யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

எனக்குப்பிடித்த திருமணப்பரிசு - பாகம் 4 (உண்மைச்சம்பவம்)

Published by யாத்ரீகன் under on வியாழன், டிசம்பர் 15, 2005
இரவு உணவுதயாரகிவிட, நமது நடைபாதைசுத்தப்படுத்தும் நண்பர்கள் வரத்துவங்கினர், அவர்களைத்தொடர்ந்து மதியம் நாங்கள் உதவிய மற்ற நண்பர்கள். இறுதியில் மொத்தமாக 75 சாப்பாடு. வந்திருந்த விருந்தினர்களில் சிலர், மேலும் சாப்பிடஇயலாத சந்தோஷத்துடன் சிரித்துக்கொண்டிருக்க, சிலர் சிரிக்கநேரமில்லாததுபோல் விரைவாக சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த உற்சாகம், உணவுச்சாலையின் ஊழியர்களையும் தொற்றிக்கொண்டது, சாதம், சாம்பார், காய்கறிகள்,ரசம் மற்றும் தயிர்ரென மாறி, மாறி சுழன்றனர். ஜானும், அஞ்சலியும் தண்ணீருடன் அவர்களுக்கு உதவ ஆரம்பித்தனர். நிராலி,ஜெயேஷ்பாயுடன் நானும், விருந்தினர்களுடன் கலந்து உணவு உண்ணத்தொடங்கினோம்.

பின் வேகமாக முகம் கழுவிவிட்டு,உடைகளை மாற்றிக்கொண்டு திருமணத்திற்கு முந்தின நாள் நடக்கும் திருமணநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்து சேர்கையில், சிலமணி நேரங்கள் தாமதமாயிருந்தோம். சற்றே வேர்வைகலந்த வித்தியாசமானதொரு வாசனையுடன் நாங்களிருந்தபோதிலும், அந்த நாளின் இரண்டாவது கொண்டாட்டத்துக்கு தயாராகிவிட்டோம்.

பி.கு:
மன்னிக்கவும், அன்றைய சேவையின் புகைப்படங்கள் என்னிடமில்லை, அப்பொழுது காமிரா கொண்டுசெல்லத்தோன்றவில்லை, இருப்பினும் அப்பொழுது எங்கள் கைகள் வேறு வேலைகளில் மும்முரமாய்த்தானே இருந்தது.

ம.பி.கு:
அன்றைய தினத்திற்கு அடுத்தநாள் மதியம், வேறு ஒரு நண்பர்கள் குழுவுடன் - அஞ்சலி, ஜெயேஷ்பாய்,நிராலி,ஜான்,டிம்,ப்ரியா,ப்ரியாவின் அம்மா மற்றும் யோ-மி உடன் மகாத்மா காந்தி அருங்காட்சியகத்திற்கு சென்று ஒருமணிநேர தியானத்தை புதுமணதம்பதியர்களுக்கு சமர்ப்பித்தோம்.

இந்த பதிவானது வேறு நாட்டைச்சேர்ந்த ஒரு நண்பரின் பார்வையில் விவரிப்பதாய் எழுதப்பட்டிருக்கின்றது, இந்த சம்பவம் நடந்த இடம், சூழ்நிலை, நண்பர்கள் என சில விளக்கங்களை அடுத்த பதிவில் குறிப்பிடுகின்றேன்.

எனக்குப்பிடித்த திருமணப்பரிசு - பாகம் 3 (உண்மைச்சம்பவம்)

Published by யாத்ரீகன் under on வியாழன், டிசம்பர் 15, 2005

எங்களின் உணர்ச்சிகரமான புதிய நண்பரின் பெயர் வீரப்பன், தான் கேள்விப்பட்ட செய்திகளிலேயே இதுதான் மகத்தானதொரு செயலென்று தனக்குத்தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில் எங்களிடம் உரையாட ஆரம்பிக்கிரார்.


திடீரென உதித்தது மற்றுமொரு யோசனை, இங்கிருக்கும் நடைபாதையில் வாழ்பவர்களுக்கும், இந்த தெருவை தூய்மைப்படுத்தும் தொழிலாளிகளுக்கும் ஓர் இனிய விருந்தளித்தாலென்னவென்று. சாப்பாடு பறிமாறுவதற்கான வாழைஇலை எங்கு கிடைக்கும், சாதம்,சாம்பார் பறிமாற பாத்திரங்கள் எங்கு கிடைக்கும் என்று எனக்குத்தெரியும், ஆனால் நல்ல சுவையான சாப்பாட்டிற்கான இடத்திற்கு வீரப்பனின் சிபாரிசு தேவை. குப்பைபெருக்குவதில் கலந்துகொள்ளாவிடினும், எங்களுடன் சிறிதும் தாமதிக்காமல் கலந்துகொண்டு, எங்களின் நோக்கத்தைப்புரிந்து கொண்டு உதவத்தொடங்கினார்.


இவர்களுக்கு இங்கு சாப்பாடு பறிமாறுவதைவிட, நல்லதொரு உணவுச்சாலைக்கு கூட்டிச்செல்வது நன்றாக இருக்குமென்பது அவரின் சிபாரிசு. ஜெயேஷ்பாயையும், தீப்தியையும் உரிமையுடன் கைகளால் பிடித்து சிறிது தூரத்திலிருந்த "ஷ்ரீ ஷங்கர் பவன்"-க்கு கூட்டிச்சென்றார். கொஞ்சம் கருப்படைந்த, இருட்டான சின்னதொரு உணவுச்சாலை அது, இருப்பினும் இந்த சாலையில் உள்ளதொரு நல்ல உணவுச்சாலை என அறிமுகம் செய்தார்.


நல்லவேளை அதன் உரிமையாளர் நாங்கள் பேசுவதை புரிந்துகொண்டார், ஜெயேஷ்பாய் அவரிடம் 50 பேருக்கான இரவு உணவைதயாரிக்க சொன்னபோது அவரால் தன் அதிர்ஷ்டத்தை நம்ப முடியவில்லை போலிருந்தது. ஆனால், சாப்பிட வரப்போவபர்கள் யாரென அறிந்தபோது வியாபாரத்துக்கான அந்த உற்சாகம் முழுவதும் வடிந்துபோனது. ஜெயேஷ்பாயின் விடாமல் வற்புறுத்தி அவரை சம்மதிக்க வைத்து, அந்த 50 பேரும் இரவு உணவு அங்கே உண்ண ஏற்பாடானது.


சுத்தமாகிவிட்ட எங்களின் அந்த நடைபாதை நண்பர்களிடம் சென்று, இரவு உணவுக்கான அழைப்பைவிடுக்க ஆரம்பித்தோம்.வீரப்பனால் உற்சாகத்தை கட்டுப்படுத்த இயலாமல், அவரே முன்வந்து மேலும் ஒரு நடைபாதைவாசியை அழைக்க ஆரம்பித்தார், அப்படியே அங்கிருந்த அனைவருக்கும் பெரிதாக சப்தமிட்டு அழைப்பு விடுக்க ஆரம்பித்தார். "சரியான செய்தி, ஆனால் தவறான வெளிப்பாடு", என்று அவருக்கு புரியவைக்க முயற்சிசெய்கின்றேன்,


அவரின் முகத்திலருகில் சென்று, "நீங்களும் எங்களுடன் உணவருந்த வாருங்க்கள்", என்று உச்சஸ்தாயில் கத்தினேன், அடுத்து உடனே ஒரு அடி பின் சென்று, மெதுவாக என் கைகள் இரண்டையும் நீட்டி அவரை வரவேற்கும் விதமாக வைத்து, அமைதியாக "எங்களுடன் இரவு உணவு சாப்பிடுவதின் மூலம் எங்களுக்கு உதவுவீர்களா", என்று கேட்க, அடுத்த நபரிடம் சென்று கத்தியழைப்பதற்கு பதிலாக அவரின் கைகளைப்பற்றி அழைக்கச்செல்வதற்குமுன், பெரியதொரு புன்சிரிப்புடன், வியர்த்துவழிய உண்ர்ச்சி மேலிட என்னை கட்டியணைத்துக்கொண்டார் :-).


இரவு உணவு ஆரம்பிப்பதற்கு இன்னும் 1 மணிநேரம் உள்ளது, அதற்குமுன் கோவிலுக்குச்செல்ல எங்களுக்கு வீரப்பன் அழைப்பு விட ஆரம்பித்தார். கோவிலின் வெளிப்பிரகாரங்களில் ஓர் சின்ன சுற்றுலா (கோவிலின் உள்ளே இந்துக்களுக்கு மட்டும்தான் அனுமதி) முடிந்தபின், கோவிலுள் தெற்குவெளி வீதியில் சிறிதுநேரம் அமர்ந்து இளைப்பார முடிவெடுத்தோம்.


எங்களினருகில் அமர்ந்திருந்தது ஓர் வயதான கிழவர், கடைசிக்காலத்தை கோவிலில் பிச்சையெடுத்துப்பிழைத்துக்கொள்ள அவரின் குடும்பத்தினரால் இங்கு விடப்பட்டவர். அவரருகே சென்ற ஜெயேஷ்பாய் "அருகில் வாருங்கள் சகதோரா",என்று கூற. அவருக்கு ஹிந்தி புரிந்திருக்க வாய்ப்பில்லை, ஜெயேஷ்பாயிடம் இந்தவொரு அற்புதமான ஒரு திறன் உண்டு,எவரிடமும் மொழியின் எல்லைகள்தாண்டி பரிசுத்தமான அன்புடன் செயல்முறையில் உரையாடும் திறன்தான் அது.


உடனே வேகமாக தன்னுடைய பலவீனமான மெலிந்த தேகத்தை எங்களை நோக்கிதிருப்பத்தொடங்கினார் அந்த வயதானவர். ஜெயேஷ்பாய் எங்களிடமிருந்த ஈரமான துண்டையெடுத்து, அந்த வயதானவரின் வாயினருகே ஒட்டியிருந்த உணவுப்பருக்கையை துடைத்துவிட்டு, அவரை திரும்பச்சொல்லி, சின்ன எண்ணெய் பாட்டிலை எடுத்து அவரின் தலையில் தடவி பிடித்துவிடத்தொடங்கினார். அவரிடமிருந்து எந்தவொரு எதிர்ப்பும் இல்லை, ஜெயேஷ்பாயின் கைகள், கைதேர்ந்த ஓர் தலைமுடிதிருத்துவரைப்போல இந்த வயதான அன்பரின் தலையில் விளையாடத்துவங்க, அவரின் முகம் மலரத்தொடங்கியது. பின் ஓர் சீப்பையெடுத்து மெதுவாக சீராக வாரத்துவங்கினார். இப்பொழுது அவரின் கந்தல் ஆடைமட்டுமே அவரை நடைபாதையில் வாழ்பவரென காட்டியது.


இதைக்கண்ட வீரப்பனால், தன்னுடைய உற்சாகத்தை கட்டுப்படுத்த இயலவில்லை, அவர் ஜெயேஷ்பாயருகில் வந்து, தலையில் விளையாடத்துவங்கினார். ஆரம்பிக்கும்போதிருந்த அளவைவிட முடிக்கும்போது சிறிது அதிகமாகவே கம்மியாகவே ஆனது ஜெயேஷ்பாயின் தலைமுடி ;-). அந்த வயதான அன்பர் பெற்றது மென்மையானதென்றால், தான் பெற்றது கொஞ்சம் முரட்டுத்தனமான அன்புகலந்திருந்தது என்று பின்னர் சொன்னார் :-). அதேநேரத்தில் அஞ்சலி பொறுமையாக அங்கிருந்த மற்றொரு வயதானவரின் தலைமுடிக்கும் இந்த எண்ணெய் வைத்தியத்தை நிகழ்த்த, நிராலி அங்கிருந்த பல வயதான பெண்மணிகளுக்கு விரல்நகங்களை வெட்டிவிட, இவர்களுடன் ஜானும், தீப்தியும் பலூன்களை வாங்கி ஊதி அங்கிருந்த சிறுவர்களுடன் கோவிலின் உள்வீதியில் விளையாடத்துவங்கினார்கள்.

தொடரும்.....

பாகம் 1 , பாகம் 2

எனக்குப்பிடித்த திருமணப்பரிசு - பாகம் 2 (உண்மைச்சம்பவம்)

Published by யாத்ரீகன் under on வியாழன், டிசம்பர் 15, 2005
பாகம் 1

குப்பை பிரித்தெடுக்கப்பட்டு ஓர்வண்டியிலேற்றப்ப்பட்டவுடன் ஆட்டோக்கள் பிடித்து மீனாட்ச்சியம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். ஜெயேஷ்பாயும்-ஜானும் சேர்ந்து எங்களின் அடுத்த திட்டத்தை வகுக்க தொடங்கினார்கள். கோவிலின் சுவரைச்சுற்றியிருக்கும் பிச்சையெடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கும், அவர்களிடையே இருக்கும் குழந்தைகளுக்கும் வளர்ந்திருக்கும் அசுத்தமான விரல்நகங்களை வெட்டிசுத்தப்படுத்தி, அவர்களிடையே புன்னகையையும், மகிழ்ச்சிதரும் இதமான வார்த்தைகளையும் பகிர்ந்துகொள்ள முடிவுசெய்தோம்.

ஜான் பசித்திருபவகளுக்கு பிஸ்கட் வாங்கித்தரத்தொடங்க, தெரு வியாபாரியிடமிருந்து ஒரு துண்டை வாங்கிய நான், பொதுக்குழாயில் நீரில் நனைத்து, அங்கிருக்கும் குழந்தைகளின் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் கைகளையும், முகங்களையும் துடைத்துவிடத்தொடங்கினேன். இதை தொடர்ந்துகொண்டே, 300 மீட்டர் செல்வதற்குள் ஒருமணிநேரம் சென்றுவிட்டது.

தென்கிழக்கு மூலைநோக்கி நகர்ந்துசெல்கையில், அவ்வழியிலிருந்த தெருசுத்தம் செய்பவர்களைக்கண்டோம். இந்தியாவிலிருக்கும் இவர்களுக்கும், அமெரிக்காவிலிருக்கும் இதே வேலை செய்பவருக்கும் இரண்டு முக்கிய வித்தியாசங்கள் உண்டு. முதலில், கூட்டுதலும், குப்பையை பெருக்குதலும் வெறும் கையாலையும், குச்சிகளால் செய்யப்பட்ட விளக்கமாறுகளாலும் செய்யப்படும். இந்த விளக்கமாறுகளால் கூட்டப்படும்போது, குனிந்து தரைக்கலருகில் கூட்டவேண்டும், ஆதலால் முதுகெழும்பை முறிப்பது மட்டுமின்றி, தூசுகளால் மூச்சு முட்டும் வேலையிது. இதுவே அடுத்த வித்தியாசத்தை கூறிவிடும், ஆம் இந்த வேலையை செய்பவர்கள் பெரும்பாலானோர் பெண்கள்.

அத்தனை கடினமான வேலைசெய்யும் இந்த பெண்கள் அணிந்திருக்கும் நேர்த்தியான உடையான புடவை , அவர்கள் செய்யும் வேலைக்குச்சம்பந்தமில்லாதமிடிலும் அவர்கள் வசதியிலிருக்கும் தாழ்வுநிலையின்றி அவர்களின் பண்பாட்டையும், கண்ணியத்தையும் எடுத்துக்காட்டியது.

பெண்மையின் வெளிப்பாடாக தென்னிந்தியாவில் நான் கண்ட மற்றுமொரு சின்னம் தலையில் சூடும் மல்லிகைப்பூக்கள். தெருவின் எதிர்த்த வரிசையில் அமர்ந்திருந்த பூக்கள் விற்பவர்களிடம் பூக்கள் வாங்கி, இந்த சுத்தம் செய்பவர்கள் மூவருக்கு பூக்கட்ட உதவுகின்றேன்.

அப்பொழுது அங்கே வந்த ஜெயேஷ்பாய் மற்றும் ஜான், இவர்களிடமிருந்து சிறிதும் யோசனையின்றி, அந்த விளக்கமாறுகளை வாங்கி கோவிலின் தெற்கு பகுதியை சுத்தப்படுத்தத்துவங்கினர். இந்த நேரத்தில் அஞ்சலியும், நானும் அவர்கள் கூட்டிவைத்த குப்பையை அள்ளி சைக்கிள்களில் ஏற்றத்தொடங்கினோம். அப்பொழுது தீப்தியும், நிராலியும் நடைபாதைகளில் குடியிருப்பவர்களின் விரல்நகங்களையும், முகங்களையும் சுத்தப்படுத்துக்கொண்டிருந்தனர்.

ஆச்சரியத்துடன் அங்கே கூட்டம் கூடத்துவங்கியது, ஒருவழியாக ஆங்கிலம் பேசத்தெரிந்த நபர் ஒருவரை கண்டு, நாங்கள் நாளை நடக்கவிருக்கும் எங்கள் நண்பர்களின் திருமணப்பரிசாக இந்த சேவையை செய்கின்றோமென்று அங்கே கூடியிருந்தவர்களிடம் விளக்கச்சொன்னோம். இதை அவர் விளக்கமுயற்சிக்க, மற்றவர்கள் மேலும் குழப்பத்திலேயே ஆழ்ந்தனர். இறுதியில் இதை ஒருவர் புரிந்துகொண்டார்: கூட்டத்திலிருந்து, தன் நெற்றியிலிருக்கும் தழும்பைவிட அகலமான ஒரு புன்சிரிப்புடன் தோன்றிய அவர், ஒரு முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட ஓர் ஆட்டோ ஓட்டும் இளைஞர்.

உரக்கவாழ்த்தியபடி வந்த அவரின் சிரிப்பிலிருந்த உற்சாகமும், கண்களிலிருந்த அன்பும் காணாவிட்டால் அது எங்களை அடிக்கவந்திருப்பதாகவே புரிந்துகொண்டிருப்போம்.

தொடரும்...

எனக்குப்பிடித்த திருமணப்பரிசு - பாகம் 1 (உண்மைச்சம்பவம்)

Published by யாத்ரீகன் under on வியாழன், டிசம்பர் 15, 2005
எங்கள் நண்பர் வட்டத்திற்குள், பிறந்தநாளாகட்டும் வேறு எந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சியாகட்டும், பொருளுக்கு பதில் பிறருக்கு செய்யும் சேவையை பரிசளிப்பது அரிதானதொன்று அல்ல. சனிக்கிழமை மதியம், திருமணத்திற்கு ஒருநாள் முன்பு, நண்பர்கள் நாங்கள் சிலர் சிறுகுழுவாக, கொண்டாட்டங்களிலிருந்து வெளியேறி நான்கு மணிநேரம் நாங்கள் செய்யப்போகும் சேவையை தம்பதியர்களுக்கு பரிசளிக்க முடிவுசெய்தோம்.

திங்களன்று, திருமண நிகழ்ச்சிகள் முடிந்தபின்பு, நண்பர்கள் அனைவரும் நாட்டின், உலகத்தின் பல மூலைகளுக்கு பிரிந்து செல்லும்முன், நடத்தப்படப்போகும் மிகப்பெரும் சேவைப்பரிசு பற்றி அறிந்திருந்தோம். ஆனால் தவிர்க்கமுடியாத காரணங்களால் திடீரென பயணத்திட்டங்கள் மாறிவிட, நடந்தால் இப்பொழுது, இல்லையேல் நேரம் இல்லையென சனிக்கிழமை மதியம் உணர்ந்துவிட்டோம். நிகழ்ச்சிகளிடையே கிடைத்த சிலமணிநேர இடைவெளியில், இரவு நேர நிகழ்ச்சிக்கு சிலமணிநேரம் தாமதமாக வந்தால் தவறில்லையென புரிந்துகொண்டு, திட்டமிடத்துவங்கினோம்.

மதுரை, பரந்து விரிந்த நிலப்பரப்பிற்க்கு மட்டுமின்றி, அதன் கலைநுணுக்கத்திற்கும் புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோவிலின் இருப்பிடம். இது ஆன்மீக மையம் மட்டுமில்லை, இந்த நகரத்தின் மையம் கூட. திருமணநிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதால் மற்றவர்கள் கோவிலுக்குள் செல்ல, எந்த ஒரு முன்னேற்பாடுமின்றி ஆறு பேர் நாங்கள். தொடங்கிவிட்டால் செயல்கள் உருப்பெறத்தோன்றிவிடும் என்று நம்பினோம், என்றுமே அது நடந்திருந்தது.

நகரின் மையத்திற்கு செல்ல ரிக்ஷாக்களுக்கு காத்திருக்கையில்,எங்களின் முதல் வாய்ப்பை ஜெயேஷ்-பாய் சுட்டிக்காட்டினார்: அன்றைய தினத்தில் சேகரித்த பொருட்களை பிரித்தெடுத்துக்கொண்டிருக்கும், பழையபொருட்களை சேகரிப்பவர்கள். அவர்களை வாழ்த்திவிட்டு, பேப்பர்களை பிளாஸ்டிக் பைகளிலிருந்தும், கண்ணாடிகளிலிருந்தும், இரப்பர்களிலிருந்தும் பிரித்தெடுக்க உதவத்தொடங்கினோம்.

அங்கே சிதறிக்கிடந்த குப்பைகளை கண்டால், யோசனையேயின்றி, சுகாதாரத்தைப்பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல், சுற்றுப்புர சீரழிவைப்பற்றி நினைக்காமல் எப்படி இப்படி குப்பை கொட்டுவார்களோ என்று தோண்றும்.இந்த பழையபொருட்கள் சேகரிப்பவர்கள், இந்த சமூகத்தின் அடையாளம் தெரியாத முதுகெலும்பானவர்கள். நகரத்தின் தெருக்களை குப்பை கிடங்காகாமல் சுத்தமாக இருப்பதற்கு இவர்களே காரணம். இவர்களைத்தான், ஜெயேஷ் "குப்பைகளை போடுவதற்கு ஆயிரம் கைகள், ஆனால் அதை எடுப்பதற்கோ இரண்டே கைகள்" என்று குறிப்பிட்டார்.

குப்பைகளை இனம்பிரிப்பது மிகவும் அசுத்தமானதொரு வேலை (இந்த குப்பைகளை சுமக்கும் இதே தெருக்கள்தான் பலருக்கு கழிவறைகளாகவும் பயன்படுகின்றது). இருப்பினும் வறியவர்களிலும் வறியவர்கள் பலர் இதன் மூலம் தங்கள் வாழ்வை சம்பாதிக்கின்றார்கள். உதவிசெய்த எங்களை கண்ட அவர்கள் முதலில் குழப்பத்தில் ஆழ்ந்தாலும், பின்னர் உணர்ச்சிவசப்பட்டுப்போனார்கள். அவர்களுடனான எங்கள் கைகுழுக்கள்களும், புன்னைகளுமே அவர்களை பின்னர் இயல்பாக்கியது. ("ஆம்", "இல்லை", "கைகுடுங்கள்" என்பதற்கான எனக்கு தெரிந்த தமிழ் வார்த்தைகளே அவர்களுடன் பேச உதவியது).

சுற்றிலும் குழப்பத்தில் ஆழ்ந்த பொதுமக்கள். பழையபொருட்களை சேகரிக்கும் இவர்களின் சேவையை நாங்கள் கண்டு வியக்கிறோம் என்பதை அங்கிருந்த ஆங்கிலமறிந்த ஒருவர் மூலம் அவர்களுக்கு விளங்கச்செய்தோம், மேலும் அவர்களின் இந்த சேவையில், எங்கள் நண்பர்களின் திருமணபரிசாக பங்கு கொள்கின்றோம் எனவும் புரியவைத்தோம். திருமணப்பரிசாக பொருட்களில் தாராளமாய் செலவழிக்கும் பெரும்பாலானோர் இருக்குமிடத்தில் இத்தகைய எங்கள் செயல் குழப்பத்தையே உண்டு பண்ணியது. ஆனால் அதற்குள் அங்கே தோழமையான, மகிழ்வானதொரு சூழ்நிலை நிலவத்தொடங்கியது.


தொடரும்....

ஐந்தே நாட்கள்

Published by யாத்ரீகன் under on செவ்வாய், நவம்பர் 29, 2005

நிரம்பிவழியும் மின்னஞ்சல்கள்

செய்ய மறந்த வேலைகள்

செய்ய வேண்டிய வேலைகள்

படிக்க இயலா பக்கங்கள்

பேச இயலா சந்தர்ப்பங்கள்

வலம் வர முடியா வலைப்பூக்கள்

சிறிது நாட்களில் அனைத்தும் நிலை வரும்

காரணம்

ஐந்தே நாட்கள்,

கணிப்பொறியில் சிக்கவில்லை, வலைத்தளங்களிலும் மாட்டவில்லை :-)

உடனே அனுப்ப இயலா பதில்களுக்கு மன்னியுங்கள்

தோள்களிரண்டு

Published by யாத்ரீகன் under on புதன், நவம்பர் 16, 2005
மனதின் குடும்பக்கவலையை சிறிதே இறக்கிவைத்தார் அப்பா..
படிப்பின் கவலையை கொஞ்சம் இறக்கிவைத்தான் தம்பி..
குறைவதாய் நினைத்து பாசத்தின் கவலையை கொஞ்சம் தாத்தாவும்
சாப்பாட்டுக் குறையை நிறையவே இறக்கிவைத்தார் உடனிருக்கும் அன்பர்

தன் கவலையை இறக்கிவைத்தாள் தோழி..

இவர்களில் யாருமே அறியவில்லை

நட்பும் அறியவில்லை

அவன் தலையும் இரு தோள்களை தேடுகின்றதென்று..

சாய்ந்து கொள்ள உன்னிரன்டு தோள்கள் தவிர வேறொன்றும் நிரந்தரமில்லை என்று

முதலில் இருந்தே கூவிக்கொண்டிருக்கின்றது அவன் மனம்..

ஒரு வாழ்த்து அட்டையும், ஒரு கோப்பை பழங்களும்

Published by யாத்ரீகன் under on வியாழன், நவம்பர் 10, 2005



சில நாட்களுக்கு முன் வீட்டுக்கதவைத்தட்டும் சத்தம் கேட்டு திறந்தால் எங்கள் பக்கத்து வீட்டுப் பெண்மணி. அவர் ஆப்பிரிக்க அமேரிக்கர், மேலும் மிகவும் வயதானவர். சாதாரண நாட்களில் பக்கத்து வீடுகளில் யாரிருக்கின்றார் என்று தெரியாது, ஆனால் அன்று வீட்டுக்கதவை தட்டியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.


என்ன விஷயமாக இருக்கும் என்று யோசிக்கையில், "எனக்கு உடல் சரியில்லை, மருந்து வாங்கி வர வேண்டும்,எனக்கு வாங்கித்தர யாரும் இல்லை, வாங்கி வர இயலுமா பணம் தந்து விடுகின்றேன்", என்றார். ஆஹா, "ஹே மை மேன் !!!, டு யூ ஹாவ் 5 டாலர்ஸ்" என்று கேட்கும் கருப்பண்ணனை சொல்லி பலர் பயமுறுத்தி இருந்ததால் ஒரு நொடி என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை.

இதே பெண்மணிதான், நான் லாண்டரி ரூம் சாவியை உள்ளே வைத்துப்பூட்டியபின் உதவி கேட்க கதவைத்தட்டியபோது, கையில் கத்தியுடன் (பாதுகாப்புக்கு) வந்து கதவைத்திறந்து, என்னை ஒரு நொடி திகிலடயச்செய்தவர்.

பிறகு வயசானவர் தானே என்று சரியென்று சொல்லி மருந்து சீட்டை வாங்கி வால்கிரீன்ஸ் சென்றால், அங்கே அவர்கள் பண்ணும் அலும்பு தாங்கவில்லை, நாலு மருந்த்துக்கு, சீட்டை இங்கே குடு, மருந்தை அங்கே வாங்கு, 15 நிமிடம் கழித்து வா.. (மதுரை இராமகிருஷ்ணா மருந்து கடையில் 5 நிமிடம்தான்)

அங்கே மருந்துக்கு பணம் செலுத்த தேவையில்லை, அவர் ஆயுள் காப்பீடு பார்த்துக்கொள்ளும் என அவர்கள் சொல்லி விட, பிறகு எதற்கு பிறகு பணம் தருகிறேன் என்று சொன்னார் என யோசித்தேன். கடைசியில் அதில் ஒரு மருந்துக்கு பணம் செலுத்த வேண்டும் என்றதும், சரியென செலுத்திவிட்டேன், உடனிருந்த நண்பர், வேண்டாம் வேண்டாத வேலை என்பதையும் மீறி.
மருந்து கொண்டு வந்து கொடுக்கையில், பணம் செலுத்தியது சொன்னதும், இந்த மருந்து வேண்டாம் என்றுவிட்டார், திருப்பி போய், கொடுத்து,என அது ஒரு தனி கூத்து.

பின்னர் ஒருநாள், அன்று சென்று வந்ததற்காக கார் எரிபொருளுக்கு பணம் தருகின்றேன் என்றவரை தடுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

திடீரென, மறுபடியும் இருநாட்களுக்கு முன் வீட்டுக்கதவை தட்டிய அவர், கையில் ஒரு வாழ்த்து அட்டையும், ஒரு பெரிய பை நிறைய பழங்கள். என் மகள் எனக்கு வாங்கி வந்தாள், உங்களுக்கு நன்றி சொல்ல இது என்று கையில் திணித்து விட்டார். சிறிது நேரத்துக்கு முன்தான், ஒரு பெண், கையில் நிறைய பைகளுடன் வந்து, அந்த வீட்டுக்கதவை ஓங்கி உதைத்து திறந்து உள்ளே சென்று வேக வேகமாக, வைத்து விட்டுச்சென்றதை நான் பார்த்ததை அவர் அறியவில்லை.




மேலே உள்ள படத்தில் உள்ளதுதான் அந்த வாழ்த்து அட்டை....

உடல் சரியில்லாத நீங்கள்தான் பழங்கள் சாப்பிட வேண்டும் என்று கூறி, வேண்டுமானால் சிறு கோப்பையில் வேண்டுமானால் நிரப்பிக்குடுங்கள் என்றேன். நீங்களே வேண்டுமானதை எடுத்துவிட்டு மீதம் தாருங்கள் என்று கூறி விட்டார்.
எல்லாம் முடிந்தபின் எனக்கு என்னவென்று சொல்ல இயலா உணர்வு !!!!
15 வயதில் வீட்டை விட்டு தனியே சென்று சொந்தக்காலில் நிற்கத்தொடங்கி படிக்கும் இவர்களின் வாழ்வு முறையை மெச்சுவதா, இல்லை 50 வயதில் யாருமின்றி ஞாயிறானால் சர்ச், மற்ற நேரங்களில் TV, கதவைத்தட்டிய சத்தம் கேட்டால், கையில் கத்தியுடன் திறக்க என்று இருக்கும் வாழ்வு முறையை கண்டு வருந்துவதா என்று தெரியவில்லை.
அமெரிக்காவில் எல்லா வீட்டிலும் இப்படியில்லைதான், ஆனாலும் பெரும்பான்மை இப்படித்தானே ?!

எதையோ உருப்படியாக செய்த நிறைவைத் தந்தது அந்த ஒரு வாழ்த்து அட்டையும், ஒரு கோப்பை நிறைய பழங்களும்.

பைசா பெறாத பதிவு அல்ல !!

Published by யாத்ரீகன் under on புதன், நவம்பர் 09, 2005












எத்தனையோ பழைய நாணய வகைகள் இருந்தாலும், இங்கே இருப்பவைகளை கண்டவுடன்என்னவென்று சொல்ல இயலா ஒரு சந்தோஷம் :-D

அடிக்கடி உடைத்த உண்டியல்கள், பெரும் போராட்டத்துக்குப்பின் உடைக்காமல் எடுத்த சில்லறைகள்,நண்பர்களுடனான பரிமாற்றங்கள், பாட்டியிடமிருந்து கிடைக்கும் சின்ன சின்ன லஞ்சங்கள், கடைக்குச்சென்றுவருகையில் சுருட்டிவிட்ட மிச்ச சொச்சங்கள், சேர்த்து வைத்து வாங்கிய காரம்போர்ட்டு, சேர்த்து வைத்துவாங்காமல் போன சைக்கிள் என எல்லாவற்றையும் நினைவு படுத்தியதாலா ?

பி.கு: நல்ல வேலை இதை யாரும் பைசா பெறாத பதிவுனு சொல்ல முடியாது ;-)


ஓய்ந்தது பட்டாசுச்சத்தம், என்று ஓயும் கனவுகளின் கதறல் ?

Published by யாத்ரீகன் under on திங்கள், நவம்பர் 07, 2005
அயல்நாட்டில், பட்டாசுச்சத்தமின்றி, எண்ணெய்க்குளியலின்றி, இனிப்பு கலந்த அம்மாவின் திகட்டும் அன்பின்றி, நண்பர்களுடன் ஊர்சுத்தலின்றி, இரவுநேர மத்தாப்புகளின்றி, தெருவில் இறையும் தீபாவளி புதுப்பாடல்களின்றி, தீபாவளி அன்று மட்டும் தெருவில் கூடும் நண்பர்கள் (?) அன்புக்குழுவின் அலும்புகளின்றி... நிசப்தத்தில் கடந்தது இந்த வருட தீபாவளி..

தீபாவளி கொண்டாடும் அர்த்தங்கள் ஆராய்ந்து கொண்டாட வேண்டாமென்று சிலரும், ஆராய வேணாம் அனுபவிக்கனும் என்று சிலரும், அயல்நாட்டில் தீபாவளி அனுபவங்கள் என்று சிலரும்...எல்லாவற்றிற்கு மேல் குழந்தைத்தொழிலாளர்கள் மூலம் செய்யப்படும் பட்டாசுகளைத்தவிர்ப்போம் என்றும் கூவிக்கொண்டிருக்கின்றார்கள்...

பட்டாசுத்தொழிற்ச்சாலைகள் என்பது பிஞ்சுக்குழந்தைகளின் கனவுகள் கதறக் கதற கொல்லப்படும் கொலைக்களம் என்று மட்டும் எண்ணிக்கொண்டிருந்தேன், குழந்தை தொழிலாளர்கள் மூலம் செய்யப்படும் பட்டாசுகளை ஒதுக்குவதின் மூலம் எதிர்ப்பைக்காமிக்கலாம், அதுவே தீர்வைத்தரும் என்ற குருட்டு நம்பிக்கை கொண்டிருந்தேன்.. என் வயது அப்படி, நான் வளர்ந்த சூழல் அப்படி, பிரச்சனையின் வேர் அறியாக்காலம் அது.

பின்னர் குழந்தை தொழிலாளர்கள் பற்றி, அவர்களின் படிப்பு பற்றி பல்வேறு இடங்களில் படிக்க, கேட்க... நிறைய தெரிந்தது.

அந்த குழந்தைகளின் குடும்பத்தை காப்பாற்றுவது அந்த வேலையே என்று பல இடங்களில் தெரியவந்தது, ஆகவே அவர்கள் தொழில் செய்வதை தடுப்பதைவிட, தொலைநோக்கு பார்வை வேண்டும் என்று தோன்றியது, அதன் மூலம் தோன்றியதே அவர்களுக்கு கல்வி அளிக்கவேண்டும் என்ற எண்ணம்..

அதன் பயனாக சென்ற தீபாவளிக்கு,நம்மால் முடிந்த உதவியை படிக்க ஆர்வம் இருந்து, பணவசதியில்லாக்குழந்தைகளுக்கு பண்ணவேண்டும் என்றென்னி, கல்லூரி நண்பர்களையும் கலந்தாராய்ந்து கல்கத்தாவிலிருந்து கொண்டே மின்னஞ்சல்களின் மூலம் திட்டமிட்டோம்,.

இதில் முதல் தடைக்கல்லாக நாங்கள் சந்தித்தது, யாருக்கு இது சென்றடையவேண்டும் என்று ?

குழந்தைகள் பலர் வெடி வெடிப்பதை கண்டு வருத்தப்படுவர் ஆகவே அவர்களுக்கு வெடியும், மத்தாப்பும் வாங்கித்தரவேண்டும் என்று சிலர் கூற..,

அவர்களுக்கு அன்று நல்ல உணவளிக்க வேண்டும் என்று மற்றொரு குழுவினர்

பல மின்னஞ்சல்களிடையே, உணவளிக்க பலர் உண்டு, மத்தாப்புகள் நிஜ மகிழ்ச்சியைத்தர போவதில்லை, கல்விக்கு உதவுவதே நிரந்தர தீர்வு என்று முடிவு செய்து முன்னேறினோம்.

பின்னர் எங்கே இந்த உதவியை செய்யவேண்டும் என்ற குழப்பம், CRY, சிவானந்த குருகுலம், உதவும் கரங்கள் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்கள் இருந்தும், இவர்களுக்கு பண உதவி செய்ய பலர் உண்டு, நிஜமாகவே பண உதவி தேவைப்படும் நிறுவனங்கள் கண்டுபிடிக்க சென்னையிலிருந்த நண்பர்கள் சிலர் முனைய, சில ஏமாற்று நிறுவனங்களைத்தாண்டியபின்..

சிறகுகள் என்று சென்னையில் உள்ள குழந்தை தொழிலாளர்களுக்கு பாடம் சொல்லித்தரும் நிறுவனம் ஒன்றை கண்டு அவர்களின் உடனடித்தேவையை அறிந்து பணமாக இன்றி, அந்த உதவியை செய்தோம்.

மீதி இருந்த பணத்தை, அப்பொழுது வந்த சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய சென்ற கல்லூரி நண்பர்களிடம் அளித்தோம்.

அதோடு நில்லாமல் ஒவ்வொரு மாதமும் சிறு அளவாவது அனைவரும் பணத்தை ஒதுக்கி, கல்வியாண்டின் தொடக்கத்தில் அதன்மூலம் உதவிகள் பண்ணலாம் என்றும் எண்ணம் தோன்றியது, வேலைப்பளு, தொடர்ந்து இதற்காக நண்பர்களை தொடர்பு கொள்ளமுடியாமை என்று பல காரணங்களால் விட்டுப்போனது சிறிது மனக்கஷ்டமாகவே இருந்தது.

அதற்கு இந்தாண்டு விடிவு பிறக்கும்போல் தெரிகின்றது, பணம் சேர்த்து வைக்க வங்கியில் தனிக்கணக்கு தொடங்கிவிட்டோம், கல்லூரி நண்பர்கள் அனைவரிடமும் பணம் சேர்ப்பதற்குள் மழை, ஆனால் இம்முறை கட்டாயம் செய்து விடவேண்டும் !!!!

குஷ்பு

Published by யாத்ரீகன் under on திங்கள், அக்டோபர் 10, 2005
குஷ்பு
இப்போ எல்லாம் இந்த தலைப்பைப்பத்தி எழுதாவிட்டால் வலைப்பதிவெழுத்தாளானாக மதிக்கமாட்டார்களாமே.. சரி எதற்கு வம்பு.. நானும் எனக்கு தெரிந்த குஷ்புவைபத்தி எழுதிவிடுகின்றேன்..


வாசனை என்றவுடன் பளிச்சென மூக்கின் முன் நிற்பது "மண்வாசனை"-தான்... அதைவிட சடாலென சந்தோஷத்தை அள்ளித்தருவது எதுவுமே இல்லை.. அந்த முதல் துளி விழுந்ததுமே பரபரவென எப்படித்தான் பரவுதோ.. சின்ன குழந்தையோ, வயதானவரோ.. வித்தியாசமின்றி உற்ச்சாகத்தை அள்ளிப்பரப்புவது மண்வாசனையால் மட்டுமே முடியும்..

மண்வாசனை என்றவுடன் நினைவுக்கு வரும் நிகழ்ச்சி ஒன்று.., பள்ளியில் ஒருமுறை ஆங்கில வகுப்பில் நானும் என் நண்பனும் கடைசி வரிசையில் எதோ பேசிக்கொண்டிருப்பதை கண்ட நிர்மலா ஆசிரியர், கூப்பிட்டு என்னவென்று கேட்க்க, மண்வாசனைக்கு இணையான ஆங்கில வார்த்தையை கண்டுபிடிக்க நாங்கள் நடத்திய விவாதத்திற்கு அவருக்கும் விடை தெரியவில்லை. :-) சில வார்த்தைகள் மொழிபெயர்க்க முடியாதென உணர்ந்தது அன்றுதான்..

மண்வாசனைக்குப்போட்டியாக அடுத்து நிற்பது, அம்மா கடுகு தாளிக்கும் போது எழும் வாசனை.. என்னதான் சுவையான சாப்பாடாயிருந்தாலும், இந்த சாதரண கடுகு தாளிக்கும் வாசனையை மிஞ்ச முடியாது.. கல்கத்தாவிலிருக்கும் போதும் சரி, இங்கே வந்து சமைக்கும் போது கடுகை தாளிக்கும் போது சட்டென ஆயிரம் மைல்கள் தாண்டி வீட்டின் சமையலறையில் அம்மா முதுகின் பின்புறம் நின்று என்ன சமையல் என்று எட்டிப்பார்ப்பது போன்று தோன்றும்... :-(

ஹீம்.. அடுத்து.. புதிதாய் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டின் உள்ளிருந்து வரும் அந்த ஈர சிமெண்ட் வாசனை... எவ்வளவு அவசராமாயிருந்தாலும்... செல்லும் வழியில் இந்த வாசனைக்காக சிறிது நொடி அங்கே கண்மூடி நிற்கத்தவறியதில்லை..

வீடு என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது, வீட்டின் வாசனைதான்... ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு வாசனை உண்டு... அது நறுமணமா, நாற்றமா என்று இனம் பிரிக்கமுடியாத இருவகையானது... எத்தனை நாட்கள் கழித்து வீடு திரும்பினாலும், வீட்டின் வாசனை நுகர்ந்தபின் வரும் அந்த பாதுகாப்பான உணர்வே தனி.. அது இங்கே அடிக்கும் எத்தனை விலையுயர்ந்த அறை வாசனை திரவியத்திலும் கிடைக்காது...

அடுத்து, பழைய புத்தக வாசனை..., எழுதிய பழைய நாட்குறிப்பு, பள்ளி நோட்டு புத்தகங்கள், அம்மா சின்ன வயதில் பைண்ட் பண்ணி வைத்த பொன்னியின் செல்வன்... என சொல்லிக்கொண்டே போகலாம்... எல்லோரும் புதிய புத்தக வாசனையை சிலாகித்து பேசும் போது, அட இவர்களெல்லாம் பழைய புத்தக வாசனையுடன் எழும் நினைவலைகளில் திளைத்ததில்லை என்று பரிதாபப்படத்தோன்றும்...

பத்தாவது பள்ளித்தேர்வு விடுமுறையில், அந்த பழைய பைண்ட் பண்ணிய பொன்னியின் செல்வனின் வாசனைக்கே அதை திருப்பி திருப்பி படித்துக்கொண்டிருந்தது வாசனைக்கு.. மன்னிக்கவும் நினைவுக்கு வருது...

அப்புறம்... பெட்ரோல் வாசனை, நல்லா ஆசை தீரத்தீர விளையாடிவிட்டு வரும்போது வரும் வியர்வை வாசனை, அப்பாவுடைய பீரோ வாசனை, டெட்டால் வாசனை.. புதிதாய் அடித்த பெயிண்ட் வாசனை.. இப்படி நிறைய உண்டு...

இப்போ இங்கே வந்து எந்த வாசனையும் புதிதாய் பரிச்சியமானதாய் நியாபகம் இல்லை...

அப்படியே எல்லோரும் ஒரு நொடி கண்மூடி உங்களுக்கு என்ன வாசனை வருதுனு சொல்லுங்க பார்ப்போம்

பி.கு:
யாருக்காவது, "மண்வாசனை"-க்கு இணையான ஆங்கில வாசனை.. ச்.சீ.. ஆங்கில வார்த்தை தெரிந்தால் சொல்லுங்களேன்...!!!

அப்பாட.. நாமலும் ஒருவழியா குஷ்புவைப்பத்தி எழுதியாச்சு.. , ஆமாம் ஹிந்தில வாசனைக்கு குஷ்புனுதான் சொல்லுவாங்கலாமே...

ஆஹா.. இப்பொ.. யாரோ தார் கொண்டு வர்ர மாதிரி தெரியுது.. அண்ணா.. நான் அப்படிப்பட்ட ஆளு இல்லைங்கன்னா......





ஜென்ம சாபல்யம்

Published by யாத்ரீகன் under on செவ்வாய், செப்டம்பர் 20, 2005
நாராயணன் அவர்களின் இந்த வலைப்பதிவில் எழுதியிருந்த கவிதை(?)யைப்பார்த்ததும்... மனதில் பளிச்சென தோன்றியது....

நாராயணன் சார்,... உங்க மேல தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை.. மனசுல பட்டது பதிச்சிட்டேன்.. :-)

தவறு... தவறு.....

கடும் புயல் மழையாயினும்..

பசிப்பிணி கொண்ட வறட்சியாயினும்...
காஷ்மீர் முதல் குமரி வரை..
மும்பாய் முதல் கல்கத்தவரை..
வடக்கு, தெற்கு...
கிழக்கு,மேற்கு,ஜாதி,மத,மொழி,நிற பேதமின்றி..
சுனாமியன்று..கை கோர்த்து நின்றோமே

அதுதான் வேற்றுமையில் ஒற்றுமையாம்...
மேல்நாட்டினர் தங்கள் தொலைக்காட்சியில் சொன்னார்கள்...

(ஹீம்.. நம்மிடம் உள்ள நல்ல விஷயத்தை மேல்நாட்டினர் மூலம் கேட்டால்தான் நம் ஜென்ம சாபல்யம் அடைந்திடுவோமா ???)


தனிமை வேண்டும்.. பராசக்தி...

Published by யாத்ரீகன் under on வியாழன், ஆகஸ்ட் 11, 2005

ஒரு வாரத்துக்கு.. மின்னஞ்சல்களோ..., வலைப்பூக்களோ... வலைப்பூக்கள் மேய்வதோ... இன்றி.. எந்த தொடர்பும் இன்றி.. இருக்கப்போகின்றேன்... முடிகிறதா என்று பார்ப்போம்..


ஒரு வாரம் கழித்து பார்ப்போம் நண்பர்களே....

முக்கோணம்

Published by யாத்ரீகன் under on செவ்வாய், ஜூலை 19, 2005
மற்றொரு நாள் கழிந்தது, அலுவலகம் சென்று மின்னஞ்சல்கள் படித்து, வலைப்பூக்கள் மேய்ந்து, கொஞ்சம் வேலைப்பார்த்ததுதான் இன்றைய அலுவலக நாட்குறிப்பு.

ஒருவழியாக, தம்பிக்கு கப்பற் (மரைன்) பொறியியற்ப்படிப்பை எடுக்க அப்பா சம்மதம் தெரிவித்து விட்டார் நேற்று. இனி, முதல் பருவத்திற்கு 1.5 இலட்சம் ஒரே தவணையில் கட்ட வேண்டுமாம். அதில் சிறிதும் நேரம் தரமாட்டார்களாம்.இங்கே இருந்து உடனடியாக பணத்தை அனுப்ப பல வழிகள் பார்த்து, இன்று அனுப்பித்து விட்டேன்.

ஒழுங்காக முதலிலேயே அனுப்பித்து இருக்க வேண்டும், ம்ஹம்..., தேவை இல்லாமல் கடைசி நேரத்து பதற்றம் இல்லாமல் இருந்த்து இருக்கும். இனி, நேரத்துக்கு கிடைத்து எவ்வித தடங்களும் இன்றி, அவன் சேர வேண்டும்.

நினைத்தை படிக்க அவனால் மட்டுமாவது முடிந்ததை நினைத்து, அதற்கு நான் சிறிது உதவியாக உள்ளேன் என்று நினைக்கையில் மனநிறைவுடன் சிறிது பெருமூச்சும் வந்தது.

உதவி தேவைப்படும் போதுதானே நட்பு, சிறிதே அறிமுகமானவர்கள் முதற்க்கொண்டு, உயிர் நண்பன் வரை, முடிந்ததாலான உதவி செய்ய முற்ப்பட்டது நல்ல நண்பர்கள் சேர்த்துளேன் என்று ஒரு மகிழ்ச்சி. அத்துடன், எதிர்ப்பார்த்த நட்பிடமிறிந்து, தவிர்த்தலே கிடைத்தது.

சில நேரங்களில், சில மனிதர்கள் !!!

உடனிருக்கும் அறை நண்பருடன், உரையாடுகையில் சொல்கிறார், "ராகுல் திராவிட், முதல் பார்ப்பணர் அற்ற, தெந்நிந்திய அணித்தலைவர்" என, தகவல் சரியா என்பது பிரச்சனை அல்ல, இப்படி ஒர் பார்வையும், கருத்துப் தேவைதானா ?. இவர், இயக்குனர் ஷங்கரின் படம் பார்க்காததற்க்கு கூறும் காரணம், அதில் பார்ப்பணர்-களே நல்லவர்கள் என காமிப்பதாலாம். காதலன் படத்தில் எந்த கதாபாத்திரம் பார்ப்பணர் ?, முதல்வனில் கதாநாயகனைவிட நல்ல கதாபாத்திரம் உண்டா, இருந்தால் அதில் பார்ப்பணர் கதாபாத்திரம் இருந்ததாக நினைவு இல்லை, பாய்ஸ் படத்திலும் இத்தகைய பாத்திரம் இல்லை, அதில் இருந்தெல்லாம் கருத்துகளை எடுக்கவில்லை, என்ன ஒரு சிந்தனை, படித்த மனிதரிடம்.

சரி, எல்லா செய்திகளிலும் மூன்று கோணங்கள் உண்டு என சொல்வார்ககள், சரியான கோணம், தவறான கோணம், என் கோணம் என்று, ஒருவேளை அதுதானோ இது ?!

இந்த நண்பர் ஒரு முதிர்கண்ணண், ஆம் அகவை 29 ஆகியும் திருமணம் தகையவில்லை என்ற கோபமும், வெறுப்பும் இவர் பேச்சில் தெரிக்கும். நன்று படித்தவர், மேல்நாட்டில் கடந்த 4 வருடங்களாக இருக்கிறார், கை நிறைய சம்பளம், தாய்நாட்டில் இருக்கும் வீட்டிலும் தேவைகள் இல்லை, என நிறைவான வாழ்க்கை, இருந்தும், அன்று பேசும் போது, என்ன இருந்து என்ன, கல்யாணம் ஆகவில்லையே, என்ன வாழ்க்கை என்றார். திருமணம்தான் வாழ்க்கையின் கடைசி மோட்சமா ? ஒரு மனிதன் மகிழ்வுடன், மனநிறைவுடன் வாழ திருமணம் முக்கியம் தானா ? இல்லை என்றே தோணுகிறது. மனதுக்குப் பிடித்ததை செய்திட சுதந்திரம், அர்த்தமுள்ள வாழ்வு, இவை தானே மனநிறைவுடன் வாழத்தேவை , இதில் திருமணம் எங்கே வந்தது ??

முதல் பயணம்

Published by யாத்ரீகன் under on திங்கள், ஜூலை 18, 2005

ஜன்னலின் வெளியே மெல்லிய மழைத்தூறல், கோப்பையில் சுடச்சுட பால், பிண்ணணியில் இளையராஜா-வின் இசை, வெளியே சென்று நனையத்தான் ஆசை. தரை விரிப்பைப் பற்றிய குடியிருப்பின் விதி முறைகள் மனதில் தோன்ற, மீறலாம் என நினைத்தால், உடன் இருக்கும் வீட்டு உரிமையாள நண்பர் முறைக்கிறார். அன்னிய நாட்டில் சுதந்திரம் அவ்வளவு தான் என தேற்றிக்கொண்டேன்.


நல்ல வேளை இணையம் இல்லை, இருந்தால் , வராத மின்னஞ்சலை எதிர்பார்த்து, கிளிக்கிக் கொண்டு இருப்பேன்.


சரி, என்ன புத்தகம் படிக்கலாம் என பெட்டியை திறந்தால், பாரதியாரின் கவிதைக்கும், வாலியின் வள்ளுவத்திற்கும் இடையே சில வழக்கத்திற்கும் மாறான அட்டையுள்ள புத்தகங்கள், என்னவென்று பார்த்தால், முந்தைய வருட டைரிகள். அத்துடன், திருவனந்தபுரத்தில், பயிற்சி முடியும் போது அங்கே அறிமுகமான முகங்களிடம் வாங்கிய கையெழுத்து பதிவுகள்.


சரி இரண்டு வருடங்கள் தான் ஆகி விட்டதே, படித்தால் சிறிது பொழுது போகுமே என்று பக்கங்களை புரட்ட ஆரம்பித்தேன். புரட்டும் போதே, யார் எழுதி இருப்பார் என கீழே பார்க்காமல் கண்டு பிடிப்போம் என ஆரம்பித்தேன்.

முதல் பக்கத்திலேயே தோல்வி, அடுத்தடுத்த பக்கங்களிலும் அதே தொடர்ந்தது.

இரண்டு வார்த்தைகளே பேசி இருப்பேன், இருந்தாலும் அனைவருக்கும் பிடித்த நண்பன் தான், அனைவருக்குமே வாழ்க்கையில் மறக்க முடியாத நண்பன் தான், இரண்டே மாதங்களே ஆனாலும் உயிர்த்தோழன் தான், நட்ப்பைப்பற்றி மொழி வாரியாக வார்த்தைத் தோரணங்கள் தான், என அனைவருக்கும் பிடித்தவனாய்த்தான் இருந்தேன்.


இதே உயிர்த்தோழர்கள் (?), இனி பதில் மின்னஞ்சல் கூட அனுப்ப இயலாமல் போவார்கள் என அறிந்துதான், பின்னொருநாள் இன்று போல் படித்து சிரிக்கவே இதை அன்று வாங்கினேன்.


அதில், கல்கத்தா நண்பர்கள் சிலரின் கையொப்பங்கள் சிலவற்றை தாண்டி வர வேண்டி இருந்தது. மனம் தானாக பின்னோக்கி பாய்ந்து செல்வதை நிறுத்த முடியவில்லை. அவர்களுடனான நட்பு எப்படி இன்று உருமாறி நிற்கின்றதை அன்று திருவனந்தபுரத்திலிருந்து புறப்படும் போது துளியளவும் நினைத்து பார்த்ததில்லை.


வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது, எத்தனை புத்தகங்களில், எத்தனை பாடல்கள், எத்தனை வலைப்பூக்களில் இந்த சிந்தனையை தாண்டி வந்திருந்தாலும், நாமே உணரும் போது வரும் உணர்வே தனி.


ஒரு கால கட்டதில், நல்ல தோழிகள் என்று கருதப்பட்டவர்கள், பின்னர் நேரில் காணும் போது மட்டும் வார்த்தைகளில் தேன் தடவி பேசும் நிலை வந்தது கூட விசித்திரமாக தோனவில்லை, உயிர்த்தோழி என்று கருதப்பட்டு, கல்லூரி காலத்துக்குப்பிறகு இப்படி ஒரு நட்பு கிடைப்பது அரிது, என்றெல்லாம் நினைக்கப்பட்டவை சில நொடிகளில் தலை கீழாக உருமாறும் என என்றுதான் நான் நினைத்ததில்லை.


இதில் எத்தனை என் தவறுகள், எத்தனை நியாயமானவை என்று ஆராய்ந்து பார்க்கத்தோனவில்லை


ஆயினும் வாழ்க்கை விசித்திரமானது, இந்நிலை என்று மீண்டும் மாறி பழைய நிலைக்கு மாறும் என்றோ, வேறு எங்கோ போய் நிற்கும் என்றோ யாருக்கு தெரியும்.

எங்கே இந்த பயணம் ?

Published by யாத்ரீகன் under on ஞாயிறு, ஜூலை 17, 2005
போய்சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்திரிகன் நான், செல்லும் பயணங்களையும், சந்திக்கும் மனிதர்களையும் பின்னால் என் நினைவுக்காக, என் மொழியில் பதிவு செய்கின்றேன்.