யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

டோரியும் ஒரு டப்பா பாப்கார்னும்

Published by யாத்ரீகன் under , , on திங்கள், ஜூலை 18, 2016
முதல் சொல், முதல் நடை என்பதைப்போல் முதல் திரைப்பட அனுபவமும் எவ்வகையிலிலேனும் மறக்கமுடியாததாகிறது. தம்பிக்கு திருமணமாகிவிட்ட பின்பும் , அஞ்சலி (மணிரத்னம்) திரைப்படம் பார்க்கச்சென்றபோது அவன் அடித்த கூத்து பற்றி இன்னும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

வருட ஆரம்பத்தில் Finding Dorry trailer வந்ததுமே இந்த படந்தான் என முடிவு செய்துவைத்திருந்தேன். அதற்கு ஏற்றாற்போல வீட்டருகே உள்ள வண்ண மீன் விற்பனையகத்துக்குப்போய் pish pish, biiiig pish என மீனாளாகியிருந்தாள். Chu Chu TV slotகளுக்கிடையே Finding Dorry Trailerஉம் இடம் பிடிக்க ஆரம்பித்து,   டோதியும் அறிமுகமானாள்

அந்த நாளும் வந்தது.

நகரின் வேறொரு மூலையில் அத்தைகளை மருமகளை காண்பித்துவிட்டு, அடித்துபிடித்து 10 நிமிடம் தாமதமாக நுழைந்தோம். சிறுவர்களுக்கான கண்ணாடியும் காலியாகிவிட்டது.

உட்கார்ந்த சிறிதுநேரத்திலேயே , எதுவும் சொல்லாமலே Dohhhhdhy Dohhhhdhy என கூச்சல். முதல் பந்தில் சிக்ஸர் அடித்த மகிழ்ச்சி :-)  , கொஞ்ச நேரம்தான் அப்பா, அம்மே என தாவிக்கொண்டிருந்தால்.

அவள் சேட்டைகளுக்கிடையே கோமாளி மீன்கள் வந்ததும்  Neeeno Neeeno என சப்தம்.  இடைவேளைவரை பெரிய தொந்தரவில்லை.

நல்லவேளை பாப்கார்ன் வாங்கியது, சுவையில் பெரிதாய் கவராவிட்டாலும், டப்பாவிற்குள் துளாவிக்கொண்டு, மேலே தூவிக்கொண்டு யாருக்கும் தொந்தரவில்லா விளையாட்டு. அது போரடித்ததும் மீண்டும் Dohhhhdhy Dohhhhdhy, Neeeno Neeeno... பிறகு,  ஆக்டோபஸ், Big Fish (Whales) என்று அம்மேயின் புது பாடங்கள்.

இறுதியில் வரும் குட்டி Dorryயை , அம்மேயின் விவரிப்போடு அப்படி பார்த்துக்கொண்டிருந்தாள்.

படம் பார்த்து ரெண்டு நாட்களாச்சு,

" theatreல யாரடா பார்த்த ?" என்றால்
" Dohhdhy"

"Dorry என்னது ?"
"பிஷ்"

"Dorry friend பேரு என்ன ?"
 "No No, No No"

Buzzlight Yearஐ மூட்டை கட்டிவிட்டு Dorry பொம்மை வாங்கவேண்டும், இன்னும் இரு கவளம் சோறு உள்ளே போகும் :-)

#மகள்குறள்

என் சர்க்கரை பட்டி குட்டி

Published by யாத்ரீகன் under , on சனி, ஜூன் 25, 2016
பட்டி குட்டி என இவளை செல்லமாக கூப்பிடுவதற்கு இன்னொரு காரணம் கோபம், மகிழ்ச்சி, அழுகை, அடம், குழப்பம், தூக்கக்கலக்கம் என எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தும் இவள் 'கடி'.

எங்களிருவரை செல்லக்கடி கடிப்பதுமட்டுமில்லாமல், மெல்ல வெளியாட்களிடமும் அது ஒரு பழக்கமாகத்தொடங்கியிருந்தது.

ஒவ்வொரு முறை அவள் கடித்துவிடும்போதும், குரல் உயர்த்தி 'தப்பு' , 'No No' எனச்சொல்வதும், அம்மே கோபித்துக்கொண்டு(கொள்வதுபோல்) அறைக்கதவை மூடிக்கொள்வதும், இருவரும் அவளிடம் பேசாமலிருப்பதும், மன்னிப்புக்கேட்கச்சொல்வதும் என சாம, பேத, தண்ட வழிமுறைகளை பின்பற்றத்தொடங்கினோம்.

குரல் உயர்த்தி 'தப்பு' எனச்சொன்னதும் தவறு செய்துவிட்டதை உணர்ந்ததைப்போல், தலை தாழ்ந்து, நம் கண்களை பார்க்கவே மாட்டாள். அப்படியே 'கடிக்கலாமா ? தப்பில்ல ?' என்ற கேள்விக்கு கவனமேயில்லாமல் வேறேதாவது வேலை செய்வதுபோல பாசாங்கைத்துவங்கியிருப்பாள்.

'No, No' என நாம் மெல்ல தலையை வலம்-இடமாக ஆட்டத்துவங்கினால், அவளும் பதிலுக்கு No No என மழலையில் கொஞ்சி மொத்த கோபத்தையும் காலிசெய்திருப்பாள்.

கடி வாங்கிய அம்மே கோபித்துக்கொண்டு அறைக்கதவை மூடிக்கொண்டால், ஒற்றை விரல் கொண்டு அப்பாவை தரதரவென இழுத்து வந்து கதவைத்திறக்கவைத்து, ஓடிச்சென்று அம்மேயை கட்டியணைத்து உம்மா தந்து கவிழ்த்துவிடுவாள்.

Sorry என்ற சொல் பழகும்வரை, சைகை மொழியில் மன்னிப்பை பழக்கியிருந்தோம். அதை கிழித்துவிடும் புத்தகத்திற்கும், கொட்டிவிடும் பாலிற்கும், உடைத்துவிடும் பொம்மைக்கும் என, அஃறிணைப்பொருட்களுக்கு மட்டும் செவ்வனே செய்துவந்தாள்.

இப்படியே ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் கிடைக்கத்துவங்கியது, ஆனால் எல்லாமே அடுத்த உணர்ச்சிப்பெருக்கு வரும்வரைதான். வந்ததும், அனைத்தும் மறந்துபோகும்.

இதோ இதை எழுதி முடித்து அமருகையில், 'பா, பா ' என்று அழைத்துவந்த பாட்டியை முதன்முறையாய் 'பாட்ஈ' என அழைத்துவிட்ட உற்சாகத்தில் ஓடிவந்து என்னை கட்டியணைத்துக்கொண்டவள் அதே வேகத்தில் என் தோளில் ஒரு செல்ல கடி. கடித்த அடுத்த நொடி நான் அவளை கோபமாக பார்ப்பதை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, மெல்ல முத்தங்கொடுத்து விளையாடுவதைப்போல ஓசையெழுப்பி பாசாங்கு செய்துகொண்டே பார்த்த பார்வையும், குறும்புச்சிரிப்புமிருக்கே... என் சர்க்கரை பட்டி குட்டி.

தலைகீழ் இரவு

Published by யாத்ரீகன் under , on ஞாயிறு, நவம்பர் 29, 2015


       'தல்வார்' திரைப்படத்தை மாலை பார்க்கத்துவங்கியபோது இருந்த சாதாரண மனநிலை வேறு, ஒரு இடைவேளைக்குப்பிறகு அந்த நிகழ்வை நினைத்துப்பார்க்கும் அசாதாரண மனநிலை வேறு. இது இரண்டுக்கும் இடையில் நடந்த கூத்து, மகளின் திருவிளையாடல், எங்களின் கவனக்குறைவு.

      நாள் முழுதும் அலைந்து திரிந்து, ஆசையாசையாய் வாங்கிய உடையில், வீட்டையே அவள் பெரும் சிரிப்பில் நிறைத்துக்கொண்டிருந்த வேளை. சாப்பிட்டுக்கொண்டிருந்தவள் திடீரென புரையேறி இருமினாள். விளையாட்டு ஆர்வத்தில் அவ்வப்போது நடப்பதென்பதால் முதுகை தட்டி, தடவிக்கொண்டிருக்க, மெல்ல மூச்சுவிடத்திணறுவது போலத்தோன்றியது.

    முதுகை இன்னும் கொஞ்சம் வேகமாக தட்டி, தடவிக்கொடுத்தும் பலனில்லை, அழுகத்துவங்கிவிட்டாள். அழுவதும் சாதரணமாயில்லாமல், மூச்சுவிடத்திணறித்திணறி அழுகை. குழந்தை ஒன்றின் தொண்டையில் திராட்சைப்பழம் சிக்கிய செய்தி நினைவுக்கு வந்துபோக, கலங்கிப்போனேன்.

  அழுகையும், மூச்சுத்திணறலோடுயிருக்கும் இவளை சமாளிப்பதா, பயந்து அழுதுகொண்டிருக்கும் அம்மாவை சமாளிப்பதா. தோசை அடைத்துக்கொண்டிருக்குமென வாயினுள் விரலைவிட்டு எடுக்க முயற்சி செய்தால் மேலும் அழுகிறாள், வாயை இறுக மூடிக்கொள்கிறாள், பயந்துபோய் அம்மாவிடம் தவ்வுகிறாள். அதையும் மீறி செய்தால் சளி மட்டும் கோழை கோழையாய் வருகிறது. தலைகீழாக மடியில்போட்டு முதுகை வேகமாக தட்டியும் பார்த்தாயிற்று, திணறல் நிற்பதாக தெரியவில்லை.வீட்டில் எல்லோரும் பதறிப்போய் கைபிசைந்து சுற்றிக்கொள்ள, பதட்டம் அதிகரித்துதான் போனது.

 மீண்டும் விரல்விட்டு எடுக்க, ரோஸ் நிறத்தில் ஏதோ கண்ணில்தென்பட்ட நொடி காணாமல் போனது. உணவுப்பொருளில்லை, வேறேதோதான் என உறுதியானதும் பதட்டத்தோடு எல்லோர் மேலும் கோபமும் சேர்ந்துகொண்டது. அடுத்தடுத்த முயற்சியிலும் ஏதும் சிக்கவில்லை, பால் கொடுத்துப்பார்க்கலாமென முயற்சித்தால் அதற்கும் அவள் ஒத்துழைப்பதாயில்லை.

ஒரு கட்டத்திற்குமேல், தவறாய் ஏதேனும் செய்யப்போய் பெரிய பிரச்சனையாய் ஆவதற்குள், நேரத்தை அறைகுறை அறிவில் வீணாக்கவேண்டாமென மருத்துவமனைக்கு பதறியடித்து ஓடினோம்.

போகும் வழியிலேயே திணறல் குறைந்தும், உறுதி செய்துகொள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டோம். மருத்துவர் பரிசோதித்து வாயில் ஏதுமில்லை, விழுங்கியிருந்தால் பிரச்சனையில்லை, வெளியில் வந்துவிடும் என்று உறுதியளித்தும், சித்தப்பாவிற்கு திருப்தியேயில்லை. கிளம்பும்வரை நல்லா பார்த்துட்டீங்களா என மறுபடியும், மறுபடியும் கேட்டுக்கொண்டிருந்தான்.

சளி கோழையை எடுத்துவிட்டதா, இல்லை அதை அவள் விழங்கிவிட்டதாவென தெரியவில்லை,  அழுகையும் திணறலும் முற்றிலும் நின்று தங்கமீன்களை விரல்கொண்டு துரத்திக்கொண்டிருந்தாள்.

அத்தனையும் 7-8 நிமிடங்களே நடந்திருக்கும், ஆனால் ஆயுளுக்குமான பயத்தை விதைத்துவிட்டாள். அத்தனைக்கும் எல்லோர் கண்பார்வையிலும், கவனத்திலுந்தான் விளையாடிக்கொண்டிருந்தாள். ஒரு நொடியில் அந்த இரவு தலைகீழாய் மாறிப்போனது.

ஆருசி தல்வார், பரபரப்பான தினத்தந்தி வகையிலான செய்தியாகத்தான் இந்த நிகழ்வு எனக்கு அறிமுகம். பலவிதமான ஆருடங்கள், திட்டமிட்ட கவனக்குவிப்பு, புலனாய்வில் அநியாய கவனக்குறைவு, மக்களின்/ஊடகங்களின் கிசுகிசு பசிக்கு என பல பரிணாமங்கள். அத்தனையும் மீறி என்னை பெரிதும் உறுத்தாத ஒன்று, தாய்-தந்தையே எப்படி மகளைக்கொல்ல முடியுமென்பது. உறுத்தாதற்கு காரணம், தாய்-தந்தை-தாத்தா-அண்ணன் போன்ற உறவுகள் செய்யும் அ'கெளரவ'க்கொலைகள் பற்றி நிறைய செய்திகள் கேள்விப்பட்டிருந்ததாலிருக்கலாம்.

ஆனால் நேற்று நிகழ்விற்கு பிறகு, குழந்தை உட்பட எல்லோரும் ஆசுவாசமாய் தூங்கச்சென்றுவிட்ட பிறகும், ஏனோ ஒரு பதட்டம். தல்வார் தம்பதியினர் அதை செய்திருக்கக்கூடுமா, செய்திருந்தால் அந்த நொடியின் நினைவே ஆயுளுக்குமான மிகப்பெரும் தண்டனையாய்த்தான் இருந்திருக்கும். அவ்வப்போது மகளின் நெஞ்சில் காதுவைத்து சுவாசம் இயல்புக்கு மாறி இருக்கிறதாவென பார்த்துக்கொண்டேயிருந்தேன்.

இவள் விபத்தாய் மூச்சுத்திணறுவதையே தாங்க முடியவில்லையே, தன் ஆயுளுக்கு முன்னேயே, கண்முன்னேயே குழந்தைகளை பரிகொடுப்பவர்களின் நிலையை அன்றுதான் உணர்ந்ததுபோலிருந்தது. சிறுவயதில் தவறிப்போன மகளை தோளில்போட்டுக்கொண்டு நள்ளிரவில் அலைந்த அப்பாவின் நினைவு மனதை என்னமோ செய்யத்துவங்கிவிட்டது.

ஆசைதான் தீராமலே, உன்னைத்தந்தானம்மா..

Published by யாத்ரீகன் under , on செவ்வாய், செப்டம்பர் 29, 2015



இசைஞானியின் பாடலின் மூலம் இவளுக்கு இசையை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளோம். அதில் இவளுக்கு மிகப்பிடித்தது 'அஞ்சலி அஞ்சலி அஞ்சலி... ' பாட்டு. இசைக்கத்துவங்கியதும், speakerகளை தேடத்துவங்கிவிடுவாள். தூக்கி நிப்பாட்டி பிடித்துக்கொண்டால் குதூகலத்தில் குதித்து குதித்து, இவளை பிடித்துக்கொண்டிருக்கும் தாத்தா பாட்டி களைப்படைந்தாலும் நிறுத்தமாட்டாள்.

நேற்று அம்மாவைத்தேடி அழுதுகொண்டிருந்தவளை சமாதானப்படுத்தும் பல முயற்சிகள் தோல்வியடைந்ததும், இறுதியாக பாட்டை போட்டதும் சட்டென அவள் கவனம் அதில் திரும்பியது. கையிலிருந்தவளை மெல்ல இறக்கி speaker-இன் முன் உட்காரவைத்து அசந்துபோய், பாடல் வரிகளை இரசிக்கத்தொடங்கினேன்.

எத்தனையோ முறை கேட்டிருந்த பாட்டு, ஆனால் நேற்று ஒவ்வொரு வரியும் பரவசநிலை. பாட்டு முடிந்ததும் வாலிக்கு பெண் குழந்தைகள் எத்தனை என்று பார்க்கவேண்டுமென நினைத்திருந்தேன்.

பாட்டைக்கேட்டுக்கொண்டிருந்தவள் மெல்ல தவழ்ந்து என்னருகே வந்திருக்கிறாள், கால்களை பிடித்து எழுந்து நிற்கப்போவதுபோல் முயன்று முட்டி போட்டு என்மேல் சாய்ந்துவிட்டாள். விழுந்தவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை அப்பா என்றாள்.

அ ப் பா , அப்பாஆஆ சொல்லு அப்பாஆஆ சொல்லு என அரைமணிநேரமாய் கதறினாலும், கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அம்ம்ம்ம் அம்ம்ம்ம் என கொஞ்சிக்கொண்டிருப்பவளா இப்படி என நம்பமுடியாமல் பார்த்தால் மறுபடியும் மறுபடியும் அப்பாஆ, அப்பாஅ என கொஞ்சல்.

சட்டென மனதில் ஏதோவொன்று கரைந்தது. கண்களில் கண்ணீர் திரண்டுவிட, அள்ளி அணைத்துக்கொண்டேன். பின்ணனியில்....

ஆகாயம் பூமியெல்லாம்,
இறைவன் உண்டாக்கி வைத்து,
ஆசைதான் தீராமலே,
உன்னைத்தந்தானம்மா....


புத்தகக்கண்காட்சி

Published by யாத்ரீகன் under , on ஞாயிறு, ஜனவரி 11, 2015


ஒவ்வொரு முறை எதாவது புத்தக விமர்சனத்தை கண்டதும் pocket, bookmark, favorite என ஏகப்பட்ட இடங்களில் நினைவுவைத்துக்கொள்வதும், கொஞ்சம் சுவாரசியமான தலைப்பைக்கொண்ட மின்னூல் எதைக்கண்டாலும் தரவிறக்கிக்கொள்வதும், torrentகளிலும், நண்பர்களிடத்திலும் கிடைக்கும் audiobook-களையும் சேர்த்துக்குவிப்பதும் என ஆர்வக்கோளாறு கொண்ட கடைக்கோடி வாசகன். இதில் எத்தனை படிப்பேன்/கேட்ப்பேனென்பது கேள்விக்கப்பாற்பட்டவை.

இதையெல்லாம் மீறி புத்தகக்கண்காட்சிக்கு செல்வதென்பது , superhero படங்கள் பார்த்தவுடன்  நரம்புமுறுக்கேறி, கைக்கு கிடைக்கும் யாரையாவது அடித்து உதைக்கவேண்டும் என்பதைப்போல. புது புத்தகங்கள் வாங்குகிறோமோ இல்லையோ, புதுப்புது சுவாரசியமான தலைப்புகள், கதைக்களன்கள், கைநிறைய புத்தகங்களை (படிக்கிறார்களோ இல்லையோ) அள்ளிச்செல்லும் இளைஞர்கள் என கண்காட்சிக்கு சென்று வந்த 1 வாரம், புத்தகங்களோடேதான் நாள் செல்லும். அப்புறம் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி, இதெல்லாம் அடுத்த வருசத்துக்குள்ள படிப்பியா மாட்டியானு தங்கமணி நக்கல் செய்யும் கிளைக்கதைக்குள்ளெல்லாம் இப்போது செல்லவேண்டாம்.

நல்லவேளை, போனமுறை ஆசைப்பட்டு வாங்கிய பெரிய தலையணை புத்தகம் (ஓநாய் குலச்சின்னம்) முதற்கொண்டு எல்லாம் படித்து முடித்ததால், இந்த வருடத்துக்கான budget வீட்டில் approve ஆனது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாய் 5/6 மணிநேரம் நடக்கவிட்டு நொந்துபோயிருந்ததால், இம்முறை வெறும் 30 நிமிடத்துக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது, அதுவும் கண்காட்சி வாசலை கடந்து சென்றுவிடவிருந்த கடைசி நொடியில்.

கிடைத்தவரை லாபம்னு உள்ளே புகுந்தாச்சு. பதிப்பக-அரங்கு எண் பட்டியல் இல்லாததாலும், இணையத்தில் சேமித்துவைத்திருந்த புத்தகப்பட்டியலை அரங்கினுள்ளிருந்து தரவிறக்க முடியாததாலும், அந்த கணநேர மனப்பாய்ச்சலை வைத்து புத்தகங்களை தேர்வுசெய்துகொள்ளலாமென தோன்றியது.

மின்னூல்களில் படிப்பெதென்பது எனக்கு ஒத்துவராத காரியமென்று, ஆர்வக்கோளாறில் தரவிறக்கிப்பார்க்காத படங்களைவிட, படிக்காத புத்தகங்கள் அடைத்துக்கொண்டிருக்கும் GBகளை கண்டதும் நிறுத்திக்கொண்டேன்.

500 பதிப்பக அரங்கங்கள், இந்தந்த பதிப்பகங்களென திட்டமுமில்லை, சுவாரசியத்தலைப்புகள், பிடித்த எழுத்தாளர்கள் என கண்ணில்பட்ட பக்கமெல்லாம் ஓட்டம். அவ்வப்போது தங்கமணியை கூப்பிட்டழைத்து சுவாரசியமானவைகளை பற்றி ஒரு குதூகலத்துடன் விவரிப்பு. பாவம், மொத்த கண்காட்சியில் பேருக்கு ஒரேயொரு மலையாள புத்தக stallளென்பதால் வேறொன்றும் புரியாமல் எனக்காக காத்துக்கொண்டிருந்தாள்.

கும்பலாக சுற்றுபவர்களைக்கண்டாலே, twitter கோஷ்டியாயிருக்குமோவென, யார் என்ன handleஓவென கூர்ந்து கேட்டுக்கொண்டே கடந்தேன்.

சென்றமுறைபோலவே பாலகுமாரனின் 'கங்கைகொண்ட சோழன்' தொகுப்பை கையிலெடுத்து, விலை கண்டே விலகினேன். ரொம்ப பாசக்கார அம்மணிக்கோ அது தாங்கவில்லை. அவளை சமாதானப்படுத்த ஒருவழியாகிவிட்டேன். உடையார் பிடித்திருந்தது, ஆனாலும் அதில் கருவூராரை ஏதோ மந்திரவாதியைப்போல அதீதமாய் காமித்திருந்தல், கதையிலும் மந்திர-தந்திர விவரிப்பு என உறுத்தலிருந்ததால், ஓசியில் கிடைத்தால் படிக்கலாமென சமாதானம் சொல்லி கிளம்பியாச்சு.

மசால்தோசை தொங்கிய ஸ்டால் வாசலில் வா.மணிகண்டன் கையெழுத்துத்திட்டுக்கொண்டிருந்தார். அவரின் எழுத்துக்கு பெரிய இரசிகனில்லையெனினும், நிசப்தம் அறக்கட்டளைக்கான முன்னெடுத்தலை பாராட்டலாமென நினைத்தால், புத்தகம் வாங்காமல் பாராட்டுபவனை அடுத்த வார பதிவில் குதறிவிட்டால் என்னசெய்வதென மெல்ல நகர்ந்தாச்சு.

Ambedhkar Foundation stallஐ கடக்கும்போது, அவரைப்பற்றி நுனிப்புல்தானே தெரியும், எதாவது படிக்க ஆரம்பிக்கலாமவென நீல நிறம் நிறைந்திருந்த அரங்கினுள் நுழைந்தேன். நிறைந்திருந்ததெல்லாம் அவரின் நூல்தொகுப்பு (கட்டுரை, வாழ்க்கை வரலாறு..என). முதல் தொகுதி எங்கிருக்கென நான் கேட்டதைவைத்தே அவருக்கு புரிந்திருக்கும். 37-வது தொகுதியிலிருந்து ஆரம்பியுங்க தம்பி, அதான் சரியாயிருக்கும்னு சொன்னதும் அதை எடுத்தாச்சு.

எது வாங்குகிறேனோ இல்லையோ, சிறுவயதில் சேமிக்காத வாண்டுமாமா, காமிக்ஸ் புத்தகங்களை ஒன்றிரண்டு எடுத்துக்கொள்வேன். வானதி பதிப்பகத்துக்கும், முத்து காமிக்ஸுக்கும் ஒரு நடை.

4/5 மணிநேரம் கூடயே வரும் மொதலாளியம்மாவுக்கு ஒன்றிரண்டு புத்தகம்.

மாதொருபாகன் சர்ச்சையில் பெருமாள்முருகனை (அவர் மன்னிப்பு கேட்டபொழுதிலும்)  ஆதரிக்கும்பொருட்டு (திரைப்படமோ, புத்தகங்களோ, எதிர் கருத்துக்களை சரியான முறையில் வைக்காத மக்கள், மாக்கள்) அவரின் சில புத்தகங்கள். அவரின் 'நிழல் முற்றத்து நினைவுகள்', 'ஏறுவெயில்' , இரண்டும் படித்து இரசித்திருந்ததால் இன்னும் தைரியமாய் எடுக்க முடிந்தது.

'வேங்கையின் மைந்தனை' பல அரங்களில் கேட்டுக்கேட்டு களைத்திருந்தேன்,  கிட்டத்திட்ட அரங்கிலிருந்து வெளியேறவிருந்தபோது, தான் கேட்டுப்பார்க்கிறேன் என களமிறங்கிய தங்கமணியின் நல்ல நேரம் முதல் கடையிலேயேயிருந்தது. என் நேரம், கையில் காசில்லை, கடையில் card-உம் வேலை செய்யவில்லை, படிக்காதவன் படத்து ரஜினி மாதிரி, அங்கொன்றும் இங்கொன்றுமாய் காசு தேற்றி வாங்க முடிந்ததில் என்னைவிட அவளுக்குத்தான் மிகுந்த மகிழ்ச்சி.

பேருவச்சியே, சோறுவச்சியாவென யாரும் கேட்டுவிடக்கூடாதென கொஞ்சம் தீனி, திருவிழா கலாச்சாரத்தை மீறிவிடக்கூடாதென டெல்லி அப்பளம் என 30 நிமிடம் 3:30 மணிநேரமாய் 'இனிதே' கரைந்தது.

கைவரை வந்த பல புத்தகங்கள் பைவரை வந்துசேரவில்லை, budget ஒரு limit என்றிருந்தபோதிலும், சில புத்தகங்களை வாங்கவில்லை. அப்புறம் வாங்கிக்கொள்ளலாம், நண்பனிடமிருந்து வாங்கிக்கொள்ளலாம், இது படித்து முடிக்கவேமுடியாது, இது புரியுமா, இதற்குப்போய் புத்தகமா என ஒவ்வொன்றுக்கும் ஒரு எண்ணம், எதைப்பற்றிய புத்தகங்களை வாங்குவார்களென்பது , எந்த திரைப்படங்கள் வெற்றிபெரும் என்பதுபோன்ற இரகசியம். அது என்னவென்று வாங்குபவர்களுக்கும், பார்ப்பவர்களுக்குமே தெரியாது.


திருமண அழைப்பிதழ்

Published by யாத்ரீகன் under , , , , on வெள்ளி, டிசம்பர் 17, 2010



இனி இரண்டு பயணச்சீட்டு

Published by யாத்ரீகன் under , on வெள்ளி, நவம்பர் 12, 2010
தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல... எனத்தொடங்கினால் யார் அந்த வேதாளம் ? எனவும்,
ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி.. என ஆரம்பித்தால் யார் அந்த மந்திரவாதி ? எனவும்,
தேவையற்ற கேள்விகள் எழும் என்பதால் :-)
எப்படித்தொடங்குவதென யோசித்துக்கொண்டே சில வாரங்கள் தாண்டிவிட்டன

பலவருட காத்திருக்குப்பின், நான் மேற்கொள்ளும் பயணங்களில் சிறு மாற்றம்,
30-Jan-லிருந்து நான் எடுக்கும் பயணச்சீட்டுகள் இனி இரண்டாகும் :-)

இந்த முறையும் நான் பார்த்த பெண்ணுக்கு, கல்யாணம் நடக்கப்போகுது,
ஆனா இந்த முறை என்கூட நடக்கப்போகுது :-)
எனக்கே நம்ப முடியல, ஆனா என்ன செய்ய, நீங்க எல்லோரும் நம்பித்தான் ஆகனும் :-D

பாரதியார் சொன்னது எது செய்ய முடிஞ்சதோ இல்லையோ, ஏதோ என்னால முடிஞ்சது, சேரநன்னாட்டிளம் பெண்ணை கண்டது ;-)

பேசும் மொழியிலிருந்து, பார்க்கும் படங்கள், கேட்கும் பாடல்கள்,
படிக்கும் புத்தகங்கள், செய்யும் வேலை,கனவுகள்.... என பெரும் காரியங்களிருந்து,
பிடித்த நிறம், பிடிக்காத உப்புமா,வணங்காத கடவுள்கள்... என சிறு காரியங்கள் வரை,
பல வேறுபாடுகள் இருந்தாலும்
பயணங்களின் மேலிருந்த காதலே எங்களிருவரையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைத்தது..

சந்தித்த இடமொன்று, பழகிய இடமொன்று,
தொடங்கிய இடமொன்று.. என பயணித்துக்கொண்டிருந்தது
நாங்கள் மட்டுமல்ல எங்களோடு சேர்ந்து காதலும்தான் :-)

திருமண தேதி: 30-January-2011
இடம்: மதுரை

திருமண வரவேற்பு: 2-Feb-2011
இடம்: திருவனந்தபுரம்

பதிவுகள் எழுதி பலகாலம் ஆனதால் இந்த வலைத்தளத்தை எவரும் தொடரவோ படிக்கவோ செய்வார்கள் என்று நம்பிக்கையில்லை :-) , பதிவர்கள் எவரிடமும் தொடர்ந்து பேசியதும், பழகியதுமில்லை..
இருப்பினும் நண்பர்கள் இந்த நேரத்தில் மதுரையிலோ, திருவனந்தபுரத்திலோ இருந்தால் வந்திருந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் :-)

மேலும் விபரங்கள் விரைவில்..

நீண்டதொரு பயணம்

Published by யாத்ரீகன் under , on திங்கள், டிசம்பர் 29, 2008
Change is the only thing that doesn't changes in this world என்ற மாற்றமே காணதொரு வாக்கியத்தை
ஒவ்வொரு முறையும் HOD சொல்ல கேட்கும்பொழுது எவ்வளவு கூச்சலிட்டிருப்போம், அதிலும் இறுதிவரை மாற்றமே இருந்ததில்லை.

வேர் விட்டிருக்கும் செடியாயிருக்கட்டும் பெரும் மரமாகட்டும், பிடுங்கி நடப்படுவதென்பது இருவருக்கும் தனித்தனியேயான அனுபவத்தை தரப்போவதில்லை. மாற்றங்களில் சிறிதென்ன பெரிதென்ன ? பார்த்த பார்வைகள், புரிதல்கள் ஒவ்வொரு மண்ணிலிருந்து பிடுங்கப்படும்பொதும் செரிவடைகின்றது. இடம்விட்டு இடம்விட்டுச்செல்ல, எடுத்துச்செல்லும் துகள்களென நட்புகள்.

எந்தவொரு மாற்றம் நடக்கும்போதும், அதன் பொருட்டு எற்படும் அனுபவம் தனியானதொரு recap போலத்தான்.

இத்தகைய மாற்றங்களின்போது செய்யும் பயணங்களுக்கான சுவையே தனி, ஊறவைத்த கள்ளைப்போல நினைவுகள் ஊறவைத்த காலம் அதிகமாக அதிகமாக.

2 மாதங்கள் திருவனந்தபுரத்திலிருந்த கட்டற்ற சூழலிருந்து விடுபட்டு பொறுப்புகள் கூடிய சுதந்திர உலகுக்கான அடியெடுத்த முதல் மாற்றமாகட்டும் (நினைவில் மிகப்பசுமையாய் பதிந்தவற்றுள்), இன்று 3 வார விடுமுறை என நினைத்து ஊருக்கு வந்துகொண்டிருக்கும் சிறு
மாற்றமாகட்டும், ஒவ்வொன்றாய் நினைத்துப்பார்த்துக்கொண்டு நினைவுச்சுழலில் முழ்கிக்கொண்டிருப்பது அவ்வப்பொது கடந்துகொண்டிருக்கும் வருடங்களை தட்டிவிட்டுச்செல்ல உதவுகின்றது.

------------------

இனிய ஆங்கில வாசிப்பனுபவத்தை அறிமுகப்படுத்திய தோழிக்கு 2 வருடங்களுக்கு முன் பிறந்தநாள் பரிசை துழாவும்போது தட்டுப்பட்டது ஜெயமோகனின் கொற்றவை. முதல் இரு அத்தியாயங்களின் சுவையில் மயங்கி பரிசளித்திருந்தேன். அவள் படித்தாலா இல்லையாயென தெரியாது, ஆனால் கொற்றவை அந்நொடியிலிருந்து என்னை பின் தொடர்ந்துகொண்டிருந்தாள்.
அப்படியும், வாங்கி 1 வருடங்கள் கடந்தும் படிக்கும் சூழல் அமைந்திருக்கவில்லை. இன்று 1 முழு நாள் விமானப்பயணமென்று முடிவானதும் கைகள் முதலில் துழாவத்தொடங்கியது
இந்த புத்தகத்தைதான். எஸ்.ராவின் ”கால்முளைத்த கதைகளும்” அயற்ச்சியை தவிர்க்க துணைகொண்டது.

அயற்ச்சி என்று நினைத்ததைவிட, தழும்புதல் என்பதெ சரியான சொல்லாய் இருக்க முடியும். மீண்டும் அந்த முதல் இரு அத்தியாயங்களிலிருந்து தொடங்கியும் சுவாரசியத்திற்கு சற்றும்
குறைவில்லை. கடினமான இலக்கிய மொழிநடை பெரும் தடையாய் இருக்கவில்லை, மாறாக அதிலிருந்த கற்பனை வளம், விடயங்களை சொல்லியிருக்கும் விதம்.. என மிக சுவாரசியமாய் நேரம் செல்லத்துவங்கியது.

மக்களின் மொழி, மரபுகள், நம்பிக்கைகள், வாழ்க்கை முறை, புரிதல்கள், பயங்கள் என அத்தனையும் காலவெளியில் பயணித்திருக்கையில் எப்படித்தொடங்கியிருக்கும், அதன்
பரிணாம வளர்ச்சியெப்படியிருந்திருக்கும் என்ற பார்வையில், இதுவரை கடந்திருக்கும் 50 பக்கங்கள் அற்புதமென்ற ஒருசொல்லில் அடைக்கவியலாது. இவ்வளவு மணிநேரங்களில்,
சாதரணமாய் பல பக்கங்களை கடந்திருக்கலாம், ஆனால் முதல் வரியான “” -லிருந்து தொடங்குகிறது தேடல். ஒவ்வொரு வரியையும் வாக்கியத்தையும் மீண்டும் மீண்டும் வாசிக்க, பிரமிப்பாய் இருக்கின்றது, இயல்பாய் நாமும் கடந்துவந்திருந்த நிகழ்விலிருந்து, கேள்வியே பட்டிராத தகவல்களென, ஒரு அற்புதமான வாசிப்பானுபவத்தை தந்துகொண்டிருக்கின்றாள் கொற்றவை.
----------------------------

சென்றுகொண்டிருக்கும் ஒவ்வொரு புதிய இடத்திலும் தெரிந்த முகங்களிலிருந்து, நண்பர்கள் என்ற அடைமொழியில் அடைபட்டிருக்கும் முகங்கள் வரை சங்கிலியின் கோர்வை கூடிக்கொண்டே போகின்றது. இதில், நெருக்கமாய் பலவற்றும் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் எங்கோ தொலைந்துகொண்டிருக்க, புதிய நபர்களை பழக்கப்படுத்திக்கொள்ள தயக்கங்கள் கூடிக்கொண்டிருக்கின்றது. பொருட்களின் மேலிருக்கும் மோகமும், நட்பின் மீதிருக்கும் பிடிப்பும் (hold என்பதின் சரியான பயன்பாடு இங்கே என்னவாயிருக்க முடியும்?) வெகு வேகமாய் குறைந்துகொண்டிருக்கின்றது. இதனால் நண்பர்களிடமேலிருக்கும் நம்பிக்கைக்கு/அன்புக்கு குறையில்லை ஆனால் அதன் இடைவெளிக்கு பெரிதாய் கவலைப்பட்டுக்கொள்வதில்லை. என்றொ ஒரு நாள் சந்தித்துக்கொண்டாலும் அந்த நிமிடங்கள் மீட்டுத்தரும் மலர்ச்சி போதும்.

-----------------------------

இருட்டின் மீதான மெல்லிய வெளிச்சத்தில், பக்கத்திலிருக்கும் பெண்ணின் கைகள் அவள் புரண்டுகொண்டு தூங்குகையில் மிருதுவாய் உரசிக்கொண்டிருக்க, பல ஆயிரம் அடி உயரத்தில்
இதை தட்டிக்கொண்டிருக்கின்றேன். நாட்குறிப்பெழுதி மாதக்கணக்கில் முடிந்து வருடக்கணக்கில் ஆகத்துவங்கப்போகுது. இப்படி வலையில் தட்டி எவ்வளவு தூரம் தான் பதிந்து வைத்துக்கொள்வது..

---------------------

இந்த பதிவைப்போல, ஒரு கோர்வையின்றி தறிகெட்டு ஓடுகின்றது இந்த நினைவுக்குதிரை, மூச்சிரைத்து நிற்குமிடமெங்கிலும் மீண்டும் காலம் தன் சவுக்கை
சொடுக்கிக்கொண்டு தொடர்கின்றது.

பி.கு: சென்ற மாதத்தின் இந்திய பயணத்தின் போது, விமானத்தில் தட்டச்சியது, இத்தனை நாள் கழித்து பல வேலைகள் முடித்து மீண்டும் இணையத்தில் சேரும் வரையில் தங்கையின் கணிப்பொறியில் உறங்கிக்கொண்டிருந்தது.

பிள்ளையார் err.. கொழுக்கட்டை பிடிக்கப்போய்

Published by யாத்ரீகன் under on வியாழன், செப்டம்பர் 04, 2008
பிள்ளையார் err.. கொழுக்கட்டை பிடிக்கப்போய்

போளி ஆன கதை

அல்ப சந்தோஷம்

Published by யாத்ரீகன் under on வியாழன், செப்டம்பர் 04, 2008

எல்லோரும் இதற்காக கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கையில், எங்கள் அப்ளிகேஷன் மிக எளிதாய் செய்தது (பெரிதாய் கூட ஒன்றும் செய்யவில்லை :-)
யாருக்காவது க்ரோம் proxy வழிய ஒழுங்க வேலை செய்யுதா ?

இசையென்னும் இன்பவெள்ளம்

Published by யாத்ரீகன் under , on சனி, ஆகஸ்ட் 23, 2008
இப்படித்தான் இருக்க வேண்டுமென்று அவ்வளவு எளிதாய் ஒரு கட்டுக்குள் அடைக்க இயலாத வாழ்வின் சில விஷயங்களில் இசையும் ஒன்று.

தெய்வீகமானது என்று சொல்லும் பழம்பெரியவர்களுக்கும், வார்த்தை தெளிவாய் இரைச்சல் குறைவாய் இருக்கும் பெரியவர்களுக்கும், மனதை வருடுவதுபோல இருக்கவேண்டும் என்று சொல்லும் முதியவர்களும், நினைவை சுகமாய் மீட்டவேண்டும் எனச்சொல்லும் நடுத்தரவயதினருக்கும், நம் கவலைகளை மறக்கடித்து உற்சாகப்படுத்த வேண்டும் என்று சொல்லும் இளைஞர்களுக்கும்.. என அனைவருக்கும் இசையின் வடிவம் வெவ்வேறு ஆனால் அனைத்தும் இசையே.

இப்படிப்பட்ட பறந்து விரியும் இசையின் சாம்ராஜியத்தில், நம்மில் பெரும்பான்மையினர் மேற்கத்திய நாடுகளின் இசை என்றாலே இரைச்சல் என்று குறுகிய வட்டத்தினுள் அடைத்துக்கொள்வோம். பொதுவாய் பத்திரிகைகளும், அந்த இசையை பெரிதாய் கேட்டிராதவர் முதற்கொண்டு, ஆங்கில இசை என்றதும்.. "யப்பா ஒரே சப்தம்.." என்று முந்திக்கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்வதில் எத்தனை ஆர்வம்.

ஆரம்பத்தில் கேட்டிருந்த சில புகழ் பெற்ற பாடல்களில் (சாமானியன் வகுத்து வைத்திருக்கும் விதிகளின்படி இறைச்சல்களிலாமல்) ஆர்வம் வந்தாலும், அதில் வரும் ஒரு வரியும் புரியாததால் அதை தொடர்ந்து தேடிக்கேட்கும் ஆர்வம் என்றுமே இருந்ததில்லை. என்னதான் இசை அத்தனை வசிகரமாயிருந்தாலும் , அதில் கலந்திருக்கும் வரிகளை உதடுகள் உச்சரிக்கும்போதுதான், அந்த இசையினுள் முழுதாய் நுழைந்தெலும் மகிழ்ச்சி பொங்குவதை உணரமுடிகின்றது.

இசையை கேட்கும்போதும், அதை காதினுள் நுழைய விடுவதைவிட, அறையெங்கும் பரவவிட்டு அதில் மிதக்கும் அனுபவமே தனி. முடிந்தவரை முன்னதை தவிர்த்துவிட்டு, அறையெங்கும் இரைச்சலோ, இசையோ அதை முழுவதுமாய் பரவவிட்டு இரசித்துக்கொண்டிருப்பேன்.







சென்ற ஞாயிறு அறை நண்பரின் தேர்வில், விருப்பத்தில் அருகே நடந்த "Linkin Park"-இன் நிகழ்ச்சிக்கு செல்வதாக கிளம்பினோம். பீட்டர் பாட்டின்மேல் ஆர்வமிலாத நானும், அதன் மேல் கடும் கிரேஸ் கொண்ட இருவரும் என.. எப்படி 5 மணி நேரத்தை போக்குவது என்ற குழப்பத்துடனே சென்றேன்.


சென்றதும் முதலில் தெரிந்தது மகிழ்ந்தது , அங்கிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் அதிகபட்சம் 8 desi மக்களை மட்டும் கண்டிருப்போம் (அதில் 3 பேர் நாங்கள் ;-) , அடுத்து அங்கு வந்திருக்கும் கூட்டத்தின் சராசரி வயது :-D , அவர்களின் வித்தியாச பேஷன் உடைகளும், அலங்காரங்களும் என சாரசரியான high excited அமெரிக்க இளைஞர் கூட்டம். கொஞ்சம் அதிர்ந்து போனது, Linkin Park வரப்போவது 9 மணிக்குத்தான் அதுவரை சிறு சிறு band-கள் என்பது.


மேடையில் கண்ணுக்கு தெரிந்த மிகப்பெரிய 67 ஸ்பீக்கர்களை கண்டதும் அதில் இன்னும் இசை வராமலே அதிர்ந்து போனேன். ஒன்னும் புரியாததுடன் காது செவிடாகபோகுது என்றுதான் நினைத்தேன்.


சின்ன சின்ன Band-கள் ஆரம்பிக்க கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டத்தினுள் உற்சாகம் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது, ஆனாலும் வரிபுரியா அந்த இசையில் ஏனோ ஆர்வமே வரவில்லை. அவ்வப்போது முழு பாடலிலும், சிறு சிறு பகுதிகள் அட்டகாசமாய் இருந்தது. எப்போடா முடியுமென lemonade-களும், french fries-களும் படுவேகமாய் உள்ளே போய்க்கொண்டிருந்தது.


சரியாய் 9 மணிக்கு தொடங்கியது "Linkin Park"-இன் வரவு, அட்டகாசமான பில்டப்களுடன், தீப்பொறி பறக்க, நூத்துக்கணக்கான விளக்குகளின் ஒளிவிளையாட்டுடன் தொடங்கியது. அப்படியென்ன band இது என நினைத்திருக்கையில், கடல் மணலில் பெயரை எழுதிஇருக்கையில் எதிர்பாராமல் வரும் அலையின் ஈரம் பெயரை அழித்து மணலில் வேகமாய் இறங்கும் பாருங்கள், அதுபோலத்தான் அதிரடியான இசை உள்ளத்தில் உற்சாகத்தையும், பரவசத்தையும் பரப்பத்தொடங்கியது.


வீட்டில் இருக்கும் இரண்டு கம்ப்யூட்டர் ஸ்பீக்கர்ககளில் வரும் அட்டகாச இசைக்கு பரவசப்படும் நான், அந்த 67 ஸ்பீக்கர்களுக்கு எவ்வளவு சந்தோஷப்பட்டிருபேன் என விவரிக்க முடியவில்லை. அதிரடியான எலெக்ட்ரிக் கிதாரும், டிரம்சும் வெட்டியாய் அதிரவில்லை.. அட்டகாசமான இசை... 2:30 மணி நேரம், எப்படி போனதே என்று தெரியவில்லை.. அத்தனை நேரமும் எங்களில் எல்லோருக்கும் உற்சாகம் கூடிக்கொண்டிருந்ததே தவிர கொஞ்சமும் குறையவில்லை.


இறுதியில் அவர்களின் "In the End" பாடலுடன் முடித்தது சரியான சாய்ஸ். ஆனால் உற்சாகத்தில் கரைபுரண்டுகொண்டிருந்த எங்களுக்கு அதில் விருப்பமில்லை, கூட்டத்தோடு குரல் கொடுக்கத்துவங்கினோம்.. 15 நிமிடங்கள் போட்ட சப்தத்திற்கும், கூச்சலுக்கும் பலன்.. "What have i done" என்ற அந்த சூழலுக்கு பொருத்தமான பாடலுடன் அட்டகாசமாய் மீண்டும் ஒரு இறுதி பாடலுக்கு வந்தார்கள், வென்றார்கள்.


இப்போது youtube-இல் அவர்களின் பாடல்களாக (பாடல் வரிகளுடன் தேடி) முணுமுணுக்க துவங்கியிருக்கிறேன்.. இதுவும் இசைதான், வித்தியாசமானதொரு பரவசம்..






I'll face myself
To cross out what I've become
Erase myself
And let go of what I've done
What I've done
Forgiving what I've done!!!

Whatzup Bro

Published by யாத்ரீகன் under , on செவ்வாய், ஆகஸ்ட் 19, 2008
Life is one long insane trip. Some people just have better directions.

Oh, I dunno. I mean I'd like to believe I'm not but I just... I've just never seen any proof so I... I just don't debate it anymore, you know? It's like I could spend my whole life debating it over and over again, weighing the pros and cons and in the end I still wouldn't have any proof so I just... I just don't debate it anymore. It's absurd

கொல்கத்தா நாட்கள் - சோனாகாச்சி - 2

Published by யாத்ரீகன் under , , on வியாழன், ஜூலை 24, 2008
வெளிச்சம்கூட மூச்சுத்திணறும் அளவுக்கு நெருக்கியடித்துக்கொண்டிருக்கும் கட்டிடங்கள் கொண்ட மெயின் ரோட்டிலிருந்து பிரியும் மற்றுமொரு சிறிய ரோடு அது. ரோடு தான் சிறியதே தவிர அதை பெரும் கூட்டம் அடைத்துக்கொண்டிருக்கின்றது. திருவிழாக்கூட்டத்திற்கு சிறிதும் குறையாத கூட்டம் எங்கும் பாங்களா (Bangala) கூச்சல்கள்.

ரோட்டின் இருபுறமும், ஒவ்வொரு வீடுகளின் முன்னிலும் குறைந்தது 4/5 பெண்கள், முன்னே சொன்ன அடையாளங்களுடன். யாரும் யாரையும் தேவையின்றி தொந்தரவு செய்வதில்லை, ரோட்டின் நடுவே வற்றிப்போக வாய்ப்பிலாத இரவு நேர ஜீவநதி, நாட்டில் ஆண்களாய் உருவகம் செய்யத்தக்க ஒரே நதியென்று நினைக்கிறேன். சாரை சாரையாய் ஆண்கள், குமாஸ்தாக்கள், கூலி வேலை செய்து களைத்தவர்கள், ரிக்க்ஷா இழுத்து வியர்வையில் குளித்தவர்கள் என ஊரின் வறுமைக்கோட்டு ஆண்களிலிருந்து மத்தியதர ஆண்கள் வரை ஒரே இரவில் குவிந்து விட்டார்களோ என்று நினைக்குமளவிற்கு.

எவரும் நிற்பதாய் தெரியவில்லை, நடந்து கொண்டே இருக்கிறார்கள். நடந்து கடப்பதா இவர்களின் நோக்கம் என்று சந்தேகிக்கும் வேளையிலே அவர்களின் வேலையும் நடந்துகொண்டே இருக்கின்றது.

இருபுறமும் நிற்பவர்களை மெல்ல பார்த்த எங்களுக்கு இங்கிருந்து தான் அதிர்ச்சி தொடங்கியது. இதுவரை பாலியல் தொழில் என்று கிளு கிளுப்பான சாதரண பார்வையிலிருந்த எங்களுக்கு,அங்கிருந்த 4/5 பெண்களில் குறைந்தபட்சம் இருவராவது சிறுமிகள் என்பதே முதலில் ஜீரணிக்க முடியவில்லை.

சிறுமிகள் என்ற வார்த்தை சாதரண பயன்பாடை போலேவே தோன்றுகிறது, அதன் முழுமையான அதிர்வை கொடுக்க தவறுகின்றது. 15 வயதை கூட தொடாத குழந்தைகள் போலத்தான் இருந்தார்கள், அவர்களை அரைகுறை ஆடைகளில் பார்க்கவே எங்கள் மேல் எங்களுக்கு அருவருக்கத்துவங்கியது. சாதரணமாய் பார்த்தால் பள்ளி ஆண்டுவிழாவில் மேக்கப் போட்டு மேடையேரத்தயாராய் இருக்கும் குழந்தைகள் போல இருக்கும் அவர்கள், அடுத்த சில வினாடிகளில் அவர்கள் கடக்கப்போகும் நிகழ்வைக்குறித்த பிரக்ங்கை சிறிதும் இன்றி, அருகில் ஒருவரை ஒருவர் சீண்டிக்கொண்டு, தங்களை பார்பவர்களிடம் சைகைகள் காட்டிக்கொண்டு... சத்தியமாய் மிகக்கொடுமையான தருணங்கள் அவை. மீண்டும் கற்பனை செய்து பார்க்கவே வலிக்கின்றது.

இவர்களுடன் நிற்கும் இளவயது பெண்கள், கண்களில் எந்த ஒரு உணர்ச்சியுமின்றி, அங்கு நிற்பது அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமை என்பதுபோல நின்றிருக்கிறார்கள். இப்பெண்களில் சிலர் தங்கள் கைக்குழந்தைகளில் இருந்து சிறு குழந்தைகளை கவனித்துக்கொண்டே நிற்கின்றனர்.

அடுத்து பார்த்தது வயதானவர்கள், வாழ்வின் கடைசி 15 வருடங்களில் இருப்பவர்களை போன்று இருப்பவர்கள், அவர்களும் இந்த வரிசையில் நிற்பதை என்னவென்று சொல்லத்தெரியவில்லை, பரிதாபமா இல்லை இவர்களையுமா வதைக்க வேண்டுமா என்று கோபமா தெரியவில்லை.

இவர்களுடன் பல திருநங்கைகளும் உண்டு.

தெரு செல்லச்செல்ல குறுகிக்கொண்டே போனது, கூட்டம் இருபுறமும் நின்று கொண்டிருந்தவர்களை இலவசமாய் உரசிச்சென்று கொண்டிருந்தது. எங்களுக்குள் இருந்த குறுகுறுப்போ போய், அருவருப்பு தொடங்கியது. அந்த வயதும், அதுவரை தெரிந்திருந்த கற்பனை உலகமும், எங்களை எதையோ எதிர்பார்த்து அழைத்து வந்திருந்தது.. ஆனால் அங்கே நடந்ததோ, உண்மையின் கசப்பும், குரூரமும் ஒன்று சேரத்தாக்க கொஞ்சம் கொஞ்சமாய் உடைந்து போய்க்கொண்டிருந்தோம். அங்கு நடந்துகொண்டிருக்கும் எதையும் எங்களால் கனவல்ல நிஜம் என்று ஜீரணிக்க முடியவில்லை.

மேலும் குறுகிய தெருக்களின் இருட்டிலும் எங்கள் கண்களின் மிரட்சியையும் பயத்தையும் எளிதாய் இனங்கண்டு கொண்ட நபர்கள் தரகர்களைப்போல எங்களை இழுத்துக்கொண்டு அப்பெண்களருகே நிறுத்தி விலை பேசத்துவங்கி விட்டனர். உதறிக்கொண்டு விலகும் எங்களை பார்த்ததற்கு காசு என மிரட்டவும் துவங்கிவிட்டனர்.

இன்னும் உள்ளே செல்லச்செல்ல, பார்க்கும் விஷயங்களின் வீரியம் அதிகமாகிப்போனது, அதற்கு மேல் எதையும் கவனிக்கும் மனநிலையில் எவரும் இல்லை. உடனே திரும்பிப்போகத்துவங்கினோம்.

வீட்டிற்கு வந்து சேரும்வரை மௌனத்தை மட்டுமே பரிமாறிக்கொண்டோம், அதற்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளக்கூட தயங்கினோம். ஒருவழியாய் வீட்டினில் நுழைந்தும் இரவு முழுவதும் அத்தனை குளிரிலும் மனப்புழுக்கம் தாங்காமலா, இல்லை குற்றஉணர்ச்சியா, அருருவருப்பா என புரியவில்லை, மயான அமைதியாய் நிசப்தத்துடன் அன்றிரவு மட்டுமல்ல அடுத்த 4/5 நாட்கள் கழிந்தன.

இந்த நிகழ்வுகளை அன்றைய நாட்குறிப்பில் குறிக்கையில் பல எண்ணங்கள். இங்கே எனக்கு வந்திருப்பதென்ன உணர்ச்சி ?

அழகான பெண்களை எதிர்பார்த்துச்சென்று அவலட்ச்சணமாணவர்களை பார்த்த அருவெறுப்பா ? இல்லை அந்த குழந்தைகளை பார்த்து, இவர்களை பயன்படுத்தும் இடத்துக்கு சென்று விட்டோமே என்று வருத்தமா/குற்றஉணர்ச்சியா ?, இல்லை திருநங்கைகளையும் வயதானவர்களையும் கூட பயன்படுத்திக்கொள்ள நினைப்பவர்களும் உண்டா என்ற அதிர்ச்சியா ? ஒன்றும் உடனடியாய் புரியவில்லை.

உண்மையை வெட்க்கமில்லாமல் ஒப்புக்கொள்வதானால், அருவருப்பில்தான் தொடங்கியது சிந்தனை. தவறுதான், இந்த சிந்தனையில் இருப்பவனுக்கும், அங்கு தெருக்களில் தன் வேட்க்கையை தனித்துவிட திரிபவனுக்கும் பெரிய வித்தியாசமில்லைதான், ஆனால் அப்படித்தான் தொடங்கியது. பின் அந்த குழந்தைகளை நினைக்கையில், எப்படி இவர்களால் முடிகின்றது, குழந்தைகள் என்ற எண்ணம் வரவே வராதா, இங்கிருந்து திரும்பி வீட்டுக்குத்திரும்புகையில் குற்ற உணர்ச்சியின் ஒரு துளிகூட இருக்காதா என தோன்றியது. இதில் வறுமைக்கோட்டுக்கு கிழே உள்ளவர் மட்டும் என்றில்லை என்று Park Street-இல் இரவு 10 மணிக்கு மேல் சென்றால் தெரிந்தது.

அந்த நேரத்தில்,ஆண்டாள் ப்ரியதர்ஷினியின் "மன்மத எந்திரம்" என்ற கவிதைத்தொகுப்பு படிக்க வாய்ப்பமைந்தது. மனதில் தோன்றியிருந்த முடிவில்லாக்கேள்விகளுக்கு புதியதாய் ஒரு கோணம் அமைந்தது. தோன்றிய கேள்விகள் அனைத்தையும் இப்பொழுது அந்த பாலியல் பெண்களின் பார்வையில் யோசிக்க இன்னும் கொடுமையை இருந்தது. புத்தகத்தின் தலைப்பே அதன் கதை சொல்லியது.

அங்கிருக்கும் எவர்க்கும் அதில் ஈடுபாடு இருக்கப்போவதில்லை, ஆனால் அதையும் ஒரு தொழிலாக கருதிக்கொண்டு வாழும் மனநிலைக்கு தள்ளப்பட்டுவிடுகின்றனர். இவர்கள் இல்லையேல் மற்ற பெண்கள் தைரியமாய் நடமாட முடியாது என்று சொல்பவர்களுக்கு, இவர்களை பலிகடாக்களாக்க யாருக்கு யார் அதிகாரம் தந்தது.

10 ரூபாயிலிருந்து இங்கு உங்களுக்கு தேவையானது கிடைக்குமென சொல்லும் தரகர்களின் உறுதியான குரலில் தெரிந்தது என்ன ? எப்படியாயினும் எனக்குத்தேவை சிறிது நேரத்துக்கு ஒரு உடல் என்று வெறி கொண்டு அலையும் ஆண்களின் மேல் உள்ள நம்பிக்கையா ?

எங்களால் என்ன செய்துவிட முடியும் என்ற மனநிலைக்கு வந்துவிட்ட அங்கு நடமாடும் காவல்துறை. இவர்களை மீட்டெடுப்பது என்பது நடக்கக்கூடிய விஷயமில்லை, அதைத்தவிர உருப்படியாய் இவர்களுக்கு பாலியல் நோய்களைப்பற்றிய விழிப்புணர்வு கொண்டுவரத்துடிக்கும் சமூக அமைப்புகள். என அத்தனை பேரும் இவர்களைச்சுற்றி இயங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களுடன், இத்தகைய இடமொன்று தங்களிடையே உண்டென்பதை தங்கள் கொல்கத்தா வாழ்வின் மற்றுமொரு அங்கமாக எடுத்துக்கொண்டு அருவருக்காமல்/தயங்காமல், தனக்கும் அந்த இடத்திற்கும் சம்பந்தமில்லாததைபோல நாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன பெங்காலி நண்பர்கள்தான் சராசரியான ஒரு நடுத்தரவர்க்க பெங்காலி.

இதற்குப்பின் சோவாபஜாரை கடக்கும்பொழுதெல்லாம் எங்களையுமறியாமல் ஒரு குற்ற உணர்வில் எங்கள் மனம் கணக்கத்துவங்கியது மட்டுமின்றி இத்தகைய விஷயங்களில் எங்களின் பார்வை மாறியது.

பி.கு:
2 வருடங்களுக்கு பிறகு ஒரு விடுமுறையில் துர்கா பூஜை காண சென்றிருந்தபோது, துர்க்கா சிலை வடிக்கும் சிற்பிகள் முதல் சிலையை இப்பெண்களின் காலடி மண்கொண்டு செய்வது தெய்வீகம் என்ற நம்பிக்கை இன்னும் பயன்பாட்டில் உள்ளது என்று கண்டு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. துர்கா பூஜையின் 3 முக்கிய நாட்களில் கொல்கத்தா நகரெங்கும் விழாக்கால பக்தி மயமாக, அன்றும் சோனாகாச்சியில் கூட்டத்துக்கு குறைவில்லை, பலத்த போலிஸ் காவலும் அங்கிருந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருப்பதை கண்டதும் என்ன மதம், என்ன நம்பிக்கை, என்ன சமூகம் என்று கோபங்கள் அதிகமாகிப்போனது.

கொல்கத்தா நாட்கள் - சோனாகாச்சி - 1

Published by யாத்ரீகன் under , , on புதன், ஜூலை 23, 2008
கொல்கத்தா போகப்போகிறோம் என்று முடிவானதும் நண்பர்கள் குறுகுறுவென பேசிக்கொண்ட விஷயம் "சோனாகாச்சி". கல்லூரி முடித்திருந்த நேரம், எதை பார்க்கும் போதும் அதன் பின்புலத்திலிருக்கும் வலிகளோ/வேதனைகளோ உடனே உணராத வயது.

>>> சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்ட விளிம்புநிலையில் வாழும் சிறுவர்கள் வாழ்வின் யதார்தத்தை எளிதில் உணர்ந்து கொள்கிறார்கள். தங்களைச் சுற்றியுள்ள உலகம் குறித்தான புரிதலை அவர்களின் குடும்பமும் சமூகச் சூழ்நிலையும் சிறுவயதிலேயே ஏற்படுத்திவிடுகின்றன. சமூகம் அவர்களைக் கண்டும் காணாதது போல் தலையைத் திருப்பிக் கொள்கிறது. புறக்கணிப்புகளும் ஏமாற்றங்களுமே வாழ்வாகிப் போனாலும் அவை அச்சிறுவர்களின் ஆசைகளையும் கனவுகளையும் ஒருபோதும் அசைத்துப் பார்ப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களின் நிலையிலிருந்து வெளிவரவேண்டுமென்ற உத்வேகமும் தன்னோடு தன் சமூகமும் மேலெழ வேண்டுமென்ற லட்சியமும் சிறுவயதிலேயே மனதில் ஊன்றிவிடுகின்றன. ஆனால் அதற்கான வழிகளைச் சமூகம் எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி அடைத்துவைத்திருக்கின்றது. <<<

கப்பியின் இந்த பதிவில் வரும் மேற்கூறிய வாசகங்களில் உள்ள நிதர்சனம் நம் முகத்திலறையும். இதில் சமூகம் என பொதுப்படையாய் கூறியிருந்தாலும் அதிலொரு பங்கு நமக்கும் தொடர்பு உண்டு என்பது கசக்கும் உண்மை. எங்கோ நடக்கும் துயருக்கு நான் எப்படி பொறுப்பாவேன் என்று கேள்வி எழுப்பினால், பின் உங்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கேதிறாய் உங்களுக்காக குரல் கொடுக்ககூட யாரும் இருக்கப்போவதில்லை.

When the Nazis came for the communists, I said nothing; I was, of course, no communist.
When they locked up the Social Democrats, I said nothing; I was, of course, no Social Democrat.
When they came for the trade unionists, I said nothing; I was, of course, no trade unionist.
When they came for me, there was no one left who could protest.

கப்பியின் இந்த பதிவில் Born into Brothels என்ற ஆவணப்படத்தை குறிப்பிட்டிருந்ததை படித்ததும், இதற்கு முன் தேடி கிடைத்திராத DVD தற்போது NetFlix-இன் உதவியுடன் பார்த்து முடித்ததும், மனக்குரங்கு சட சடவென கொல்கத்தாவின் நினைவுகளுக்கு தவ்வத்தொடங்கியது.

கொல்கத்தா போகப்போகிறோம் என்று முடிவானதும் நண்பர்கள் குறுகுறுவென பேசிக்கொண்ட விஷயம் "சோனாகாச்சி". கல்லூரி முடித்திருந்த நேரம், எதை பார்க்கும் போதும் அதன் பின்புலத்திலிருக்கும் வலிகளோ/வேதனைகளோ உடனே உணராத வயது.

வேலை துவங்கி, கொல்கத்தாவின் புகழ்பெற்ற இடங்களாக போகத்துவங்கியதும், எப்போது எப்போது என நேரம் கிடைத்தபோதெல்லாம் பர பரத்துக்கொண்டிருந்தோம். யாவருக்கும் அங்கே செயலில் ஈடுபடுவதில் மனமில்லை என்பதோடு தைரியமுமில்லை என்று எங்களுக்குள் தெரிந்திருந்தாலும், இங்கிருக்கும்போதே எப்படி இருக்கும் என்று பார்த்துவிடவேண்டும் என்று ஏதோ ஒரு குறுகுறுப்பு. என்னதான் "மஹாநதி, குணா.." என்று படங்களில் பார்த்திருந்தாலும், அப்படி என்னதான் மச்சான் பண்றாங்கன்னு பார்த்திரலாம்டானு காத்துக்கொண்டிருந்தோம்.

எங்களுடன் 6 தோழியரும் இருந்த நேரம் என்பதனால் அவர்களை கழட்டி விட்டு விட்டு சென்று வர சரியான சந்தர்ப்பம் வாய்க்க காத்துக்கொண்டிருந்தோம். சோனாகாச்சி என்பது கொல்கத்தாவின் புகழ்(?) பெற்ற இடமாயினும் அது ஒன்றும் மேப்பில் உள்ள ஒரு இடமல்ல, சகவயது பெங்காலி நண்பர்களிடம் அரட்டியடிக்கும்போதும், "சோனாகாச்சி"-யின் சரியான இடமேது என்பதில் எங்களின் தேடல் துவங்கியது. கேட்ட பெங்காலி நண்பர்களும் அதிர்ச்சியோ அருவருப்போ எதுவும் தராமல், தவறாமல் சரியான விடை தெரியாமல் நாக்கை பிதுக்கிகொண்டிருந்தனர் அல்லது ஆளுக்கு ஒரு இட எல்லையை சொல்லிக்கொண்டிருந்தனர் அதுவும் உறுதியாகச்சொல்லாமல்.

ஒவ்வொரு முறையும், நிரம்பி வழியும் மேக்கப்புடன் ஒரு பெண்ணை மெட்ரோ இரயில் நிலையத்தின் இடுக்கில் பார்ப்பதும், இந்த இடமாய் இருக்குமோ என்று ஏகப்பட்ட யூகங்கள் வேறு. ஒரு வழியாய் "சோனாகாச்சி" என்பது சோவாபஜார் (Shova Bazar) மெட்ரோ நிலையத்தினருகே தொடங்கி எம்.ஜி ரோடு (Mahatma Gandhi Road) மெட்ரோ வரையிலான நிழற்ப்பகுதியே என உறுதிசெய்தோம்.

அதன் பின்னர் இவ்விரு இடங்களை கடந்து செல்லும்போதேலாம் கண்கள் அலைபாயும், 10 பேரும் தோழியருடன் அந்த இடங்களை இரவில் கடக்கும்போதெல்லாம் ஏதோ ஒரு பயம் உரசிவிட்டுப்போகும்.

ஒருநாள் அலுவலகத்திலிருந்து 10 பேரும் கிளம்புவதற்கு பதிலாக நாங்கள் நால்வர் மட்டும் தங்கிவிட்டு பின்னர் தனியே புறப்பட்டோம். இரவு 10 மணிக்குள் அந்த பகுதியில் இருந்து வெளியே வந்துவிடுங்கள், பயத்தை கண்களில் தவறியும் காட்டாதீர்கள், கைப்பிடித்து இழுப்பவரை உதறுவதில் சிறிதும் தயக்கம் காட்டாதீர்கள் என பல அறிவுரைகள் வேறு.

சோவாபசாரில் இறங்கியதும், இடதா வலதா எங்குபோவது, தெரியாத ஊராயினும் வெட்க்கம்விட்டு கேட்க்க முடியாத இடம். ஒருவழியாய் ரோட்டில் ஜால்மூரி (பொறி ) விற்பவரை கேட்டு (அவர் எங்களை மேலும் கீழும் பார்த்து வழி சொன்னது வேறு கதை), நடக்க ஆரம்பித்தோம். எவனாவது ஒருவன் சஞ்சலமாவது போல் தெரிந்தாலும் மீதி மூவர் அவனை இழுத்துக்கொண்டு வெளியேறுவது என்று ஒரு ஒப்பந்தம் வேறு எங்களுக்குள்.

நடக்க ஆரம்பித்து பல அடிகள் கடந்திருந்தாலும், எதற்கான ஒரு அறிகுறியும் இன்றி, வழக்கமான பரபரப்புடன், அதிக பொதுமக்கள் (சாதரண பெண்கள்,குழந்தைகள் உட்பட) நடமாட்டத்துடன், அங்காங்கே பயனில் இருக்கும் டிராம் தடங்களுடன் இருந்த கொல்கத்தாவின் மற்றுமொரு குறுகிய பழந்தெருக்கள் போலவே தோன்றியது. இரு பொட்டலமாவது வாங்கி இருக்கலாம் அந்த ஜால்மூரி விற்பவரிடம் சரியான வழியாவது காண்பித்திருப்பான் என்று புலம்பிக்கொண்டே நடந்துகொண்டிருந்தோம்.

போகப்போக தெரு மேலும் குறுகத்துவங்கியது, கடைகளில் வெள்ளை வெளிச்சம் போய் மஞ்சள் நிற தெருவிளக்குகள் மட்டுமே அதிகமானது. வாழ்வின் அதிர்ச்சியான கட்டங்களை நோக்கித்தான் செல்கின்றோம் எனத்தெரியாமல், வழக்கமான அபத்தமான காமேன்ட்டுகளுடன் சிரித்துக்கொண்டே தான் சென்றோம் ஒரு வீட்டின் வாசலில், அதீத மேக்கப்புடன் நிற்கும் அந்த நான்கு பெண்களை பார்க்கும்வரை.

நான்கு பெண்கள், அலைபாயும் கண்கள் எங்கும் மை, பளபளக்கும் உடை, உதட்டில் வழியும் சிவப்பு, கைகளின் மாநிறத்திற்கு பொருந்தாத பிங்க் கன்னங்கள் என அடையாளங்களை கண்டதும் நுழைந்துவிட்டோம் என்று தோன்றியது. அடுத்த வெகுதூரத்துக்கு நடந்தும், சம்பந்தமிலாமல் ஒரு நல்ல ஏரியாவில் இந்த வீடா என்று தோன்றியது. இன்னும் குறுக்கு சந்துகளுக்குள் புகுந்து செல்லச்செல்ல அங்கிருந்தது வெளியில் நாங்கள் கண்டதற்கு சம்பந்தமில்லா உலகம் கண்டு ஒரு நொடி அரண்டு போயிருந்தோம்.

வரிசையாக வீடுகள், வாசல்களில் கும்பல் கும்பலாக பெண்கள். ஒவ்வொரு வீட்டின் முன் ஆண்கள் ஒரு சில நொடிகள் நிற்பது போலத்தோன்றும், அதற்குள் எல்லாம் பேசி முடித்து, புறாக்கூண்டு போலிருக்கும் ஒண்டுக்குடித்தன வீடுகளுக்குள் அழைத்துச்சென்றனர். நடைபாதையில் சில போலிஸ் கான்ஸ்டபிள்கள் வாய்நிறைய ஜால்மூரியும் கைநிறைய கலைக் ஷனுமாய் ரவுண்ட்ஸ் வேறு. அவர்கள் கண்முன்னே நடக்கும் செயலுக்கும் தங்களுக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லாத மாதிரி அவர்கள் சென்ற விதம் எங்களுக்கு பெரும் அதிர்ச்சிதான். என்னதான் படங்களில் போலீஸ்காரர்களின் கண்முன்னே தவறுகள் நடக்கும்போது சாதரணமாய் போவது போல பார்த்திருந்தாலும் , கேட்டிருந்தாலும்.. நேரில் பார்த்தபோது அதிர்வதை தவிர்க்க இயலவில்லை.

ஒரு வீட்டின் எதிரே ரோட்டுக்கடையில் Chowmien வாங்கி சாப்பிட்டுக்கொண்டே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம், பின்னே மானமுள்ளவர்களுக்கு வெறுமனே வெறித்துப்பார்ப்பது கூச்சமாயிருக்காதா :-( .. ஒவ்வொரு வீட்டிலும் வருவதும் போவதும், சில நிமிடங்களில் வாசல் காலியாவதும் வாடிக்கையாய் நடந்துகொண்டிருந்தது.

வாங்கிய Chowmien தீர்ந்ததும் மீண்டும் நடக்க ஆரம்பித்தோம், இந்த முறை பக்கத்தில் சென்று பார்த்துவிடுவதாய் திட்டம், ஒரு இடத்தில் கூட்டமாய் சிறு சந்து ஒன்று, உள்ளே செல்ல முடிவிடுத்து செல்லத்தொடங்கினோம். விளையாட்டாய் தொடங்கிய விஷயங்களுள் இத்தனை கூரூரம், வேதனை என வாழ்வின் அத்தனை கஷ்டங்களுக்கும் ஆளானவர்கள் இவர்கள் என உணரவைத்த தருணம் அது.

வெள்ளம்

Published by யாத்ரீகன் under , on புதன், ஜூலை 02, 2008
வெள்ளம் வந்ததற்கான அறிகுறிகள் முற்றிலும் மறைந்துபோய்விட்டன, சிலவாரங்களுக்கு முன் கடும் வெள்ளம் வந்த ஊரா எனும் எண்ணும் வண்ணம் வெயில் கொளுத்துகின்றது. மூடப்பட்டிருந்த சாலைகள், அலுவலகங்கள் எனமுழுமையாய் திறந்து செயல் படத்துவங்கி விட்டன. வெயிலின் புழுக்கம்அதிகமாகி, ஒரே இரவில் Tornado warning என்பதும் thunderstom warning என்பதும் மிகவும் நெருக்கமாய்விட்டது.

100 வருடங்கள் கழித்து இப்படி ஒரு கடும் பாதிப்பு என்பதாலோ என்னவோ, உடனடி உதவிக்கு வந்தவரிலிருந்து தீயணைப்புத்துறையினர் வரை திகைத்துப்போய் விட்டனர்... எங்கிருந்து தொடங்குவது , யாரை எப்படி கவனிப்பது, யாருக்கு முதலிடம் குடுப்பது என அத்தனை குழப்பம்.. ஆனால் மிகவிரைவாய் மீண்டு, ஒரு ஒழுங்கு முறையோடு மீட்பு பணிகளை நடத்தியவர்களை பாராட்டித்தான் ஆகவேண்டும்.

கால்வாயின் படுகையினோரம் இருந்ததால் அலுவலகம் உச்சகட்டபாதிப்புக்குள்ளானது. இருந்த Test Engines , Prototypes, Servers, Wirings என அத்தனையும் வெள்ளம் வாரிக்கொண்டு போய்விட, இன்றுவரை 150 பேர் இராப்பகலாக உழைத்தும் அலுவலகம் முழுமையாய் செயல்படத்துவங்கிய பாடில்லை. வெகுசில இடங்களில் மட்டும் மின்சாரம், காற்றும் வெளியில் இருந்து generator மூலமாக பம்ப் செய்யப்பட்டு, குடிதண்ணீரும் இலவசமாய் பாட்டில்-களில் விநியோகிக்கப்பட்டு இன்று முதல் இங்கு மீண்டும் வேலை தொடங்கினோம்.

வெள்ளத்தின் சூழல் அறியாமல் Volleyball விளையாண்டு முடிக்கையில் எங்களை சுற்றி கால்வாயில் வழிந்த உபரி நீர், சூழ்ந்திருந்த நீரில் விளையாண்டு வீட்டுக்கு திரும்பிவிட்டோம். வரும் வழியில் ஆங்கிலம் தெரியுமா, உதவிக்கு வர முடியுமா என்று அழைத்தவரிடம் சென்றால், எங்கோ ஒரு முதியோர் இல்லத்தை காலி செய்து வீட்டினருகே இருக்கும் பள்ளியில் தஞ்சம் புகுந்துகொண்டிருந்தனர். அதுவரை வெள்ளத்தின் விபரீதம் புரியாமல் தான் விளையாண்டுகொண்டிருந்தோம்.

எத்தனை முதியோர்கள், சும்மா இல்லை குறைந்தது 85-95 வரை இருந்திருப்பார்கள். தொட்டாலே வலிக்குமோ என்பது போல மெல்லிய தோல். இருவரை கவனமாய் இறக்கி பள்ளியில் விட்டபின் நம்ம வீடு என்னாச்சு பார்ப்போம் என்று புறப்பட்டாச்சு.

நள்ளிரவில் மின்சாரமும் முழுமையாய் தடைபட்டு போனது (பாதுகாப்புக்காரணங்களுக்காக), வீட்டைக்காலி செய்ய அறிவிப்பு வந்ததும்தான் மெழுகுவத்தியும் தீப்பெட்டியும் வீட்டில் இல்லாதது உரைத்தது :-) , இருந்த கைபேசி வெளிச்சத்தில் பாஸ்போர்ட், சில துணிகள் தூக்கிக்கொண்டு வெளியேற ஆரம்பித்தோம். அடுத்த நாள் விடியும் வரை இப்படியே திரிவோம் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

காரை கிடைத்த மேட்டில் ஏற்றிவிட்டு கடைசி ஆசாமி புறப்படுகையில் Apartment Complex-எ ஒரே ரணகளம்தான்.

அந்த முதியோர்களை ஏற்றும்போது இதே இடத்துக்குத்தான் நாமும் வருவோம்னும் கொஞ்சமும் எதிர்பார்க்கல :-) , மடக்கு படுக்கை, போர்வை, சிறிது தின்பண்டம்னு சட சட்னு விநியோகம் ஒரு பக்கம் ஆரம்பிச்சாச்சு. சரி இந்த நிலைமைல நம்ம ஊர் மக்களும் இந்த ஊர் மக்களும் என்னதான் பண்றாங்கன்னு பார்க்க ஆரம்பிச்சேன்.. ஹ்ம்ம்..

கொஞ்ச நேரத்திலேயே படார்னு பயங்கர சப்தம், பூட்டியிருக்கும் கதவை ஒடச்சிட்டு தண்ணிர் உள்ளே வருது.. ஏதோ ஆங்கில படம் பார்க்குற உணர்வு, 15 நிமிஷம் இடுப்பளவு தண்ணீர் இந்த பள்ளியினுள். அந்த இடத்துலதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எல்லா விநியோகமும் நடந்ததுனு நெனச்சுபார்த்தா, சரி ஏதோ பெருசா நடக்கபோகுதுனு தான் தோனுச்சு.. கீழ power lines எல்லாம் short circuit ஆகிகிட்டு இருக்கு, ஒரு பக்கம் படகுகள், life jacket-நு குவியுது.. குழந்தைகள் வச்சிருந்தவுங்க எல்லாம் பயப்பட ஆரம்பிச்சிட்டாங்க.. நம்ம bachelor பசங்க கோஷ்டி வழக்கம் போல மச்சான் அங்க பாருடா அந்த வயலட் கலர்னு இந்த ரணகளத்துலயும் ஒரு குதுகலமாத்தான் இருந்தாங்க :-) .. இத்தனை குழப்பத்துல , ஒரு அதிகாரியும் ஒரு அறிவிப்பும் வெளியிடுற மாதிரி தெரியல, வெளிய கொண்டுபோரதுக்கு எதுவும் நடவடிக்கை எடுக்குற மாதிரியும் தெரியல ..

நல்ல வேளை, தாமதமா ஆனாலும் மக்களை Panic அடையவிடாம அடுத்த பள்ளிக்கு எல்லோரையும் மாற்றி, அடுத்தநாள் காலை, மதியம் உணவுன்னு கொடுத்து நல்ல விதமாவே முடிஞ்சது.

அடுத்த ரெண்டு நாளைக்கு வீட்ல வர்ற தண்ணியில குளிக்க கூட கூடாதுன்னு கடும் அரசாங்க உத்தரவு, மின்சாரம் இல்லை, மின்சார அடுப்புனால எதுவும் சமைக்க முடியல, refridgerator-உம் வேளை செய்யாததால எல்லா கூத்தும் முடியும்போது இருந்த எல்ல பொருட்களையும் வெளில தான் தூக்கி போட வேண்டி வந்தது. ஊர்ல இருந்த கடைகள் எல்லாத்திலையும் தண்ணீர் பாட்டில் காலி, ஊருக்கு உள்ள வர்ற I-65/US-31 ஹைவேக்களும் மூடியாச்சு. வீட்ல இருந்த கேன்ஐ உலுக்கி உலுக்கி கடைசி துளி வரை பொறுப்பா பயன்படுத்துன நாட்கள் அவை :-)

மொத்தத்தில ரொம்ப வித்தியாசமான அனுபவம், நம்மூர்ல வெல்லம் மட்டுமே பார்த்தவனுக்கு இங்க வந்து வெள்ளம் பார்த்ததுல சிறுபுள்ளத்தனமான திருப்தி :-) , வீட்ல இருந்தே வேளை பாக்குறேன்னு NetFlix-ல வரிசையா படமா பார்த்து தள்ளின சந்தோசம் :-)

வித்தியாசமான அனுபவம்னு போக பல விஷயங்களை யோசிச்சு பார்க்க வைத்தது, அதையெல்லாம் பதிவு பண்ண, மனதில் தோன்றும் எண்ணங்களை அதே வேகத்தில் Blogger-இல் பதிவு செய்ய ஒரு சாதனம்தான் வேண்டும்.
(இதை பதிவு பண்றதுக்குள்ள அடுத்த வெள்ளமே வந்திருக்கும் போல :-)

வெள்ள இடமாற்றம்

Published by யாத்ரீகன் under on திங்கள், ஜூன் 09, 2008
வெள்ளம் - இடமாற்றம் - பாதுகாப்பு - அடுத்த இரண்டு நாட்கள் மீண்டும் வெள்ள அறிவிப்பு - வித்தியாச அனுபவம்

எங்களிடையே பெண்கள் - 1

Published by யாத்ரீகன் under , on திங்கள், ஜூலை 30, 2007
பெண்கள்

கடவுள், அரசியல் போன்றவற்றை விட அதிகம் விவாதிக்கப்படும் கருப்பொருள். எப்பொழுதிலிருந்து விவாதிக்க தொடங்கினோம் என்று சரியாக நினைவில்லை. அது என் ஆள், இது உன் ஆள் என ஆறாப்புலயே, ஆள் என்றால் என்னவென்றெல்லாம் தெரியாமல் தூரத்திலிருந்தே காமிக்க பயன் படும் பொருள்களாகத்தான் தொடங்கியது. எட்டாப்புலிருது எதெடுத்தாலும் சண்டை, சண்டை போடுவது சரிதானெறெல்லாமல் வீம்புக்கென்றே திரிந்த காலங்களில் இனிமையான நட்பென்பதை தவற விட்டுக்கொண்டிருந்தோம்.

கல்லூரியில், வீம்பே அடையாளமானது, தனித்திருக்க காரணமானது ஆனால் அதுவே பல உயிர் தோழிகளை அடையாளம் காட்ட உதவிக்கொண்டிருந்தது. கல்லூரியில் அதிகம் டாப் டென் அலசுவதற்கும், கூட்டை கலைப்பதுமென தான் பெண்கள் எங்களுக்கு அறிமுகமாகிக்கொண்டிருந்தனர். மிகவும் ஆர்வமுள்ள அரட்டைகள் அப்பொழுது எங்களுக்குள் தொடங்கியதில்லை.

தினந்தோறும் புதிய மனிதர்களும், மொழிகளும், நினைத்தேபார்த்திராத அனுபவங்களும் எங்களை கொஞ்ம் கொஞ்சமாய் புரட்டிப்போட்டுக்கொண்டிருந்த நேரம். தினசரி வாழ்வே, 6 பெண்களின் நடுவேதான் என்று ஆனபோது, கண்கள் மட்டுமல்ல மெல்ல மெல்ல மனசும் விழித்துக்கொண்டு தன் கண்ணையும் வைத்துக்கொண்டு பார்க்க ஆரம்பித்தது. ஒவ்வொருத்தரும் ஒரு இரகம் என்பதை மூளை முன்பே உணர்ந்திருந்தும், மனமும் அதை புரிந்து கொள்ளத்தொடங்கியது. ஒவ்வொருவருக்குள்ளும் கூட ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு சூழ்நிலையும் வெவ்வேறு முகங்களை அடையாளம் காட்டத்தொடங்கியது. நல்ல தோழி என தொடங்கி, விரோதி என்ற நிலை தொடர்ந்து, யாரையும் எந்த ஒரு வட்டத்துக்குளேயும் அடைக்க, நம்மையும் அவர்களுடனான நம் உறவையையும்தான் சேர்த்து உரைகல்லில் உரசிப்பார்க்க வேண்டியதின் நிதர்சனம் புரிந்து கொண்டிருந்தது, அதில்லாமல் தனிப்பட்ட விமர்சனங்கள் எவ்வளவு சீக்கிரம் அர்த்தமற்றவையாக் போய்க்கொண்டிருந்தது.

புதிய நட்புகளின் சூழ்நிலையில், முன்பு உணர்ந்திருக்காத அருகிலில்லாத நண்பர்களின் நட்பும், தான் எவ்வளவு விலைமதிப்பில்லாதது என்று மெளனமாய் ஒரு புன்சிரிப்புடன் தூரத்தில் அருகிலேயே இருந்தது.

அனைவருக்குமிடையில் புயல்கள் ஓய்ந்து புரிதல்கள் மெல்ல ஆரம்பிக்கும் நேரம், காலம் தன் இருப்பை பதிவு செய்ய மாற்றங்கள் தொடங்கின, இடங்கள் பெயர ஆரம்பித்த தருணம் அது. ஒவ்வொருவரின் முக்கியத்துவத்தையும், அவர்களைப்பற்றிய பார்வைகளை இன்னும் கூராக்க காலம் தன் வேலையை பார்த்துக்கொண்டிருந்தது.

வட்டங்கள் பெரியதாய் வரையப்பட, வரையப்பட... நட்பின் தொடர்புக்கு அருகாமையின் அவசியம் கொஞ்சமாய் ஒவ்வொருத்தருக்கும் புரிந்துகொண்டிருந்தது.

இதுவரை பார்த்ததே பெரிய மாற்றங்கள் என்று ஆசுவாசப்படுதிக்கொண்டிருந்த மனத்திற்கு, தொடுவானத்திற்கும் அப்பாலுல்ல கடலின் ஆழத்தையும், ஆகாசத்தின் வர்ணத்தையும் காலம் கோடிட்டுக்காட்டத்தொடங்கியிருந்தது. அங்கிருக்கும் ஆழமும், வர்ணமும்தான் பயணத்தை சுவாரசியமாக்க போகின்றன என புரியப் புரிய, கொஞ்சம் கொஞ்சமாய் மிரட்சி கலைந்து புன்னகைக்கத்தொடங்கினோம்.

அடுத்த கட்டமாய் ஒவ்வொருத்தர் வாழ்விலும் முக்கியத்துவங்கள் மாறத்தொடங்கின, புதிய நபர்கள் எங்களிடையே என்பதல்ல, புதிய நபர்கள் மத்தியில்தான் நாங்கள் என வாழ்வின் நிதர்சனமும் எங்களுகு வழிகாட்டதொடங்கியது.

இப்போது பெரும் கும்பல்களில் மட்டுமே அவர்களை காண முடிந்தது, நெருக்கமான கோஷ்டிகளில் ஆண்கள் மட்டுமே அதிகமாயிருக்கின்றனர்.

இப்போது எங்கள் விவாதத்தலைப்புகளை எடுத்துக்கொண்டு பார்த்தால், அதிகம் விவாதிக்கபட்ட தலைப்பும் சரி, அதிகம் பார்த்திராத கோணங்களிலெல்லாம் சுற்றியெங்கும் நிறைந்திருப்பதாய் உணர்கின்றோம். காற்றைப்போலவே, உடனே பயணித்துக்கொண்டிருக்கின்றதா என்று தோன்றுவதைப்போல், எங்கே சென்றாலும் கேட்க்க முடிகின்றது.

இவ்வளையும் கேட்டுவிட்டு, டைம் ஆகிடிச்சு மாப்ளே வீட்ல சொல்லனும்னு சொல்ற எதிரிகளும் சரி, மச்சி இன்னும் நாலு வருசம் இருக்குடா இத்தயெல்லாம் யோசிச்சிகின்னு, ஜாலியா போய்கிட்டே இருப்போம்னு சொல்ற நண்பர்கள்ம் உண்டு.

இன்றைக்கு சுவாரசியமாய், சூடாய் மோதிக்கொள்ளும் கருத்துகளும், புரிதல்களும் சரி, மனிதர்களைப்போல மாற்றங்களுக்கு உட்பட்டே இருந்திருக்கின்றது. நாளை நகைப்புக்கும், வெட்கத்துக்கும் கூட இழுத்துச்செல்லலாம் இன்று மூச்சு முட்ட விவாதித்துக்கொண்டிருக்கும் பார்வைகள். அவற்றில் கொஞ்சத்தை பதிவு செய்து வைப்போமென்று நினைதிருந்தேன். அடுத்து வரும் பதிவுகளில் எங்கள் so called வயசுக்கோளாறு பட்டறைகளை பகிர்ந்துகொள்கிறேன்.

ஒரு ஒன்றரை மணிநேரம் இருக்குமா உங்களிடம் ?

Published by யாத்ரீகன் under , , , on ஞாயிறு, பிப்ரவரி 04, 2007

முக்கியமான தேர்வு ஒன்று. அவ்வளவாய் பரிச்சியமாய் இல்லாத மொழியில் தாய் மொழி பாடத்திற்கான கேள்விகள், அதனால் பதில்கள் தெரிந்திருந்தாலும் பொருத்த முடியாமலிருப்பதால் கொஞ்சம் பதட்டம். இத்தனைக்கும் இடையே எப்படி தேர்வு எப்படி எழுதுவீர்கள்.

தேர்வுத்தாள் நமக்கு உரியதுதானா என்ற கேள்வி முதலில் தோன்ற, பின் யோசிக்கையில் கோர்வை கோர்வையாய் பதில்கள் எழுதுவதற்கு ஏதுவாய் வரவில்லை, முதலில் யோசித்து, பின் அது சரியாய் தோன்றவில்லையென்றால் அதில் திருத்தம் செய்து எழுதுவோம், எழுதுகையிலும் திருத்தம் தோன்றும், ஆங்காங்கே அடித்தல் திருத்தல், கொக்கி போட்டு இரண்டு வார்த்தைகளிடையே ஒரு வாக்கியமே புதிதாய் சேர்த்தல் என பல ஒட்டு வேலைகள் நடக்கும். இறுதியில் ஒரு முறை பதில்கள் விட்டுப்போயுள்ளனவா, எழுதியவை சரியா என ஒரு சரிபார்த்தல்.

எல்லாம் சரியாய் இருந்தும் உங்கள் கருத்துக்களை, உங்களுக்கு தோன்றும் எண்ணங்களை அப்படியே தலைகீழாய் உங்கள் பேனா புரிந்து கொண்டு எழுதினால் எப்படி இருக்கும் ?
குழப்புகிறதா ? ஒரு நொடி கண்ணைக்கட்டிக்கொண்டு உங்கள் நண்பரை அல்ல, உங்களூக்கு முன்னே பின்னே தெரியாத ஒருவரை, எப்படி இருக்கும் அவர் கையெழுத்து என்று தெரியாமல், தேர்வு செய்து, அவரிடம் பதில்களை சொல்லி எழுதியபின் வாங்கிப்பாருங்கள் நான் சொல்ல வருவதின் சிரமம் புரியும்.

நேற்று லயோலா கல்லூரியில் தமிழ் இலக்கியம் (Tamil Literature) படிக்கும் பார்வை குறைபாடுள்ளவர்களின் தேர்வு (Internals), அதற்கு எழுத்தராக (Scribe) போயிருந்தேன்.

தேர்வுகளில் ஒரு பெஞ்சில் ஒருவர் வீதம், அடுத்தடுத்த பெஞ்களில் உட்காரச்சொல்வார்கள் என்று நினைத்து அனைவரும் உட்கார்ந்திருந்த வேலையில், ஒரு பெஞ்ச் இடையில் காலியாக விட்டு உட்காரவும் என்று கோரிக்கை வந்த உடன் தான் உணர்ந்தேன் சொல்லும் பதில்கள் அடுத்த பரிட்சையாளரால் கேட்டுவிடப்படக்கூடாது என்று.

பின் எங்களுக்கான பயிற்சியாளர் ஒவ்வொருவராய் அழைத்து வரப்பட்டு எங்களருகில் அமரவைத்து சென்று விட்டனர். அவர்களில் முழுதாய் பார்வை இல்லாதவர் முதற்கொண்டு கண்களுக்கு மிக மிக அருகில் வைத்து மட்டுமே படித்தால் தெரியும் நிலை கொண்டவர் வரை இருந்தனர்.

கொஞ்சம் இறுக்கமான சூழ்நிலையா என்று சொல்லத்தெரியவில்லை ஆனால் முதல் சில நிமிடங்கள் மவுனத்திலேயே கரைந்தது. எப்படி ஆரம்பிப்பது என்று எனக்கும் புரியவில்லை, அனுதாபமாய் பட்டுவிடக்கூடாது என்பதில மிகுந்த கவனமாய்யிருந்தேன். யார் அருகில் உட்கார்ந்திருக்கிறாகள், ஆணா, பெண்ணா என்று தெரியாத நிலையில் அருகில் இருப்பவர் என்றே அந்த அறை ஒரு கனமான மவுனப்போர்வை கொண்டு போர்த்தியது போலிருந்தது.

"வணக்கம், எம்பேரு..." என அரம்பித்த உடன், சகஜமாய் பேச ஆரம்பித்து விட்டோம். இன்றைய பாடம் என்னவென்பதில் தொடங்கி, சென்னையின் காலைப்பனி வரை பேச ஆரம்பித்து விட்டோம்.

தேர்வுக்கான கேள்வித்தாள்கள் பார்த்ததில்தான் எனக்கு அடுத்த ஆச்சர்யம். ஆங்கிலத்தில் கேள்விகள், அதுவும் சாதரண ஆங்கிலம் இல்லை, "டிஸ்பொசிசன் ஆட்ரிபூசன்(Disposition Attribution), சோசியல் ஸ்க்கீமா (Social Schema)..." என என்னால் தமிழாக்கம் செய்ய இயலாத ஆங்கிலம். (என் நிலமைதான் அப்படி என்று நினைத்து சுற்றி முற்றி திரும்பினால் அங்கிருந்த அனைவருக்கும் இதே நிலமைதான்).

ஆசிரியர்களிடம் கேட்டால், அவர்களுக்கு நாங்கள் சொல்லித்தந்து விட்டோம், நீங்கள் தமிழாக்கம் கூட செய்ய வேண்டாம், அவர்கள் சொல்வதை மட்டும் எழுதுங்கள் என்று பதில்.

சொல்வதை மட்டும் எழுதுவதா, அவர்கள் சொல்லும் விடைகள் தவறாய் தெரியும் தருணத்தில் நாமே சரியான பதிலை எழுதுவதா என்று ஒரு பெரிய தயக்கம்.

ஒருவழியாய் என்னருகில் உட்கார்ந்த பிரபுவும் விடைகளை யோசித்து சொல்ல, முதல் பகுதி முடிக்கையில் ஒரு அறிவிப்பு. "தமிழ் இலக்கிய கேள்வித்தாள்கள் மாறிவிட்டன என்று". புதிய கேள்வித்தாள்கள் விநியோகிக்கப்பட்டு மீண்டும் தொடங்கினோம்.

ஆரம்பத்தில் சொன்ன அனைத்து தடைகளும், குழப்பங்களும், தோன்ற, கேள்விகள் புரியாவிட்டால் தமிழாக்கம் செய்ய முடிந்தவற்றை செய்தோம். அப்படியும் மிஞ்சியவற்றில், பிரபு, அருகிலிருந்த மாணவரை கேட்கச்சொல்லுமாறு சொன்னதும் என்ன செய்வதென்றே புரியவில்லை.

கேட்காமலிருந்து, கேட்டது போல் ஏமாற்றுவதா ? இல்லை கேட்டு உதவி பண்ணுவதா என்றும் புரியவில்லை.

ஒருவழியாய், முடிந்த வரை தமிழாக்கம் செய்து, கேள்வியை விரிவாய் விளக்கியும் முடிந்த வரை உதவி செய்து கொண்டிருந்தேன். பிரபுவுக்கும் கொஞ்சம் கொஞ்சமாய் பதில்கள் நினைவுக்கு வர, தாள்கள் நிரம்பத்தொடங்கின.

ஒவ்வொரு பகுதியாய் முடித்து , இப்போது இறுதிப்பகுதியில் 1200 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு பதில் வேண்டும். கேள்வி "Explain about factors influencing Interpersonal Attraction".

எளிதான கேள்விதானே என்று நினைத்து பதிலை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்த எனக்கு, "பார்த்த உடனே பிடித்துபோகும் அழகு, பழகும் போது இருவருடைய பார்வையும் ஒன்றாய் இருப்பது .. " என்று பதில்கள் என் மனதில் தோன்ற தோன்ற...... எப்படி இருந்தது என்று சொல்லத்தெரியவில்லை.

யோசித்து யோசித்து பிரபு பதில் சொல்லச்சொல்ல, அதை நான் தயக்கத்துடனே எழுதிக்கொண்டிருக்கையில், பிரபுவிடமிருந்த கனத்த மவுனத்திற்கு பின் "இதுக்கு மேல என்னண்ணா சொல்ல ? அவ்வளவுதான் தெரியுது...... , சரியாத்தானே எழுதுரீங்க, நீங்க எப்படி எழுதுவீங்கனே தெரியாது, வெறும் கோடு கோடாத்தான் தெரியுது, பார்த்து எழுதுங்கண்ணா, 15 மார்க் எடுக்கனும் பாஸ் பண்ண....".

எப்படி பதில் சொல்வதென்று தெரியாமல், சில இடங்களில் பிரபு சொல்ல சொல்ல அந்த திருத்தங்களுக்காக அடித்தல்கள் பண்ணதை நினைத்து கஷ்டப்பட்டுக்கொண்டேயிருந்தேன்.

பின் ஒருவழியாய் ஒன்னரை பக்கங்களில் பதிலை நிரப்பி, பதில்கள் நிரம்பிய தாளை கொடுக்க காத்திருக்கையில்... "அண்ணா, நீங்க காதலிச்சிருக்கீங்களா ? உங்களுக்கு பிடித்த பெண் இருக்காங்களா ?.." என்ற கேள்வி பிரபுவிடம்.

காரணம், இந்த பகுதிக்கான அவர்களின் பதிலில் பிறரைப்பற்றிய புரிதல் பற்றியும், அதில் வரும் காதல், திருமணம், ஊடல் பற்றியும் இருந்த குறிப்புகளே.

ஆவடியில் தங்கியிருக்கும் பிரபு, தினமும் லயலோ வந்து செல்ல 1 மணிநேரத்திற்கும் மேல் பயணிப்பதையும், இதிலே பேருந்தில் கூட்டமிருந்தால் கொஞ்சம் கஷ்டம் என்று சொன்னதை கேட்டு, எத்தனை பேருக்கு இறங்குகையில் உதவியுள்ளோம் என்று யோசித்து பண்ணிப்பார்த்துக்கொண்டிருந்தேன். முதல் நொடியில் தோன்றும் தயக்கம் தொலைத்து சில வருடங்க்கள் ஆகிவிட்டன, அதற்கு முன் யோசித்து முடிப்பதற்குள் அந்த கணம் முடிந்து போவதும், பின் அதை நினைத்து குற்ற உணர்வு கொள்வதுமாய் தன் முன்பிருந்தேன்.

பரிட்சையின் முடிவுகளுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு லயலோ விட்டு வெளியே வருகையில், யாருமில்லாத அந்த வராண்டவில் விழுந்த வெயிலும், அந்த பெரிய தூண்களின் நிழல்களும், எங்கோ கூவிக்கொண்டிருக்கும் பறவையின் சப்தமும், கடற்கரை மணலில் ஆழப்பதியும் கால் தடங்களைப்போல, என் நினைவுகளில் இறங்கிக்கொண்டிருந்தன.

ஒரு ஒன்றரை மணி நேரம் அவர்கள் வாழ்வில் மட்டுமல்ல, உங்கள் மனதிலும் ஒரு மாற்றம் கொண்டு வரும். nasrivatsan@gmail.com -ஐ அணுகலாம்.