யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

வேகம்

Published by யாத்ரீகன் under on திங்கள், மார்ச் 19, 2012
காலையில் அலுவலகம் செல்லும்போது சாலையோரம் வெள்ளைத்துணிகொண்டு மூடிவைக்கப்பட்டிருந்த உருவமொன்று, ஆணா பெண்ணாவென தெரியவில்லை, இளவயதா முதியவராவென தெரியவில்லை. அருகே அநேகமாய் அந்த உருவம் சென்ற இரு சக்கர வாகனமாயிருக்கலாம், கைப்பிடி உடைந்து நெளிந்திருந்தது. இரத்தம் சிதறியிருந்ததாவென நினைவில்லை. இதை தாண்டிச்சென்ற வாகனங்கள்  ஒரு நொடி நிற்கக்கூட முடியாமல், மெல்ல நகர்ந்துகொண்டே முகத்தை முதுகில் சில நொடிகள் நிப்பாட்டிக்கொண்டிருந்தன்.

 நாள் முழுதும் இதைப்பற்றியே நினைவுகள்தான் மனதை ஆக்கிரமித்திருந்தன. இறந்தவரை சார்ந்து யாரிருந்திருப்பார் ? சில மணிநேரம் வீட்டிலிருந்து கிளம்புகையில் என்ன நினைத்திருப்பார்கள் ? விபத்து இவருடைய தவறா இல்லை இடித்தவருடையதா ? மரணம் நிகழ்ந்த அந்த நொடி என்னவெல்லாம் எண்ணங்கள் ஓடியிருக்கும்.

இதைப்போலத்தான், சில வாரங்களுக்கு முன், சிறுசேரி அலுவலகத்துக்கு மாற்றமாகி வந்த முதல் நாள், இரவு வீட்டுக்கு திரும்பும்போது லாரி மோதி இளைஞர் ஒருவர் பலியானார். திருமணமாகதவர் என்று கேள்விப்பட்டதும் ஏதோ ஒரு உணர்வு.

(ஒருவகையில்) எதிர்பார்த்த மரணங்கள் தரும் வலியைவிட, இப்படி கொஞ்சமும் எதிர்பாராத மரணங்கள் தரும் வலி நினைத்தும் பார்க்க முடியவில்லை.