யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

ஆசைதான் தீராமலே, உன்னைத்தந்தானம்மா..

Published by யாத்ரீகன் under , on செவ்வாய், செப்டம்பர் 29, 2015



இசைஞானியின் பாடலின் மூலம் இவளுக்கு இசையை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளோம். அதில் இவளுக்கு மிகப்பிடித்தது 'அஞ்சலி அஞ்சலி அஞ்சலி... ' பாட்டு. இசைக்கத்துவங்கியதும், speakerகளை தேடத்துவங்கிவிடுவாள். தூக்கி நிப்பாட்டி பிடித்துக்கொண்டால் குதூகலத்தில் குதித்து குதித்து, இவளை பிடித்துக்கொண்டிருக்கும் தாத்தா பாட்டி களைப்படைந்தாலும் நிறுத்தமாட்டாள்.

நேற்று அம்மாவைத்தேடி அழுதுகொண்டிருந்தவளை சமாதானப்படுத்தும் பல முயற்சிகள் தோல்வியடைந்ததும், இறுதியாக பாட்டை போட்டதும் சட்டென அவள் கவனம் அதில் திரும்பியது. கையிலிருந்தவளை மெல்ல இறக்கி speaker-இன் முன் உட்காரவைத்து அசந்துபோய், பாடல் வரிகளை இரசிக்கத்தொடங்கினேன்.

எத்தனையோ முறை கேட்டிருந்த பாட்டு, ஆனால் நேற்று ஒவ்வொரு வரியும் பரவசநிலை. பாட்டு முடிந்ததும் வாலிக்கு பெண் குழந்தைகள் எத்தனை என்று பார்க்கவேண்டுமென நினைத்திருந்தேன்.

பாட்டைக்கேட்டுக்கொண்டிருந்தவள் மெல்ல தவழ்ந்து என்னருகே வந்திருக்கிறாள், கால்களை பிடித்து எழுந்து நிற்கப்போவதுபோல் முயன்று முட்டி போட்டு என்மேல் சாய்ந்துவிட்டாள். விழுந்தவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை அப்பா என்றாள்.

அ ப் பா , அப்பாஆஆ சொல்லு அப்பாஆஆ சொல்லு என அரைமணிநேரமாய் கதறினாலும், கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அம்ம்ம்ம் அம்ம்ம்ம் என கொஞ்சிக்கொண்டிருப்பவளா இப்படி என நம்பமுடியாமல் பார்த்தால் மறுபடியும் மறுபடியும் அப்பாஆ, அப்பாஅ என கொஞ்சல்.

சட்டென மனதில் ஏதோவொன்று கரைந்தது. கண்களில் கண்ணீர் திரண்டுவிட, அள்ளி அணைத்துக்கொண்டேன். பின்ணனியில்....

ஆகாயம் பூமியெல்லாம்,
இறைவன் உண்டாக்கி வைத்து,
ஆசைதான் தீராமலே,
உன்னைத்தந்தானம்மா....


இனிய இரவு

Published by யாத்ரீகன் under on வெள்ளி, செப்டம்பர் 04, 2015
மாலையில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்பொழுது, அவள் என்றும் தூங்கும் நேரத்தைவிட அரைமணிநேரம் அதிகமாகிவிட்டது. சில நிமிடங்கள் தாண்டினாலே சிணுங்குபவள் அழத்துவங்கிவிட்டாள். அம்மாவைத்தவிர யாரிடமும் நிற்கவில்லை. வெளியே சென்ற இடத்திலும் , அம்ம்ம்... அம்ம்ம்.. அம்ம்ம்... என அவளிடமே ஒட்டிக்கொண்டிருந்தாள்.

ஒருவழியாய் மருந்து, பால் எல்லாம் கொடுத்து, விளக்கணைத்து, அவள் தூங்குவதற்கான சூழலை உருவாக்கி எங்கள் நடுவே படுக்கவைத்ததும், அம்மா பக்கம் உருண்டுபோய் அவள் கழுத்தை அந்த சின்னஞ்சிறு கைகளால் வளைத்து கட்டிக்கொண்டாள். 

சில நிமிடங்கள்தான், என்ன நினைத்தாலோ தெரியவில்லை, என் மனதில் ஒரு நொடி மின்னி ,மறைந்த ஏக்கத்தை உணர்ந்ததைப்போல என் பக்கம் உருண்டு வந்து என் கழுத்தையும் அந்த பிஞ்சுக்கரங்கள் கட்டிக்கொண்டன. எப்படி உணர்ந்தேன் என உவமை சொல்வதற்கு இதற்கிணையாய் வேறேதும் கண்டதுமில்லை, உணர்ந்ததுமில்லை.

இந்த உணர்விலிருந்து வெளியே வருவதற்குள், மீண்டும் அம்மா பக்கம் உருண்டுபோய் கட்டிக்கொண்டாள். என்னடா இது சோதனை என நினைக்கத்துவங்கும்வேளையில், மீண்டும் என்னிடம். இதை ஒரு விளையாட்டைப்போல மாறி மாறி உருண்டு, இருவர் கழுத்தையும் கட்டிக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தாள்.

அப்பாவிடம் ஒட்டவேயில்லையே என்றிருந்த மிகச்சிறிய ஏக்கத்தோடு முடியவிருந்த இந்த இரவு, இதற்குமேல் இனிமையானதாக அமைந்துவிடாது...

புத்தகக்கண்காட்சி

Published by யாத்ரீகன் under , on ஞாயிறு, ஜனவரி 11, 2015


ஒவ்வொரு முறை எதாவது புத்தக விமர்சனத்தை கண்டதும் pocket, bookmark, favorite என ஏகப்பட்ட இடங்களில் நினைவுவைத்துக்கொள்வதும், கொஞ்சம் சுவாரசியமான தலைப்பைக்கொண்ட மின்னூல் எதைக்கண்டாலும் தரவிறக்கிக்கொள்வதும், torrentகளிலும், நண்பர்களிடத்திலும் கிடைக்கும் audiobook-களையும் சேர்த்துக்குவிப்பதும் என ஆர்வக்கோளாறு கொண்ட கடைக்கோடி வாசகன். இதில் எத்தனை படிப்பேன்/கேட்ப்பேனென்பது கேள்விக்கப்பாற்பட்டவை.

இதையெல்லாம் மீறி புத்தகக்கண்காட்சிக்கு செல்வதென்பது , superhero படங்கள் பார்த்தவுடன்  நரம்புமுறுக்கேறி, கைக்கு கிடைக்கும் யாரையாவது அடித்து உதைக்கவேண்டும் என்பதைப்போல. புது புத்தகங்கள் வாங்குகிறோமோ இல்லையோ, புதுப்புது சுவாரசியமான தலைப்புகள், கதைக்களன்கள், கைநிறைய புத்தகங்களை (படிக்கிறார்களோ இல்லையோ) அள்ளிச்செல்லும் இளைஞர்கள் என கண்காட்சிக்கு சென்று வந்த 1 வாரம், புத்தகங்களோடேதான் நாள் செல்லும். அப்புறம் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி, இதெல்லாம் அடுத்த வருசத்துக்குள்ள படிப்பியா மாட்டியானு தங்கமணி நக்கல் செய்யும் கிளைக்கதைக்குள்ளெல்லாம் இப்போது செல்லவேண்டாம்.

நல்லவேளை, போனமுறை ஆசைப்பட்டு வாங்கிய பெரிய தலையணை புத்தகம் (ஓநாய் குலச்சின்னம்) முதற்கொண்டு எல்லாம் படித்து முடித்ததால், இந்த வருடத்துக்கான budget வீட்டில் approve ஆனது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாய் 5/6 மணிநேரம் நடக்கவிட்டு நொந்துபோயிருந்ததால், இம்முறை வெறும் 30 நிமிடத்துக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது, அதுவும் கண்காட்சி வாசலை கடந்து சென்றுவிடவிருந்த கடைசி நொடியில்.

கிடைத்தவரை லாபம்னு உள்ளே புகுந்தாச்சு. பதிப்பக-அரங்கு எண் பட்டியல் இல்லாததாலும், இணையத்தில் சேமித்துவைத்திருந்த புத்தகப்பட்டியலை அரங்கினுள்ளிருந்து தரவிறக்க முடியாததாலும், அந்த கணநேர மனப்பாய்ச்சலை வைத்து புத்தகங்களை தேர்வுசெய்துகொள்ளலாமென தோன்றியது.

மின்னூல்களில் படிப்பெதென்பது எனக்கு ஒத்துவராத காரியமென்று, ஆர்வக்கோளாறில் தரவிறக்கிப்பார்க்காத படங்களைவிட, படிக்காத புத்தகங்கள் அடைத்துக்கொண்டிருக்கும் GBகளை கண்டதும் நிறுத்திக்கொண்டேன்.

500 பதிப்பக அரங்கங்கள், இந்தந்த பதிப்பகங்களென திட்டமுமில்லை, சுவாரசியத்தலைப்புகள், பிடித்த எழுத்தாளர்கள் என கண்ணில்பட்ட பக்கமெல்லாம் ஓட்டம். அவ்வப்போது தங்கமணியை கூப்பிட்டழைத்து சுவாரசியமானவைகளை பற்றி ஒரு குதூகலத்துடன் விவரிப்பு. பாவம், மொத்த கண்காட்சியில் பேருக்கு ஒரேயொரு மலையாள புத்தக stallளென்பதால் வேறொன்றும் புரியாமல் எனக்காக காத்துக்கொண்டிருந்தாள்.

கும்பலாக சுற்றுபவர்களைக்கண்டாலே, twitter கோஷ்டியாயிருக்குமோவென, யார் என்ன handleஓவென கூர்ந்து கேட்டுக்கொண்டே கடந்தேன்.

சென்றமுறைபோலவே பாலகுமாரனின் 'கங்கைகொண்ட சோழன்' தொகுப்பை கையிலெடுத்து, விலை கண்டே விலகினேன். ரொம்ப பாசக்கார அம்மணிக்கோ அது தாங்கவில்லை. அவளை சமாதானப்படுத்த ஒருவழியாகிவிட்டேன். உடையார் பிடித்திருந்தது, ஆனாலும் அதில் கருவூராரை ஏதோ மந்திரவாதியைப்போல அதீதமாய் காமித்திருந்தல், கதையிலும் மந்திர-தந்திர விவரிப்பு என உறுத்தலிருந்ததால், ஓசியில் கிடைத்தால் படிக்கலாமென சமாதானம் சொல்லி கிளம்பியாச்சு.

மசால்தோசை தொங்கிய ஸ்டால் வாசலில் வா.மணிகண்டன் கையெழுத்துத்திட்டுக்கொண்டிருந்தார். அவரின் எழுத்துக்கு பெரிய இரசிகனில்லையெனினும், நிசப்தம் அறக்கட்டளைக்கான முன்னெடுத்தலை பாராட்டலாமென நினைத்தால், புத்தகம் வாங்காமல் பாராட்டுபவனை அடுத்த வார பதிவில் குதறிவிட்டால் என்னசெய்வதென மெல்ல நகர்ந்தாச்சு.

Ambedhkar Foundation stallஐ கடக்கும்போது, அவரைப்பற்றி நுனிப்புல்தானே தெரியும், எதாவது படிக்க ஆரம்பிக்கலாமவென நீல நிறம் நிறைந்திருந்த அரங்கினுள் நுழைந்தேன். நிறைந்திருந்ததெல்லாம் அவரின் நூல்தொகுப்பு (கட்டுரை, வாழ்க்கை வரலாறு..என). முதல் தொகுதி எங்கிருக்கென நான் கேட்டதைவைத்தே அவருக்கு புரிந்திருக்கும். 37-வது தொகுதியிலிருந்து ஆரம்பியுங்க தம்பி, அதான் சரியாயிருக்கும்னு சொன்னதும் அதை எடுத்தாச்சு.

எது வாங்குகிறேனோ இல்லையோ, சிறுவயதில் சேமிக்காத வாண்டுமாமா, காமிக்ஸ் புத்தகங்களை ஒன்றிரண்டு எடுத்துக்கொள்வேன். வானதி பதிப்பகத்துக்கும், முத்து காமிக்ஸுக்கும் ஒரு நடை.

4/5 மணிநேரம் கூடயே வரும் மொதலாளியம்மாவுக்கு ஒன்றிரண்டு புத்தகம்.

மாதொருபாகன் சர்ச்சையில் பெருமாள்முருகனை (அவர் மன்னிப்பு கேட்டபொழுதிலும்)  ஆதரிக்கும்பொருட்டு (திரைப்படமோ, புத்தகங்களோ, எதிர் கருத்துக்களை சரியான முறையில் வைக்காத மக்கள், மாக்கள்) அவரின் சில புத்தகங்கள். அவரின் 'நிழல் முற்றத்து நினைவுகள்', 'ஏறுவெயில்' , இரண்டும் படித்து இரசித்திருந்ததால் இன்னும் தைரியமாய் எடுக்க முடிந்தது.

'வேங்கையின் மைந்தனை' பல அரங்களில் கேட்டுக்கேட்டு களைத்திருந்தேன்,  கிட்டத்திட்ட அரங்கிலிருந்து வெளியேறவிருந்தபோது, தான் கேட்டுப்பார்க்கிறேன் என களமிறங்கிய தங்கமணியின் நல்ல நேரம் முதல் கடையிலேயேயிருந்தது. என் நேரம், கையில் காசில்லை, கடையில் card-உம் வேலை செய்யவில்லை, படிக்காதவன் படத்து ரஜினி மாதிரி, அங்கொன்றும் இங்கொன்றுமாய் காசு தேற்றி வாங்க முடிந்ததில் என்னைவிட அவளுக்குத்தான் மிகுந்த மகிழ்ச்சி.

பேருவச்சியே, சோறுவச்சியாவென யாரும் கேட்டுவிடக்கூடாதென கொஞ்சம் தீனி, திருவிழா கலாச்சாரத்தை மீறிவிடக்கூடாதென டெல்லி அப்பளம் என 30 நிமிடம் 3:30 மணிநேரமாய் 'இனிதே' கரைந்தது.

கைவரை வந்த பல புத்தகங்கள் பைவரை வந்துசேரவில்லை, budget ஒரு limit என்றிருந்தபோதிலும், சில புத்தகங்களை வாங்கவில்லை. அப்புறம் வாங்கிக்கொள்ளலாம், நண்பனிடமிருந்து வாங்கிக்கொள்ளலாம், இது படித்து முடிக்கவேமுடியாது, இது புரியுமா, இதற்குப்போய் புத்தகமா என ஒவ்வொன்றுக்கும் ஒரு எண்ணம், எதைப்பற்றிய புத்தகங்களை வாங்குவார்களென்பது , எந்த திரைப்படங்கள் வெற்றிபெரும் என்பதுபோன்ற இரகசியம். அது என்னவென்று வாங்குபவர்களுக்கும், பார்ப்பவர்களுக்குமே தெரியாது.


புத்தகங்கள் பத்து

Published by யாத்ரீகன் under on புதன், செப்டம்பர் 03, 2014


               
                பூந்தளிர், ராணி காமிக்ஸ் என ஆரம்பித்து மாலைமதி, பாக்கெட் நாவல் என முன்னேறி, சுண்டல் மடித்து கொடுக்கும் பொட்டல காகிதம் வரை வெறித்தனமா ஒரே மூச்சுல படிச்ச காலம் ஒண்ணு, ஆனா இப்போ கையில்  ஒரு புத்தகத்தை, சுற்றி வரும் அத்தனை திசைதிருப்பும் நிகழ்வுகளையும் தாண்டி பொறுமையாய் ஒரே மூச்சில் படிப்பதென்பது.. ம்ம்ம்ம்ம் 

                எதிர்பாராத 2  நண்பர்களிடமிருந்து இந்த மீம்கள் பார்சல் வந்திருக்கு.  ரெண்டுபேரும் புத்தகங்களின்மேல் பெரும் வேட்கையுள்ளவர்கள். இருவரின் புத்தக வரிசையில் முதல் 50-ஐக்கூட நான் படித்திருப்பேனாவென சந்தேகம்தான்.

               சரி, என்னையும் மதிச்சு கேட்டிருக்காங்கனு பட்டியலிட ஆரம்பிச்சா, 10 வர்றதுக்குள்ள திக்கித்திணறியாச்சு.. இறுதியா 10க்கு ஒண்ணு குறைவாவே வந்தது. பல புத்தகங்கள் படிச்சாலும், மனசை பாதிச்ச, இப்போ நெனச்சாலும் ஒரு சின்ன சிலிர்ப்பை கொண்டு வர்ற புத்தகங்கள் மட்டுமே  இது. 

  • வாண்டுமாமா கதைகள் - குறிப்பிட்டு  இதுதான்னு இல்லாம அவரோட எல்லா புத்தகத்துக்கும் இரசிகன் நான். பள்ளிக்கூட வயசுல சேர்த்த புத்தகங்களை பாதுகாக்காம விட்டது எவ்ளோ பெரிய தப்புன்னு இப்போ புத்தக கண்காட்சியில் இவர் புத்தகமா தேடும்போது தெரியுது.
  • Why i am not a Hindu by Kancha Ilaiah - Stereotyped சிந்தனைகளில்லிருந்து, மாறுபட்ட கோணத்தில் சில விஷயங்களை பார்க்க உணர்த்திய புத்தகம். இன்னும் சில மறுவாசிப்புக்கு உட்படுத்தனும்.
  • Not a penny more, Not a penny less by Jeffrey Archer - பள்ளியில் Non-detailed, Tintin/Asterix தவிர, பொடி எழுத்து, தடித்தடியான ஆங்கில புத்தகத்தை கண்டாலே தூர ஓடும் எனக்கு, ஒரு தோழியின் சவாலின் மூலம் முழு மூச்சாய் அறிமுகமானது. பெரிய இலக்கியம் இல்லையெனினும் என்னை ஆங்கில புத்தகமும் படிக்கலாம்னு நினைக்க வைத்த ஆங்கில புத்தகம் :-)
  • Alchemist by Paulo Coelho - தன்னம்பிக்கை/சுயமுனேற்ற வகை தாண்டி,  தனிப்பட்ட முறையில் மனதை உறுத்திக்கொண்டிருக்கும் புத்தகம்.
  • துணையெழுத்து by எஸ்.ராமகிருஷ்ணன் - பயணங்களின் மேல் காதல் கொள்ளச்செய்ததில் இதற்கு பெரும் பங்குண்டு. 
  • கொற்றவை by ஜெயமோகன் - இன்னும் இதை முழுதாய் முடிக்காவிடினும்,  இதில் வரும் வர்ணனைகளுக்கு மதி மயங்கிப்போயிருந்தேன்.
  • புதுமைப்பித்தன் கதைகள் (தொகுப்பு) - ஒவ்வொரு மறுவாசிப்புக்கும் இன்பம் 
  • உடையார் by பாலகுமாரன் - மந்த்ர தந்த்ர உறுத்தும்  இடைச்சொருகல்கள் நிறைய இருந்தாலும். இதை படிக்கும்பொழுதெல்லாம் இராஜ இராஜனாகவே கனவுகண்டுகொண்டிருந்தேன்
  • ஓநாய் குலச்சின்னம் (Wolf Toetum) by Lü Jiamin - மொழிபெயர்ப்பு நடையின் கடினத்தை கண்டு ஒதுங்காமல் படிக்கத்துவங்கியதும், படுவேகம். கதைக்களத்திற்கு கட்டாயம் பயணப்படனும் என்று நினைக்கவைத்தது.

                வாங்கி வைச்சு படிக்காம, பாதி  முடிக்காம இருக்குற பட்டியல் போடச்சொன்னா வேணும்னா 10 என்ன 100ஏ போடலாம் :-(   , ஆனா இந்த மீம்ல மக்கள் போட்ட பட்டியல பார்த்ததும், இன்னும் 10 புத்தகம் படிக்கணும்னு ஆ.கோ உண்டாகிருக்குறது என்னமோ உண்மைதான் ;-)

பி.கு: சுஜாதாவின் புத்தகம் எதாவது என யோசித்தேன்.. படித்த சிலவற்றில், நிலா நிழல் பிடித்தமான புத்தகம். கதை, நடை என்பதை தாண்டி, அது என் கையில் கிடைத்த தருணமும் அப்படியானது :-) 

தோழி

Published by யாத்ரீகன் under on வெள்ளி, ஆகஸ்ட் 29, 2014


                    எனக்கிருக்கும் மிகச்சிறிய தோழியர் வட்டத்தில் மிகுந்த ஆளுமையான தோழி அவள். கல்லூரி காலத்தில் பெண்கள் மீதிருந்த, ஆழப்பதிந்திருந்த stereotyping-ஐ உடைத்தெறிந்தவள், கல்லூரிக்காலத்தில் விட்டிருந்த வாசிப்பனுபவத்தை மீண்டும் தூண்டி, நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தியவள், பகட்டைப்பார்த்து வாயைப்பிளந்து கொண்டிருந்த காலத்தில்  தன் இயல்பான எளிமையால் ஆச்சரியப்படுத்தியவள் , தன்னையுமறியாமல் தன் ஆளுமையால் பல விஷயங்களை புதிதாய் பார்க்கக்கற்றுக்கொடுத்தாள்.

                   அவளை கண்ணீர் வழிய, இத்தனை உணர்ச்சிவசப்பட்டு கண்டதேயில்லை. பல வருடங்கள் தாண்டி, பல எதிர்ப்புகளை மீறிய காதல்  என்றாலே இந்த  உணர்வு தவிர்க்கவியலததாகிவிடுகிறது. இன்று அவளுக்கு திருமணம்.

              ஆதர்ச தோழியின் மனதையே கவர்ந்தவர் எப்பேர்ப்பட்டவராயிருப்பார் என்ற ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சிதான் இன்று மனதை நிறைத்திருக்கிறது.




பொன்னியின் செல்வன் - காலவெளிப்பயணம் - மேடை நாடகம்

Published by யாத்ரீகன் under , , , , , , on செவ்வாய், ஜூன் 17, 2014
கோடையில் மேடையில் வருகிறான் என்ற teaser அங்காங்கே வரத்துவங்கியவுடன், 'பொன்னியின் செல்வனாமே' என்று நண்பர்கள் கிசுகிசுக்கத்துவங்கியவுடன், எப்படாவென எதிர்பார்க்கத்துவங்கிவிட்டேன்.

எல்லோருக்குமான கொசுவர்த்தி template போலவே, 10ஆம் வகுப்பு பரிட்சைக்குப்பின் வரும் பெரும் நிம்மதியான விடுமுறையில் பைத்தியம் போல,'பொன்னியின் செல்வன்', 'சிவகாமி சபதம்', 'பார்த்திபன் கனவு' எல்லாவற்றையும் சாப்பிடும்போது, சாப்பிட்டபின் போகும்போது என நேரங்காலம் பார்க்காமல் முழுமூச்சில் படித்து முடித்தேன். அதுதான் பூந்தளிர், ரத்னபாலா,முத்து காமிக்ஸ்லிருந்து வேறு ஒரு பரிணா மத்தில் படிக்க ஆரம்பித்த முதல் புத்தகம்னு நினைக்குறேன்.

இம்மூன்றில் 'பொன்னியின் செல்வனே' அடுத்த 11/12ஆம் வகுப்பு விடுமுறைக்கும் மறுமறுவாசிப்பு செய்யுமளவுக்கு பைத்தியம் பிடித்துப்போனது. அந்த பழைய புத்தகத்தின் வாசனை, இடையிடையே வரும் அந்தகாலத்து விளம்பரங்கள், சினிமா செய்திகள், துணுக்குகள் என அது தனி பதிவிற்கான அனுபவம். பலவருடங்கள் கழித்து பாலகுமாரனின் 'உடையார்' கையில் கிடைத்தபோதும் இதே பைத்தியந்தான்.'பொ.செ'-வுடன் ஒப்பிடயியலாவிடினும் இது வேறுவைகையான அனுபவம்.

'பொ.செ' நாடகத்துக்கான முன்பதிவு தொடங்கிய உடனே நண்பர்கள் குழாம் 15 பேரும் சேர்ந்தே பதிவு செஞ்சாச்சு, நாட்காட்டியில் குறித்தும் வைச்சாச்சு. முதல் காட்சி முடிந்ததும் twitter-ல் +ve விமர்சனங்கள் வரத்துவங்கியதும் பயங்கர மகிழ்ச்சி, ஆனா 'பொ.செ'-வை பிரித்து மேயும் தமிழ்மணத்தில் 2ஏ 2 விமர்சனங்கள் தவிர வேறேதும் வரவில்லை (அல்லது என் கண்ணில் படவில்லையாவிருக்கும்). ரெண்டையும் நாடகம் பார்த்தபிறகு படிச்சுக்கலாம்னு fav செய்ததோடு நிப்பாட்டிக்கொண்டேன். 

மூன்று நாளிருக்கையில்தான் தங்கமணி 'பொ.செ'-வை படித்தது கிடையாதுனு நினைவுக்கு வந்தது. அவுங்க தமிழ் படிக்குற வேகத்துக்கு, அதை படித்து முடிக்க 6/7 வருசமாகும்.  சரீன்னு மொத வேலையா, ஒரு ஆங்கில synopsis + பொ.செ-வில் வரும் கதாபாத்திரங்களின் family tree-யும் கையில் கொடுத்து homework செய்ய சொல்லியிருந்தேன்.

மாலை நாடகத்துக்கு காலையிலிருந்தே பரபரப்பு வந்தாச்சு. ஏதோ சிறு கண்காட்சியும் உண்டாமே, சீக்கிரம் போகனும் அப்போதான் பொறுமையா பார்க்கலாம்னு, 6 மணி நாடகத்துக்கு, 3 மணிக்கே கெளம்பிய நாங்கதான், எந்த படத்துக்கும் நேரத்துக்கு போனதா சரித்திரமே இல்லை :-)

பொ.செ கதாபாத்திர family tree + எம்ஜியார் பொ.செ trivia + பொ.செ-வின் பிரம்மாக்களான திரு. கல்கி, திரு. மணியன் அவர்களின் புகைப்படம்,குறிப்பு + தொல்லியல் ஆராய்ச்சித்துறையின் புகைப்படங்கள், குறிப்புகள் என சிறிய, ஆனால் நல்ல தொகுப்பு.

படிச்சு பலவருடம் ஆனதால ஏகப்பட்ட detailing மறந்தமாதிரி இருந்தது ஆனால், கொடுத்த homework-ஐ செய்யாத தங்கமணிக்கு அங்கிருந்த ஆளுயர family tree வைத்து கதை சொல்ல ஆரம்பித்ததும் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தது. எல்லோரைப்பற்றியும் ஒரேடியாய் திணிக்காமல், அடிக்கடி வரப்போகும் முக்கிய கதாபாத்திரங்கள் யார், ஒருவருக்கொருவர் என்ன உறவு, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணாதிசயம் (எ.கா: ஆதித்த கரிகாலன் - வீரன்,முரடன்,கொஞ்சம் மூடன்) என ஓரளவு தங்கமணியை தயார் செய்தபின் அரங்கத்துக்குள் நுழைந்தோம்.

ஆரம்பமே ஆர்ப்பாட்டமாய், கதைகளில் இல்லாத இரு கதை சொல்லிகள் அரங்கிலிருக்கும் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்து மேடையில் நுழைகிறார்கள், அரங்கமே நிசப்தமாய் அவர்களின்மேல் முழு கவனத்தையும் வைக்குமளவிற்கு.

மெல்ல, வீரநாரயண ஏரிக்கரையில் நடக்கும் ஆடிப்பெருக்கு திருவிழாக்கூட்டம் அந்த 1200 சதுரடி மேடையில் கூடுகிறது. பூ விற்பவர்களும், பழம் விற்பவர்களும், ஊர்க்கதை பேசிக்கொண்டிருப்பவர்களும், குழந்தைகளும், வயதானவர்களும்,சாமி பல்லக்கு ஊர்வலமும் என திருவிழாவே கூடிவிட்டது.

சுவரோவியமாயும், set-ஆகவும் முப்பரிமாணத்தில் ஒரு கோட்டைச்சுவரை கொண்டு நிறுத்தியிருந்தார்கள். கோட்டையின் ஒரு பக்கம் சிறு மலைக்குன்றும், மறுபுறம் நுணுக்கமான இரு யாழித்தூண்கள். அடுத்த 4:30 மணிநேரத்துக்கு இந்த கோட்டைச்சுவரும், குன்றும், தூண்களும் எப்படி தங்களை உருமாற்றிக்கொள்ளும் என்பதை நான் எதிர்பார்த்திருக்கவேயில்லை. தோட்டா தரணிக்கு இனிமேல்தானா சபாஷ் சொல்லவேண்டும் ?  இதை R.S.மனோகரன் அவர்கள் எப்பொழுதோ செய்துவிட்டார் என கேள்விப்பட்டிருந்தும், பார்த்ததில்லையாதலால் இது பிரமிப்பான அனுபமாகவே இருந்தது.



வந்தியத்தேவன் & ஆழ்வார்க்கடியான்:
வந்தியத்தேவனின் ஆர்ப்பாட்டமான அறிமுகமும், ஆழ்வார்கடியானின் ஆர்ப்பாட்டமான நுழைவும் பார்வையாளர்களின் பலத்த கைத்தட்டோடுதான். வந்தியத்தேவன் 100 சதவிகிதம் என்று சொல்லமுடியாவிட்டாலும், இந்த வந்தியத்தேவனை மிகவும் பிடித்திருந்தது. குறும்பு, சாதுர்யம், வீரம், காதல் என அருமையாய் வித்தியாசம் காமித்திருந்தார். ஆழ்வார்க்கடியானின் ஆர்ப்பாட்டமும், அமைதியும் சரியாய் இருந்தது. தொப்பையுடனான வைணவனை எதிர்பார்த்திருக்கையில், flat tummy வைணவனை digest செய்ய வெகுநேரமாயிற்று :-)

மெல்ல ஒவ்வொரு கதாபாத்திரங்களும் வரத்துவங்குகிறார்கள். மேலே குறிப்பிட்டவர்களுக்கடுத்து அதிகம் கைத்தட்டல் பெற்றது குந்தவை, பூங்குழலி, ஆதித்தகரிகாலனுந்தான்.

பெரிய பழுவேட்டரையர்:
நல்லவேளை, இளம் நடிகருக்கு வெள்ளைத்தாடியை ஒட்டவைக்காமல், கம்பீரமான பெரியவரை கொண்டுவந்தது மிகச்சரியான முடிவு. அவரும் அந்த தேர்வை சரியாய் நியாயப்படுத்துகிறார். சின்ன பழுவேட்டரையரை கடிந்துகொள்ளும்போதும், கோபம் கொண்டு மோதும்போதும், நந்தினியிடம் குழைவதும், ஆதித்த கரிகாலனிடம் தயங்குவதும்... எல்லாவற்றுக்கும் மகுடமாய் அந்த இறுதிக்காட்சி. இறுதிக்காட்சியில் தனக்கான அத்தனை பாராட்டையும் அள்ளிக்கொண்டார் பெரிய பழுவேட்டரையர்.

பூங்குழலி:
எனக்கு ரொம்ப பிடித்துப்போனது பூங்குழலி அறிமுகமும், அந்த கதாபாத்திரத்தை அப்படியே உயிர்கொண்டுவந்த அந்த பெண்ணின் துடுக்கான நடிப்புந்தான். என்ன ஒரு துடிப்பு, குறும்பு, காதல்.. கலக்கிவிட்டார்.

இடையிடையே தொலைக்காட்சியில் கண்ட நடிகர்கள்.

பார்த்திபேந்திர பல்லவன்:
அதிகம் எதிர்பார்த்திராத பார்த்திபேந்திர பல்லவன், அருமையோ அருமை. அவரின் சன்னதம் வந்து ஆடும் ஆட்டமும், வாள் வீச்சும், நடனமும் அட்டகாசம். இவரையா centerfresh விளம்பரத்தில் மிகச்சாதரணமா பயன்படுத்தியதோடு நிப்பாட்டிக்கொண்டார்கள் என ஆச்சரியமாய் இருந்தது.

சுந்தரசோழர் & அநிருத்தர்:
மிகவும் ஏமாற்றியவர்கள் பட்டியலில் சுந்தரசோழரும், அநிருத்த பிரம்மராயரும். நல்ல நடிகர்கள்தான் ஆனால், இந்த இரு கதாபாத்திரங்களுக்கான கம்பீரத்தை கொஞ்சம் கூட கொண்டிருக்கவில்லை. இப்படிப்பட்ட நாவலில், ஒவ்வொருவரின் கற்பனையையும் நிறைவேற்றிவிடுவது கடினந்தான்.

குந்தவை:
அதுபோல் குந்தவையாய் வந்த பெண் சரியான அழகியாய் இருந்திருப்பார், உடையமைப்பிலும் இளவரசிதான் (மொத்த குழுவின் உடையமைப்புக்கும் அவர்தான் பொறுப்பாம்) ஆனால் மிடுக்கான, மிக கம்பீரமான பாத்திரமென்றால் உணர்ச்சியே காட்டாத குரலென நினைத்திருப்பார்போல. அதிக கைத்தட்டு வாங்கிய வந்தியத்தேவனுடனான காதல் காட்சிகளில்கூட அந்த குரல் மாறவேயில்லை.

ஆதித்த கரிகாலன்:
பசுபதியை இனிமேல்தானா புகழவேண்டும். எல்லோரிலும் அதிகம் கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்தவர் இவராகத்தான் இருப்பார். இவரின் நடன அமைப்பும், சண்டைக்காட்சிகளும் செம. மரணித்து கிடக்கும் வேளையில் மூச்சுவிடாமல் இருந்திருப்பார்போல, வயிறு அசையவேயில்லை. அத்தனை ஒன்றி நடித்திருக்கிறார். முரட்டுத்தனம், நந்தினியைக்கண்டதும் குழம்பிப்போவது.. என சூப்பர்.

மதுராந்தகன்:
அதிகம் கைத்தட்டல் பெறாத பாத்திரம், ஆனால் சிறு ஆசை பேராசையாய் மாறுவதை உடல்மொழியிலும், உச்சரிப்பிலும் அருமையாய் காட்டியிருந்தார் இந்த நடிகர். அதுவும் கோபத்தில் ஒரு நொடியில் தாயைப்பேயென்று திட்டிவிட்டு, அடுத்த நொடி அம்மாவென்று காலடியில் இறைஞ்சுவதும், நான் நீ வளர்த்த மகன்தானேவென கெஞ்சிய அடுத்த நொடி இது எனக்கானது, விட்டுக்கொடுக்கமாட்டேன் என முழங்குவதும், இவரும் என் favorite ஆனார்.

செம்பியன் மாதேவி:
கம்பீரமாய், அமைதியாய் வரும் பாத்திரம், தேவைக்கேற்ற நடிப்பு.

நந்தினி:
குந்தவை அளவுக்கு charismatic கதாபாத்திரம், வீரம், கோபம், காதல், குழைவு.. செய்ததைவிட இன்னும் பின்னியிருக்கலாமென தோன்றியது. இவரின் குரலும் மிக மென்மையாய் அமைந்தது ஒரு பிரச்சனை. 

ரவிதாசன்/மந்திரவாதி மற்றும் பாண்டிய ஆபத்துதவிகள்:
ரவிதாசனின் வன்மம் தெரிக்கும் வசன உச்சரிப்பு மட்டுமின்றி, அவர்களுக்குள் போட்டுக்கொள்ளும் ஒரு சண்டையில் தன் தம்பியை ஆழ்வார்கடியானை தப்பவிட்டதற்கு நெஞ்சில் மிதிக்கும் அந்த காட்சியில் அரங்கமே அரண்டிருக்கும், அத்தனை உண்மையான நடிப்பு.

பொன்னியின் செல்வன்:
தலைப்பால் கதைநாயகன், மற்றபடி சொல்லிக்கொள்ளுமளவுக்கு ஒன்றுமில்லை. இறுதிக்காட்சியில் எல்லோருக்கும் இந்த கதாபாத்திரத்தின் தியாகத்தின் மீது வரவேண்டிய உணர்வு சுத்தமாய் வரவில்லை. நாடகத்தின் உச்சகட்ட let down என தோன்றியது சேந்தன் அமுதனுக்கு பொன்னியின் செல்வன் மகுடம் சூட்டிய காட்சி என தோன்றியது. 

இசை:
ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும், சூழ்நிலைகளுக்குமேற்ற மிகப்பொருத்தமான இசை. பிரமாண்டத்திற்கான தன் பங்கை உறுத்தாமல் அளித்தது.

உடைகள்:
அருமையான வண்ணங்கள், பொருத்தமான உடைகள் தூரத்திலிருந்து பார்த்தபொழுது ஒவ்வொரு காட்சியும் ஒரு ஓவியம் போலவேயிருந்தது.

பிரமாண்டம்:
நாடகத்தின் பிரமாண்ட உச்சகட்டமென தோன்றியது 2 இடங்களில்.

1. புத்தவிகாரத்திலிருந்து பொன்னியின் செல்வனை தஞ்சை கொண்டுசெல்ல யானை வரவேண்டும். திடீரென யானைவருமுன் மணியோசை கேட்டதும் அரங்கத்தில் ஒரு பரபரப்பு. ஒரு யானையையே கொண்டுவந்துவிட்டார்களென நினைக்குமளவிற்கு அதன் உண்மையான உயரத்திலும்,உருவத்திலும் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள். இதில் ultimate என சொல்வதானால், யானை பொன்னியின் செல்வனை இறக்கிவிட்டு மேடைக்கு பின்புறம் நகர்ந்துவிடாமல் ஒரு ஓரத்தில் நின்றுகொண்டிருப்பதோடில்லாமல், ஒரு நிஜ யானை நின்றுகொண்டிருக்கும்போது எப்படி சிறிது அங்குமிங்கும் அசைந்துகொண்டு,அதன் மணிச்சத்தம் கேட்டுக்கொண்டிருக்குமோ அதை அப்படியே செய்ததுதான். Attention to detail-இல் இதுமாதிரி பல இடங்களில் கலக்கியிருந்தார்கள்.




2அ: கடலில் பூங்குழலியும், வந்தியத்தேவனும் இலங்கைக்குச்செல்வது. பலருக்கு இது சாதரணமாய்த்தெரிந்திருக்கும் ஆனால் அருமையாய் செய்திருந்தார்கள்.

2ஆ: பல்லக்கில் வருபவர் உள்ளே நடந்துதான் வந்தார் என்பதை உணரவே பல நிமிடங்கள் ஆனது, சரியான யோசனை.

அரசியல் punchகள்:
ஆங்காங்கே அரசியல் punchகள்,

   அ. ஓ ! குடும்ப அரசியல் இங்கிருந்துதான் துவங்கியதா ?
   ஆ. அரசியலில் மதம் கலப்பது விபரீதமானது...

4:30 மணிநேர நாடகத்தில், இரண்டே முறைதான் வசனங்களில் சிறிது தடுமாற்றம். மற்றபடி சுழன்றது கோட்டைச்சுவர்களும், மலைக்குன்றும், சிற்பத்தூண்கள் மட்டுமில்லை, அதை சுழன்று சுழன்று இடமாற்றி, நகற்றிகொண்டு காட்சிக்கான சூழலை கொண்டுவந்த கலைஞர்களின் energy level-உம் அட்டகாசம். 



வேறுயாரையும், நாடகத்தின் வேறு அம்சங்களையும் குறிப்பிடாமல் இருந்தால் அது என் தவறாகவேயிருக்கும்.
  
ஆகமொத்ததில் மிக, மிக, மிக அருமையான ஒரு மாலை/இரவுநேரம். மறக்கமுடியாத அனுபவம். மீண்டும் நாவலை கையிலெடுக்கவேண்டுமென தூண்டியது. வீட்டுக்கு வந்ததும் நள்ளிரவு 1:30 மணிக்கு மதுரையில் நடக்கப்போவதற்கு அப்பாவுக்கும், அம்மாவுக்கும் முன்பதிவு செய்துகொண்டிருந்தேன். எல்லாவற்றுக்கும் மணிமகுடமாய், தங்கமணிக்கு மிகவும் பிடித்துப்போனதும், புரிந்ததும்தான் :-)

இதுபோல சிலப்பதிகாரத்தை (அதன் வழக்கமான பிழைகளின்றி) மாதவிப்பந்தல் கண்ணபிரானின் கைவண்ணத்தில் வரவேண்டுமென்று தோன்றியது.

வரலாற்று நாவல்களைப்போலவே, பல சமூக நாவல்களும் வர என்ன தடையென்று தெரியவில்லை. ஆங்கில நாவல்களின் மேடை நாவல்களுக்கிருக்கும் வரவேற்புக்கும் மேலிருக்காதா என்ன ?

வந்தியத்தேவனாய் கனவுகள் இந்த வாரமும் தொடரத்துவங்கியிருக்கின்றன, Magic Lantern குழுவினருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்பது மிகச்சிறிய சொல்.

உயிரின் விலை

Published by யாத்ரீகன் under on செவ்வாய், ஜூலை 09, 2013



                      தூக்க கலக்கத்தில், காலையின் முதல் கடமையாக தங்கமணியை அலுவலக பேருந்து ஏற்றிவிட்டு க்குள் திரும்பிக்கொண்டிருந்தேன். எப்போதும் இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும் பூனையொன்று வாயில் எதையோ கவ்விக்கொண்டு காருக்கு அடியில் பதுங்கியது. சாதரணமாய் இருந்தால் கண்டுகொள்ளாமல் சென்றிருப்பேன், ஆனால் சட்டென ஒரு நொடி  பதறி நின்றதற்கு காரணம் அதன் வாயில் இன்னும் துடித்துக்கொண்டிருந்த சிறகு.

                    டிஸ்கவரி அலைவரிசையில் எத்தனையோ முறை இந்த காட்சியை, வெவ்வேறு மிருகங்கள் version-இல் உணர்ச்சியே இல்லாமல்  பார்த்திருந்தும் இன்று நேரில் கண்டதும் ஏனென்று தெரியவில்லை, ஒரு நொடி பதறிவிட்டேன்.

                   'ஓநாய் பார்வையில் நியாயம், மானின் பார்வையில் நியாயம்.. ' என்றெல்லாம் சினிமா வசனங்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. என்னதான் நடக்குதுனு பார்க்கலாமா, எனக்கு ஏனிந்த குரூரம், பூனையை விரட்டி புறாவை காப்பாத்தலாமா, பூனை பசிக்குதானே பிடிச்சிருக்கு, இப்போ புறாவை காப்பாத்தி அது பறக்க முடியாம துடிச்சு சாகனுமா... ஏகப்பட்ட கேள்விகள், தயக்கம். பூனை பதுங்கியிருந்த காரை சில அடிகள் கடந்துவிட்டிருந்தேன், ஆனால் திரும்பி ஓடிவந்து பட படவென்று கால்களை தரையில் உதைத்து பூனையை விரட்டிவிட்டேன்.

                    சிறகுகள் அடித்துக்கொண்ட ஓசை மட்டும் கேட்டது, காரைச்சுற்றிச்சுற்றி வந்து குனிந்து பார்த்தேன், பார்க்கிங்கையும் சுற்றிப்பார்தேன் பூனையும் கண்ணில் தென்படவில்லை, சிறு நம்பிக்கையோடு அண்ணாந்து பார்த்தேன் புறாவையும் காணவில்லை.

                  லிப்ட் கீழே வருவதற்கு காத்திருக்கும்போது எனக்கு நானே கிள்ளிப்பார்த்துக்கொண்டேன், இது கனவுமில்லை.




வெறுமை

Published by யாத்ரீகன் under , on திங்கள், மே 27, 2013


                 நான்கு பத்து நாட்களுக்கு முன் திறந்துவைத்த இந்த Compose window -வும் வெறுமையாகவே காலத்தை கடத்திக்கொண்டிருந்திருக்கின்றது. உதற உதற ஒட்டிக்கொள்ளும் கடல் மணலைப்போல, என்னவென்று சொல்லவியலாத வெறுமை மனதில் ஒட்டிக்கொண்டுள்ளது. பார்க்க நினைத்த படங்களை துவங்கிய சில நிமிடங்களிலேயே மூடிவிட்டேன், படித்துக்கொண்டிருந்த 'நெடுங்குறுதி'-யும் வாலற்ற பட்டத்தைப்போல, துன்பங்களிடையையே உழலும் மாந்தர்களைப்பற்றியே சுற்றிக்கொண்டிருந்தது, புது வீட்டிற்கான வேலையிலும் அத்தனை ஆர்வமில்லை.. இப்படி எல்லா திசையிலும், பல பெயரிடப்பட்ட எதோவென்று மனதை அழைக்கழித்துக்கொண்டேயிருந்தது.

               புகைப்படங்களோ, சமையலோ, பயணங்களோ, பாடல்களோ, அரசியலோ, திரைப்படங்களோ, வாசிப்போ ...  வேலைக்காகவோ, வாழ்வுக்காகவோ, பொழுதுபோக்குக்காகவோ எல்லோரும் தனக்கு பிடித்ததான ஏதோ ஒன்றை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவ்வப்போது இவைகளில் ஈடுபட்டிருக்கும் நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என கடந்து செல்லும்போது ஏதோ ஒரு பாரம் மனதை அழுத்திக்கொண்டிருக்கும். எந்த இலக்கை நோக்கி போகிறோம் என்ற அறியாமை மேலும் மேலும் மனதை அழுத்திக்கொண்டேயிருந்தது.

              தவறவிட்ட, உறுதியாய் தேர்வு செய்யாத, நிலையாய் இருந்திடாத..என கடந்து சென்ற அத்தனை வாழ்வின் வாய்ப்புகளும் நினைவில் மறுபடியும் சுழன்று எரிச்சலை கூட்டிக்கொண்டிருந்தது. நல்லவேளை, சுயபச்சாதாப குழிக்குள் மட்டும் இறங்கவேயில்லை.

            சுற்றி இருந்தவர்களிடம் எதையும் வெளிப்படுத்திக்கொள்ளும் மனநிலையிலும் இல்லை, இதை புரிந்து கொள்வாளா என்ற ஐயமும் சேர்ந்துகொள்ள, அவளிடமும் இதை காட்டிக்கொள்ளவில்லை.

            இந்நேரம் பார்த்தா உடல் வலியும் சேர்ந்துகொள்ளவேண்டும் ? கழுத்தையும், தோள்பட்டையையும் கழற்றி, overhauling செய்ய கொடுத்துவிடலாமவென எண்ணுமளவுக்கு வலி. அழைக்கழித்துக்கொண்டிருந்த மனதை 'வலியின் மீதே' ஒருமுகப்படுத்திக்கொடுத்தது என்று சொல்லுமளவுக்கு வலி.        

           போதும் என்றபோதுதானே நிறைந்து வழியும். இந்த குழப்பங்களுக்கிடையே, சுற்றியிருப்பவர்களுக்கு தைரியமும், வாழ்வின் ஒரு மிகவும் மோசமான கட்டத்தை கடந்து வரவேண்டி  ஒரு கை தரவேண்டிய நிலையில் நான் நின்றது என்னவிதமான design-ஓ.

           ஒருவிதமான தனிமையை நாடத்துவங்கியிருந்தேன். மின்னஞ்சல், புத்தகம், சமூக வலைத்தளம், படங்கள், நண்பர்கள் என எல்லாவற்றையும் விட்டு விலகியிருந்தேன். புதிய முயற்சிகள், சிந்தனைகள், வாசிப்புகள் ஏதும் இல்லாமல், எளிய சிந்தனை கொண்டவனாய் சில நாட்கள். என் நிறை, குறைகளனைத்தையும் ஒப்புக்கொண்டு, ஆமாம் இதுதான் நான் என அமைதியாகிக்கொண்டிருந்தேன். அவ்வப்போது, இப்படி ஒப்புக்கொள்வது தோல்வி இல்லையா ? வாழ்வை சுவாரசியமில்லாமல் ஆக்கிவிடுமல்லவா என மனக்குரல்கள் கேட்காமலில்லை, ஆனால்ஒரு தெளிவு கிடைக்கும்வரை எதையும் கண்டுகொள்வதில்லையென ஒரு முடிவு.

           அவ்வப்போது 'இலக்கில்லா அம்புகளின் வலி யாருக்கு புரியும்' என மடக்கி மடக்கி எழுதும் கவிதைபோன்றவைகளும் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

          முடிவெடுத்துவிட்டேன் என இறூமாந்திருக்கும்போதுதானே அதை அசைத்துப்பார்க்கும் நிகழ்வுகளெல்லாம் நடக்கத்துவங்கும். அதே எனக்கும் தொடர்ந்தது. தவறவிட்டிருந்த வாய்ப்புகளையும், சரியாய் பயன்படுத்தாதவைகளையும் அசைபோடத்துவங்கினால், எல்லாமே சிறிது முன்னமே கிடைத்தவைகளாக இருந்திருக்கிறது. அந்த வாய்ப்புகளின் அருமை தெரியாமல் வீணடித்திருக்கிறேன் அல்லது மொத்தமாக அலட்சியப்படுத்தியிருக்கிறேன்.

           புயலின்போது அமைதியையும், அமைதியின்போது புயலையும் நினைத்து, அந்தந்த நேரத்துக்கான சுவாரசியத்தையும், அழகையும் இரசிக்க இயலாத வாழ்க்கைதான் வாய்த்திருக்கிறதுபோலானது.

            ஒருவழியாய் புயலுக்குபின்னான அமைதி வந்ததுபோல இருக்கின்றது. எதைக்கண்டாலும் புலம்பும், அலைபாயும், ஏக்கப்படும் மனது இப்போது ஒரு தீர்க்கமான அமைதியடைந்திருக்கிறது. இதிலேயே இருக்க விருப்பமில்லை, ஆனால் ஒரு தூர ஓட்டத்துக்குப்பின்னும், அடுத்த ஓட்டத்திற்கு முன்னுமான இடைப்பட்ட அமைதியும், ஓய்வும்போல ஒரு நிலை என எனக்கு நானே ஒப்புக்கொண்டு அமைதியடைந்திருக்கிறேன்.

              விளையாட்டின் அடுத்த சுவாரசியமான கட்டமே இனிமேதான் ஆரம்பிக்குது என்று கொஞ்சம் கொஞ்சமாய் ஒப்புக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். புத்துணர்ச்சி நிறைந்து வந்திருக்கிறேன்.



வாழ்வின் மிச்சம்

Published by யாத்ரீகன் under , on செவ்வாய், ஏப்ரல் 16, 2013


                     சூடான சாதத்தோடு எலுமிச்சை பழத்தை பிழிந்து, பிசைந்து கொண்டிருக்கையில் பாதியில் அம்மா நகர்ந்தபோது, குளிக்க போன நான், அம்மா பார்க்கும்முன் அவசர அவசரமாய் ஒரு விள்ளல் சாதத்தை எடுத்து, சூடு தாங்காமல் உருட்டி வாயில் போட்டுக்கொண்டு விலகினேன்.

                    கொஞ்சமும் உப்பேயில்லையென எரிச்சல்படத்துவங்குகையில், மெல்ல எலுமிச்சையின் புளிப்பு படரத்துவங்குகிறது, அந்த சுவையை இரசிக்கத்துவங்கி சில நொடிகளில் கரைந்த உப்பின் சுவை. மென்றுகொண்டேயிருக்கையில், சிறு பச்சை மிளகாய்த்துண்டொண்று பல்லிடுக்கில் அரைந்துவிட, அவசர அவசரமாய் காரம் பரவுகிறது. புளிப்பும் காரமும் கலந்து புலன்களை சுழற்றி அடிக்கின்றது. இந்த உணவு இத்தனை சுவையா ? கொஞ்சம் கூட பிடிக்காத உணவான (உப்புமாவை நான் உணவாகவே கருதுவதில்லை) எலுமிச்சை சாதம் இவ்வளவு சுவையை  விட்டுச்சென்றதேயில்லை. மற்ற நாட்களுக்கும் இன்றுகும்மான வேற்றுமை, எந்த சுவையும் கண்டிராத,  தூக்கத்திலிருந்து எழுந்த நாக்காவென தெரியவில்லை.

                   காலையில் Indian Express பத்திரிக்கை நிருபர்களின் தரம் திரு. P.B.சிரினிவாஸ் அவர்களின் மரணச்செய்தியில் பல்லிளித்துக்கொண்டிருந்தது. திடீரென அவளைக்கண்டு 'காலங்களில் அவள் வசந்தம்... ' என காதல் பொங்க பாட ஆரம்பித்தேன். வெட்கத்தை மறைக்க முடியாமல் சிரித்துக்கொண்டே என்னாச்சு என்றாள். எத்தனை பேருக்கு இப்படியான அருமையான நினைவுகளை உருவாக்கித்தந்திருப்பார். எங்கோ FMயில் 'அவள் பறந்து போனாளே...' என்று பாடிக்கொண்டிருந்தார். எத்தனை இளைஞர்களின் இனிமையான, மோசமான தருணங்களில் துணைக்கிருந்திருப்பார்.

                 மரணம் அவரை தன் துணைக்கு அழைத்துக்கொண்டபொழுது 82 வயதென்று படித்தேன், அவ்வப்போது கேட்ட/படித்த அவரை சந்தித்தவர்களின் அனுபவமும், நல்ல வாழ்வு வாழ்ந்திருக்கிறார் என சிறு நிம்மதியைத்தந்தது. இறந்துவிட்டார் என்ற துக்கம் என்பதைவிட, எவ்வளவு பேரின் நல்ல நினைவுகளுக்கு காரணமாயிருந்திருக்கிறார் என்பது போன்ற எண்ணங்களே இருந்தன. வாழ்ந்துவிட்ட அவரின் முதுமையா, மரத்துப்போன என் மனதா, சுயநலமான ஆசைகளுடனே வாழத்துவங்கிவிட்ட என் இயந்திர வாழ்க்கையா.. வராத கண்ணீருக்கும், வருத்தப்படாத மனதுக்கும் எது காரணமென யோசித்து களைத்துப்போனேன்.

                ஆனால் அவரின் மரணச்செய்தி wikipedia-விலிருந்து copy-paste செய்யப்பட்டு, வேறொருவடன் குழப்பிக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்த அவசர வாழ்வில் மரணத்துக்கான மரியாதை. இதைவிட, அவருக்காக சிந்தப்படும் கண்ணிரைவிட, இன்று முழுவதும், அவரின் பாடல்கள் கேட்டு மனமெங்கும் பரவிய மகிழ்ச்சியே அவருக்கான மரியாதை.

                     இதோ, இதை தட்டச்சிக்கொண்டிருக்கையில் மறுபடியும் 'காலங்களில் அவள் வசந்தம்.. " பாடல் கானாபிரபாவின் ரேடியோஸ்பதியில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

                   

TOGAF Prep Material

Published by யாத்ரீகன் under , , , on செவ்வாய், மார்ச் 12, 2013


                      The TOGAF training at work gave us 'Student Guide Volume' books, an abridged version of the TOGAF Specification from The Open Group. After reading through them, i wanted to have a cheat-sheet (a more abridged version), where i could refer the complete spec within 10 pages.

        I ended-up creating 2 cheat sheets, one for each of 'Student Guide Volume I & II'.

TOGAF9_CheatSheet_Part_1.pdf
TOGAF9_CheatSheet_Part_2.pdf

       But still, i wasn't satisfied. I wanted an even more abridged version, like a 1 Pager, where i could quickly re-collect all the Input/Outputs of all Phases. And hence made this 1 pager in Visio.

TOGAF_ADM_Input_Outputs.pdf

        Indeed, they all came very handy on the day before exam & during the day of exam (of-course not during the exam :-). The thought of sharing this with a wider audience resulted in this blog. I hope people looking forward for their Foundation & Certification exam might find this handy.

        Thanks to Fite Klub for the idea to create cheat-sheets.

        Please feel free to point out any mistakes to be corrected or additions to be done in these documents.

Disclaimar: This is a document created for my personal use for the purpose of studying. There is no intention of violating any copyright. And please use it with your own discretion.

Dream of Pi

Published by யாத்ரீகன் under , on செவ்வாய், நவம்பர் 27, 2012
ஏனோ இன்று மனம் முற்றிலும் ஆராவாரமற்றிருக்கின்றது. Life Of Pi -இல் சொல்லப்படும் அந்த french swimming pool போல தெளிவான மனம். குறிப்பிடத்தக்க நிகழ்வேதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விடியற்காலையிலிருந்து மதியம் வரை, 20-30 பேர் கொண்ட உறவினர் குழு சூழ அதீத ஓசையுடனிருந்த சூழலிருந்து விடுபட்டதாலா ? இல்லை வேலை ஏதுமில்லாததாலா ? எனக்கென்னவோ, இவையெல்லாம் just environment மட்டுமே, ஆனால் அமைதியை தூண்டிவிட்ட catalyst, Cinema Paradiso & The Legend of 1900 இரண்டிற்குமான பின்னணியிசை தொகுப்புதானென தோன்றுகிறது.

நம்மூர் இசையராசா இசையில் இல்லாத அமைதியா என்று துடிக்கும் இரசிகர்கள் அமைதி காக்கவும், ஏனோ அவரின் திரையிசையை கேட்கும்போது, அங்கிங்கு நினைவிருக்கும் பாடல் வரிகள், காட்சிகள், பாடல் நினைவுபடுத்தும் வாழ்க்கை நிகழ்வுகள் என பல கலக்கங்க ள். மேலே குறிப்பிட்ட இரண்டு படங்களுக்குமான வசதி, என் மறதி + 1 முறை மட்டுமே பார்த்தது.

மறதி என் வரமென்றால், கனவுகள் என் மற்றொரு வரமென்பேன். நேற்று முதல் முறை சந்தித்த நண்பர்கள் சிலரை, என் கனவின் சாகசப்பயணங்களில் (நேற்று கண்ட Life Of Pi படம் போன்ற) சந்தித்ததை மனைவியிடம் சொன்னபோது, "அதெப்படி நேற்றுதானே முதல் முறை சந்தி த்தீர்கள், நெசமாத்தான் சொல்றீங்களா.. " என கற்றது தமிழ் அஞ்சலியாய் மாறி கேட்கும்போது, நானும் Pi போல மாறி, "So you want a story that you can believe ? .. " என கேட்கலாமென நினைத்து அமைதியானேன்.

Life Of Pi பலருக்கு என்ன வாழ்க்கை தத்துவம் சொல்லித்தந்ததோ தெரியவில்லை, பலரும் அதை குறிப்பிட்டு சொன்னதால்தான் இந்த கேள்வி. கல்கத்தாவிலிருந்தபோது இதன் புத்தக வடிவத்தை பார்த்த நினைவு. புலி-புல்லுக்கட்டு கதையோ என்றெண்ணி படிக்காமலே போனது. இதற்கு ஏன் புதுச்சேரியில் zoo அமைக்கவேண்டுமென தெரியவில்லை, ஒருவேளை இந்(து)திய மத பின்னணிக்காகவா ?

193 வார்த்தைகளுக்கே தள்ளுது. சோம்பேறித்தனம் என பழிபோட்டு தப்பிக்க விரும்பவில்லை, திமிர் என்றே சொல்லுவேன். வெட்டி முறித்த வேலை என்றோ அடங்கிப்போனது, இருந்தும் ஒவ்வொரு தினமும் எழுதவதற்கான inspiration வரி தோன்றுவதும், அதை அப்புறம்-அப்புறம்-அப்புறம் என கடத்திவிட்டு, அடுத்த நாளுக்கான குற்றவுணர்வை, குற்றவுணர்வில்லாமல் கடந்து செல்ல கற்றுக்கொண்டிருந்தேன்.

இவ்வளவு நாளாய் இல்லாத அக்கறை, இன்றைக்கென்ன புதிதாய் என தோன்றலாம். இதே திமிரென்ற ஒட்டகத்தின் திமில் ஓட்டத்திலும் நுழைந்து வேலையைக்காட்டிவிட்டது. வரும் ஞாயிறு 10k ஓட பதிவு செய்திருந்தும், தொடர்சியாய் 2k கூட ஓடமுடியாத நிலையில்தான் என் பயிற்சி இருக்கின்றது. 4 நாட்களில் என்ன செய்ய முடியுமென தெரியவில்லை, ஆனால் இதை வளரவிட்டால், வேறெங்கோ வளர்ச்சி வெளிப்படையாய் தெரிகின்றது. குனிந்து shoe lace போட முடிவதில்லையென lace-less shoe வாங்குவதற்கு பதில், ஓட்டத்தை அதிகரிக்கவேண்டும்.

இத்தனைக்கும் நடுவே மனதை அறுத்த அந்த facebook மின்னஞ்சலை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. முதல் முறை, தெரியாமல் செய்வது மட்டுமே தவறு, அதன் பின்.....

வேகம்

Published by யாத்ரீகன் under on திங்கள், மார்ச் 19, 2012
காலையில் அலுவலகம் செல்லும்போது சாலையோரம் வெள்ளைத்துணிகொண்டு மூடிவைக்கப்பட்டிருந்த உருவமொன்று, ஆணா பெண்ணாவென தெரியவில்லை, இளவயதா முதியவராவென தெரியவில்லை. அருகே அநேகமாய் அந்த உருவம் சென்ற இரு சக்கர வாகனமாயிருக்கலாம், கைப்பிடி உடைந்து நெளிந்திருந்தது. இரத்தம் சிதறியிருந்ததாவென நினைவில்லை. இதை தாண்டிச்சென்ற வாகனங்கள்  ஒரு நொடி நிற்கக்கூட முடியாமல், மெல்ல நகர்ந்துகொண்டே முகத்தை முதுகில் சில நொடிகள் நிப்பாட்டிக்கொண்டிருந்தன்.

 நாள் முழுதும் இதைப்பற்றியே நினைவுகள்தான் மனதை ஆக்கிரமித்திருந்தன. இறந்தவரை சார்ந்து யாரிருந்திருப்பார் ? சில மணிநேரம் வீட்டிலிருந்து கிளம்புகையில் என்ன நினைத்திருப்பார்கள் ? விபத்து இவருடைய தவறா இல்லை இடித்தவருடையதா ? மரணம் நிகழ்ந்த அந்த நொடி என்னவெல்லாம் எண்ணங்கள் ஓடியிருக்கும்.

இதைப்போலத்தான், சில வாரங்களுக்கு முன், சிறுசேரி அலுவலகத்துக்கு மாற்றமாகி வந்த முதல் நாள், இரவு வீட்டுக்கு திரும்பும்போது லாரி மோதி இளைஞர் ஒருவர் பலியானார். திருமணமாகதவர் என்று கேள்விப்பட்டதும் ஏதோ ஒரு உணர்வு.

(ஒருவகையில்) எதிர்பார்த்த மரணங்கள் தரும் வலியைவிட, இப்படி கொஞ்சமும் எதிர்பாராத மரணங்கள் தரும் வலி நினைத்தும் பார்க்க முடியவில்லை.


31,568,400 நொடிகள்

Published by யாத்ரீகன் under on திங்கள், ஜனவரி 30, 2012
பளபளக்கும் பட்டுப்புடவை, நெருக்கி கட்டிய மணக்கும் மல்லி, சரசரக்கும் பட்டு வேட்டி, ஒரு நாளே ஆனாலும் உறுத்திக்கொண்டிருக்கும் சங்கிலி, உறவினர் வீடோ/விசேஷமோ/கோயிலோ/கடைத்தெருவோ எங்களையே பார்க்கும் கண்கள், வீட்டில் கிடைக்கும் கவனிப்பு, முதல் நாள் உணர்வு, திகட்டத்திகட்ட ஊஞ்சல் ஆட்டம், திருமணமண்டபத்தை கடக்கும் நினைவுகள், குடும்ப வாழ்கையின் அடுத்த  கட்டத்துக்கான விசாரிப்புகள், சொதப்பிய பயணத்திட்டம், ஜிகிர்தண்டா, எங்களுக்குள்ளான பிரத்தியேக கொசுவர்த்திச்சுருள் பேட்டி பதிவு ...  என 31,568,400 நொடிகளை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்..


வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி :-)

எழுத்து நடை

Published by யாத்ரீகன் under on வெள்ளி, டிசம்பர் 30, 2011
இரு நாட்களுக்கு முன் குளிரும், பனிசார்ந்த இடமாக இருந்த சென்னை நேற்றுமுதல் புயல் காற்றும், மழை சார்ந்த நிலமாக உருவெடுத்திருக்கிறது. நேற்று இரவே மின்சாரம் போய்விட்டது, எவ்வளவு எரிபொருள்தான் apartment-இல் சேர்த்து வைத்திருப்பார்கள், அதுவும் தீர்ந்துபோய்விட இரவின் இருளோடு, apartment இருளும் கரைந்துவிட்டது.

தொடர்ந்து எழுத ஆரம்பித்திருப்பதை பற்றி நேற்று அலுவலகம் செல்லும்போது யோசித்துக்கொண்டிருந்தேன். இங்கே எழுதுவது என்ற வினைச்சொல்லை தட்டச்சுவது என்று கருதிக்கொண்டு படிக்க மறந்துவிடாதீர்கள்.

முதலில், எழுதிக்கொண்டிருக்கும்போதே வரும் பிழைகள். இவற்றில் பெரும்பாலும் 'அஞ்சல்' முறை பயன்படுத்தி எழுதிக்கொண்டிருக்கும்போது வரும் பிழைகள். எழுதும்போதே கண்டுகொண்டு அவ்வப்போது சரிசெய்துவிட்டாலும், பாறைகளின் இடுக்கே கசியும் நீரைப்போல தவிர்க்கமுடிவதில்லை.

அடுத்து வருவது, comma, semi-Colan, ஆச்சரியக்குறி போன்றவைகளின் சரியான  பயன்பாடு. முன்பே இவற்றின் பயன்பாடு பற்றி ஐய்யம் இருப்பினும், நாம் எழுதுவதென்ன இலக்கியமா, கிறுக்கல்தானேவென்று கண்டுகொள்வதில்லை. ஆனால், 750 எழுத ஆரம்பித்தவுடன் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த குறையை சரிபடுத்திக்கொள்ளலாமென நினைத்திருக்கிறேன். இதோடு தொடர்புடைய ஒரு கேள்வி, கல்வெட்டுக்களில்/ஓலைகளில் என பழங்கால தமிழ்மொழிப்பயன்பாட்டில் இத்தகைய குறிகள் இருக்காதென கேள்விப்பட்டிருக்கிறேன், அது உண்மையா ? இல்லை, இந்த குறிகளுக்கு இணையான வேறு பயன்பாடு இருக்கிறதா ? அதுவும் இல்லையெனில் பின்னர் எப்படி வாசித்தார்கள் ? யாராவது வாசகர்கள் (இதை படித்தால்) எதாவது சுட்டி கொடுத்தால் நன்றி நவில்வேன்.

இவற்றுக்கு அடுத்து அதிகம் இருக்கும் பிழைகள், சந்திப்பிழைகள். இது குறைவாகவே இருக்கென நினைக்கிறேன். முதல் இரண்டு வாசிப்பிலும் விடுபட்டுப்போகின்றன, காரணம் ஒரு வார்த்தையை கண்டதும் மூளை அதை உடனே அடையாளம் கண்டுகொண்டுவிட்டதாய் நினைத்துக்கொண்டு வாசித்துவிடுகிறது. சில சமயம், 4/5 வாசிப்புக்கு பிறகும் சரிபார்த்த ஒன்றை, 2 நாட்களுக்கு பிறகு பார்க்கும்போது கண்ணில் படும் பிழைகளை கண்டால், என்னை என்ன செய்வதென்றே தெரியவில்லை.

பிறகு, பிறமொழிக்கலப்பு. ஆங்கிலம், கிரந்தம் என முடிந்தவரை தவிர்த்து, அதே நேரம், படிக்க இலகுவானதாய் எழுத்து இருக்கவேண்டுமென்பது என் எண்ணம். சில நேரங்களில் தமிழில் இணை சொற்கள் இல்லாத வார்த்தைகளை அப்படியே எழுதுவது வாசிப்புக்கு இலகுவானதாக இருக்கும். இந்த இடத்தில் பலருக்கு கருத்துவேறுபாடு இருக்கலாம். நான் இன்னும், ஒரு மதில் மேலிருக்கும் பூனையின் நிலையை ஒத்திருக்கிறேன்.

எல்லாவற்றுக்கும் அடுத்து, நடை. ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனித்துவமான எழுத்து நடை உண்டு. 10 நாட்கள் ஒருவர் தொடர்ந்து எழுதுவதை படித்தால் அவரின் அடுத்த எழுத்து எப்படி இருக்குமென எளிதில் ஊகித்துவிடலாம். நாம் படிக்கும் பலவற்றிலிருந்து ஒரு நடை தனித்து தெரிந்து நம்மை கவராவிட்டால், பத்தோடு பதினொன்றான குப்பைபோல, படிக்காமல் subscribe செய்து குவிந்துவிட்ட rss/atom feed-களாகின்றது. இந்த இறுதி விஷயமே வெற்றிக்காண காரணம். இல்லாவிட்டால், எழுதும் அத்தனைபேருமே ஒரு எஸ்.ரா-வாகவோ, ஜெ.மோ-வாகவோ,சாருவாகவோ பலரை சேர்ந்துவிடலாமே.

ஒவ்வொருவரும் தங்களுக்கான எழுத்துநடையை செயற்கையாக உருவாக்காமல் இருப்பதிலும்  வெற்றி இருக்கிறது, செயற்கையானது எளிதாக யாரையும் கவர்ந்துவிடாது, மேலும் அதை தக்கவைத்துக்கொண்டிருப்பதும் கடினமானதொன்று.

முன்பு ஒருகட்டத்தில், எஸ்.ரா போலவே இருக்கனுமென்று முயற்சி செய்து மொக்கையாய்போனது நினைத்தால் சிரிப்புத்தான் வருது.

தனித்துவமான எழுத்துநடை என்று சொன்னதும் எனக்கு உடனே நினைவுக்கு வருவது இவை (இவற்றில் பல, நான் அதிகம் படித்த/தொடர்ந்து படிக்கும் இணைய எழுத்தாளர்கள்)

பாலகுமாரன் - முன்/பின் என இவரின் நடை மாறும் காலகட்டத்தையும் சொல்லலாம். 'இரும்பு குதிரைகள்' மூலம் இவரின் வசீகரம் உருவானது. சமீபத்தில், 'உடையார்'-இல் அந்த வசீகரம் சிதைந்துபோனது.

எஸ்.ரா - இவரின் 'துணையெழுத்து' தொடரே என்னை மறுபடியும் தீவிர வாசிப்புக்கு உட்படுத்தியது. அப்போது படித்தக்கொண்டிருந்தவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. முக்கியமாக அவரின் உவமைகள். நிகழ்வுகளையும், உணர்வுகளையும் சொல்ல அவர் கையாளும் வித்தியாசமான உவமைகள் திரும்பிப்படிக்க வைத்தது. பயணம் சார்ந்த எழுத்து அதற்கு மேலும் ஒரு காரணமாக இருக்கலாம் :-)

இளவஞ்சி - அருகிலிருந்து பேசும் இயல்பான நகைச்சுவை மூலம் பலரை தன்பக்கம் ஈர்த்துக்கொண்டவர். முன்னால் இணைய எழுத்தாளர், இப்போது என்ன செய்கிறாரென தெரியவில்லை. என்னுடைய reader feed-களையும் நான் பார்க்காததால் இவர் எழுதிகிறாரவெனவும் தெரியவில்லை.

டுபுக்கு/உருப்படாதது/kg jawarlal/பாரா/சொக்கன் - சுதாஜா touch இருப்பினும், அதை உணராமல் படிக்கச்செய்துகொண்டிருப்பார்கள். இதில் 'உருப்படாதது' மற்றவர்களைவிட serious-ஆன பலவற்றை, நமக்கு தெரிந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஒன்றை சுவாரசியமாக-நகைச்சுவையோடு சொல்லி இவ்வளவு இருக்குதடாவென நினைக்கவைத்துவிடுவார். தனியேயின்றி, இந்த வரிசையில் பாரா-சொக்கன் இருவரையும் சேர்த்தற்கு பலரும் எதிர்க்கலாம், நான் இவர்களின் வலைத்தளத்தை மட்டும் படித்த அனுபவத்தை வைத்து சேர்த்துள்ளேன்.
மேலே சொன்ன வகையில் பல பதிவர்கள் இருக்கிறார்கள், உடனே தோன்றியது மேலுள்ளவர்கள்.

அ.முத்துலிங்கம் - சமீபத்தில்தான் இவரின் வலைத்தளம் அறிமுகமானது. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல நகைச்சுவைதான் இவரின் வலிமை. இவரின் கட்டுரை வாழைப்பழம் முழுக்க ஊசிகள்தான்.

அக்கரைச்சீமை 'பாலா'/hollywood bala - எனக்கு தெரிந்து வலைத்தளங்களில் பலரும் திரைவிமர்சனங்களை குவிப்பதற்கு ஒரு காரணமாக இவர் இருக்கலாம்.

மரு. புரூனோ - பலருக்கும் பல கருத்து வேறுபாடுகள் இருப்பினும், இவர் ஒரு தகவல் சுரங்கம் என்பதில் வேறுபாடு இருக்காது :-)  , எழுத்தில் தெரியும் அசாத்திய பொறுமையும், எளிமையோடு கொண்ட தகவல் செழுமையும் அருமை.

வினவு (ஒருகாலத்தில்) - சொல்லவந்ததை மனதில் மற்றுமல்ல இரத்தத்திலும் சூடேற்றுவதில் இவர்கள் எழுத்து மிக வேகமானதாய் இருந்தது. தற்போது அதை செயற்கையாக செய்வதைப்போலதொரு தோற்றம் வந்துவிட்டதால் இரசிக்க முடியவில்லை.

750 எழுதிக்கொண்டிருக்கையில், எனக்கான எழுத்து நடையை அடையாளம் கொண்டுகொள்வேணாவென தெரியாது, ஆனால் அதை செயற்கையாய் புகுத்தக்கூடாது என்று மட்டும் எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.

இளையராஜா - Confessions - 678 - தமிழ் திரைப்படங்கள்

Published by யாத்ரீகன் under , on வியாழன், டிசம்பர் 29, 2011
சென்னையில் மழைச்சாரலோடு கூடிய குளிரா என வியப்போடு சொல்வதே இப்போது வழக்கமாகிவிட்டது. இன்றும் என்றுமில்லாமல் சில degree குளிர் அதிகம், காரணம் அந்த இன்னும் பெயரிடப்படாத புயல்தான் போல.

நேற்று இளையராஜா இசை நிகழ்ச்சி பற்றி சென்றிருந்த எல்லா இரசிகர்களும் வரம், வாழ்வு என சிலாகித்துவிட்டார்கள். இசை, குறிப்பாக தமிழ் திரைப்பட இசை மட்டுமே கேட்டுத்தலையாட்டும் இரசிகன் நான், எனக்கு இளையராஜாவோ, இல்லை குறிப்பிட்ட பாடல்கள் மேலோ, அடாடா அந்த prelude-இல் வயலின் கேளு, இந்த orchestration அருமையா வந்திருக்கு என பிரித்து மேயத்தெரியாது. நேற்று நடந்த இசை நிகழ்ச்சிக்கு இதுதான் முதல் விதிமுறை என்பதுபோலத்தான் நண்பர்கள் tweet-இல் கொடுத்த நேரடி வர்ணனை இருந்தது. வீட்டில் ஒரு நல்ல headset-இல்/home-theatre-இல் கேட்டுவிடுவதை விட நேரில் கேட்பது என்ன வித்தியாசம் வந்துவிடப்போகுது என்றெண்ணி, புல்லரித்து அந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை.

750words-இல் ஒரு மிகப்பெரும் பலம், இதுதான் எழுதவேண்டுமென இல்லாதிருப்பது. இதில் எழுதுவதை வலைதளத்தில் பதியவேண்டுமென நினைத்தாலே ஒரு bloggers block வந்துவிடுகிறது (எதோ ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரென நினைப்புதான் ;-)

பிறமொழிப்படங்கள் பார்த்து வெகுநாளாகிவிட்டபடியாலும், சென்னையில் நடந்த உலகத்திரைப்பட விழாவில் பங்கேற்க முடியாத குறையை போக்கும்விதமாகவும், அங்கே திரையிடப்பட்ட படங்களாக தேர்வுசெய்து பார்க்கத்துவங்கியிருக்கிறேன். வீட்டிலேயே movie marathon ஓட்டி எவ்வளவு நாளாகிவிட்டது :-(

Confessions:
ஜப்பானிய படங்களை அதிகம் பார்த்ததில்லை என்ற போதிலும், இதை குறிப்பிட்டு தேர்ந்தெடுத்த காரணம், இதை ஒரு கொரிய படமென்று நான் குழப்பிக்கொண்டதனால்தான் :-). பொதுவாக கொரியப்படங்கள், காதலாகட்டும், நகைச்சுவையாகட்டும், வன்முறையாகட்டும் எதிலும்  ஏமாற்றமளிப்பதில்லை.



இதை thriller, horror, mystery எனவும் வகைப்படுத்தமடியவில்லை. படம் ஆரம்பித்த 15-20 நிமிடங்களில் முழு கதையையும் போட்டுடைத்துவிடுகிறார்கள். இதற்குமேல் எப்படி 1:30 மணிநேரம் ஓட்டப்போகிறார்களென யோசித்தால் Roshoman சுவாரசியத்தாலும், அற்புதமான camera கோணங்களாலும், பின்ணனி இசையாலும் நம்மை எங்கும் அசையவிடுவதில்லை. படம் முழுக்க slow motion sequenceகளாலே நிரம்பியிருக்கின்றது.

படத்தை பார்க்கும்போதே, பள்ளி/கல்லூரி படிக்கும்போது எப்பேர்ப்பட்ட மகான்களாக இருந்திருக்கிறோமென நம்மைப்பற்றியே பெருமைகொள்ளச்செய்யுமளவுக்கு இருக்கிறது  அவர்களின் சேட்டை. நல்லவேளை, படத்தின் வரும் அனைவரும் முகவெட்டும் ஒரேமாதிரியிருந்து குழப்பியடிக்காமல் சிறிதுவித்தியாசமாயிருந்து காப்பாற்றிவிடுகிறார்கள். இருந்தும், கொஞ்ச நேரத்துக்கு 2 lead -ve கதாபாத்திரங்களில் வருபவர்களை வித்தியாசம் கண்டுகொள்வது கடினம்தான்.

இப்படி ஒரு genreக்கு அட்டகாசமாய் camera கோணங்களை தேர்வுசெய்யும் சுவை இவர்களுக்குத்தான் வரும்போல. படத்தில் கொஞ்சம் psycho analysis-உம் செய்துவிடுகிறார்கள். செல்வராகவனுக்கு நல்ல தீனியாய் இந்த பட remake அமையலாம் :-) 

நேரமும், பொறுமையும் இருந்தால் இந்த படத்தை பார்க்க அமருங்கள்.

678:

பெண்கள் உள்ளாகும் பாலியல் தொல்லைகளை பற்றி எடுக்கும் படங்களிலேயே, 'காளை மாடு ஒண்ணு, கறவை மாடு மூணு......' என பாட்டெழுதி சொல்ல வந்ததை நீர்த்துப்போகச்செய்ய நம்மால் மட்டும்தான்.

இந்த படமும், இப்படி தொல்லைகளுக்கு உள்ளாகும் 3 பெண்கள் பற்றிய கதைதான், ஆனால் நடப்பது எகிப்தில், இதுவரை பெண்களால் பாலியல் புகார் பதிவு செய்யப்படாத நாடாக காண்பிக்கிறார்கள்.

பொதுவாக பாலியல் புகார்களுக்கும், பெண்கள் அணியும் உடைக்கும் தொடர்பு செய்து பேசுவது ஆண்களிடம் (எந்த மதத்தவராயினும்) இயல்பாக இருக்கும். அதையும், மதத்தோடு சம்பந்தப்படுத்தி பேசுவது மிகவும் delicate-ஆனதொன்று. படத்தில் அதை மிக நுணுக்கமாக மூன்று வேறு வேறு கோணங்களை கொண்ட, வேறு வேறு வாழ்க்கை முறைகளிலும், தளங்களில் இருக்கும் பெண்களை கொண்டு கையாண்டிருப்பது அருமை.

இறுதி 30 நிமிடங்களில், நம்மிடம் இருக்கும் எல்லா கேள்விகளையும் (உ.தா. கவர்ச்சியாக உடையணிந்ததால்தான் ஆண்கள் தூண்டப்படுகிறார்கள் , (அல்லது) எப்படி உடையணிந்தாலும் அத்துமீறுபவன் மீறிக்கொண்டுதான் இருப்பான்) அந்த 3 பெண் கதாபாத்திரங்கள் மூலமே எழுப்பியிருப்பதுமட்டுமில்லாமல் அதற்கான பதில்களை நம்மையே அதில் தேடி உணரவைப்பதுதான் படத்தை மனதில் படியச்செய்கிறது.

இதை எழுதிக்கொண்டிருக்கையில், தமிழ்த்திரையுலகின் ஒரு முக்கிய இயக்குநரின் முதல் வெற்றிப்படமான 'புது வசந்தம்' ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருவேளை அவரின் 'புரியாத புதிர்' commercial-ஆக வென்றிருந்தால் தமிழிலும் Confessions original-ஆக வந்திருக்குமா ?

இந்த குளிரிலும் சீக்கிரம் எழுந்து 750 type செய்யும் என்னை பாராட்டுவீர்கள்தானே ? நீங்கள் பாராட்டாவிட்டால் என்ன, 750words.com என் கணக்கில் ஒரு புள்ளி ஏற்றுகிறார்கள் :-)

750 வார்த்தைகள்

Published by யாத்ரீகன் under , , on புதன், டிசம்பர் 28, 2011

இன்றோடு 3 நாட்களாகிவிட்டது இந்த 750 வார்த்தைகள் தளத்தில் சேர்ந்து. சக twit புலிகளை கண்டு சூடு போட்டுக்கொண்ட பூனை கதையாகிவிடக்கூடாது என்ற எண்ணத்தோடு அலுவலகத்துக்கு நேரமானாலும், மனைவி பின்னாடியிருந்து கடிகார நொடி முள்ளைப்போல  சுற்றி சுற்றி வந்து நேரத்தை நினைவுபடுத்திக்கொண்டிருந்தாலும், கடமை உணர்ச்சி பொங்க, twit அரட்டைகளையும் மீறி ஒருவழியாக ஆரம்பித்துவிட்டேன்.

Boxing Day என்று cricket-ஐப்பற்றி எங்கும் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கையில் என் ஆர்வம் எங்கு தொலைந்து போனது என்று தேடோ தேடோவென தேடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு பைத்தியம் பிடிக்கத்துவங்கியது 1996 உலகக்கோப்பை என்று நினைக்கிறேன், அதன் பின்னர், வீட்டில், தெருவில், அத்தை வீட்டில் என சென்ற இடமெல்லாம் எதையாவது உடைப்பது, சண்டை என வெறித்தனமாய் விளையாண்ட நாட்கள் அது. மூன்று cricket வெறியர்களை பெற்ற அம்மா ஞாயிற்று கிழமைகளிலும், கோடைக்கால விடுமுறைகளிலும் பட்ட பாடு சொல்லி மாளாது :-)

எங்களுக்கு என்று ஒரு புத்தகம், அதுதான் எங்களுடைய wisden database. நாங்க விளையாடும் எல்லா match-களும் (?) , அதைப்பற்றிய வரலாற்று குறிப்புகளும் அதில் இடம்பெறும். சின்னப்பசங்களாய் இருக்கும் தம்பிகளை ஏமாற்றுவதா பெரிய காரியம் ? :-) , அதில் நான்தான் leading record maker

அத்தை வீட்டின் பெரிய மொட்டை மாடியாகட்டும், எங்கள் வீட்டின் குறுகலான ரேழியாகட்டும், மூன்று கோடுகளை chalk piece-ஆல் வரைந்துவிட்டாலே எங்கள் மைதானம் தயார். நாட்டில் மற்ற விளையாட்டுகள் அழிந்துகொண்டிருக்க, cricket மட்டும் வாழ்வாங்கு வாழ இதுவே காரணமென்று யாருக்குமே புரியவில்லையா ?

ஒரு bangalore one-day match, srikanth-உம் kumbley-யும் அவரவர் அம்மாக்கள் stadium-இல் பார்க்க ஒரு விறுவிறுப்பான போட்டியை வென்று கொடுக்க, நாங்கள் எங்கள் அம்மாவுடன் அதே தீவிரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தோம்.  எங்களோடு சேர்ந்து அம்மாவுக்கும் cricket  ஆர்வத்தை உருவாக்கிவிட்டோம். இதில் பெரும்பங்கு கடைசி தம்பியினுடயதுதான். இன்றுவரை தம்பிகளுக்கு ஈடுகொடுத்து விமர்சனம் செய்வதாகட்டும், அவ்வப்போது நடக்கும் போட்டிகளை பார்ப்பதாகட்டும் என அம்மா தன் consistency-ஐ இன்றும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.

 தமிழனின் கலாச்சாரப்படி காசிருக்கும்போது rubber பந்து, கொஞ்சம் காசிருக்கும்போது plastic பந்து, காசே இல்லாதபோது பழைய காகிதத்தினிடையே சிறு கல்லை வைத்து சுருட்டி, ஆவின் கவரில் திணித்து, முற்றிலும் சைக்கிள் tube-ஐ வெட்டி செய்த rubber band-களால் சுற்றி விளையாடிக்கொண்டிருந்தோம். Cork/Stitch பந்து என்பது bet matchகளில் மட்டுமே எங்களுக்கு சாத்தியப்பட்டது. இன்று நினைத்துப்பார்த்தால் நாங்கள் தொலைத்த பந்துகளின் காசில் ஒரு cricket kit-டே வாங்கி விடலாம்.

இந்த ஆர்வத்துக்கு தீனி போட கொல்கத்தாவிலிந்தபோது  Eden-Garden  மைதானத்தில் நடந்த இந்திய - தென்னாப்பரிக்கா டெஸ்ட் போட்டியைக்கான அடிதடி, சிபாரிசுகளிடையே ஒரு நுழைவுச்சீட்டு வாங்கி சென்றிருந்தேன். போட்டியை நேரில் பார்ப்பது ஒருவித சுவாரசியமேன்றாலும், அவ்வப்போது வரும் கடி விளம்பரங்கள், replay-கள் இல்லாமல் பார்க்க, பாட்டே இல்லாத தமிழ் மசாலா படம் பார்த்த ஒரு உணர்வு.

அப்போது தாதா அப்போது மெல்ல உருண்டு வரும் பந்தை எடுத்தாலே மைதானமே ஆர்ப்பரிக்க, மற்ற வீரர்கள் விழுந்து தடுத்தாலும் ஒரு ஏகத்தாலக்கூச்சல் செய்வதும் சிரிப்பைத்தான் இருந்தது, ஆனால் மைதானத்திலிருந்தபோது  மறந்தும் தாதா பற்றி பக்கத்திலிருந்த பெங்காலி நண்பனிடம் ஏதும் சொல்லிவிடவில்லை.

இப்படி வெறியனாயிருந்தவனுக்கு, எதோவொரு நாளென்று தூக்கத்திலிருந்து எழுந்தவன் போல மொத்த ஆர்வமும் போய்விட்டது. அசாருதீன், Hansie Cronje என ஒவ்வொரு கதையாய் வெளியே வர காரணமா என தெரியவில்லை, கடைசியா நான் முழுவதும் அமர்ந்து பார்த்த போட்டி என்னவென்றுகூட நினைவு இல்லை.

வேலை காரணமாக பல இடங்கள் மாறியபோது, tennis, volleyball என அப்பாடக்கராக மாறியபோது cricket சுத்தமாய் நினைவிலிருந்து அழிந்தது.

இந்தியா வென்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டி இறுதி overகளை ஆர்வமே இல்லாமல், தம்பிகள் channel-ஐ மாற்றவிடாததால் பார்க்கவேண்டியதாகிவிட்டது.

இதோ இதை எழுதிக்கொண்டிருக்கையில் 4 ஆஸ்திரேலிய wicket-கள் வரிசையாய் சரிந்துகொண்டிருக்க அந்தப்பக்கம் திரும்பிப்பார்க்க ஆர்வமில்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

போனவாரம் @rgokul -ஐ காணச்சென்றிருந்தபோது @rajeshpadman cricket விளையாடுவியா ? என கேட்டபோது ஒரு நொடி யோசித்து ஆமா என சொன்னதுக்கு என்ன காரணமென தெரியவில்லை.

திருமண அழைப்பிதழ்

Published by யாத்ரீகன் under , , , , on வெள்ளி, டிசம்பர் 17, 2010



முணுமுணுப்பு

Published by யாத்ரீகன் under on ஞாயிறு, நவம்பர் 21, 2010


வெளியான உடனே தரவிறக்கிவிட்டு, பின்னெப்போதும் கேட்டே இராத பாடல்கள் பல GB இடத்தை அடைத்துக்கொண்டிருப்பது ஒரு பக்கம்மெனில், மற்றொருபக்கம் புதிய பாடல்கள் குவிந்துகொண்டே இருக்கின்றன. அப்படித்தான் இந்த படப்பாடல்களும் தொடங்கியது. சசி-ஜேம்ஸ் அப்படியொன்றும் எதிர்பார்க்கும் கூட்டணியில்லையென்றாலும், வேலையொன்றிற்கு பிண்ணணியில் ஓடிக்கொண்டிருந்தது.

இரண்டாவது வரி கேட்டதுதான் தாமதம், கவனம் உடனே வேலையிலிருந்து பாட்டின்மேல் திரும்பியது. பொதுவாகவே என் கவனம் வரிகள் மீது படியாது, இதனாலயே பாட்டின் வரிகள் நினைவில் நிற்காமல் சரிந்துபோகும் சாபம் பெற்றவன் நான்.

இரவைப்பற்றியும், அதன் மீதான கவர்ச்சிக்கு காரணம் எது என விரிந்து கொண்டிருந்த பாடல் வரிகள் மிகவும் பிடித்துப்போனது. மண்டைக்குள் நுழைந்துகொண்டு, இன்று நாள் முழுவது இரவுக்கு காத்துக்கொண்டு முணுமுணுத்துக்கொண்டிருக்கிறேன்.

இரவின் மீதான் காதல் எப்போது தொடங்கியதென தெரியவில்லை, ஆனால் தூங்கா நகரத்திலிருந்து வந்தவனுக்கு அந்த காதல் இல்லையெனில்தான் ஆச்சரியமாயிருக்கும்.

இரவைப்பற்றியும், அதன் மீதான பல்வேறு நினைவுகளை எழுத நினைக்கையில் எல்லாமே வரிசைக்கட்டிகொண்டு நிற்கின்றன.

மிகப்பிடித்த இரவொன்று, சாந்திநிகேதனின் rail நிலையத்தின் bench-னில் கடத்தியது. சிறிதும் முன்னேற்பாடேதுமின்றி, எங்கே போவது என்று கொஞ்சமும் யோசிக்காமல், கண்ணில்பட்ட முதல் rail-இல் ஆரம்பித்த பயணம். எங்கேயும் தங்க பணமில்லை, ஒர் இரவை கடத்தியாகவேண்டும், வித்தியாசமாகயிருக்கட்டுமென rail நிலையத்திலேயே இருந்துவிட்டேன். மொழி தெரியாத ஊர், கொஞ்சம் முரட்டுத்தனமாய் தெரியும் மனிதர்கள், மிகவும் அந்நியனாய் தெரிவது நான் ஒருவன்தான், மற்றொருபுறம் குளிரும் துளைத்துக்கொண்டிருந்தது, வசதிகளேதுமற்ற rail நிலையம் இருளில் முழுகிக்கொண்டிருந்தது. இப்படியிருந்த இரவு சுவாரசியமான நினைவாக மாறப்போவது தெரியாமல், தூங்கிவழியாமல் சுற்றத்தை கவனித்துக்கொண்டிருந்தேன்.

சாந்திநிகேதன் கல்லூரியிலிருந்து வீட்டுக்கு திரும்ப காத்திருக்கும் மாணவர்கள் குவியத்தொடங்கினார்கள். இவர்கள் கையிலொன்றும் T-square இல்லை, இசை கருவிகளும், காகிதமும்-தூரிகையும்தான். அங்கங்கே உட்கார்ந்துகொண்டு ஒவ்வொரு குழுவும் சிறு சிறு கச்சேரிகள் நடத்த, தொடர் andhakshari வகை கச்சேரிகளும் களைகட்ட, இத்தனை களேபரத்திலும் அங்கங்கே தூரிகைகளும் வேலை செய்துகொண்டிருந்தது.

இவை அத்தனையும் நடந்தது, அந்த கிராம மக்களின் கூட்டத்திற்கு நடுவே. ஆக சுவாரசியமான மனிதர்களுக்கும் குறைவில்லை. நீண்ண்ண்ண்ட இரவும் கரைந்துபோனது.

கொசுவர்த்தி சுருளை அணைத்துவிட்டு, இனி முணுமுணுத்துக்கொண்டிருக்கும் பாட்டிற்கு போவோம். Celebrate your night.




இந்த இரவுதான் போகுதேஏஏ.. போகுதேஏஏ..
இழுத்துக்கட்ட கயிறு கொண்டுவா நண்பனேஏஏ.. நண்பனேஏஏ..

இங்கேதான் சொர்கம் நரகம் ரெண்டும் உள்ளதேஏஏ.. உள்ளதேஏஏ..

ஆந்தை போலதான் இரவிலேஏஏ.. இரவிலேஏஏ..
கண்ணிரண்டை திறந்து வைக்கலாம் நண்பனேஏஏ.. நண்பனேஏஏ..

இங்கேதான் இன்பம் துன்பம் ரெண்டும் உள்ளதேஏஏ..

என்றென்றும் பகலிலே,
ஏதேதோ வலியிலே,
பொல்லாத நியாபகத்தை துரத்தி துரத்தி கொன்றுபோடு இரவிலேஏஏ..
பொய்யான வாழ்விலே,
மெய்யான இன்பம் இந்த போதையாலேஏஏ..

என்றென்றும் மனதிலே,
ஏதேதோ கனவிலே,
பொல்லாத ஆசையாவும் துரத்தி துரத்தி கொன்றுபோடு இரவிலே
பொய்யாக வாழும் வாழ்க்கைமேலே,
மெய்யான இன்பம் இந்த போதையாலேஏஏ..

இந்த இரவுதான் பிடிக்குதேஏஏ.. பிடிக்குதேஏஏ..
அர்த்தஜாமம் அர்த்தம் உள்ளதே நண்பனேஏஏ.. நண்பனேஏஏ..

இங்கேதான் சத்தம் அமைதி ரெண்டும் உள்ளதேஏஏ.. உள்ளதேஏஏ..

இன்னும் இன்பம்தான் இருக்குதேஏஏ.. இருக்குதேஏஏ..
ஒற்றை இரவிலே யாவும் தீருமோ நண்பனேஏஏ.. நண்பனேஏஏ..
என்றாலும் கோடி இரவு எதிரில் உள்ளதேஏஏ..

என்றென்றும் பகலிலே,
ஏதேதோ வலியிலே,
பொல்லாத நியாபகத்தை துரத்தி துரத்தி கொன்றுபோடு இரவிலே
பொய்யான வாழ்விலே,
மெய்யான இன்பம் இந்த போதையாலே

என்றென்றும் மனதிலே,
ஏதேதோ கனவிலே,
பொல்லாத ஆசையாவும் துரத்தி துரத்தி கொன்றுபோடு இரவிலே
பொய்யான வாழும் வாழ்க்கைமேலே,
மெய்யான இன்பம் இந்த போதையாலேஏஏ..

என்றென்றும் பகலிலே,
ஏதேதோ வலியிலே,
பொல்லாத நியாபகத்தை துரத்தி துரத்தி கொன்றுபோடு இரவிலே
பொய்யான வாழ்விலே,
மெய்யான இன்பம் இந்த போதையாலேஏஏ..

என்றென்றும் மனதிலே,
ஏதேதோ கனவிலே,
பொல்லாத ஆசையாவும் துரத்தி துரத்தி கொன்றுபோடு இரவிலே
பொய்யான வாழ்க்கை வாழும் வாழ்விலே, மெய்யான இன்பம் இந்த போதையாலே

இன்பம் இந்த போதையாலே
இன்பம் இந்த போதையாலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே




Kolkata Night Photo courtesy: http://www.flickr.com/photos/cambug/

இனி இரண்டு பயணச்சீட்டு

Published by யாத்ரீகன் under , on வெள்ளி, நவம்பர் 12, 2010
தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல... எனத்தொடங்கினால் யார் அந்த வேதாளம் ? எனவும்,
ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி.. என ஆரம்பித்தால் யார் அந்த மந்திரவாதி ? எனவும்,
தேவையற்ற கேள்விகள் எழும் என்பதால் :-)
எப்படித்தொடங்குவதென யோசித்துக்கொண்டே சில வாரங்கள் தாண்டிவிட்டன

பலவருட காத்திருக்குப்பின், நான் மேற்கொள்ளும் பயணங்களில் சிறு மாற்றம்,
30-Jan-லிருந்து நான் எடுக்கும் பயணச்சீட்டுகள் இனி இரண்டாகும் :-)

இந்த முறையும் நான் பார்த்த பெண்ணுக்கு, கல்யாணம் நடக்கப்போகுது,
ஆனா இந்த முறை என்கூட நடக்கப்போகுது :-)
எனக்கே நம்ப முடியல, ஆனா என்ன செய்ய, நீங்க எல்லோரும் நம்பித்தான் ஆகனும் :-D

பாரதியார் சொன்னது எது செய்ய முடிஞ்சதோ இல்லையோ, ஏதோ என்னால முடிஞ்சது, சேரநன்னாட்டிளம் பெண்ணை கண்டது ;-)

பேசும் மொழியிலிருந்து, பார்க்கும் படங்கள், கேட்கும் பாடல்கள்,
படிக்கும் புத்தகங்கள், செய்யும் வேலை,கனவுகள்.... என பெரும் காரியங்களிருந்து,
பிடித்த நிறம், பிடிக்காத உப்புமா,வணங்காத கடவுள்கள்... என சிறு காரியங்கள் வரை,
பல வேறுபாடுகள் இருந்தாலும்
பயணங்களின் மேலிருந்த காதலே எங்களிருவரையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைத்தது..

சந்தித்த இடமொன்று, பழகிய இடமொன்று,
தொடங்கிய இடமொன்று.. என பயணித்துக்கொண்டிருந்தது
நாங்கள் மட்டுமல்ல எங்களோடு சேர்ந்து காதலும்தான் :-)

திருமண தேதி: 30-January-2011
இடம்: மதுரை

திருமண வரவேற்பு: 2-Feb-2011
இடம்: திருவனந்தபுரம்

பதிவுகள் எழுதி பலகாலம் ஆனதால் இந்த வலைத்தளத்தை எவரும் தொடரவோ படிக்கவோ செய்வார்கள் என்று நம்பிக்கையில்லை :-) , பதிவர்கள் எவரிடமும் தொடர்ந்து பேசியதும், பழகியதுமில்லை..
இருப்பினும் நண்பர்கள் இந்த நேரத்தில் மதுரையிலோ, திருவனந்தபுரத்திலோ இருந்தால் வந்திருந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் :-)

மேலும் விபரங்கள் விரைவில்..

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Published by யாத்ரீகன் under on வெள்ளி, ஜனவரி 01, 2010
ஒர்க்குட்,டிவிட்,sms,குழு மின்னஞ்சல்கள்
என அனைத்திலும் நிரம்பி வழியும் புத்தாண்டு வாழ்த்துக்கள்,
நேரில் சொல்லத்தான் யாருமில்லை.....