யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

ஆயிரம் முத்தங்கள்

Published by யாத்ரீகன் under on ஞாயிறு, ஜூலை 31, 2016
நேற்றிரவு திடீரென பயங்கர தலைவலி, பசி, வயிற்று வலி. எங்கிருந்து வந்ததென தெரியவில்லை, ஒருவேளை சரியான தூக்கமில்லாததோடு, வீட்டை சுத்தம் செய்கிறேன் பேர்வழியென்று இழுத்துபோட்டுக்கொண்டு நாள் முழுவதும் வேலை செய்ததுதானென நினைக்கிறேன். 5 நிமிடத்தில் சுருண்டு படுத்துவிட்டேன்.

இது தெரியாதவள், வழமைபோல என் முதுகில் குதிரைச்சவாரி செய்வதும், குறும்பாய் எதாவது செய்துவிட்டு அப்பாஆஆ என வம்பிழுப்பதுமாய் விளையாடிக்கொண்டிருந்தாள். "அப்பாவுக்கு பனிடா (காய்ச்சல்) , வையா (உடல் சரியில்லை), மம்மம் சாப்பிடலை, தூங்கட்டும்" என அம்மை சொன்னதும், "தெம்மாமி.... ஊஊஉ(சி)" என சென்ற வாரம் காய்ச்சலிலிருந்து மீண்டவள் தன் வாழ்க்கை [ :-) ] அனுபவத்திலிருந்து சொல்ல ஆரம்பித்துவிட்டாள். தூங்கும்வரை "அப்பாஆ பனி.." , "அப்பாஅ ஊஊஊ" என infinite loop-இல் ஓடிக்கொண்டிருந்தாள். அம்மைதான் கேட்டுக்கேட்டு tired ஆனாள் :-)

காலையில் எடுத்து வைத்திருந்த தோசையை கவனிக்காமல் வேலை மூழ்கியிருந்தபோது, அந்த சிறு கைக்கேத்த மிகச்சிறிய கவளம் எடுத்து எனக்கு ஊட்டிவிடத்துவங்கினாள். ஒருவேளை அம்மை சொல்லியிருப்பாளோ என திரும்பிப்பார்த்தபோது, அவளும் ஆச்சரியமாய் பார்த்து இரசித்துக்கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு கவளம் ஊட்டிமுடித்ததும், "அப்பாஆ பசி... (என் வயிற்றை தொட்டுக்காண்பித்துக்கொள்வாள்) அப்பாஆ தப்பாச்சி..." என அம்மையை பார்த்து சொல்லிக்கொண்டே ஒரு 'கோதுமை' தோசையை சப்பாத்தி (தப்பாச்சி) என நினைத்து ஊட்டி முடித்தபோது, ஆயிரம் முத்தங்களாவது கொடுத்திருப்போன்.


டோரியும் ஒரு டப்பா பாப்கார்னும்

Published by யாத்ரீகன் under , , on திங்கள், ஜூலை 18, 2016
முதல் சொல், முதல் நடை என்பதைப்போல் முதல் திரைப்பட அனுபவமும் எவ்வகையிலிலேனும் மறக்கமுடியாததாகிறது. தம்பிக்கு திருமணமாகிவிட்ட பின்பும் , அஞ்சலி (மணிரத்னம்) திரைப்படம் பார்க்கச்சென்றபோது அவன் அடித்த கூத்து பற்றி இன்னும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

வருட ஆரம்பத்தில் Finding Dorry trailer வந்ததுமே இந்த படந்தான் என முடிவு செய்துவைத்திருந்தேன். அதற்கு ஏற்றாற்போல வீட்டருகே உள்ள வண்ண மீன் விற்பனையகத்துக்குப்போய் pish pish, biiiig pish என மீனாளாகியிருந்தாள். Chu Chu TV slotகளுக்கிடையே Finding Dorry Trailerஉம் இடம் பிடிக்க ஆரம்பித்து,   டோதியும் அறிமுகமானாள்

அந்த நாளும் வந்தது.

நகரின் வேறொரு மூலையில் அத்தைகளை மருமகளை காண்பித்துவிட்டு, அடித்துபிடித்து 10 நிமிடம் தாமதமாக நுழைந்தோம். சிறுவர்களுக்கான கண்ணாடியும் காலியாகிவிட்டது.

உட்கார்ந்த சிறிதுநேரத்திலேயே , எதுவும் சொல்லாமலே Dohhhhdhy Dohhhhdhy என கூச்சல். முதல் பந்தில் சிக்ஸர் அடித்த மகிழ்ச்சி :-)  , கொஞ்ச நேரம்தான் அப்பா, அம்மே என தாவிக்கொண்டிருந்தால்.

அவள் சேட்டைகளுக்கிடையே கோமாளி மீன்கள் வந்ததும்  Neeeno Neeeno என சப்தம்.  இடைவேளைவரை பெரிய தொந்தரவில்லை.

நல்லவேளை பாப்கார்ன் வாங்கியது, சுவையில் பெரிதாய் கவராவிட்டாலும், டப்பாவிற்குள் துளாவிக்கொண்டு, மேலே தூவிக்கொண்டு யாருக்கும் தொந்தரவில்லா விளையாட்டு. அது போரடித்ததும் மீண்டும் Dohhhhdhy Dohhhhdhy, Neeeno Neeeno... பிறகு,  ஆக்டோபஸ், Big Fish (Whales) என்று அம்மேயின் புது பாடங்கள்.

இறுதியில் வரும் குட்டி Dorryயை , அம்மேயின் விவரிப்போடு அப்படி பார்த்துக்கொண்டிருந்தாள்.

படம் பார்த்து ரெண்டு நாட்களாச்சு,

" theatreல யாரடா பார்த்த ?" என்றால்
" Dohhdhy"

"Dorry என்னது ?"
"பிஷ்"

"Dorry friend பேரு என்ன ?"
 "No No, No No"

Buzzlight Yearஐ மூட்டை கட்டிவிட்டு Dorry பொம்மை வாங்கவேண்டும், இன்னும் இரு கவளம் சோறு உள்ளே போகும் :-)

#மகள்குறள்

என் சர்க்கரை பட்டி குட்டி

Published by யாத்ரீகன் under , on சனி, ஜூன் 25, 2016
பட்டி குட்டி என இவளை செல்லமாக கூப்பிடுவதற்கு இன்னொரு காரணம் கோபம், மகிழ்ச்சி, அழுகை, அடம், குழப்பம், தூக்கக்கலக்கம் என எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தும் இவள் 'கடி'.

எங்களிருவரை செல்லக்கடி கடிப்பதுமட்டுமில்லாமல், மெல்ல வெளியாட்களிடமும் அது ஒரு பழக்கமாகத்தொடங்கியிருந்தது.

ஒவ்வொரு முறை அவள் கடித்துவிடும்போதும், குரல் உயர்த்தி 'தப்பு' , 'No No' எனச்சொல்வதும், அம்மே கோபித்துக்கொண்டு(கொள்வதுபோல்) அறைக்கதவை மூடிக்கொள்வதும், இருவரும் அவளிடம் பேசாமலிருப்பதும், மன்னிப்புக்கேட்கச்சொல்வதும் என சாம, பேத, தண்ட வழிமுறைகளை பின்பற்றத்தொடங்கினோம்.

குரல் உயர்த்தி 'தப்பு' எனச்சொன்னதும் தவறு செய்துவிட்டதை உணர்ந்ததைப்போல், தலை தாழ்ந்து, நம் கண்களை பார்க்கவே மாட்டாள். அப்படியே 'கடிக்கலாமா ? தப்பில்ல ?' என்ற கேள்விக்கு கவனமேயில்லாமல் வேறேதாவது வேலை செய்வதுபோல பாசாங்கைத்துவங்கியிருப்பாள்.

'No, No' என நாம் மெல்ல தலையை வலம்-இடமாக ஆட்டத்துவங்கினால், அவளும் பதிலுக்கு No No என மழலையில் கொஞ்சி மொத்த கோபத்தையும் காலிசெய்திருப்பாள்.

கடி வாங்கிய அம்மே கோபித்துக்கொண்டு அறைக்கதவை மூடிக்கொண்டால், ஒற்றை விரல் கொண்டு அப்பாவை தரதரவென இழுத்து வந்து கதவைத்திறக்கவைத்து, ஓடிச்சென்று அம்மேயை கட்டியணைத்து உம்மா தந்து கவிழ்த்துவிடுவாள்.

Sorry என்ற சொல் பழகும்வரை, சைகை மொழியில் மன்னிப்பை பழக்கியிருந்தோம். அதை கிழித்துவிடும் புத்தகத்திற்கும், கொட்டிவிடும் பாலிற்கும், உடைத்துவிடும் பொம்மைக்கும் என, அஃறிணைப்பொருட்களுக்கு மட்டும் செவ்வனே செய்துவந்தாள்.

இப்படியே ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் கிடைக்கத்துவங்கியது, ஆனால் எல்லாமே அடுத்த உணர்ச்சிப்பெருக்கு வரும்வரைதான். வந்ததும், அனைத்தும் மறந்துபோகும்.

இதோ இதை எழுதி முடித்து அமருகையில், 'பா, பா ' என்று அழைத்துவந்த பாட்டியை முதன்முறையாய் 'பாட்ஈ' என அழைத்துவிட்ட உற்சாகத்தில் ஓடிவந்து என்னை கட்டியணைத்துக்கொண்டவள் அதே வேகத்தில் என் தோளில் ஒரு செல்ல கடி. கடித்த அடுத்த நொடி நான் அவளை கோபமாக பார்ப்பதை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, மெல்ல முத்தங்கொடுத்து விளையாடுவதைப்போல ஓசையெழுப்பி பாசாங்கு செய்துகொண்டே பார்த்த பார்வையும், குறும்புச்சிரிப்புமிருக்கே... என் சர்க்கரை பட்டி குட்டி.