யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.
தஞ்சாவூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தஞ்சாவூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பொன்னியின் செல்வன் - காலவெளிப்பயணம் - மேடை நாடகம்

Published by யாத்ரீகன் under , , , , , , on செவ்வாய், ஜூன் 17, 2014
கோடையில் மேடையில் வருகிறான் என்ற teaser அங்காங்கே வரத்துவங்கியவுடன், 'பொன்னியின் செல்வனாமே' என்று நண்பர்கள் கிசுகிசுக்கத்துவங்கியவுடன், எப்படாவென எதிர்பார்க்கத்துவங்கிவிட்டேன்.

எல்லோருக்குமான கொசுவர்த்தி template போலவே, 10ஆம் வகுப்பு பரிட்சைக்குப்பின் வரும் பெரும் நிம்மதியான விடுமுறையில் பைத்தியம் போல,'பொன்னியின் செல்வன்', 'சிவகாமி சபதம்', 'பார்த்திபன் கனவு' எல்லாவற்றையும் சாப்பிடும்போது, சாப்பிட்டபின் போகும்போது என நேரங்காலம் பார்க்காமல் முழுமூச்சில் படித்து முடித்தேன். அதுதான் பூந்தளிர், ரத்னபாலா,முத்து காமிக்ஸ்லிருந்து வேறு ஒரு பரிணா மத்தில் படிக்க ஆரம்பித்த முதல் புத்தகம்னு நினைக்குறேன்.

இம்மூன்றில் 'பொன்னியின் செல்வனே' அடுத்த 11/12ஆம் வகுப்பு விடுமுறைக்கும் மறுமறுவாசிப்பு செய்யுமளவுக்கு பைத்தியம் பிடித்துப்போனது. அந்த பழைய புத்தகத்தின் வாசனை, இடையிடையே வரும் அந்தகாலத்து விளம்பரங்கள், சினிமா செய்திகள், துணுக்குகள் என அது தனி பதிவிற்கான அனுபவம். பலவருடங்கள் கழித்து பாலகுமாரனின் 'உடையார்' கையில் கிடைத்தபோதும் இதே பைத்தியந்தான்.'பொ.செ'-வுடன் ஒப்பிடயியலாவிடினும் இது வேறுவைகையான அனுபவம்.

'பொ.செ' நாடகத்துக்கான முன்பதிவு தொடங்கிய உடனே நண்பர்கள் குழாம் 15 பேரும் சேர்ந்தே பதிவு செஞ்சாச்சு, நாட்காட்டியில் குறித்தும் வைச்சாச்சு. முதல் காட்சி முடிந்ததும் twitter-ல் +ve விமர்சனங்கள் வரத்துவங்கியதும் பயங்கர மகிழ்ச்சி, ஆனா 'பொ.செ'-வை பிரித்து மேயும் தமிழ்மணத்தில் 2ஏ 2 விமர்சனங்கள் தவிர வேறேதும் வரவில்லை (அல்லது என் கண்ணில் படவில்லையாவிருக்கும்). ரெண்டையும் நாடகம் பார்த்தபிறகு படிச்சுக்கலாம்னு fav செய்ததோடு நிப்பாட்டிக்கொண்டேன். 

மூன்று நாளிருக்கையில்தான் தங்கமணி 'பொ.செ'-வை படித்தது கிடையாதுனு நினைவுக்கு வந்தது. அவுங்க தமிழ் படிக்குற வேகத்துக்கு, அதை படித்து முடிக்க 6/7 வருசமாகும்.  சரீன்னு மொத வேலையா, ஒரு ஆங்கில synopsis + பொ.செ-வில் வரும் கதாபாத்திரங்களின் family tree-யும் கையில் கொடுத்து homework செய்ய சொல்லியிருந்தேன்.

மாலை நாடகத்துக்கு காலையிலிருந்தே பரபரப்பு வந்தாச்சு. ஏதோ சிறு கண்காட்சியும் உண்டாமே, சீக்கிரம் போகனும் அப்போதான் பொறுமையா பார்க்கலாம்னு, 6 மணி நாடகத்துக்கு, 3 மணிக்கே கெளம்பிய நாங்கதான், எந்த படத்துக்கும் நேரத்துக்கு போனதா சரித்திரமே இல்லை :-)

பொ.செ கதாபாத்திர family tree + எம்ஜியார் பொ.செ trivia + பொ.செ-வின் பிரம்மாக்களான திரு. கல்கி, திரு. மணியன் அவர்களின் புகைப்படம்,குறிப்பு + தொல்லியல் ஆராய்ச்சித்துறையின் புகைப்படங்கள், குறிப்புகள் என சிறிய, ஆனால் நல்ல தொகுப்பு.

படிச்சு பலவருடம் ஆனதால ஏகப்பட்ட detailing மறந்தமாதிரி இருந்தது ஆனால், கொடுத்த homework-ஐ செய்யாத தங்கமணிக்கு அங்கிருந்த ஆளுயர family tree வைத்து கதை சொல்ல ஆரம்பித்ததும் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தது. எல்லோரைப்பற்றியும் ஒரேடியாய் திணிக்காமல், அடிக்கடி வரப்போகும் முக்கிய கதாபாத்திரங்கள் யார், ஒருவருக்கொருவர் என்ன உறவு, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணாதிசயம் (எ.கா: ஆதித்த கரிகாலன் - வீரன்,முரடன்,கொஞ்சம் மூடன்) என ஓரளவு தங்கமணியை தயார் செய்தபின் அரங்கத்துக்குள் நுழைந்தோம்.

ஆரம்பமே ஆர்ப்பாட்டமாய், கதைகளில் இல்லாத இரு கதை சொல்லிகள் அரங்கிலிருக்கும் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்து மேடையில் நுழைகிறார்கள், அரங்கமே நிசப்தமாய் அவர்களின்மேல் முழு கவனத்தையும் வைக்குமளவிற்கு.

மெல்ல, வீரநாரயண ஏரிக்கரையில் நடக்கும் ஆடிப்பெருக்கு திருவிழாக்கூட்டம் அந்த 1200 சதுரடி மேடையில் கூடுகிறது. பூ விற்பவர்களும், பழம் விற்பவர்களும், ஊர்க்கதை பேசிக்கொண்டிருப்பவர்களும், குழந்தைகளும், வயதானவர்களும்,சாமி பல்லக்கு ஊர்வலமும் என திருவிழாவே கூடிவிட்டது.

சுவரோவியமாயும், set-ஆகவும் முப்பரிமாணத்தில் ஒரு கோட்டைச்சுவரை கொண்டு நிறுத்தியிருந்தார்கள். கோட்டையின் ஒரு பக்கம் சிறு மலைக்குன்றும், மறுபுறம் நுணுக்கமான இரு யாழித்தூண்கள். அடுத்த 4:30 மணிநேரத்துக்கு இந்த கோட்டைச்சுவரும், குன்றும், தூண்களும் எப்படி தங்களை உருமாற்றிக்கொள்ளும் என்பதை நான் எதிர்பார்த்திருக்கவேயில்லை. தோட்டா தரணிக்கு இனிமேல்தானா சபாஷ் சொல்லவேண்டும் ?  இதை R.S.மனோகரன் அவர்கள் எப்பொழுதோ செய்துவிட்டார் என கேள்விப்பட்டிருந்தும், பார்த்ததில்லையாதலால் இது பிரமிப்பான அனுபமாகவே இருந்தது.



வந்தியத்தேவன் & ஆழ்வார்க்கடியான்:
வந்தியத்தேவனின் ஆர்ப்பாட்டமான அறிமுகமும், ஆழ்வார்கடியானின் ஆர்ப்பாட்டமான நுழைவும் பார்வையாளர்களின் பலத்த கைத்தட்டோடுதான். வந்தியத்தேவன் 100 சதவிகிதம் என்று சொல்லமுடியாவிட்டாலும், இந்த வந்தியத்தேவனை மிகவும் பிடித்திருந்தது. குறும்பு, சாதுர்யம், வீரம், காதல் என அருமையாய் வித்தியாசம் காமித்திருந்தார். ஆழ்வார்க்கடியானின் ஆர்ப்பாட்டமும், அமைதியும் சரியாய் இருந்தது. தொப்பையுடனான வைணவனை எதிர்பார்த்திருக்கையில், flat tummy வைணவனை digest செய்ய வெகுநேரமாயிற்று :-)

மெல்ல ஒவ்வொரு கதாபாத்திரங்களும் வரத்துவங்குகிறார்கள். மேலே குறிப்பிட்டவர்களுக்கடுத்து அதிகம் கைத்தட்டல் பெற்றது குந்தவை, பூங்குழலி, ஆதித்தகரிகாலனுந்தான்.

பெரிய பழுவேட்டரையர்:
நல்லவேளை, இளம் நடிகருக்கு வெள்ளைத்தாடியை ஒட்டவைக்காமல், கம்பீரமான பெரியவரை கொண்டுவந்தது மிகச்சரியான முடிவு. அவரும் அந்த தேர்வை சரியாய் நியாயப்படுத்துகிறார். சின்ன பழுவேட்டரையரை கடிந்துகொள்ளும்போதும், கோபம் கொண்டு மோதும்போதும், நந்தினியிடம் குழைவதும், ஆதித்த கரிகாலனிடம் தயங்குவதும்... எல்லாவற்றுக்கும் மகுடமாய் அந்த இறுதிக்காட்சி. இறுதிக்காட்சியில் தனக்கான அத்தனை பாராட்டையும் அள்ளிக்கொண்டார் பெரிய பழுவேட்டரையர்.

பூங்குழலி:
எனக்கு ரொம்ப பிடித்துப்போனது பூங்குழலி அறிமுகமும், அந்த கதாபாத்திரத்தை அப்படியே உயிர்கொண்டுவந்த அந்த பெண்ணின் துடுக்கான நடிப்புந்தான். என்ன ஒரு துடிப்பு, குறும்பு, காதல்.. கலக்கிவிட்டார்.

இடையிடையே தொலைக்காட்சியில் கண்ட நடிகர்கள்.

பார்த்திபேந்திர பல்லவன்:
அதிகம் எதிர்பார்த்திராத பார்த்திபேந்திர பல்லவன், அருமையோ அருமை. அவரின் சன்னதம் வந்து ஆடும் ஆட்டமும், வாள் வீச்சும், நடனமும் அட்டகாசம். இவரையா centerfresh விளம்பரத்தில் மிகச்சாதரணமா பயன்படுத்தியதோடு நிப்பாட்டிக்கொண்டார்கள் என ஆச்சரியமாய் இருந்தது.

சுந்தரசோழர் & அநிருத்தர்:
மிகவும் ஏமாற்றியவர்கள் பட்டியலில் சுந்தரசோழரும், அநிருத்த பிரம்மராயரும். நல்ல நடிகர்கள்தான் ஆனால், இந்த இரு கதாபாத்திரங்களுக்கான கம்பீரத்தை கொஞ்சம் கூட கொண்டிருக்கவில்லை. இப்படிப்பட்ட நாவலில், ஒவ்வொருவரின் கற்பனையையும் நிறைவேற்றிவிடுவது கடினந்தான்.

குந்தவை:
அதுபோல் குந்தவையாய் வந்த பெண் சரியான அழகியாய் இருந்திருப்பார், உடையமைப்பிலும் இளவரசிதான் (மொத்த குழுவின் உடையமைப்புக்கும் அவர்தான் பொறுப்பாம்) ஆனால் மிடுக்கான, மிக கம்பீரமான பாத்திரமென்றால் உணர்ச்சியே காட்டாத குரலென நினைத்திருப்பார்போல. அதிக கைத்தட்டு வாங்கிய வந்தியத்தேவனுடனான காதல் காட்சிகளில்கூட அந்த குரல் மாறவேயில்லை.

ஆதித்த கரிகாலன்:
பசுபதியை இனிமேல்தானா புகழவேண்டும். எல்லோரிலும் அதிகம் கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்தவர் இவராகத்தான் இருப்பார். இவரின் நடன அமைப்பும், சண்டைக்காட்சிகளும் செம. மரணித்து கிடக்கும் வேளையில் மூச்சுவிடாமல் இருந்திருப்பார்போல, வயிறு அசையவேயில்லை. அத்தனை ஒன்றி நடித்திருக்கிறார். முரட்டுத்தனம், நந்தினியைக்கண்டதும் குழம்பிப்போவது.. என சூப்பர்.

மதுராந்தகன்:
அதிகம் கைத்தட்டல் பெறாத பாத்திரம், ஆனால் சிறு ஆசை பேராசையாய் மாறுவதை உடல்மொழியிலும், உச்சரிப்பிலும் அருமையாய் காட்டியிருந்தார் இந்த நடிகர். அதுவும் கோபத்தில் ஒரு நொடியில் தாயைப்பேயென்று திட்டிவிட்டு, அடுத்த நொடி அம்மாவென்று காலடியில் இறைஞ்சுவதும், நான் நீ வளர்த்த மகன்தானேவென கெஞ்சிய அடுத்த நொடி இது எனக்கானது, விட்டுக்கொடுக்கமாட்டேன் என முழங்குவதும், இவரும் என் favorite ஆனார்.

செம்பியன் மாதேவி:
கம்பீரமாய், அமைதியாய் வரும் பாத்திரம், தேவைக்கேற்ற நடிப்பு.

நந்தினி:
குந்தவை அளவுக்கு charismatic கதாபாத்திரம், வீரம், கோபம், காதல், குழைவு.. செய்ததைவிட இன்னும் பின்னியிருக்கலாமென தோன்றியது. இவரின் குரலும் மிக மென்மையாய் அமைந்தது ஒரு பிரச்சனை. 

ரவிதாசன்/மந்திரவாதி மற்றும் பாண்டிய ஆபத்துதவிகள்:
ரவிதாசனின் வன்மம் தெரிக்கும் வசன உச்சரிப்பு மட்டுமின்றி, அவர்களுக்குள் போட்டுக்கொள்ளும் ஒரு சண்டையில் தன் தம்பியை ஆழ்வார்கடியானை தப்பவிட்டதற்கு நெஞ்சில் மிதிக்கும் அந்த காட்சியில் அரங்கமே அரண்டிருக்கும், அத்தனை உண்மையான நடிப்பு.

பொன்னியின் செல்வன்:
தலைப்பால் கதைநாயகன், மற்றபடி சொல்லிக்கொள்ளுமளவுக்கு ஒன்றுமில்லை. இறுதிக்காட்சியில் எல்லோருக்கும் இந்த கதாபாத்திரத்தின் தியாகத்தின் மீது வரவேண்டிய உணர்வு சுத்தமாய் வரவில்லை. நாடகத்தின் உச்சகட்ட let down என தோன்றியது சேந்தன் அமுதனுக்கு பொன்னியின் செல்வன் மகுடம் சூட்டிய காட்சி என தோன்றியது. 

இசை:
ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும், சூழ்நிலைகளுக்குமேற்ற மிகப்பொருத்தமான இசை. பிரமாண்டத்திற்கான தன் பங்கை உறுத்தாமல் அளித்தது.

உடைகள்:
அருமையான வண்ணங்கள், பொருத்தமான உடைகள் தூரத்திலிருந்து பார்த்தபொழுது ஒவ்வொரு காட்சியும் ஒரு ஓவியம் போலவேயிருந்தது.

பிரமாண்டம்:
நாடகத்தின் பிரமாண்ட உச்சகட்டமென தோன்றியது 2 இடங்களில்.

1. புத்தவிகாரத்திலிருந்து பொன்னியின் செல்வனை தஞ்சை கொண்டுசெல்ல யானை வரவேண்டும். திடீரென யானைவருமுன் மணியோசை கேட்டதும் அரங்கத்தில் ஒரு பரபரப்பு. ஒரு யானையையே கொண்டுவந்துவிட்டார்களென நினைக்குமளவிற்கு அதன் உண்மையான உயரத்திலும்,உருவத்திலும் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள். இதில் ultimate என சொல்வதானால், யானை பொன்னியின் செல்வனை இறக்கிவிட்டு மேடைக்கு பின்புறம் நகர்ந்துவிடாமல் ஒரு ஓரத்தில் நின்றுகொண்டிருப்பதோடில்லாமல், ஒரு நிஜ யானை நின்றுகொண்டிருக்கும்போது எப்படி சிறிது அங்குமிங்கும் அசைந்துகொண்டு,அதன் மணிச்சத்தம் கேட்டுக்கொண்டிருக்குமோ அதை அப்படியே செய்ததுதான். Attention to detail-இல் இதுமாதிரி பல இடங்களில் கலக்கியிருந்தார்கள்.




2அ: கடலில் பூங்குழலியும், வந்தியத்தேவனும் இலங்கைக்குச்செல்வது. பலருக்கு இது சாதரணமாய்த்தெரிந்திருக்கும் ஆனால் அருமையாய் செய்திருந்தார்கள்.

2ஆ: பல்லக்கில் வருபவர் உள்ளே நடந்துதான் வந்தார் என்பதை உணரவே பல நிமிடங்கள் ஆனது, சரியான யோசனை.

அரசியல் punchகள்:
ஆங்காங்கே அரசியல் punchகள்,

   அ. ஓ ! குடும்ப அரசியல் இங்கிருந்துதான் துவங்கியதா ?
   ஆ. அரசியலில் மதம் கலப்பது விபரீதமானது...

4:30 மணிநேர நாடகத்தில், இரண்டே முறைதான் வசனங்களில் சிறிது தடுமாற்றம். மற்றபடி சுழன்றது கோட்டைச்சுவர்களும், மலைக்குன்றும், சிற்பத்தூண்கள் மட்டுமில்லை, அதை சுழன்று சுழன்று இடமாற்றி, நகற்றிகொண்டு காட்சிக்கான சூழலை கொண்டுவந்த கலைஞர்களின் energy level-உம் அட்டகாசம். 



வேறுயாரையும், நாடகத்தின் வேறு அம்சங்களையும் குறிப்பிடாமல் இருந்தால் அது என் தவறாகவேயிருக்கும்.
  
ஆகமொத்ததில் மிக, மிக, மிக அருமையான ஒரு மாலை/இரவுநேரம். மறக்கமுடியாத அனுபவம். மீண்டும் நாவலை கையிலெடுக்கவேண்டுமென தூண்டியது. வீட்டுக்கு வந்ததும் நள்ளிரவு 1:30 மணிக்கு மதுரையில் நடக்கப்போவதற்கு அப்பாவுக்கும், அம்மாவுக்கும் முன்பதிவு செய்துகொண்டிருந்தேன். எல்லாவற்றுக்கும் மணிமகுடமாய், தங்கமணிக்கு மிகவும் பிடித்துப்போனதும், புரிந்ததும்தான் :-)

இதுபோல சிலப்பதிகாரத்தை (அதன் வழக்கமான பிழைகளின்றி) மாதவிப்பந்தல் கண்ணபிரானின் கைவண்ணத்தில் வரவேண்டுமென்று தோன்றியது.

வரலாற்று நாவல்களைப்போலவே, பல சமூக நாவல்களும் வர என்ன தடையென்று தெரியவில்லை. ஆங்கில நாவல்களின் மேடை நாவல்களுக்கிருக்கும் வரவேற்புக்கும் மேலிருக்காதா என்ன ?

வந்தியத்தேவனாய் கனவுகள் இந்த வாரமும் தொடரத்துவங்கியிருக்கின்றன, Magic Lantern குழுவினருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்பது மிகச்சிறிய சொல்.

இராச இராச சோழன்

Published by யாத்ரீகன் under , , , , , on செவ்வாய், மே 08, 2007
மாமன்னன் இராச இராச சோழன்



இராசேந்திர சோழன் பற்றிய குறிப்பு (பொன்னியின் செல்வன் நியாபகம் வருகின்றதா ?)



இராசேந்திர சோழனின் கீழ் பரவிய சோழ சாம்ராஜ்யம், கடல் கடந்து நாடு கடந்து




மாளிகைமேடு - முதலாம் இராசேந்திர சோழனின் ஆட்சிக்குப்பின்னால் இருந்த சோழர்கள் வழுவிழந்த நிலையில், படையெடுத்து வந்த பாண்டிய மன்னர்களால் இடித்து தள்ளப்பட்டது என்று கூறப்படுகின்றது. சுட்ட செங்கல்கள் மூலம் கட்டிய பெரும் அரண்மனை சுவர்கள், அங்கிருந்து கிடைத்திருக்கும் பல வெளிநாட்டு பழங்கால பொருட்கள் என தன்னுள் ஒரு மாபெரும் இரகசியத்தை பூமித்தாய் புதைத்து வைத்திருக்கும் மற்றுமொரு இடம்.




இராச இராச சோழனின் முத்திரை பத்திரம், இதுவே தஞ்சை பெரிய கோவிலை இவர்கள் எழுப்பியதற்கானதொரு மிகவும் முக்கியமான ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னம்.

மேலும் சுவையான தகவல்கள்






கங்கை கொண்ட சோழபுரம் - ஒரு காலவெளிப்பயணம்

Published by யாத்ரீகன் under , , , , , on செவ்வாய், மே 08, 2007
வடக்கே கங்கை கரையோரம் கொண்ட தன் வெற்றியை கொண்டாட பேரரசன் மகன், உருவாக்கிய சோழர்கால தலை நகரமான கங்கை கொண்ட சோழீச்வரம்.
சமீபத்தில் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மேற்கொண்ட பயணப்புகைப்படங்கள். முழுப் படங்களை பார்க்க அதன் மீது க்ளிக் செய்க



தன் தந்தையின் படைப்பான பிரகதீஸ்வரர் கோவில் போன்ற தோற்றத்தில் உருவாக்கிய கங்கை கொண்ட சோழபுர கோவிலின் நுழைவாயிலில்.

தஞ்சை பெரிய கோவிலைப்போலவே இங்கேயும் உள்ள ஒரே கல்லில் உருவான நந்தி. இங்கே வழிபாடு அவ்வளவாய் இல்லாததும் ஒரு விதத்தில் நல்லது, இந்த நந்தி சிலையில் உள்ள வேலைப்பாடுகளை அருகே இருந்து இரசிக்க முடிந்தது.


தஞ்சை கோவில்களுள் உள்ள துவாரகபாலர்கள் சிலைகளின் அமைப்பு மிகவும் பிரசித்தி பெற்றவை, இதனருகே நாங்கள் அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கையில் நண்பன் ஒருவன் எடுத்த புகைப்படம். ஆறடி உயரம் உள்ள நாங்கள் எங்கே, அந்த சிலையின் உயரம் எங்கே !!!

எங்களுள் எழுந்த மிகப்பெரும் கேள்வி, யாருக்காவது விடை தெரியுமா ??

கேள்வி: கோவிலை கட்ட தீர்மானித்த உடன், எங்கிருந்து ஆரம்பித்திருப்பார்கள் ? அவ்வளவு பிரமாண்ட சிலைகளை எங்கிருந்து செதுக்க துவங்கிருப்பார்கள் ? கோவிலின் வெளியே செதுக்க துவங்கியிருந்தால், தூண்களை நிறுவுவதற்கு முன் உள்ளே கொண்டு வந்திருக்க வேண்டும், இப்படி பல கேள்விகள் !!!!

ஒரு கால இயந்திரம் இருந்தால் , தஞ்சை ஆண்ட சோழர்கள், பல்லவர்கள் காலம், பாண்டியர்கள் காலம், விஜயநகர காலம், ஹம்பி நகரம் செழிப்பாக இருந்த காலம் என்று சுற்றி வரவேண்டும் !!!!


பண்ணிரண்டரை அடி உயரம் உள்ள கோபுர கலசம்


வெயில் கொடுமை !!! :-)


பெரிய கோவிலைப்போலவே உள்ள கங்கை கொண்ட சோழபுர கோவில்


நடராசர் சிலையின் முகத்தில் உள்ள புன்சிரிப்பையும் நளினத்தையும் பாருங்கள், இதை செதுக்கியவர் எவ்வளவு அனுபவித்து செய்திருக்கவேண்டும்.


கோபுரத்தின் மேலே இருந்த பல சிற்பங்களில் ஒன்று, 12X புகைப்பட கருவி பயன்படுத்தியதன் பயன்.


கோவிலின் மேலே இருந்த அதிகம் கவனிக்கப்பட்டிராத ஒரு பெண்ணின் சிலை, எந்த நாட்டுப்பெண்ணோ !!! இது போல் இங்கிருக்கும் "வடபுரமிருந்த சிவன் மன்மதனை எரிக்கும்" சிற்பம் மிகவும் அழகானது என்று கேள்விப்பட்டிருந்தோம், ஆனால் அதை இறுதி வரை கண்டு பிடிக்க முடியவில்லை :-(

கோபுரத்தின் மேலிருந்த பட்டைகள்.

தஞ்சை - ஒரு காலவெளிப்பயணம் - 3

Published by யாத்ரீகன் under , , , , , on செவ்வாய், மே 08, 2007
சமீபத்தில் தஞ்சை மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மேற்கொண்ட பயணப்புகைப்படங்கள். முழுப் படங்களை பார்க்க அதன் மீது க்ளிக் செய்க




பெரிய கோவிலின் நுழைவாயிலில் உள்ள கோபுரம், ஒரு அற்புதத்தை காண தயாராகுங்கள்


நம் முன்னோரின் அறிவியல்/கட்டிடத்திறன் உலகப் புகழ் பரப்பும் தஞ்சை பெரிய கோபுரம். இதன் உச்சியில் இருப்பது 80 டன் எடையளவு கொண்ட இரு கற்கள் (40+41), இதை எந்த தொழில்நுட்பம் கொண்டு 150 அடிகளுக்கு மேல் கொண்டு சென்றார்கள், எப்படி உச்சியில் வைத்தார்கள், எல்லாவற்றிற்கும் மேலே இந்த கோவில் முழுவது கிரானைட் எனப்படும் கடின பாறையினால் ஆனது, தற்போதைய காலத்திலேயே, 50 டன் அளவுள்ள ஒரே கிரானைட் கல்லை உடைத்து செதுக்குவதற்கு பல நாட்களும், பெறும் முயற்சியும் தேவை, இந்நிலையில் அவர்கள் எப்படி இந்த கோபுரத்தை மட்டுமின்றி கோவில் முழுவதையும் செதுக்கினார்கள் ?! ஆச்சரியமே...


தஞ்சை கோவிலின் புகழ் பெற்ற ஒரு கோணம், அந்தி மயங்கும் மாலை வேளையில்.


நவக்கிரகங்கள் லிங்கங்களாய், இதில் என்ன வித்தியாசம் என்று புரியவில்லை, ஆனால் இதிலிருந்த ஓளி அமைப்பில் ஒரு இனம் புரியாத உணர்வு...


கோவில் சுவர்களில் உள்ள ஓவியங்கள், இதை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை என நினைக்கின்றேன், நாம் கோவில்களை ஆன்மீக தளங்களாய் மட்டுமே பார்க்கின்றோம் :-( , இதில் பொதிந்து இருக்கும் அறிவியல் திறன், கலைத்திறன் என எப்போது நம் தலைமுறையிடம் சுட்டுக்காட்ட பழகப்போகின்றோம் ?


ஒற்றைக்கல்லினால் ஆன பிரமாண்ட நந்தி, இதை செதுக்கும் போது தவறிழைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும் ?!?! இது என்ன காகிதமா அழித்து விட்டு முதலிலிருந்து தொடங்க ?!


கோவிலின் முன்புறமிருந்து


காணக்கிடைத்த பொம்மலாட்டம்

நந்தியின் பின்புறம். (நந்தனுக்காக ஒதுங்கியதாக சொல்லப்படும் நந்தி எந்த கோவிலில் ?)

தஞ்சை - ஒரு காலவெளிப்பயணம் - 2

Published by யாத்ரீகன் under , , , , , on செவ்வாய், மே 08, 2007
சமீபத்தில் தஞ்சை மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மேற்கொண்ட பயணப்புகைப்படங்கள். முழுப் படங்களை பார்க்க அதன் மீது க்ளிக் செய்க



சரபோஜி மன்னரின் தொகுப்பிலிருந்த ஒரு தஞ்சாவூர் ஓவியம், 3D effect தெரியும் இந்த ஓவியங்களை, அந்த 3D effect-க்காக அவர்கள் வரையும் முறையை கண்டுபிடிக்க எவ்வளவு கற்பனைத்திறனோடு யோசித்திருப்பார்கள், எளிதான முறை ஆனால் அதன் பலன் அருமை.



சரபோஜி மன்னரின் தர்பார், வட இந்தியாவில் பல பழங்கால அரண்மனை தர்பார்களை பார்த்திருந்தும், இதன் வசீகரம் தனி. அள்ளித்தெளித்த வண்ணங்களா காரணம் என்று தெரியவில்லை :-)


தர்பாரின் மேற்க்கூடம்

கலைநயம் மிக்க பல சுதை சிற்பங்களும், வளைவுகளும், வண்ணங்களும் ஒரு சேர

தர்பார் சுவற்றிலுள்ள ஒரு பிரமாண்ட்ட தஞ்சாவூர் ஓவியம்.

தஞ்சை - ஒரு காலவெளிப்பயணம்

Published by யாத்ரீகன் under , , , , , on செவ்வாய், மே 08, 2007
சமீபத்தில் தஞ்சை மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மேற்கொண்ட பயணப்புகைப்படங்கள்.
முழுப் படங்களை பார்க்க அதன் மீது க்ளிக் செய்க


தஞ்சை கலைக்கூடம் செல்லும் வழியில் உள்ள ஒரு நுழைவாயிலின் மேலே



உடல் வளைவுகளும், ஆபரணங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடும் அசர வைக்கின்றன



தாராசுரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள சிற்பங்களில் ஒன்று, அற்புதம் என்ற ஒரு சொல்லிற்குள் அடங்காது இதன் அழகும், நுணுக்கமும்



தட்சிணாமூர்த்தியின் முகத்தில் உள்ள சாந்தமும், உருத்திராட்சத்தின் வேலைப்பாடும், சடாமுடியில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடும் இரசிக்க சில மணிநேரங்கள் பத்தாது




சரியான பராமரிப்பில்லாமல் உள்ள ஒரு தஞ்சாவூர் ஓவியம்



கலைக்கூடத்தின் ஒரு பகுதியில் உள்ள அழங்கார வேலைப்பாடுகள்

மணிக்கூண்டின் மேலிருந்து தஞ்சை பெரிய கோபுரம், எவ்வளவு கம்பீரமாய் ..