்கு இணையான வேறு பயன்பாடு இருக்கிறதா ? அதுவும் இல்லையெனில் பின்னர் எப்படி வாசித்தார்கள் ? யாராவது வாசகர்கள் (இதை படித்தால்) எதாவது சுட்டி கொடுத்தால் நன்றி நவில்வேன்.

இவற்றுக்கு அடுத்து அதிகம் இருக்கும் பிழைகள், சந்திப்பிழைகள். இது குறைவாகவே இருக்கென நினைக்கிறேன். முதல் இரண்டு வாசிப்பிலும் விடுபட்டுப்போகின்றன, காரணம் ஒரு வார்த்தையை கண்டதும் மூளை அதை உடனே அடையாளம் கண்டுகொண்டுவிட்டதாய் நினைத்துக்கொண்டு வாசித்துவிடுகிறது. சில சமயம், 4/5 வாசிப்புக்கு பிறகும் சரிபார்த்த ஒன்றை, 2 நாட்களுக்கு பிறகு பார்க்கும்போது கண்ணில் படும் பிழைகளை கண்டால், என்னை என்ன செய்வதென்றே தெரியவில்லை.

பிறகு, பிறமொழிக்கலப்பு. ஆங்கிலம், கிரந்தம் என முடிந்தவரை தவிர்த்து, அதே நேரம், படிக்க இலகுவானதாய் எழுத்து இருக்கவேண்டுமென்பது என் எண்ணம். சில நேரங்களில் தமிழில் இணை சொற்கள் இல்லாத வார்த்தைகளை அப்படியே எழுதுவது வாசிப்புக்கு இலகுவானதாக இருக்கும். இந்த இடத்தில் பலருக்கு கருத்துவேறுபாடு இருக்கலாம். நான் இன்னும், ஒரு மதில் மேலிருக்கும் பூனையின் நிலையை ஒத்திருக்கிறேன்.

எல்லாவற்றுக்கும் அடுத்து, நடை. ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனித்துவமான எழுத்து நடை உண்டு. 10 நாட்கள் ஒருவர் தொடர்ந்து எழுதுவதை படித்தால் அவரின் அடுத்த எழுத்து எப்படி இருக்குமென எளிதில் ஊகித்துவிடலாம். நாம் படிக்கும் பலவற்றிலிருந்து ஒரு நடை தனித்து தெரிந்து நம்மை கவராவிட்டால், பத்தோடு பதினொன்றான குப்பைபோல, படிக்காமல் subscribe செய்து குவிந்துவிட்ட rss/atom feed-களாகின்றது. இந்த இறுதி விஷயமே வெற்றிக்காண காரணம். இல்லாவிட்டால், எழுதும் அத்தனைபேருமே ஒரு எஸ்.ரா-வாகவோ, ஜெ.மோ-வாகவோ,சாருவாகவோ பலரை சேர்ந்துவிடலாமே.

ஒவ்வொருவரும் தங்களுக்கான எழுத்துநடையை செயற்கையாக உருவாக்காமல் இருப்பதிலும்  வெற்றி இருக்கிறது, செயற்கையானது எளிதாக யாரையும் கவர்ந்துவிடாது, மேலும் அதை தக்கவைத்துக்கொண்டிருப்பதும் கடினமானதொன்று.

முன்பு ஒருகட்டத்தில், எஸ்.ரா போலவே இருக்கனுமென்று முயற்சி செய்து மொக்கையாய்போனது நினைத்தால் சிரிப்புத்தான் வருது.

தனித்துவமான எழுத்துநடை என்று சொன்னதும் எனக்கு உடனே நினைவுக்கு வருவது இவை (இவற்றில் பல, நான் அதிகம் படித்த/தொடர்ந்து படிக்கும் இணைய எழுத்தாளர்கள்)

பாலகுமாரன் - முன்/பின் என இவரின் நடை மாறும் காலகட்டத்தையும் சொல்லலாம். 'இரும்பு குதிரைகள்' மூலம் இவரின் வசீகரம் உருவானது. சமீபத்தில், 'உடையார்'-இல் அந்த வசீகரம் சிதைந்துபோனது.

எஸ்.ரா - இவரின் 'துணையெழுத்து' தொடரே என்னை மறுபடியும் தீவிர வாசிப்புக்கு உட்படுத்தியது. அப்போது படித்தக்கொண்டிருந்தவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. முக்கியமாக அவரின் உவமைகள். நிகழ்வுகளையும், உணர்வுகளையும் சொல்ல அவர் கையாளும் வித்தியாசமான உவமைகள் திரும்பிப்படிக்க வைத்தது. பயணம் சார்ந்த எழுத்து அதற்கு மேலும் ஒரு காரணமாக இருக்கலாம் :-)

இளவஞ்சி - அருகிலிருந்து பேசும் இயல்பான நகைச்சுவை மூலம் பலரை தன்பக்கம் ஈர்த்துக்கொண்டவர். முன்னால் இணைய எழுத்தாளர், இப்போது என்ன செய்கிறாரென தெரியவில்லை. என்னுடைய reader feed-களையும் நான் பார்க்காததால் இவர் எழுதிகிறாரவெனவும் தெரியவில்லை.

டுபுக்கு/உருப்படாதது/kg jawarlal/பாரா/சொக்கன் - சுதாஜா touch இருப்பினும், அதை உணராமல் படிக்கச்செய்துகொண்டிருப்பார்கள். இதில் 'உருப்படாதது' மற்றவர்களைவிட serious-ஆன பலவற்றை, நமக்கு தெரிந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஒன்றை சுவாரசியமாக-நகைச்சுவையோடு சொல்லி இவ்வளவு இருக்குதடாவென நினைக்கவைத்துவிடுவார். தனியேயின்றி, இந்த வரிசையில் பாரா-சொக்கன் இருவரையும் சேர்த்தற்கு பலரும் எதிர்க்கலாம், நான் இவர்களின் வலைத்தளத்தை மட்டும் படித்த அனுபவத்தை வைத்து சேர்த்துள்ளேன்.
மேலே சொன்ன வகையில் பல பதிவர்கள் இருக்கிறார்கள், உடனே தோன்றியது மேலுள்ளவர்கள்.

அ.முத்துலிங்கம் - சமீபத்தில்தான் இவரின் வலைத்தளம் அறிமுகமானது. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல நகைச்சுவைதான் இவரின் வலிமை. இவரின் கட்டுரை வாழைப்பழம் முழுக்க ஊசிகள்தான்.

அக்கரைச்சீமை 'பாலா'/hollywood bala - எனக்கு தெரிந்து வலைத்தளங்களில் பலரும் திரைவிமர்சனங்களை குவிப்பதற்கு ஒரு காரணமாக இவர் இருக்கலாம்.

மரு. புரூனோ - பலருக்கும் பல கருத்து வேறுபாடுகள் இருப்பினும், இவர் ஒரு தகவல் சுரங்கம் என்பதில் வேறுபாடு இருக்காது :-)  , எழுத்தில் தெரியும் அசாத்திய பொறுமையும், எளிமையோடு கொண்ட தகவல் செழுமையும் அருமை.

வினவு (ஒருகாலத்தில்) - சொல்லவந்ததை மனதில் மற்றுமல்ல இரத்தத்திலும் சூடேற்றுவதில் இவர்கள் எழுத்து மிக வேகமானதாய் இருந்தது. தற்போது அதை செயற்கையாக செய்வதைப்போலதொரு தோற்றம் வந்துவிட்டதால் இரசிக்க முடியவில்லை.

750 எழுதிக்கொண்டிருக்கையில், எனக்கான எழுத்து நடையை அடையாளம் கொண்டுகொள்வேணாவென தெரியாது, ஆனால் அதை செயற்கையாய் புகுத்தக்கூடாது என்று மட்டும் எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.

இளையராஜா - Confessions - 678 - தமிழ் திரைப்படங்கள்

Published by யாத்ரீகன் under , on வியாழன், டிசம்பர் 29, 2011
சென்னையில் மழைச்சாரலோடு கூடிய குளிரா என வியப்போடு சொல்வதே இப்போது வழக்கமாகிவிட்டது. இன்றும் என்றுமில்லாமல் சில degree குளிர் அதிகம், காரணம் அந்த இன்னும் பெயரிடப்படாத புயல்தான் போல.

நேற்று இளையராஜா இசை நிகழ்ச்சி பற்றி சென்றிருந்த எல்லா இரசிகர்களும் வரம், வாழ்வு என சிலாகித்துவிட்டார்கள். இசை, குறிப்பாக தமிழ் திரைப்பட இசை மட்டுமே கேட்டுத்தலையாட்டும் இரசிகன் நான், எனக்கு இளையராஜாவோ, இல்லை குறிப்பிட்ட பாடல்கள் மேலோ, அடாடா அந்த prelude-இல் வயலின் கேளு, இந்த orchestration அருமையா வந்திருக்கு என பிரித்து மேயத்தெரியாது. நேற்று நடந்த இசை நிகழ்ச்சிக்கு இதுதான் முதல் விதிமுறை என்பதுபோலத்தான் நண்பர்கள் tweet-இல் கொடுத்த நேரடி வர்ணனை இருந்தது. வீட்டில் ஒரு நல்ல headset-இல்/home-theatre-இல் கேட்டுவிடுவதை விட நேரில் கேட்பது என்ன வித்தியாசம் வந்துவிடப்போகுது என்றெண்ணி, புல்லரித்து அந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை.

750words-இல் ஒரு மிகப்பெரும் பலம், இதுதான் எழுதவேண்டுமென இல்லாதிருப்பது. இதில் எழுதுவதை வலைதளத்தில் பதியவேண்டுமென நினைத்தாலே ஒரு bloggers block வந்துவிடுகிறது (எதோ ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரென நினைப்புதான் ;-)

பிறமொழிப்படங்கள் பார்த்து வெகுநாளாகிவிட்டபடியாலும், சென்னையில் நடந்த உலகத்திரைப்பட விழாவில் பங்கேற்க முடியாத குறையை போக்கும்விதமாகவும், அங்கே திரையிடப்பட்ட படங்களாக தேர்வுசெய்து பார்க்கத்துவங்கியிருக்கிறேன். வீட்டிலேயே movie marathon ஓட்டி எவ்வளவு நாளாகிவிட்டது :-(

Confessions:
ஜப்பானிய படங்களை அதிகம் பார்த்ததில்லை என்ற போதிலும், இதை குறிப்பிட்டு தேர்ந்தெடுத்த காரணம், இதை ஒரு கொரிய படமென்று நான் குழப்பிக்கொண்டதனால்தான் :-). பொதுவாக கொரியப்படங்கள், காதலாகட்டும், நகைச்சுவையாகட்டும், வன்முறையாகட்டும் எதிலும்  ஏமாற்றமளிப்பதில்லை.



இதை thriller, horror, mystery எனவும் வகைப்படுத்தமடியவில்லை. படம் ஆரம்பித்த 15-20 நிமிடங்களில் முழு கதையையும் போட்டுடைத்துவிடுகிறார்கள். இதற்குமேல் எப்படி 1:30 மணிநேரம் ஓட்டப்போகிறார்களென யோசித்தால் Roshoman சுவாரசியத்தாலும், அற்புதமான camera கோணங்களாலும், பின்ணனி இசையாலும் நம்மை எங்கும் அசையவிடுவதில்லை. படம் முழுக்க slow motion sequenceகளாலே நிரம்பியிருக்கின்றது.

படத்தை பார்க்கும்போதே, பள்ளி/கல்லூரி படிக்கும்போது எப்பேர்ப்பட்ட மகான்களாக இருந்திருக்கிறோமென நம்மைப்பற்றியே பெருமைகொள்ளச்செய்யுமளவுக்கு இருக்கிறது  அவர்களின் சேட்டை. நல்லவேளை, படத்தின் வரும் அனைவரும் முகவெட்டும் ஒரேமாதிரியிருந்து குழப்பியடிக்காமல் சிறிதுவித்தியாசமாயிருந்து காப்பாற்றிவிடுகிறார்கள். இருந்தும், கொஞ்ச நேரத்துக்கு 2 lead -ve கதாபாத்திரங்களில் வருபவர்களை வித்தியாசம் கண்டுகொள்வது கடினம்தான்.

இப்படி ஒரு genreக்கு அட்டகாசமாய் camera கோணங்களை தேர்வுசெய்யும் சுவை இவர்களுக்குத்தான் வரும்போல. படத்தில் கொஞ்சம் psycho analysis-உம் செய்துவிடுகிறார்கள். செல்வராகவனுக்கு நல்ல தீனியாய் இந்த பட remake அமையலாம் :-) 

நேரமும், பொறுமையும் இருந்தால் இந்த படத்தை பார்க்க அமருங்கள்.

678:

பெண்கள் உள்ளாகும் பாலியல் தொல்லைகளை பற்றி எடுக்கும் படங்களிலேயே, 'காளை மாடு ஒண்ணு, கறவை மாடு மூணு......' என பாட்டெழுதி சொல்ல வந்ததை நீர்த்துப்போகச்செய்ய நம்மால் மட்டும்தான்.

இந்த படமும், இப்படி தொல்லைகளுக்கு உள்ளாகும் 3 பெண்கள் பற்றிய கதைதான், ஆனால் நடப்பது எகிப்தில், இதுவரை பெண்களால் பாலியல் புகார் பதிவு செய்யப்படாத நாடாக காண்பிக்கிறார்கள்.

பொதுவாக பாலியல் புகார்களுக்கும், பெண்கள் அணியும் உடைக்கும் தொடர்பு செய்து பேசுவது ஆண்களிடம் (எந்த மதத்தவராயினும்) இயல்பாக இருக்கும். அதையும், மதத்தோடு சம்பந்தப்படுத்தி பேசுவது மிகவும் delicate-ஆனதொன்று. படத்தில் அதை மிக நுணுக்கமாக மூன்று வேறு வேறு கோணங்களை கொண்ட, வேறு வேறு வாழ்க்கை முறைகளிலும், தளங்களில் இருக்கும் பெண்களை கொண்டு கையாண்டிருப்பது அருமை.

இறுதி 30 நிமிடங்களில், நம்மிடம் இருக்கும் எல்லா கேள்விகளையும் (உ.தா. கவர்ச்சியாக உடையணிந்ததால்தான் ஆண்கள் தூண்டப்படுகிறார்கள் , (அல்லது) எப்படி உடையணிந்தாலும் அத்துமீறுபவன் மீறிக்கொண்டுதான் இருப்பான்) அந்த 3 பெண் கதாபாத்திரங்கள் மூலமே எழுப்பியிருப்பதுமட்டுமில்லாமல் அதற்கான பதில்களை நம்மையே அதில் தேடி உணரவைப்பதுதான் படத்தை மனதில் படியச்செய்கிறது.

இதை எழுதிக்கொண்டிருக்கையில், தமிழ்த்திரையுலகின் ஒரு முக்கிய இயக்குநரின் முதல் வெற்றிப்படமான 'புது வசந்தம்' ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருவேளை அவரின் 'புரியாத புதிர்' commercial-ஆக வென்றிருந்தால் தமிழிலும் Confessions original-ஆக வந்திருக்குமா ?

இந்த குளிரிலும் சீக்கிரம் எழுந்து 750 type செய்யும் என்னை பாராட்டுவீர்கள்தானே ? நீங்கள் பாராட்டாவிட்டால் என்ன, 750words.com என் கணக்கில் ஒரு புள்ளி ஏற்றுகிறார்கள் :-)

750 வார்த்தைகள்

Published by யாத்ரீகன் under , , on புதன், டிசம்பர் 28, 2011

இன்றோடு 3 நாட்களாகிவிட்டது இந்த 750 வார்த்தைகள் தளத்தில் சேர்ந்து. சக twit புலிகளை கண்டு சூடு போட்டுக்கொண்ட பூனை கதையாகிவிடக்கூடாது என்ற எண்ணத்தோடு அலுவலகத்துக்கு நேரமானாலும், மனைவி பின்னாடியிருந்து கடிகார நொடி முள்ளைப்போல  சுற்றி சுற்றி வந்து நேரத்தை நினைவுபடுத்திக்கொண்டிருந்தாலும், கடமை உணர்ச்சி பொங்க, twit அரட்டைகளையும் மீறி ஒருவழியாக ஆரம்பித்துவிட்டேன்.

Boxing Day என்று cricket-ஐப்பற்றி எங்கும் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கையில் என் ஆர்வம் எங்கு தொலைந்து போனது என்று தேடோ தேடோவென தேடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு பைத்தியம் பிடிக்கத்துவங்கியது 1996 உலகக்கோப்பை என்று நினைக்கிறேன், அதன் பின்னர், வீட்டில், தெருவில், அத்தை வீட்டில் என சென்ற இடமெல்லாம் எதையாவது உடைப்பது, சண்டை என வெறித்தனமாய் விளையாண்ட நாட்கள் அது. மூன்று cricket வெறியர்களை பெற்ற அம்மா ஞாயிற்று கிழமைகளிலும், கோடைக்கால விடுமுறைகளிலும் பட்ட பாடு சொல்லி மாளாது :-)

எங்களுக்கு என்று ஒரு புத்தகம், அதுதான் எங்களுடைய wisden database. நாங்க விளையாடும் எல்லா match-களும் (?) , அதைப்பற்றிய வரலாற்று குறிப்புகளும் அதில் இடம்பெறும். சின்னப்பசங்களாய் இருக்கும் தம்பிகளை ஏமாற்றுவதா பெரிய காரியம் ? :-) , அதில் நான்தான் leading record maker

அத்தை வீட்டின் பெரிய மொட்டை மாடியாகட்டும், எங்கள் வீட்டின் குறுகலான ரேழியாகட்டும், மூன்று கோடுகளை chalk piece-ஆல் வரைந்துவிட்டாலே எங்கள் மைதானம் தயார். நாட்டில் மற்ற விளையாட்டுகள் அழிந்துகொண்டிருக்க, cricket மட்டும் வாழ்வாங்கு வாழ இதுவே காரணமென்று யாருக்குமே புரியவில்லையா ?

ஒரு bangalore one-day match, srikanth-உம் kumbley-யும் அவரவர் அம்மாக்கள் stadium-இல் பார்க்க ஒரு விறுவிறுப்பான போட்டியை வென்று கொடுக்க, நாங்கள் எங்கள் அம்மாவுடன் அதே தீவிரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தோம்.  எங்களோடு சேர்ந்து அம்மாவுக்கும் cricket  ஆர்வத்தை உருவாக்கிவிட்டோம். இதில் பெரும்பங்கு கடைசி தம்பியினுடயதுதான். இன்றுவரை தம்பிகளுக்கு ஈடுகொடுத்து விமர்சனம் செய்வதாகட்டும், அவ்வப்போது நடக்கும் போட்டிகளை பார்ப்பதாகட்டும் என அம்மா தன் consistency-ஐ இன்றும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.

 தமிழனின் கலாச்சாரப்படி காசிருக்கும்போது rubber பந்து, கொஞ்சம் காசிருக்கும்போது plastic பந்து, காசே இல்லாதபோது பழைய காகிதத்தினிடையே சிறு கல்லை வைத்து சுருட்டி, ஆவின் கவரில் திணித்து, முற்றிலும் சைக்கிள் tube-ஐ வெட்டி செய்த rubber band-களால் சுற்றி விளையாடிக்கொண்டிருந்தோம். Cork/Stitch பந்து என்பது bet matchகளில் மட்டுமே எங்களுக்கு சாத்தியப்பட்டது. இன்று நினைத்துப்பார்த்தால் நாங்கள் தொலைத்த பந்துகளின் காசில் ஒரு cricket kit-டே வாங்கி விடலாம்.

இந்த ஆர்வத்துக்கு தீனி போட கொல்கத்தாவிலிந்தபோது  Eden-Garden  மைதானத்தில் நடந்த இந்திய - தென்னாப்பரிக்கா டெஸ்ட் போட்டியைக்கான அடிதடி, சிபாரிசுகளிடையே ஒரு நுழைவுச்சீட்டு வாங்கி சென்றிருந்தேன். போட்டியை நேரில் பார்ப்பது ஒருவித சுவாரசியமேன்றாலும், அவ்வப்போது வரும் கடி விளம்பரங்கள், replay-கள் இல்லாமல் பார்க்க, பாட்டே இல்லாத தமிழ் மசாலா படம் பார்த்த ஒரு உணர்வு.

அப்போது தாதா அப்போது மெல்ல உருண்டு வரும் பந்தை எடுத்தாலே மைதானமே ஆர்ப்பரிக்க, மற்ற வீரர்கள் விழுந்து தடுத்தாலும் ஒரு ஏகத்தாலக்கூச்சல் செய்வதும் சிரிப்பைத்தான் இருந்தது, ஆனால் மைதானத்திலிருந்தபோது  மறந்தும் தாதா பற்றி பக்கத்திலிருந்த பெங்காலி நண்பனிடம் ஏதும் சொல்லிவிடவில்லை.

இப்படி வெறியனாயிருந்தவனுக்கு, எதோவொரு நாளென்று தூக்கத்திலிருந்து எழுந்தவன் போல மொத்த ஆர்வமும் போய்விட்டது. அசாருதீன், Hansie Cronje என ஒவ்வொரு கதையாய் வெளியே வர காரணமா என தெரியவில்லை, கடைசியா நான் முழுவதும் அமர்ந்து பார்த்த போட்டி என்னவென்றுகூட நினைவு இல்லை.

வேலை காரணமாக பல இடங்கள் மாறியபோது, tennis, volleyball என அப்பாடக்கராக மாறியபோது cricket சுத்தமாய் நினைவிலிருந்து அழிந்தது.

இந்தியா வென்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டி இறுதி overகளை ஆர்வமே இல்லாமல், தம்பிகள் channel-ஐ மாற்றவிடாததால் பார்க்கவேண்டியதாகிவிட்டது.

இதோ இதை எழுதிக்கொண்டிருக்கையில் 4 ஆஸ்திரேலிய wicket-கள் வரிசையாய் சரிந்துகொண்டிருக்க அந்தப்பக்கம் திரும்பிப்பார்க்க ஆர்வமில்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

போனவாரம் @rgokul -ஐ காணச்சென்றிருந்தபோது @rajeshpadman cricket விளையாடுவியா ? என கேட்டபோது ஒரு நொடி யோசித்து ஆமா என சொன்னதுக்கு என்ன காரணமென தெரியவில்லை.

திருமண அழைப்பிதழ்

Published by யாத்ரீகன் under , , , , on வெள்ளி, டிசம்பர் 17, 2010



முணுமுணுப்பு

Published by யாத்ரீகன் under on ஞாயிறு, நவம்பர் 21, 2010


வெளியான உடனே தரவிறக்கிவிட்டு, பின்னெப்போதும் கேட்டே இராத பாடல்கள் பல GB இடத்தை அடைத்துக்கொண்டிருப்பது ஒரு பக்கம்மெனில், மற்றொருபக்கம் புதிய பாடல்கள் குவிந்துகொண்டே இருக்கின்றன. அப்படித்தான் இந்த படப்பாடல்களும் தொடங்கியது. சசி-ஜேம்ஸ் அப்படியொன்றும் எதிர்பார்க்கும் கூட்டணியில்லையென்றாலும், வேலையொன்றிற்கு பிண்ணணியில் ஓடிக்கொண்டிருந்தது.

இரண்டாவது வரி கேட்டதுதான் தாமதம், கவனம் உடனே வேலையிலிருந்து பாட்டின்மேல் திரும்பியது. பொதுவாகவே என் கவனம் வரிகள் மீது படியாது, இதனாலயே பாட்டின் வரிகள் நினைவில் நிற்காமல் சரிந்துபோகும் சாபம் பெற்றவன் நான்.

இரவைப்பற்றியும், அதன் மீதான கவர்ச்சிக்கு காரணம் எது என விரிந்து கொண்டிருந்த பாடல் வரிகள் மிகவும் பிடித்துப்போனது. மண்டைக்குள் நுழைந்துகொண்டு, இன்று நாள் முழுவது இரவுக்கு காத்துக்கொண்டு முணுமுணுத்துக்கொண்டிருக்கிறேன்.

இரவின் மீதான் காதல் எப்போது தொடங்கியதென தெரியவில்லை, ஆனால் தூங்கா நகரத்திலிருந்து வந்தவனுக்கு அந்த காதல் இல்லையெனில்தான் ஆச்சரியமாயிருக்கும்.

இரவைப்பற்றியும், அதன் மீதான பல்வேறு நினைவுகளை எழுத நினைக்கையில் எல்லாமே வரிசைக்கட்டிகொண்டு நிற்கின்றன.

மிகப்பிடித்த இரவொன்று, சாந்திநிகேதனின் rail நிலையத்தின் bench-னில் கடத்தியது. சிறிதும் முன்னேற்பாடேதுமின்றி, எங்கே போவது என்று கொஞ்சமும் யோசிக்காமல், கண்ணில்பட்ட முதல் rail-இல் ஆரம்பித்த பயணம். எங்கேயும் தங்க பணமில்லை, ஒர் இரவை கடத்தியாகவேண்டும், வித்தியாசமாகயிருக்கட்டுமென rail நிலையத்திலேயே இருந்துவிட்டேன். மொழி தெரியாத ஊர், கொஞ்சம் முரட்டுத்தனமாய் தெரியும் மனிதர்கள், மிகவும் அந்நியனாய் தெரிவது நான் ஒருவன்தான், மற்றொருபுறம் குளிரும் துளைத்துக்கொண்டிருந்தது, வசதிகளேதுமற்ற rail நிலையம் இருளில் முழுகிக்கொண்டிருந்தது. இப்படியிருந்த இரவு சுவாரசியமான நினைவாக மாறப்போவது தெரியாமல், தூங்கிவழியாமல் சுற்றத்தை கவனித்துக்கொண்டிருந்தேன்.

சாந்திநிகேதன் கல்லூரியிலிருந்து வீட்டுக்கு திரும்ப காத்திருக்கும் மாணவர்கள் குவியத்தொடங்கினார்கள். இவர்கள் கையிலொன்றும் T-square இல்லை, இசை கருவிகளும், காகிதமும்-தூரிகையும்தான். அங்கங்கே உட்கார்ந்துகொண்டு ஒவ்வொரு குழுவும் சிறு சிறு கச்சேரிகள் நடத்த, தொடர் andhakshari வகை கச்சேரிகளும் களைகட்ட, இத்தனை களேபரத்திலும் அங்கங்கே தூரிகைகளும் வேலை செய்துகொண்டிருந்தது.

இவை அத்தனையும் நடந்தது, அந்த கிராம மக்களின் கூட்டத்திற்கு நடுவே. ஆக சுவாரசியமான மனிதர்களுக்கும் குறைவில்லை. நீண்ண்ண்ண்ட இரவும் கரைந்துபோனது.

கொசுவர்த்தி சுருளை அணைத்துவிட்டு, இனி முணுமுணுத்துக்கொண்டிருக்கும் பாட்டிற்கு போவோம். Celebrate your night.




இந்த இரவுதான் போகுதேஏஏ.. போகுதேஏஏ..
இழுத்துக்கட்ட கயிறு கொண்டுவா நண்பனேஏஏ.. நண்பனேஏஏ..

இங்கேதான் சொர்கம் நரகம் ரெண்டும் உள்ளதேஏஏ.. உள்ளதேஏஏ..

ஆந்தை போலதான் இரவிலேஏஏ.. இரவிலேஏஏ..
கண்ணிரண்டை திறந்து வைக்கலாம் நண்பனேஏஏ.. நண்பனேஏஏ..

இங்கேதான் இன்பம் துன்பம் ரெண்டும் உள்ளதேஏஏ..

என்றென்றும் பகலிலே,
ஏதேதோ வலியிலே,
பொல்லாத நியாபகத்தை துரத்தி துரத்தி கொன்றுபோடு இரவிலேஏஏ..
பொய்யான வாழ்விலே,
மெய்யான இன்பம் இந்த போதையாலேஏஏ..

என்றென்றும் மனதிலே,
ஏதேதோ கனவிலே,
பொல்லாத ஆசையாவும் துரத்தி துரத்தி கொன்றுபோடு இரவிலே
பொய்யாக வாழும் வாழ்க்கைமேலே,
மெய்யான இன்பம் இந்த போதையாலேஏஏ..

இந்த இரவுதான் பிடிக்குதேஏஏ.. பிடிக்குதேஏஏ..
அர்த்தஜாமம் அர்த்தம் உள்ளதே நண்பனேஏஏ.. நண்பனேஏஏ..

இங்கேதான் சத்தம் அமைதி ரெண்டும் உள்ளதேஏஏ.. உள்ளதேஏஏ..

இன்னும் இன்பம்தான் இருக்குதேஏஏ.. இருக்குதேஏஏ..
ஒற்றை இரவிலே யாவும் தீருமோ நண்பனேஏஏ.. நண்பனேஏஏ..
என்றாலும் கோடி இரவு எதிரில் உள்ளதேஏஏ..

என்றென்றும் பகலிலே,
ஏதேதோ வலியிலே,
பொல்லாத நியாபகத்தை துரத்தி துரத்தி கொன்றுபோடு இரவிலே
பொய்யான வாழ்விலே,
மெய்யான இன்பம் இந்த போதையாலே

என்றென்றும் மனதிலே,
ஏதேதோ கனவிலே,
பொல்லாத ஆசையாவும் துரத்தி துரத்தி கொன்றுபோடு இரவிலே
பொய்யான வாழும் வாழ்க்கைமேலே,
மெய்யான இன்பம் இந்த போதையாலேஏஏ..

என்றென்றும் பகலிலே,
ஏதேதோ வலியிலே,
பொல்லாத நியாபகத்தை துரத்தி துரத்தி கொன்றுபோடு இரவிலே
பொய்யான வாழ்விலே,
மெய்யான இன்பம் இந்த போதையாலேஏஏ..

என்றென்றும் மனதிலே,
ஏதேதோ கனவிலே,
பொல்லாத ஆசையாவும் துரத்தி துரத்தி கொன்றுபோடு இரவிலே
பொய்யான வாழ்க்கை வாழும் வாழ்விலே, மெய்யான இன்பம் இந்த போதையாலே

இன்பம் இந்த போதையாலே
இன்பம் இந்த போதையாலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே




Kolkata Night Photo courtesy: http://www.flickr.com/photos/cambug/

இனி இரண்டு பயணச்சீட்டு

Published by யாத்ரீகன் under , on வெள்ளி, நவம்பர் 12, 2010
தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல... எனத்தொடங்கினால் யார் அந்த வேதாளம் ? எனவும்,
ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி.. என ஆரம்பித்தால் யார் அந்த மந்திரவாதி ? எனவும்,
தேவையற்ற கேள்விகள் எழும் என்பதால் :-)
எப்படித்தொடங்குவதென யோசித்துக்கொண்டே சில வாரங்கள் தாண்டிவிட்டன

பலவருட காத்திருக்குப்பின், நான் மேற்கொள்ளும் பயணங்களில் சிறு மாற்றம்,
30-Jan-லிருந்து நான் எடுக்கும் பயணச்சீட்டுகள் இனி இரண்டாகும் :-)

இந்த முறையும் நான் பார்த்த பெண்ணுக்கு, கல்யாணம் நடக்கப்போகுது,
ஆனா இந்த முறை என்கூட நடக்கப்போகுது :-)
எனக்கே நம்ப முடியல, ஆனா என்ன செய்ய, நீங்க எல்லோரும் நம்பித்தான் ஆகனும் :-D

பாரதியார் சொன்னது எது செய்ய முடிஞ்சதோ இல்லையோ, ஏதோ என்னால முடிஞ்சது, சேரநன்னாட்டிளம் பெண்ணை கண்டது ;-)

பேசும் மொழியிலிருந்து, பார்க்கும் படங்கள், கேட்கும் பாடல்கள்,
படிக்கும் புத்தகங்கள், செய்யும் வேலை,கனவுகள்.... என பெரும் காரியங்களிருந்து,
பிடித்த நிறம், பிடிக்காத உப்புமா,வணங்காத கடவுள்கள்... என சிறு காரியங்கள் வரை,
பல வேறுபாடுகள் இருந்தாலும்
பயணங்களின் மேலிருந்த காதலே எங்களிருவரையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைத்தது..

சந்தித்த இடமொன்று, பழகிய இடமொன்று,
தொடங்கிய இடமொன்று.. என பயணித்துக்கொண்டிருந்தது
நாங்கள் மட்டுமல்ல எங்களோடு சேர்ந்து காதலும்தான் :-)

திருமண தேதி: 30-January-2011
இடம்: மதுரை

திருமண வரவேற்பு: 2-Feb-2011
இடம்: திருவனந்தபுரம்

பதிவுகள் எழுதி பலகாலம் ஆனதால் இந்த வலைத்தளத்தை எவரும் தொடரவோ படிக்கவோ செய்வார்கள் என்று நம்பிக்கையில்லை :-) , பதிவர்கள் எவரிடமும் தொடர்ந்து பேசியதும், பழகியதுமில்லை..
இருப்பினும் நண்பர்கள் இந்த நேரத்தில் மதுரையிலோ, திருவனந்தபுரத்திலோ இருந்தால் வந்திருந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் :-)

மேலும் விபரங்கள் விரைவில்..

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Published by யாத்ரீகன் under on வெள்ளி, ஜனவரி 01, 2010
ஒர்க்குட்,டிவிட்,sms,குழு மின்னஞ்சல்கள்
என அனைத்திலும் நிரம்பி வழியும் புத்தாண்டு வாழ்த்துக்கள்,
நேரில் சொல்லத்தான் யாருமில்லை.....

குழந்தைகளுக்கான அறிவுத்திருவிழா

Published by யாத்ரீகன் under on திங்கள், அக்டோபர் 05, 2009
நண்பர்களே,
இந்தியாசுடர் என்பது நண்பர்கள் சிலர் சிறுதுளியாய் தொடங்கிய ஒரு தன்னார்வக்குழு. இன்று பெரும் துளியாய் வளர்ந்து, பெரும் ஆறாய் மாறி பலரை பயனடைய வைக்க முயன்றுகொண்டிருக்கிறோம். எங்களைப்பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லலாம்.

இந்த பதிவின் நோக்கம், இந்த குழுவை அறிமுகப்படுத்துவதைவிட இதன் மூலம் இன்னும் சிறிதுநாட்களில் நடக்க இருக்கும் “அறிவுத்திருவிழா” நிகழ்ச்சியை உங்களிடமும், உங்கள் நண்பர்களிடமும் பரப்புவதே.

11-அக்டோபர்-2009 சென்னையையும், அதைச்சுற்றிலும் இருக்கும் குழந்தைகள் இல்லத்திற்கான நிகழ்ச்சி. உங்களுக்கு தெரிந்த தன்னார்வக்குழுக்கள் இருப்பின் (சிறிதோ/பெரிதோ) அவர்களிடம் சொல்லி அவர்களையும் இதில் பங்கேர்க்கச்செய்வதின் மூலம் அவர்களுக்கான பயனை அடையச்செய்யலாம்.

1. போட்டிகள் (திருக்குறள்/ படம் வரைதல், வினாடிவினா, மொழிபெயர்ப்பு..)
2. எதிர்கால பாதை பற்றிய பேச்சு
3. “சாதிப்பது சாத்தியமே” - சுயமுன்னேற்ற பேச்சு








நிகழ்ச்சியில் பங்குபெறவரும் இல்லங்களில் குழந்தைகளுக்கு பயண செலவும், மதிய உணவும் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: admin@indiasudar.org

நிறைந்த நினைவுகள்

Published by யாத்ரீகன் under , on திங்கள், மார்ச் 16, 2009
என்ன சொல்வதென தெரியவில்லை, பலநாளாய் படிக்கவேண்டுமென நினைத்திருந்த “வெயிலோடு போய்” சிறுகதை “பூ” என்ற படமாக வந்தபொழுதும், அதைப்பற்றிய நல்ல விமர்சனங்கள் எழுந்தபோதும் கட்டாயம் பார்க்கவேண்டுமென நினைத்திருந்தேன். சில நாட்களுக்கு முன் கேட்டிருந்த ஒரு தோழியின் நெகடிவ் விமர்சனத்தையும் மீறி இன்று பார்க்கத்துவங்கினேன். பார்த்ததும் தோன்றியதுதான் இந்த பதிவின் முதல் வரி. என்ன சொல்வதென தெரியவில்லை.

மனது நிறைய ஒரு வகையான, என்னவென்று நேரடியாக பெயரிட முடியாதொரு ஒரு உணர்வு மனமெங்கும் நிறைந்திருக்கின்றது. மாரியின் கள்ளங்கபடமில்லாத அன்பா, அந்த இறுதிமுடிவா, வாழ்வின் நிதர்சனத்தில் அடிபட்டுப்போகும் எல்லாமா, எளிதாய் காணவியலாத இப்படியொரு எதிர்பார்ப்பில்லாத அன்பா.. என எல்லாவற்றையும் ஒன்றாய் கண்டதொரு ஒரு உணர்வுதான் அது.

சுருக்கமாய் சொல்வதென்றால் மிக மிக மிக பிடித்தபடங்களுள் ஒன்றாக இருக்குமென்று நினைக்கவேயில்லை. ஆனால் அவ்வளவு சுருக்கமாய் முடித்துவிட தோன்றவில்லை. படத்தின் ஒவ்வொரு காட்சியையும், பாத்திரப்படைப்பையும், வசனங்களையும் நுணுக்கமாய் இரசித்து இரசித்து சந்தோஷப்பட்டு, வருத்தப்பட்டு பார்த்துக்கொண்டிடுருந்தேன்.

ஆரம்பத்திலிருந்தே ஆரம்பிக்கலாம், பெயர் போட்டு முடித்ததும் வரும் அந்த கிராமத்தின் அறிமுகக்காட்சிகளில் வரும் பாளம் பாளமாய் வெடித்திருக்கும் மண்ணும், அடுத்து வரும் முகமெங்கும் சுறுக்கம் கொண்ட பாட்டியின் க்ளோசப் காட்சிகளில் போடும் அட, இறுதிவரை வரும் ஒவ்வொரு காமெரா கோணங்களிலும் நெஞ்சை அள்ளுகிறது, கிராமமென்றாலெ பசுமைதான் அழகென்பதை உடைத்து, சிவகாசியனருகே இருக்கு ஒரு வரண்டமண்ணுமொரு அழகுதான் என காட்டும் காட்சிகள் அட்டகாசம். இதை சத்யம் தியேட்டரில் பார்க்கத்தவறிவிட்டேனே !!!

சின்ன சின்னதாய் வரும் சில விஷயங்களை பார்த்து பார்த்து மனசு ஏனோ படமெங்கும் சந்தோஷப்பட்டுக்கொண்டே இருந்தது. ஒவ்வொன்றும் சட்டென 10-15 வருடங்கள் சரேலென பின்னாலிலுத்துக்கொண்டிடுருந்தது. கடையில் தேங்காய் சில்லு வாங்க வரும் சிறுவன் (இப்போதெல்லம் தேங்காய் சில்லு தருகிறார்களா ?! :-) , அதை உடைத்து அதன் தண்ணீரை உடைத்து அப்படியே ஊற்றிவிடுவதும், மண்டைவெல்லம் கேட்டதற்கு தேங்காய்தண்ணீர் குடித்ததை சொல்லுவதும்.. வீட்டினெதிரே இருக்கும் செட்டியார் கடையில் அடித்த கூத்துதான் நியாபகம் வருது. புது சேலை பார்த்ததும் எடுத்தியாடி, எடுப்பாதானிருக்குனு சொல்லும் சிறு வசனம்தான், பலரின் கவனத்தை கவரும் அளவுக்கு முக்கியத்துவமானதுமில்லை, ஆனால் கண்முன் நடமாடிய பல பாட்டிமார்களை ஒரு நொடியில் நியாபகப்படுத்திவிட்டது. சாப்பிட மாரி உட்காரும் முறையிலாரம்பித்து, ஒவ்வொரு மானரிஸங்களிலும் மாரியாகவே உலாவியிருக்கும் பார்வதி அடுத்த முத்தழகுதான்.

பேனாக்காரர் கதாபாத்திரம் இன்னொரு அட்டகாசம், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணாதிசியங்களையும் பக்கம் பக்கமான வசனங்களில் விளக்காமல் காட்சியமைப்புகளாலயே (வண்டிக்காரர் பேனாக்காரர் என்பது வெறும் வார்த்தை வித்தியாசமில்லை என்பதில் வரை) அசத்தியிருக்கிறார் சசி.

வயல்வெளிகளில் கைகளை கோர்த்துக்கொள்ளும் கற்பனை கவிதை, அதுவும் படத்தில் முக்கியமாய் பயன்பட்டிருப்பது அருமை.

சின்ன சின்ன கதாபாத்திரங்களை அறிமுகமான முகங்களாய் விடாமல் புதியவர்களை அதுவும் கிராமத்தினரையே உலாவ விட்டிருப்பது பெரும் பலம், அண்ணன் தங்கையிடையே நடைபெறும் வசனங்கள், மாரிக்கும் அவள் அண்ணனுக்கும் நடக்கும் முறையும், மாரியின் அம்மாவுக்கும் அவர்களின் அண்ணனுக்கும் நடக்கும் வசனம் (ஆரம்பகட்டத்திலும் - குடுகுடுக்குப்பைக்காரனை விரட்டசொல்வதும், வயதானவர்களானதும் - சாபம்விடுவதும்) காட்டப்படும் இயல்பு, வித்தியாசம்.. அப்படியே கண்முன் நடந்த எத்தனையே விஷயங்களை நியாபகப்படுத்தியது.

புது கிளாசில் மாணவர்களின் அதிகபட்சக்கனவும், மாணவிகளின் குறைந்தபட்ச கனவின்மையும், மெலிதாய் வந்து போவது பலருக்கு சிரிப்பாயிருந்திருக்கலாம், ஆனால் யோசிக்கையில் இப்படித்தானே இருந்திருக்கிறோம், இன்னும் இப்படித்தானே இருக்கு என்று நினைக்கையில் என்னமோபோலிருந்தது. அங்கு ஆரம்பிக்கும் மாரியின் அந்த வெள்ளந்திதனமான, கள்ளமில்லாத அன்பு படமெங்கும் விரவிக்கிடக்கின்றது, நம் மனமெங்கும் நிறைந்துகொள்கிறது. படுக்கையில் , ஆமா மோண்டேன் , கோயில்ல சாமிகிட்டயும் சொல்லிக்கோனு தைரியமாய் சொல்பவள், அழுவதென்று கவிதையாய் நம்மை அறியாமல் புன்னகைக்க வைக்கும் தருணம், எத்தனை முறை நாமும் இப்படி பிடித்தமானவர்கள் முன் விளையாட்டுக்குக்கூட அவமானப்படுவதை கண்டு எத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணியிருப்போம்.

பருத்திவீரனில் டக்ளஸ் அண்ணனென்றால் இங்கெ ஒரு அலோ.. இறுதியில் வரும் ஒரு முக்கியமான justification-க்கும் இந்த பாத்திரம் பயன்படுத்தப்படும்போது, படத்தில் எதுவுமே தேவையில்லாமல் இல்லை என்பதை உணர்ந்து, சிறுகதையையும், அதை திரைக்கதையில் பிசராமல் கொண்டுவந்தவரின் உழைப்பும் அட்டகாசம்.

அந்த முதலாளியின் பாத்திரமும், வசன உச்சரிப்பில் ஆரம்பித்து எல்லாவகையிலும் (தங்கராசை பார்க்கும்பொழுது அப்பா சொன்னாரு என சொல்லும் சின்ன வசனத்திலேயும் அட்டகாசம்) பார்த்த மனிதர்களையே நினைவுபடுத்தும் மனசில் தங்கிய இன்னொரு சின்ன கதாபாத்திரம்.

நினைவிலிருக்கும் போன் நம்பர் ஒரு சின்ன க்ளிஷே ஆனாலும் நல்ல கலகல :-) , அடுத்து அந்த தோசை முத்தம் :-)))))))))))))) வாய்விட்டு சிரித்துக்கொண்டிருந்தேன் :-)))))))

உயரம் பார்ப்பதும், மொந்த செருப்பிலும் எம்பி எம்பி உயரத்தில் திருப்திபட்டுக்கொள்வதும் :-))) , அந்த போர்மென் கதாபாத்திரமும் பச்சக்.. (கண்ணாடியில்லாமல் கண் தெரியாமலிருப்பது வழக்கமான கதாநாயகியின் மதிப்பைக்குறைக்காத செயல் எனினும்)
கள்ளிப்பழம் சிதறிப்போகும் கனவை குறிப்பால் காட்டும் காட்சியாயிருக்கலாம், ஆனால் மாரியின் குணத்தை காட்டும் அந்த காட்சியை மறக்கவே முடியாது, மாரியையும் மறக்கவே முடியாது :-) , இப்படி அன்பை பொழியும் நபர்களை பார்பதும் சரி, வாழ்வின் அங்கமாய் கொள்வதும் சரி, எளிதில் வாய்த்துவிடுவதில்லை.

ஒவ்வொரு சமயமும் இன்னாரு மகனா நீயி, இன்னாரு மக போல இருக்காளே என்ற சின்ன சின்ன வசனங்கள் கூட.. miss பண்ணும் எத்தனையோ பெயர் தெரியாத சுற்றுப்புறத்தவர்கள் கொண்ட விழாக்களை நியாபகப்படுத்திக்கொண்டிருந்தது.

நல்லவேளை, பட்டணத்து தோழி காதலை சொல்லவில்லை, தோழியாகவே விட்டுருப்பது இயல்பாகவே இருந்தது.

900 ரூபாய்க்கு விற்க்கப்படும் கறுப்பி கூட படத்தின் முக்கியமான கதாபாத்திரம், அதுவும் முடிவை எளிதாய் நம்முன் வைக்க உதவும் ஒரு கதாபாத்திரமாயிருப்பது அட்டகாசம்.  அதே போல் மாரியின் கணவனும் ப்ளாஷ்பேக் நினைவுகளில் அவர்களிடையே உலாவுவதும் சொல்லும் நிஜங்கள் பல :-)

கருப்பசாமியிலிருந்து பெருமாளுக்கு மாறுவது நுண்ணரசியல் விமர்சனங்களுக்கு ஆட்பட்டிருக்கலாம் ஆனால் கோவிந்தா கோவிந்தாவென ஒலிக்கும் அந்த குரல் செம டைமிங் :-))))))))))) , அதோட சேர்ந்து “தங்கராசு வேணும்”-னு மாரி கேட்கும்போது நம்மை அறியாமல் மனமெங்கும் பொங்க்கும் ஒரு மகிழ்சிக்கு அந்த கதாபாத்திரத்துக்கான நம் மகிழ்ச்சி மட்டும்தான் என வெறுமென ஒதுக்கி விடமுடியுமா ? ;-)

சட்டென்ற கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்வதும், சாகாமல் வெறுமென வாழ்வதுமட்டுமின்றி சந்தோஷமாய் வாழப்போவதற்கான காரணத்தை மாரி சொல்லும்போது, அதுவே இறுதியில் முடியும் ப்ரேமில் வரும் மாரியின் ரியாக்‌ஷனை நெஞ்சை பிசையும் சோகமாய் மாற்றுவது, அழகிக்குபின்னும், காதலுக்குபின்னும் வரும் கனத்த சோகத்தை கொண்டு இதுவரை படமெங்கும் சின்னசின்னதாய் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தவர்களை அசைத்துவிடுகின்றது.

படத்தின் முடிவைப்பற்றி எத்தனையோ விதமான விமர்சனங்கள் வந்துவிட்டன, அத்தனையும் அவரவரின் பார்வை, சரியென்றும், தவறென்றும் ஒன்றுமில்லை, ஆனால் இந்த படத்தை இத்தனை ஆழமாய் பதியவைத்தது எதுவென யோசித்துக்கொண்டிருந்தேன்...

அழகி, ஆட்டோகிராப் போன்ற திருமணமான ஆண்களின் காதல் நினைவுகளை, நினைவுகள் என்று கவுரமாய் பெயரிடும் முறை, இதே நினைவுகள் பெண்களின் வழியே வரும்போது, அதிர்ந்து போகும் மாரியின் அம்மாவிலிருந்த்து, ”இன்னுமா நியாபகம் வைச்சிருக்க--” எனக்கேட்கும் தோழியின் குரலில் இருக்கும் தொனியில்வரை, வேறு வகையில்தான் நிஜ வாழ்க்கையில் classify செய்யப்படுகின்றது.

ஆனால் படம் முடிந்ததும் “மாரி” அப்பாவி சிறுமியிலிருந்து மிக உயர்ந்த கதாபாத்திரமாய் மாறிய்போவதை அந்த பனைமரத்தின் கீழ்வரும் காமிரா கோணத்திலிருந்து காமிப்பதில் மனம் எளிதாய் வேறு விவாதங்களின்றி ஒத்துக்கொள்கின்றது.

சாதரணமாய் இத்தகைய நிகழ்வுகளை நண்பர்களிடையேயான தண்ணிபார்ட்டியில் ஒரு பேச்சுக்கூட தவறாய் நினைக்கமுடியும் மனம், கொஞ்சம் கூட மாரியை பற்றிய அபிப்பிரயாத்தை களங்கப்படுத்த முடியாதே கதையின் பலம், கதாபாத்திரங்களின் வெற்றி.

ச.தமிழ்ச்செல்வன், சசி, ஷ்ரீகாந்த், பார்வதி, பெயர் தெரியாமல் படமெங்கும் பரவிகிடக்கும் அத்தனை கதாபாத்திரங்கள், காமிரா, வசனம், தயாரிப்பாளர்கள் என அத்தனைபேருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

It made my weekend.

அவ்வளவு சந்தோஷமாய் துள்ளித்திரியும் அந்த சூ..சூ... மாரி பாடலே இறுதியில் மனதை அறுக்கும் வரிகளாய் வரும்போது கண்ணுக்குத்தெரியாத ஏதோ ஒன்றை நம் மனது திட்டித்தீர்ப்பதை ஏனோ தவிர்க்க இயலவில்லை.





சேர்த்து வெச்ச நெனவெல்லாம் நெருஞ்சிமுள்ளா அறுக்குது .. சூ.. சூ... மாரி...

Das Leben der Anderen

Published by யாத்ரீகன் under , on ஞாயிறு, ஜனவரி 11, 2009
              காது மடல்களை சிலிர்க்க வைத்துக்கொண்டிருந்தது இன்றைய மெல்லிய குளிர், ஊரெங்கும் மூடுபனியால் சூழ்ந்திருக்க, அட்டகாசமான வானிலை. சுடச்சுட இருந்த Starbucks-இன் White Chocolate Mocca-வுடன் வழக்கம்போல  நீண்டதாய் இலக்கில்லா வழியில் காரை ஓட்டிச்சென்று வீடு திரும்பியதும், இருந்த தூக்க கலக்கமெல்லாம் எங்கே சுருண்டுகொண்டதென்று தெரியவில்லை. 

            இருந்த புத்துணர்வுக்கு நல்ல படம் பார்க்கனுமென Que-வை மேயத்தொடங்க கிடைத்ததுதான் Das Leben der Anderen.  Run Lolla, Downfall போன்ற ஜெர்மன் படங்கள் ஏமாற்றாததால் நம்பிக்கயுடன் பார்க்கத்துவங்கினேன்.  ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே பரபரப்பு பற்றிக்கொண்டது (Valkyrie படத்தையும் ஒரு ஜெர்மனிய படமாக இந்த இயக்குனரே இயக்கியிருக்கலாம்). இயக்குனரின் முதல் படமாம், சத்தியமாய் நம்பமுடியவில்லை.
    
          படம் ஆரம்பிக்கும் விசாரணை காட்சியிலிருந்து, கடைசி காட்சியில் இருக்கும் டச் வரை அட்டகாசம். வசனங்களும், மிக மிக மிக முக்கியமாய் அந்த பிண்ணனி இசையும்.. படம் முடிந்தபின்பு அந்த கதாபாத்திரங்களிடையே நாம் வாழ்ந்து முடிந்தமாதிரி ஒரு உணர்வு. 

          என்ன புத்தகம் எழுதலாம், என்ன படிக்கலாம் என தமிழகஅரசாங்கம் மக்கள் சிந்தனையை  குறுக்க நினைத்து என்ன பண்ணுகின்றோமென உணராமல் முட்டாள்தனமாய் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த படம் பார்த்தது என்னவெல்லாமோ யோசிக்க வைத்துவிட்டது. 

        பிண்ணனியிசையென்றதும் நினைவுக்கு வரும் ஒரு கவித்துவமான காட்சி, படத்தின் உயிர் நாடிகளின் ஒன்றான அந்த பியானோ வாசிக்கும் ஒற்றை காட்சியில் எத்தனை அழகாய் படத்தின் போக்குக்கான justification.

        சரி அப்படி என்னதான் கதை ?   

  ஒருவரை ஒட்டுகேட்கத்துவங்குகின்றீர்கள்,  ஒரு வரி அல்ல ஒரு நிமிடமல்ல.. ஒவ்வொரு சொல்லையும், ஒவ்வொரு நொடியையும்.. உங்களின் செயல் எத்தனை தூரம் ஒட்டுக்கேட்கப்படுபவர்களையும், உங்களையும், சமுதாயத்தையும் மாற்றும் என நினைத்துப்பார்த்திருப்பீர்கள் ?   அதுதான் கதை. வழக்கமான அட்டுத்தனமான Action/Thriller வகையறாக்களல்லாமல் ரெக்ளைனரின் நுனிக்கே கொண்டுவந்துவிட்டதொரு பொலிடிக்கல் திரில்லர்.
Das Leben der Anderen (The Lives of Others)




 கருத்து மற்றும் சிந்தனை சுதந்திரம், ஐடியலான நல்லதொரு சமூகம்/அரசாங்கம், இவற்றில் இன்று நாம் அனுபவிக்கும் நல்லவிஷயங்கள் அதனால் நாம் கவனமின்றி, கவலையின்றி தவரவிட்டுக்கொண்டிருக்கும் உணர்வுகள் .. என பல விஷயங்களை கிண்டி கிளறிவிட்டது.. 

படம் முடிந்தபின், அடுத்த படத்திற்கோ/வேலைக்கோ கடிகார முட்களின் ஓட்டத்திற்கு நடுவே தவ்வுவதற்குமுன் கொஞ்சம் தனிமையும் அசைபோடுதலையும் சேர்த்துப்பாருங்களேன்.. Its worth it.

Whatzup Bro

Published by யாத்ரீகன் under , , on ஞாயிறு, ஜனவரி 11, 2009
                     ஊருக்கு செல்லும் முன் மூடிய Netflix கணக்கை மீண்டும் திறந்தபின் கிடைத்த முதல் குறுந்தட்டு “அந்த நாள்”. எத்தனையோ பேர் சொல்லக்கேட்டிருந்தாலும், நம்பிக்கையில்லாமல் பார்க்கத்துவங்கினேன், அட்டகாசம். எத்தனையோ முறை பலர் துவைத்து காயப்போட்டுவிட்ட விமர்சனமென்பதால் புதிதாய் சொல்ல ஏதுமில்லை, ஆனால் கவனத்தை சிதறடிக்காத திரைக்கதை மட்டுமல்ல, அந்தநாட்களில் மனிதர்களின் வாழ்கை நடைமுறை, போலிசாரின் உடை, மற்றவைகள் என மீண்டும் கவனிக்கவே மற்றோரு முறை பார்த்துக்கொண்டிருந்தேன். 

    இத்தனை நடுவிலும் படத்தில் சடாரென மனதில் ஒரு மின்னல்வெட்டு அந்த அழகான உதடுகள் :-) , யாரிது ?




முணுமுணுப்பு

என் அன்பே நானும் நீயின்றி நானில்லை
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை
...
...

தலை தொடும் மழையே
செவி தொடும் இசையே
இதழ் தொடும் சுவையே
இனிப்பாயே
விழி தொடும் திசையே
உடல் தொடும் உடையே
விரல் தொடும் கணையே
இணைவாயே






பி.கு.:  அந்த படத்துக்கும் என் முணுமுணுப்புக்கும் சம்பந்தமில்லை. இப்பொழுதுதான் முதல் முறை கேட்கிறேன் ;-)

நீண்டதொரு பயணம்

Published by யாத்ரீகன் under , on திங்கள், டிசம்பர் 29, 2008
Change is the only thing that doesn't changes in this world என்ற மாற்றமே காணதொரு வாக்கியத்தை
ஒவ்வொரு முறையும் HOD சொல்ல கேட்கும்பொழுது எவ்வளவு கூச்சலிட்டிருப்போம், அதிலும் இறுதிவரை மாற்றமே இருந்ததில்லை.

வேர் விட்டிருக்கும் செடியாயிருக்கட்டும் பெரும் மரமாகட்டும், பிடுங்கி நடப்படுவதென்பது இருவருக்கும் தனித்தனியேயான அனுபவத்தை தரப்போவதில்லை. மாற்றங்களில் சிறிதென்ன பெரிதென்ன ? பார்த்த பார்வைகள், புரிதல்கள் ஒவ்வொரு மண்ணிலிருந்து பிடுங்கப்படும்பொதும் செரிவடைகின்றது. இடம்விட்டு இடம்விட்டுச்செல்ல, எடுத்துச்செல்லும் துகள்களென நட்புகள்.

எந்தவொரு மாற்றம் நடக்கும்போதும், அதன் பொருட்டு எற்படும் அனுபவம் தனியானதொரு recap போலத்தான்.

இத்தகைய மாற்றங்களின்போது செய்யும் பயணங்களுக்கான சுவையே தனி, ஊறவைத்த கள்ளைப்போல நினைவுகள் ஊறவைத்த காலம் அதிகமாக அதிகமாக.

2 மாதங்கள் திருவனந்தபுரத்திலிருந்த கட்டற்ற சூழலிருந்து விடுபட்டு பொறுப்புகள் கூடிய சுதந்திர உலகுக்கான அடியெடுத்த முதல் மாற்றமாகட்டும் (நினைவில் மிகப்பசுமையாய் பதிந்தவற்றுள்), இன்று 3 வார விடுமுறை என நினைத்து ஊருக்கு வந்துகொண்டிருக்கும் சிறு
மாற்றமாகட்டும், ஒவ்வொன்றாய் நினைத்துப்பார்த்துக்கொண்டு நினைவுச்சுழலில் முழ்கிக்கொண்டிருப்பது அவ்வப்பொது கடந்துகொண்டிருக்கும் வருடங்களை தட்டிவிட்டுச்செல்ல உதவுகின்றது.

------------------

இனிய ஆங்கில வாசிப்பனுபவத்தை அறிமுகப்படுத்திய தோழிக்கு 2 வருடங்களுக்கு முன் பிறந்தநாள் பரிசை துழாவும்போது தட்டுப்பட்டது ஜெயமோகனின் கொற்றவை. முதல் இரு அத்தியாயங்களின் சுவையில் மயங்கி பரிசளித்திருந்தேன். அவள் படித்தாலா இல்லையாயென தெரியாது, ஆனால் கொற்றவை அந்நொடியிலிருந்து என்னை பின் தொடர்ந்துகொண்டிருந்தாள்.
அப்படியும், வாங்கி 1 வருடங்கள் கடந்தும் படிக்கும் சூழல் அமைந்திருக்கவில்லை. இன்று 1 முழு நாள் விமானப்பயணமென்று முடிவானதும் கைகள் முதலில் துழாவத்தொடங்கியது
இந்த புத்தகத்தைதான். எஸ்.ராவின் ”கால்முளைத்த கதைகளும்” அயற்ச்சியை தவிர்க்க துணைகொண்டது.

அயற்ச்சி என்று நினைத்ததைவிட, தழும்புதல் என்பதெ சரியான சொல்லாய் இருக்க முடியும். மீண்டும் அந்த முதல் இரு அத்தியாயங்களிலிருந்து தொடங்கியும் சுவாரசியத்திற்கு சற்றும்
குறைவில்லை. கடினமான இலக்கிய மொழிநடை பெரும் தடையாய் இருக்கவில்லை, மாறாக அதிலிருந்த கற்பனை வளம், விடயங்களை சொல்லியிருக்கும் விதம்.. என மிக சுவாரசியமாய் நேரம் செல்லத்துவங்கியது.

மக்களின் மொழி, மரபுகள், நம்பிக்கைகள், வாழ்க்கை முறை, புரிதல்கள், பயங்கள் என அத்தனையும் காலவெளியில் பயணித்திருக்கையில் எப்படித்தொடங்கியிருக்கும், அதன்
பரிணாம வளர்ச்சியெப்படியிருந்திருக்கும் என்ற பார்வையில், இதுவரை கடந்திருக்கும் 50 பக்கங்கள் அற்புதமென்ற ஒருசொல்லில் அடைக்கவியலாது. இவ்வளவு மணிநேரங்களில்,
சாதரணமாய் பல பக்கங்களை கடந்திருக்கலாம், ஆனால் முதல் வரியான “” -லிருந்து தொடங்குகிறது தேடல். ஒவ்வொரு வரியையும் வாக்கியத்தையும் மீண்டும் மீண்டும் வாசிக்க, பிரமிப்பாய் இருக்கின்றது, இயல்பாய் நாமும் கடந்துவந்திருந்த நிகழ்விலிருந்து, கேள்வியே பட்டிராத தகவல்களென, ஒரு அற்புதமான வாசிப்பானுபவத்தை தந்துகொண்டிருக்கின்றாள் கொற்றவை.
----------------------------

சென்றுகொண்டிருக்கும் ஒவ்வொரு புதிய இடத்திலும் தெரிந்த முகங்களிலிருந்து, நண்பர்கள் என்ற அடைமொழியில் அடைபட்டிருக்கும் முகங்கள் வரை சங்கிலியின் கோர்வை கூடிக்கொண்டே போகின்றது. இதில், நெருக்கமாய் பலவற்றும் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் எங்கோ தொலைந்துகொண்டிருக்க, புதிய நபர்களை பழக்கப்படுத்திக்கொள்ள தயக்கங்கள் கூடிக்கொண்டிருக்கின்றது. பொருட்களின் மேலிருக்கும் மோகமும், நட்பின் மீதிருக்கும் பிடிப்பும் (hold என்பதின் சரியான பயன்பாடு இங்கே என்னவாயிருக்க முடியும்?) வெகு வேகமாய் குறைந்துகொண்டிருக்கின்றது. இதனால் நண்பர்களிடமேலிருக்கும் நம்பிக்கைக்கு/அன்புக்கு குறையில்லை ஆனால் அதன் இடைவெளிக்கு பெரிதாய் கவலைப்பட்டுக்கொள்வதில்லை. என்றொ ஒரு நாள் சந்தித்துக்கொண்டாலும் அந்த நிமிடங்கள் மீட்டுத்தரும் மலர்ச்சி போதும்.

-----------------------------

இருட்டின் மீதான மெல்லிய வெளிச்சத்தில், பக்கத்திலிருக்கும் பெண்ணின் கைகள் அவள் புரண்டுகொண்டு தூங்குகையில் மிருதுவாய் உரசிக்கொண்டிருக்க, பல ஆயிரம் அடி உயரத்தில்
இதை தட்டிக்கொண்டிருக்கின்றேன். நாட்குறிப்பெழுதி மாதக்கணக்கில் முடிந்து வருடக்கணக்கில் ஆகத்துவங்கப்போகுது. இப்படி வலையில் தட்டி எவ்வளவு தூரம் தான் பதிந்து வைத்துக்கொள்வது..

---------------------

இந்த பதிவைப்போல, ஒரு கோர்வையின்றி தறிகெட்டு ஓடுகின்றது இந்த நினைவுக்குதிரை, மூச்சிரைத்து நிற்குமிடமெங்கிலும் மீண்டும் காலம் தன் சவுக்கை
சொடுக்கிக்கொண்டு தொடர்கின்றது.

பி.கு: சென்ற மாதத்தின் இந்திய பயணத்தின் போது, விமானத்தில் தட்டச்சியது, இத்தனை நாள் கழித்து பல வேலைகள் முடித்து மீண்டும் இணையத்தில் சேரும் வரையில் தங்கையின் கணிப்பொறியில் உறங்கிக்கொண்டிருந்தது.

Happy Holidays

Published by யாத்ரீகன் under on வெள்ளி, நவம்பர் 07, 2008

பிள்ளையார் err.. கொழுக்கட்டை பிடிக்கப்போய்

Published by யாத்ரீகன் under on வியாழன், செப்டம்பர் 04, 2008
பிள்ளையார் err.. கொழுக்கட்டை பிடிக்கப்போய்

போளி ஆன கதை

அல்ப சந்தோஷம்

Published by யாத்ரீகன் under on வியாழன், செப்டம்பர் 04, 2008

எல்லோரும் இதற்காக கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கையில், எங்கள் அப்ளிகேஷன் மிக எளிதாய் செய்தது (பெரிதாய் கூட ஒன்றும் செய்யவில்லை :-)
யாருக்காவது க்ரோம் proxy வழிய ஒழுங்க வேலை செய்யுதா ?