யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

Dream of Pi

Published by யாத்ரீகன் under , on செவ்வாய், நவம்பர் 27, 2012
ஏனோ இன்று மனம் முற்றிலும் ஆராவாரமற்றிருக்கின்றது. Life Of Pi -இல் சொல்லப்படும் அந்த french swimming pool போல தெளிவான மனம். குறிப்பிடத்தக்க நிகழ்வேதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விடியற்காலையிலிருந்து மதியம் வரை, 20-30 பேர் கொண்ட உறவினர் குழு சூழ அதீத ஓசையுடனிருந்த சூழலிருந்து விடுபட்டதாலா ? இல்லை வேலை ஏதுமில்லாததாலா ? எனக்கென்னவோ, இவையெல்லாம் just environment மட்டுமே, ஆனால் அமைதியை தூண்டிவிட்ட catalyst, Cinema Paradiso & The Legend of 1900 இரண்டிற்குமான பின்னணியிசை தொகுப்புதானென தோன்றுகிறது.

நம்மூர் இசையராசா இசையில் இல்லாத அமைதியா என்று துடிக்கும் இரசிகர்கள் அமைதி காக்கவும், ஏனோ அவரின் திரையிசையை கேட்கும்போது, அங்கிங்கு நினைவிருக்கும் பாடல் வரிகள், காட்சிகள், பாடல் நினைவுபடுத்தும் வாழ்க்கை நிகழ்வுகள் என பல கலக்கங்க ள். மேலே குறிப்பிட்ட இரண்டு படங்களுக்குமான வசதி, என் மறதி + 1 முறை மட்டுமே பார்த்தது.

மறதி என் வரமென்றால், கனவுகள் என் மற்றொரு வரமென்பேன். நேற்று முதல் முறை சந்தித்த நண்பர்கள் சிலரை, என் கனவின் சாகசப்பயணங்களில் (நேற்று கண்ட Life Of Pi படம் போன்ற) சந்தித்ததை மனைவியிடம் சொன்னபோது, "அதெப்படி நேற்றுதானே முதல் முறை சந்தி த்தீர்கள், நெசமாத்தான் சொல்றீங்களா.. " என கற்றது தமிழ் அஞ்சலியாய் மாறி கேட்கும்போது, நானும் Pi போல மாறி, "So you want a story that you can believe ? .. " என கேட்கலாமென நினைத்து அமைதியானேன்.

Life Of Pi பலருக்கு என்ன வாழ்க்கை தத்துவம் சொல்லித்தந்ததோ தெரியவில்லை, பலரும் அதை குறிப்பிட்டு சொன்னதால்தான் இந்த கேள்வி. கல்கத்தாவிலிருந்தபோது இதன் புத்தக வடிவத்தை பார்த்த நினைவு. புலி-புல்லுக்கட்டு கதையோ என்றெண்ணி படிக்காமலே போனது. இதற்கு ஏன் புதுச்சேரியில் zoo அமைக்கவேண்டுமென தெரியவில்லை, ஒருவேளை இந்(து)திய மத பின்னணிக்காகவா ?

193 வார்த்தைகளுக்கே தள்ளுது. சோம்பேறித்தனம் என பழிபோட்டு தப்பிக்க விரும்பவில்லை, திமிர் என்றே சொல்லுவேன். வெட்டி முறித்த வேலை என்றோ அடங்கிப்போனது, இருந்தும் ஒவ்வொரு தினமும் எழுதவதற்கான inspiration வரி தோன்றுவதும், அதை அப்புறம்-அப்புறம்-அப்புறம் என கடத்திவிட்டு, அடுத்த நாளுக்கான குற்றவுணர்வை, குற்றவுணர்வில்லாமல் கடந்து செல்ல கற்றுக்கொண்டிருந்தேன்.

இவ்வளவு நாளாய் இல்லாத அக்கறை, இன்றைக்கென்ன புதிதாய் என தோன்றலாம். இதே திமிரென்ற ஒட்டகத்தின் திமில் ஓட்டத்திலும் நுழைந்து வேலையைக்காட்டிவிட்டது. வரும் ஞாயிறு 10k ஓட பதிவு செய்திருந்தும், தொடர்சியாய் 2k கூட ஓடமுடியாத நிலையில்தான் என் பயிற்சி இருக்கின்றது. 4 நாட்களில் என்ன செய்ய முடியுமென தெரியவில்லை, ஆனால் இதை வளரவிட்டால், வேறெங்கோ வளர்ச்சி வெளிப்படையாய் தெரிகின்றது. குனிந்து shoe lace போட முடிவதில்லையென lace-less shoe வாங்குவதற்கு பதில், ஓட்டத்தை அதிகரிக்கவேண்டும்.

இத்தனைக்கும் நடுவே மனதை அறுத்த அந்த facebook மின்னஞ்சலை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. முதல் முறை, தெரியாமல் செய்வது மட்டுமே தவறு, அதன் பின்.....

வேகம்

Published by யாத்ரீகன் under on திங்கள், மார்ச் 19, 2012
காலையில் அலுவலகம் செல்லும்போது சாலையோரம் வெள்ளைத்துணிகொண்டு மூடிவைக்கப்பட்டிருந்த உருவமொன்று, ஆணா பெண்ணாவென தெரியவில்லை, இளவயதா முதியவராவென தெரியவில்லை. அருகே அநேகமாய் அந்த உருவம் சென்ற இரு சக்கர வாகனமாயிருக்கலாம், கைப்பிடி உடைந்து நெளிந்திருந்தது. இரத்தம் சிதறியிருந்ததாவென நினைவில்லை. இதை தாண்டிச்சென்ற வாகனங்கள்  ஒரு நொடி நிற்கக்கூட முடியாமல், மெல்ல நகர்ந்துகொண்டே முகத்தை முதுகில் சில நொடிகள் நிப்பாட்டிக்கொண்டிருந்தன்.

 நாள் முழுதும் இதைப்பற்றியே நினைவுகள்தான் மனதை ஆக்கிரமித்திருந்தன. இறந்தவரை சார்ந்து யாரிருந்திருப்பார் ? சில மணிநேரம் வீட்டிலிருந்து கிளம்புகையில் என்ன நினைத்திருப்பார்கள் ? விபத்து இவருடைய தவறா இல்லை இடித்தவருடையதா ? மரணம் நிகழ்ந்த அந்த நொடி என்னவெல்லாம் எண்ணங்கள் ஓடியிருக்கும்.

இதைப்போலத்தான், சில வாரங்களுக்கு முன், சிறுசேரி அலுவலகத்துக்கு மாற்றமாகி வந்த முதல் நாள், இரவு வீட்டுக்கு திரும்பும்போது லாரி மோதி இளைஞர் ஒருவர் பலியானார். திருமணமாகதவர் என்று கேள்விப்பட்டதும் ஏதோ ஒரு உணர்வு.

(ஒருவகையில்) எதிர்பார்த்த மரணங்கள் தரும் வலியைவிட, இப்படி கொஞ்சமும் எதிர்பாராத மரணங்கள் தரும் வலி நினைத்தும் பார்க்க முடியவில்லை.


31,568,400 நொடிகள்

Published by யாத்ரீகன் under on திங்கள், ஜனவரி 30, 2012
பளபளக்கும் பட்டுப்புடவை, நெருக்கி கட்டிய மணக்கும் மல்லி, சரசரக்கும் பட்டு வேட்டி, ஒரு நாளே ஆனாலும் உறுத்திக்கொண்டிருக்கும் சங்கிலி, உறவினர் வீடோ/விசேஷமோ/கோயிலோ/கடைத்தெருவோ எங்களையே பார்க்கும் கண்கள், வீட்டில் கிடைக்கும் கவனிப்பு, முதல் நாள் உணர்வு, திகட்டத்திகட்ட ஊஞ்சல் ஆட்டம், திருமணமண்டபத்தை கடக்கும் நினைவுகள், குடும்ப வாழ்கையின் அடுத்த  கட்டத்துக்கான விசாரிப்புகள், சொதப்பிய பயணத்திட்டம், ஜிகிர்தண்டா, எங்களுக்குள்ளான பிரத்தியேக கொசுவர்த்திச்சுருள் பேட்டி பதிவு ...  என 31,568,400 நொடிகளை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்..


வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி :-)