யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

குழந்தைகளுக்கான அறிவுத்திருவிழா

Published by யாத்ரீகன் under on திங்கள், அக்டோபர் 05, 2009
நண்பர்களே,
இந்தியாசுடர் என்பது நண்பர்கள் சிலர் சிறுதுளியாய் தொடங்கிய ஒரு தன்னார்வக்குழு. இன்று பெரும் துளியாய் வளர்ந்து, பெரும் ஆறாய் மாறி பலரை பயனடைய வைக்க முயன்றுகொண்டிருக்கிறோம். எங்களைப்பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லலாம்.

இந்த பதிவின் நோக்கம், இந்த குழுவை அறிமுகப்படுத்துவதைவிட இதன் மூலம் இன்னும் சிறிதுநாட்களில் நடக்க இருக்கும் “அறிவுத்திருவிழா” நிகழ்ச்சியை உங்களிடமும், உங்கள் நண்பர்களிடமும் பரப்புவதே.

11-அக்டோபர்-2009 சென்னையையும், அதைச்சுற்றிலும் இருக்கும் குழந்தைகள் இல்லத்திற்கான நிகழ்ச்சி. உங்களுக்கு தெரிந்த தன்னார்வக்குழுக்கள் இருப்பின் (சிறிதோ/பெரிதோ) அவர்களிடம் சொல்லி அவர்களையும் இதில் பங்கேர்க்கச்செய்வதின் மூலம் அவர்களுக்கான பயனை அடையச்செய்யலாம்.

1. போட்டிகள் (திருக்குறள்/ படம் வரைதல், வினாடிவினா, மொழிபெயர்ப்பு..)
2. எதிர்கால பாதை பற்றிய பேச்சு
3. “சாதிப்பது சாத்தியமே” - சுயமுன்னேற்ற பேச்சு








நிகழ்ச்சியில் பங்குபெறவரும் இல்லங்களில் குழந்தைகளுக்கு பயண செலவும், மதிய உணவும் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: admin@indiasudar.org

நிறைந்த நினைவுகள்

Published by யாத்ரீகன் under , on திங்கள், மார்ச் 16, 2009
என்ன சொல்வதென தெரியவில்லை, பலநாளாய் படிக்கவேண்டுமென நினைத்திருந்த “வெயிலோடு போய்” சிறுகதை “பூ” என்ற படமாக வந்தபொழுதும், அதைப்பற்றிய நல்ல விமர்சனங்கள் எழுந்தபோதும் கட்டாயம் பார்க்கவேண்டுமென நினைத்திருந்தேன். சில நாட்களுக்கு முன் கேட்டிருந்த ஒரு தோழியின் நெகடிவ் விமர்சனத்தையும் மீறி இன்று பார்க்கத்துவங்கினேன். பார்த்ததும் தோன்றியதுதான் இந்த பதிவின் முதல் வரி. என்ன சொல்வதென தெரியவில்லை.

மனது நிறைய ஒரு வகையான, என்னவென்று நேரடியாக பெயரிட முடியாதொரு ஒரு உணர்வு மனமெங்கும் நிறைந்திருக்கின்றது. மாரியின் கள்ளங்கபடமில்லாத அன்பா, அந்த இறுதிமுடிவா, வாழ்வின் நிதர்சனத்தில் அடிபட்டுப்போகும் எல்லாமா, எளிதாய் காணவியலாத இப்படியொரு எதிர்பார்ப்பில்லாத அன்பா.. என எல்லாவற்றையும் ஒன்றாய் கண்டதொரு ஒரு உணர்வுதான் அது.

சுருக்கமாய் சொல்வதென்றால் மிக மிக மிக பிடித்தபடங்களுள் ஒன்றாக இருக்குமென்று நினைக்கவேயில்லை. ஆனால் அவ்வளவு சுருக்கமாய் முடித்துவிட தோன்றவில்லை. படத்தின் ஒவ்வொரு காட்சியையும், பாத்திரப்படைப்பையும், வசனங்களையும் நுணுக்கமாய் இரசித்து இரசித்து சந்தோஷப்பட்டு, வருத்தப்பட்டு பார்த்துக்கொண்டிடுருந்தேன்.

ஆரம்பத்திலிருந்தே ஆரம்பிக்கலாம், பெயர் போட்டு முடித்ததும் வரும் அந்த கிராமத்தின் அறிமுகக்காட்சிகளில் வரும் பாளம் பாளமாய் வெடித்திருக்கும் மண்ணும், அடுத்து வரும் முகமெங்கும் சுறுக்கம் கொண்ட பாட்டியின் க்ளோசப் காட்சிகளில் போடும் அட, இறுதிவரை வரும் ஒவ்வொரு காமெரா கோணங்களிலும் நெஞ்சை அள்ளுகிறது, கிராமமென்றாலெ பசுமைதான் அழகென்பதை உடைத்து, சிவகாசியனருகே இருக்கு ஒரு வரண்டமண்ணுமொரு அழகுதான் என காட்டும் காட்சிகள் அட்டகாசம். இதை சத்யம் தியேட்டரில் பார்க்கத்தவறிவிட்டேனே !!!

சின்ன சின்னதாய் வரும் சில விஷயங்களை பார்த்து பார்த்து மனசு ஏனோ படமெங்கும் சந்தோஷப்பட்டுக்கொண்டே இருந்தது. ஒவ்வொன்றும் சட்டென 10-15 வருடங்கள் சரேலென பின்னாலிலுத்துக்கொண்டிடுருந்தது. கடையில் தேங்காய் சில்லு வாங்க வரும் சிறுவன் (இப்போதெல்லம் தேங்காய் சில்லு தருகிறார்களா ?! :-) , அதை உடைத்து அதன் தண்ணீரை உடைத்து அப்படியே ஊற்றிவிடுவதும், மண்டைவெல்லம் கேட்டதற்கு தேங்காய்தண்ணீர் குடித்ததை சொல்லுவதும்.. வீட்டினெதிரே இருக்கும் செட்டியார் கடையில் அடித்த கூத்துதான் நியாபகம் வருது. புது சேலை பார்த்ததும் எடுத்தியாடி, எடுப்பாதானிருக்குனு சொல்லும் சிறு வசனம்தான், பலரின் கவனத்தை கவரும் அளவுக்கு முக்கியத்துவமானதுமில்லை, ஆனால் கண்முன் நடமாடிய பல பாட்டிமார்களை ஒரு நொடியில் நியாபகப்படுத்திவிட்டது. சாப்பிட மாரி உட்காரும் முறையிலாரம்பித்து, ஒவ்வொரு மானரிஸங்களிலும் மாரியாகவே உலாவியிருக்கும் பார்வதி அடுத்த முத்தழகுதான்.

பேனாக்காரர் கதாபாத்திரம் இன்னொரு அட்டகாசம், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணாதிசியங்களையும் பக்கம் பக்கமான வசனங்களில் விளக்காமல் காட்சியமைப்புகளாலயே (வண்டிக்காரர் பேனாக்காரர் என்பது வெறும் வார்த்தை வித்தியாசமில்லை என்பதில் வரை) அசத்தியிருக்கிறார் சசி.

வயல்வெளிகளில் கைகளை கோர்த்துக்கொள்ளும் கற்பனை கவிதை, அதுவும் படத்தில் முக்கியமாய் பயன்பட்டிருப்பது அருமை.

சின்ன சின்ன கதாபாத்திரங்களை அறிமுகமான முகங்களாய் விடாமல் புதியவர்களை அதுவும் கிராமத்தினரையே உலாவ விட்டிருப்பது பெரும் பலம், அண்ணன் தங்கையிடையே நடைபெறும் வசனங்கள், மாரிக்கும் அவள் அண்ணனுக்கும் நடக்கும் முறையும், மாரியின் அம்மாவுக்கும் அவர்களின் அண்ணனுக்கும் நடக்கும் வசனம் (ஆரம்பகட்டத்திலும் - குடுகுடுக்குப்பைக்காரனை விரட்டசொல்வதும், வயதானவர்களானதும் - சாபம்விடுவதும்) காட்டப்படும் இயல்பு, வித்தியாசம்.. அப்படியே கண்முன் நடந்த எத்தனையே விஷயங்களை நியாபகப்படுத்தியது.

புது கிளாசில் மாணவர்களின் அதிகபட்சக்கனவும், மாணவிகளின் குறைந்தபட்ச கனவின்மையும், மெலிதாய் வந்து போவது பலருக்கு சிரிப்பாயிருந்திருக்கலாம், ஆனால் யோசிக்கையில் இப்படித்தானே இருந்திருக்கிறோம், இன்னும் இப்படித்தானே இருக்கு என்று நினைக்கையில் என்னமோபோலிருந்தது. அங்கு ஆரம்பிக்கும் மாரியின் அந்த வெள்ளந்திதனமான, கள்ளமில்லாத அன்பு படமெங்கும் விரவிக்கிடக்கின்றது, நம் மனமெங்கும் நிறைந்துகொள்கிறது. படுக்கையில் , ஆமா மோண்டேன் , கோயில்ல சாமிகிட்டயும் சொல்லிக்கோனு தைரியமாய் சொல்பவள், அழுவதென்று கவிதையாய் நம்மை அறியாமல் புன்னகைக்க வைக்கும் தருணம், எத்தனை முறை நாமும் இப்படி பிடித்தமானவர்கள் முன் விளையாட்டுக்குக்கூட அவமானப்படுவதை கண்டு எத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணியிருப்போம்.

பருத்திவீரனில் டக்ளஸ் அண்ணனென்றால் இங்கெ ஒரு அலோ.. இறுதியில் வரும் ஒரு முக்கியமான justification-க்கும் இந்த பாத்திரம் பயன்படுத்தப்படும்போது, படத்தில் எதுவுமே தேவையில்லாமல் இல்லை என்பதை உணர்ந்து, சிறுகதையையும், அதை திரைக்கதையில் பிசராமல் கொண்டுவந்தவரின் உழைப்பும் அட்டகாசம்.

அந்த முதலாளியின் பாத்திரமும், வசன உச்சரிப்பில் ஆரம்பித்து எல்லாவகையிலும் (தங்கராசை பார்க்கும்பொழுது அப்பா சொன்னாரு என சொல்லும் சின்ன வசனத்திலேயும் அட்டகாசம்) பார்த்த மனிதர்களையே நினைவுபடுத்தும் மனசில் தங்கிய இன்னொரு சின்ன கதாபாத்திரம்.

நினைவிலிருக்கும் போன் நம்பர் ஒரு சின்ன க்ளிஷே ஆனாலும் நல்ல கலகல :-) , அடுத்து அந்த தோசை முத்தம் :-)))))))))))))) வாய்விட்டு சிரித்துக்கொண்டிருந்தேன் :-)))))))

உயரம் பார்ப்பதும், மொந்த செருப்பிலும் எம்பி எம்பி உயரத்தில் திருப்திபட்டுக்கொள்வதும் :-))) , அந்த போர்மென் கதாபாத்திரமும் பச்சக்.. (கண்ணாடியில்லாமல் கண் தெரியாமலிருப்பது வழக்கமான கதாநாயகியின் மதிப்பைக்குறைக்காத செயல் எனினும்)
கள்ளிப்பழம் சிதறிப்போகும் கனவை குறிப்பால் காட்டும் காட்சியாயிருக்கலாம், ஆனால் மாரியின் குணத்தை காட்டும் அந்த காட்சியை மறக்கவே முடியாது, மாரியையும் மறக்கவே முடியாது :-) , இப்படி அன்பை பொழியும் நபர்களை பார்பதும் சரி, வாழ்வின் அங்கமாய் கொள்வதும் சரி, எளிதில் வாய்த்துவிடுவதில்லை.

ஒவ்வொரு சமயமும் இன்னாரு மகனா நீயி, இன்னாரு மக போல இருக்காளே என்ற சின்ன சின்ன வசனங்கள் கூட.. miss பண்ணும் எத்தனையோ பெயர் தெரியாத சுற்றுப்புறத்தவர்கள் கொண்ட விழாக்களை நியாபகப்படுத்திக்கொண்டிருந்தது.

நல்லவேளை, பட்டணத்து தோழி காதலை சொல்லவில்லை, தோழியாகவே விட்டுருப்பது இயல்பாகவே இருந்தது.

900 ரூபாய்க்கு விற்க்கப்படும் கறுப்பி கூட படத்தின் முக்கியமான கதாபாத்திரம், அதுவும் முடிவை எளிதாய் நம்முன் வைக்க உதவும் ஒரு கதாபாத்திரமாயிருப்பது அட்டகாசம்.  அதே போல் மாரியின் கணவனும் ப்ளாஷ்பேக் நினைவுகளில் அவர்களிடையே உலாவுவதும் சொல்லும் நிஜங்கள் பல :-)

கருப்பசாமியிலிருந்து பெருமாளுக்கு மாறுவது நுண்ணரசியல் விமர்சனங்களுக்கு ஆட்பட்டிருக்கலாம் ஆனால் கோவிந்தா கோவிந்தாவென ஒலிக்கும் அந்த குரல் செம டைமிங் :-))))))))))) , அதோட சேர்ந்து “தங்கராசு வேணும்”-னு மாரி கேட்கும்போது நம்மை அறியாமல் மனமெங்கும் பொங்க்கும் ஒரு மகிழ்சிக்கு அந்த கதாபாத்திரத்துக்கான நம் மகிழ்ச்சி மட்டும்தான் என வெறுமென ஒதுக்கி விடமுடியுமா ? ;-)

சட்டென்ற கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்வதும், சாகாமல் வெறுமென வாழ்வதுமட்டுமின்றி சந்தோஷமாய் வாழப்போவதற்கான காரணத்தை மாரி சொல்லும்போது, அதுவே இறுதியில் முடியும் ப்ரேமில் வரும் மாரியின் ரியாக்‌ஷனை நெஞ்சை பிசையும் சோகமாய் மாற்றுவது, அழகிக்குபின்னும், காதலுக்குபின்னும் வரும் கனத்த சோகத்தை கொண்டு இதுவரை படமெங்கும் சின்னசின்னதாய் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தவர்களை அசைத்துவிடுகின்றது.

படத்தின் முடிவைப்பற்றி எத்தனையோ விதமான விமர்சனங்கள் வந்துவிட்டன, அத்தனையும் அவரவரின் பார்வை, சரியென்றும், தவறென்றும் ஒன்றுமில்லை, ஆனால் இந்த படத்தை இத்தனை ஆழமாய் பதியவைத்தது எதுவென யோசித்துக்கொண்டிருந்தேன்...

அழகி, ஆட்டோகிராப் போன்ற திருமணமான ஆண்களின் காதல் நினைவுகளை, நினைவுகள் என்று கவுரமாய் பெயரிடும் முறை, இதே நினைவுகள் பெண்களின் வழியே வரும்போது, அதிர்ந்து போகும் மாரியின் அம்மாவிலிருந்த்து, ”இன்னுமா நியாபகம் வைச்சிருக்க--” எனக்கேட்கும் தோழியின் குரலில் இருக்கும் தொனியில்வரை, வேறு வகையில்தான் நிஜ வாழ்க்கையில் classify செய்யப்படுகின்றது.

ஆனால் படம் முடிந்ததும் “மாரி” அப்பாவி சிறுமியிலிருந்து மிக உயர்ந்த கதாபாத்திரமாய் மாறிய்போவதை அந்த பனைமரத்தின் கீழ்வரும் காமிரா கோணத்திலிருந்து காமிப்பதில் மனம் எளிதாய் வேறு விவாதங்களின்றி ஒத்துக்கொள்கின்றது.

சாதரணமாய் இத்தகைய நிகழ்வுகளை நண்பர்களிடையேயான தண்ணிபார்ட்டியில் ஒரு பேச்சுக்கூட தவறாய் நினைக்கமுடியும் மனம், கொஞ்சம் கூட மாரியை பற்றிய அபிப்பிரயாத்தை களங்கப்படுத்த முடியாதே கதையின் பலம், கதாபாத்திரங்களின் வெற்றி.

ச.தமிழ்ச்செல்வன், சசி, ஷ்ரீகாந்த், பார்வதி, பெயர் தெரியாமல் படமெங்கும் பரவிகிடக்கும் அத்தனை கதாபாத்திரங்கள், காமிரா, வசனம், தயாரிப்பாளர்கள் என அத்தனைபேருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

It made my weekend.

அவ்வளவு சந்தோஷமாய் துள்ளித்திரியும் அந்த சூ..சூ... மாரி பாடலே இறுதியில் மனதை அறுக்கும் வரிகளாய் வரும்போது கண்ணுக்குத்தெரியாத ஏதோ ஒன்றை நம் மனது திட்டித்தீர்ப்பதை ஏனோ தவிர்க்க இயலவில்லை.





சேர்த்து வெச்ச நெனவெல்லாம் நெருஞ்சிமுள்ளா அறுக்குது .. சூ.. சூ... மாரி...

Das Leben der Anderen

Published by யாத்ரீகன் under , on ஞாயிறு, ஜனவரி 11, 2009
              காது மடல்களை சிலிர்க்க வைத்துக்கொண்டிருந்தது இன்றைய மெல்லிய குளிர், ஊரெங்கும் மூடுபனியால் சூழ்ந்திருக்க, அட்டகாசமான வானிலை. சுடச்சுட இருந்த Starbucks-இன் White Chocolate Mocca-வுடன் வழக்கம்போல  நீண்டதாய் இலக்கில்லா வழியில் காரை ஓட்டிச்சென்று வீடு திரும்பியதும், இருந்த தூக்க கலக்கமெல்லாம் எங்கே சுருண்டுகொண்டதென்று தெரியவில்லை. 

            இருந்த புத்துணர்வுக்கு நல்ல படம் பார்க்கனுமென Que-வை மேயத்தொடங்க கிடைத்ததுதான் Das Leben der Anderen.  Run Lolla, Downfall போன்ற ஜெர்மன் படங்கள் ஏமாற்றாததால் நம்பிக்கயுடன் பார்க்கத்துவங்கினேன்.  ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே பரபரப்பு பற்றிக்கொண்டது (Valkyrie படத்தையும் ஒரு ஜெர்மனிய படமாக இந்த இயக்குனரே இயக்கியிருக்கலாம்). இயக்குனரின் முதல் படமாம், சத்தியமாய் நம்பமுடியவில்லை.
    
          படம் ஆரம்பிக்கும் விசாரணை காட்சியிலிருந்து, கடைசி காட்சியில் இருக்கும் டச் வரை அட்டகாசம். வசனங்களும், மிக மிக மிக முக்கியமாய் அந்த பிண்ணனி இசையும்.. படம் முடிந்தபின்பு அந்த கதாபாத்திரங்களிடையே நாம் வாழ்ந்து முடிந்தமாதிரி ஒரு உணர்வு. 

          என்ன புத்தகம் எழுதலாம், என்ன படிக்கலாம் என தமிழகஅரசாங்கம் மக்கள் சிந்தனையை  குறுக்க நினைத்து என்ன பண்ணுகின்றோமென உணராமல் முட்டாள்தனமாய் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த படம் பார்த்தது என்னவெல்லாமோ யோசிக்க வைத்துவிட்டது. 

        பிண்ணனியிசையென்றதும் நினைவுக்கு வரும் ஒரு கவித்துவமான காட்சி, படத்தின் உயிர் நாடிகளின் ஒன்றான அந்த பியானோ வாசிக்கும் ஒற்றை காட்சியில் எத்தனை அழகாய் படத்தின் போக்குக்கான justification.

        சரி அப்படி என்னதான் கதை ?   

  ஒருவரை ஒட்டுகேட்கத்துவங்குகின்றீர்கள்,  ஒரு வரி அல்ல ஒரு நிமிடமல்ல.. ஒவ்வொரு சொல்லையும், ஒவ்வொரு நொடியையும்.. உங்களின் செயல் எத்தனை தூரம் ஒட்டுக்கேட்கப்படுபவர்களையும், உங்களையும், சமுதாயத்தையும் மாற்றும் என நினைத்துப்பார்த்திருப்பீர்கள் ?   அதுதான் கதை. வழக்கமான அட்டுத்தனமான Action/Thriller வகையறாக்களல்லாமல் ரெக்ளைனரின் நுனிக்கே கொண்டுவந்துவிட்டதொரு பொலிடிக்கல் திரில்லர்.
Das Leben der Anderen (The Lives of Others)




 கருத்து மற்றும் சிந்தனை சுதந்திரம், ஐடியலான நல்லதொரு சமூகம்/அரசாங்கம், இவற்றில் இன்று நாம் அனுபவிக்கும் நல்லவிஷயங்கள் அதனால் நாம் கவனமின்றி, கவலையின்றி தவரவிட்டுக்கொண்டிருக்கும் உணர்வுகள் .. என பல விஷயங்களை கிண்டி கிளறிவிட்டது.. 

படம் முடிந்தபின், அடுத்த படத்திற்கோ/வேலைக்கோ கடிகார முட்களின் ஓட்டத்திற்கு நடுவே தவ்வுவதற்குமுன் கொஞ்சம் தனிமையும் அசைபோடுதலையும் சேர்த்துப்பாருங்களேன்.. Its worth it.

Whatzup Bro

Published by யாத்ரீகன் under , , on ஞாயிறு, ஜனவரி 11, 2009
                     ஊருக்கு செல்லும் முன் மூடிய Netflix கணக்கை மீண்டும் திறந்தபின் கிடைத்த முதல் குறுந்தட்டு “அந்த நாள்”. எத்தனையோ பேர் சொல்லக்கேட்டிருந்தாலும், நம்பிக்கையில்லாமல் பார்க்கத்துவங்கினேன், அட்டகாசம். எத்தனையோ முறை பலர் துவைத்து காயப்போட்டுவிட்ட விமர்சனமென்பதால் புதிதாய் சொல்ல ஏதுமில்லை, ஆனால் கவனத்தை சிதறடிக்காத திரைக்கதை மட்டுமல்ல, அந்தநாட்களில் மனிதர்களின் வாழ்கை நடைமுறை, போலிசாரின் உடை, மற்றவைகள் என மீண்டும் கவனிக்கவே மற்றோரு முறை பார்த்துக்கொண்டிருந்தேன். 

    இத்தனை நடுவிலும் படத்தில் சடாரென மனதில் ஒரு மின்னல்வெட்டு அந்த அழகான உதடுகள் :-) , யாரிது ?




முணுமுணுப்பு

என் அன்பே நானும் நீயின்றி நானில்லை
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை
...
...

தலை தொடும் மழையே
செவி தொடும் இசையே
இதழ் தொடும் சுவையே
இனிப்பாயே
விழி தொடும் திசையே
உடல் தொடும் உடையே
விரல் தொடும் கணையே
இணைவாயே






பி.கு.:  அந்த படத்துக்கும் என் முணுமுணுப்புக்கும் சம்பந்தமில்லை. இப்பொழுதுதான் முதல் முறை கேட்கிறேன் ;-)

நீண்டதொரு பயணம்

Published by யாத்ரீகன் under , on திங்கள், டிசம்பர் 29, 2008
Change is the only thing that doesn't changes in this world என்ற மாற்றமே காணதொரு வாக்கியத்தை
ஒவ்வொரு முறையும் HOD சொல்ல கேட்கும்பொழுது எவ்வளவு கூச்சலிட்டிருப்போம், அதிலும் இறுதிவரை மாற்றமே இருந்ததில்லை.

வேர் விட்டிருக்கும் செடியாயிருக்கட்டும் பெரும் மரமாகட்டும், பிடுங்கி நடப்படுவதென்பது இருவருக்கும் தனித்தனியேயான அனுபவத்தை தரப்போவதில்லை. மாற்றங்களில் சிறிதென்ன பெரிதென்ன ? பார்த்த பார்வைகள், புரிதல்கள் ஒவ்வொரு மண்ணிலிருந்து பிடுங்கப்படும்பொதும் செரிவடைகின்றது. இடம்விட்டு இடம்விட்டுச்செல்ல, எடுத்துச்செல்லும் துகள்களென நட்புகள்.

எந்தவொரு மாற்றம் நடக்கும்போதும், அதன் பொருட்டு எற்படும் அனுபவம் தனியானதொரு recap போலத்தான்.

இத்தகைய மாற்றங்களின்போது செய்யும் பயணங்களுக்கான சுவையே தனி, ஊறவைத்த கள்ளைப்போல நினைவுகள் ஊறவைத்த காலம் அதிகமாக அதிகமாக.

2 மாதங்கள் திருவனந்தபுரத்திலிருந்த கட்டற்ற சூழலிருந்து விடுபட்டு பொறுப்புகள் கூடிய சுதந்திர உலகுக்கான அடியெடுத்த முதல் மாற்றமாகட்டும் (நினைவில் மிகப்பசுமையாய் பதிந்தவற்றுள்), இன்று 3 வார விடுமுறை என நினைத்து ஊருக்கு வந்துகொண்டிருக்கும் சிறு
மாற்றமாகட்டும், ஒவ்வொன்றாய் நினைத்துப்பார்த்துக்கொண்டு நினைவுச்சுழலில் முழ்கிக்கொண்டிருப்பது அவ்வப்பொது கடந்துகொண்டிருக்கும் வருடங்களை தட்டிவிட்டுச்செல்ல உதவுகின்றது.

------------------

இனிய ஆங்கில வாசிப்பனுபவத்தை அறிமுகப்படுத்திய தோழிக்கு 2 வருடங்களுக்கு முன் பிறந்தநாள் பரிசை துழாவும்போது தட்டுப்பட்டது ஜெயமோகனின் கொற்றவை. முதல் இரு அத்தியாயங்களின் சுவையில் மயங்கி பரிசளித்திருந்தேன். அவள் படித்தாலா இல்லையாயென தெரியாது, ஆனால் கொற்றவை அந்நொடியிலிருந்து என்னை பின் தொடர்ந்துகொண்டிருந்தாள்.
அப்படியும், வாங்கி 1 வருடங்கள் கடந்தும் படிக்கும் சூழல் அமைந்திருக்கவில்லை. இன்று 1 முழு நாள் விமானப்பயணமென்று முடிவானதும் கைகள் முதலில் துழாவத்தொடங்கியது
இந்த புத்தகத்தைதான். எஸ்.ராவின் ”கால்முளைத்த கதைகளும்” அயற்ச்சியை தவிர்க்க துணைகொண்டது.

அயற்ச்சி என்று நினைத்ததைவிட, தழும்புதல் என்பதெ சரியான சொல்லாய் இருக்க முடியும். மீண்டும் அந்த முதல் இரு அத்தியாயங்களிலிருந்து தொடங்கியும் சுவாரசியத்திற்கு சற்றும்
குறைவில்லை. கடினமான இலக்கிய மொழிநடை பெரும் தடையாய் இருக்கவில்லை, மாறாக அதிலிருந்த கற்பனை வளம், விடயங்களை சொல்லியிருக்கும் விதம்.. என மிக சுவாரசியமாய் நேரம் செல்லத்துவங்கியது.

மக்களின் மொழி, மரபுகள், நம்பிக்கைகள், வாழ்க்கை முறை, புரிதல்கள், பயங்கள் என அத்தனையும் காலவெளியில் பயணித்திருக்கையில் எப்படித்தொடங்கியிருக்கும், அதன்
பரிணாம வளர்ச்சியெப்படியிருந்திருக்கும் என்ற பார்வையில், இதுவரை கடந்திருக்கும் 50 பக்கங்கள் அற்புதமென்ற ஒருசொல்லில் அடைக்கவியலாது. இவ்வளவு மணிநேரங்களில்,
சாதரணமாய் பல பக்கங்களை கடந்திருக்கலாம், ஆனால் முதல் வரியான “” -லிருந்து தொடங்குகிறது தேடல். ஒவ்வொரு வரியையும் வாக்கியத்தையும் மீண்டும் மீண்டும் வாசிக்க, பிரமிப்பாய் இருக்கின்றது, இயல்பாய் நாமும் கடந்துவந்திருந்த நிகழ்விலிருந்து, கேள்வியே பட்டிராத தகவல்களென, ஒரு அற்புதமான வாசிப்பானுபவத்தை தந்துகொண்டிருக்கின்றாள் கொற்றவை.
----------------------------

சென்றுகொண்டிருக்கும் ஒவ்வொரு புதிய இடத்திலும் தெரிந்த முகங்களிலிருந்து, நண்பர்கள் என்ற அடைமொழியில் அடைபட்டிருக்கும் முகங்கள் வரை சங்கிலியின் கோர்வை கூடிக்கொண்டே போகின்றது. இதில், நெருக்கமாய் பலவற்றும் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் எங்கோ தொலைந்துகொண்டிருக்க, புதிய நபர்களை பழக்கப்படுத்திக்கொள்ள தயக்கங்கள் கூடிக்கொண்டிருக்கின்றது. பொருட்களின் மேலிருக்கும் மோகமும், நட்பின் மீதிருக்கும் பிடிப்பும் (hold என்பதின் சரியான பயன்பாடு இங்கே என்னவாயிருக்க முடியும்?) வெகு வேகமாய் குறைந்துகொண்டிருக்கின்றது. இதனால் நண்பர்களிடமேலிருக்கும் நம்பிக்கைக்கு/அன்புக்கு குறையில்லை ஆனால் அதன் இடைவெளிக்கு பெரிதாய் கவலைப்பட்டுக்கொள்வதில்லை. என்றொ ஒரு நாள் சந்தித்துக்கொண்டாலும் அந்த நிமிடங்கள் மீட்டுத்தரும் மலர்ச்சி போதும்.

-----------------------------

இருட்டின் மீதான மெல்லிய வெளிச்சத்தில், பக்கத்திலிருக்கும் பெண்ணின் கைகள் அவள் புரண்டுகொண்டு தூங்குகையில் மிருதுவாய் உரசிக்கொண்டிருக்க, பல ஆயிரம் அடி உயரத்தில்
இதை தட்டிக்கொண்டிருக்கின்றேன். நாட்குறிப்பெழுதி மாதக்கணக்கில் முடிந்து வருடக்கணக்கில் ஆகத்துவங்கப்போகுது. இப்படி வலையில் தட்டி எவ்வளவு தூரம் தான் பதிந்து வைத்துக்கொள்வது..

---------------------

இந்த பதிவைப்போல, ஒரு கோர்வையின்றி தறிகெட்டு ஓடுகின்றது இந்த நினைவுக்குதிரை, மூச்சிரைத்து நிற்குமிடமெங்கிலும் மீண்டும் காலம் தன் சவுக்கை
சொடுக்கிக்கொண்டு தொடர்கின்றது.

பி.கு: சென்ற மாதத்தின் இந்திய பயணத்தின் போது, விமானத்தில் தட்டச்சியது, இத்தனை நாள் கழித்து பல வேலைகள் முடித்து மீண்டும் இணையத்தில் சேரும் வரையில் தங்கையின் கணிப்பொறியில் உறங்கிக்கொண்டிருந்தது.

Happy Holidays

Published by யாத்ரீகன் under on வெள்ளி, நவம்பர் 07, 2008

பிள்ளையார் err.. கொழுக்கட்டை பிடிக்கப்போய்

Published by யாத்ரீகன் under on வியாழன், செப்டம்பர் 04, 2008
பிள்ளையார் err.. கொழுக்கட்டை பிடிக்கப்போய்

போளி ஆன கதை

அல்ப சந்தோஷம்

Published by யாத்ரீகன் under on வியாழன், செப்டம்பர் 04, 2008

எல்லோரும் இதற்காக கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கையில், எங்கள் அப்ளிகேஷன் மிக எளிதாய் செய்தது (பெரிதாய் கூட ஒன்றும் செய்யவில்லை :-)
யாருக்காவது க்ரோம் proxy வழிய ஒழுங்க வேலை செய்யுதா ?

சிறந்த இந்திய திரைப்பட முத்தம் எது ?

Published by யாத்ரீகன் under on சனி, ஆகஸ்ட் 30, 2008
#1 கமலின் முத்தங்களை தவிர நம்ம தமிழ் திரைபடங்கள்ள வந்த முத்தங்கள்ள, சும்மா விருப்பமிலாம கண்ணை வெறுப்போட மூடுற பெண்ணை வண்புணருவதை போலில்லாமல், கவிதைத்துவமா முத்தமிடும் காட்சிகள் எதுவும் இருக்கா ?

#2 சரி கமலின் முத்தங்களிலேயே அப்படி கவிதைத்துவமா வந்த காட்சி எது ?

#3 வேறு இந்திய மொழிப்படங்கள்ள வந்த கவிதைத்துவமான முத்தங்கள் எதாவது ?

உங்களுக்கு தெரிஞ்சத அநானியாவாவது வந்து சொல்லிட்டு போங்களேன் :-D

பி.கு:
ஏடாகூடமா யோசிக்காதீங்க, Notebook படத்தில வருவது Best Kiss of a year-நு படிச்சேன் இன்னும் பார்க்கல, சரி நம்ம படங்கள்ல எதுனு கொஞ்சம் தேடி பார்த்தப்போ, கிட்டதிட்ட எல்லாமே பல்லு விளக்காத ஹீரோ தன்னை வன்புணருவதை போலத்தான் reaction குடுக்குறாங்க, மேலும் அதன் காட்சியமைப்பும் அத்தனை கவிதைத்துவமா இருக்குறதில்ல.. இப்படி ஏடாகூடமா நான் யோசிச்சதோட விளைவு தான்.. உங்களுக்கு தெரிஞ்சத அநானியாவாவது வந்து சொல்லிட்டு போங்களேன் :-D

இயற்கையோடு இயைந்த வாழ்வு: உலகத்திரைப்படங்கள் 2

Published by யாத்ரீகன் under , on செவ்வாய், ஆகஸ்ட் 26, 2008
சிறு வயதில் படித்த உண்மைக்கதையொன்று நியாபகம் வருகின்றது, மிகத்துள்ளியமாய் நினைவில் இல்லையெனினும் அதன் சாராம்சம் இன்னும் மனதில் ஒட்டிக்கொண்டிருக்கின்றது.

இயற்கையின் மீது பெரும் அன்பும், கவனமும் கொண்ட பெரியவர் ஒருவர், மரங்களை தானே நட்டு, பாதுகாத்து வளர்த்து வருகின்றார். தன் பராமரிப்பில் இருக்கும் மரங்களை தன் குழந்தைகளை போல பார்த்துவரும் இவருக்கு அரசாங்கத்திடமிருந்து ஒரு உத்தரவு வருகின்றது, இவர் கண்காணிப்பில் இருக்கும், இவர் உருவாகிய காடு ஒன்றை வெட்டப்போவதாக. அதை வெட்ட வருபவர்களை எவ்வளவு தடுத்தும் கேட்காததால், அம்மரங்களை கட்டியணைத்துக்கொள்கிறார், வெட்டுபவர்களும் இவர் விலகிவிடுவார் என நினைத்து கோடாலியை ஒங்க, இறுதியில் அம்மரங்களுக்காகவே உயிர்விட்டு அதன் உயிர்களை காக்கின்றார்.

இயற்கையின் மேல் இத்தனை காதலுடன் இருப்பவர்களை, இவர்களால் தான் நமக்கு வாழ்வளித்துவரும் பல இயற்கை செல்வங்கள் இன்னும் அழியாமல் இருக்கின்றன என அறியாமல், எளிதாக பைத்தியக்காரர்கள் என பலர் ஒதுக்கித்தள்ளிவிட்டு போகின்றோம், இவர்களின் செயலில் நூற்றில் ஒரு பங்கை கூட நம் அடுத்த தலைமுறைக்கு முன்மாதிரியாய் வைக்காமல் தவறிக்கொண்டிருக்கிறோம்.

இத்தகைய இயற்கையோடு ஒன்றிய வாழ்வு வேண்டுமென்று, விடுமுறைக்காலங்களில் ஊர்சுற்றும்போது நமக்கு தோன்றுவதோடு சரி. அவர்களுடைய வாழ்வுமுறையை இருப்பவர்களை மேலோட்டமாய் காணும்போது பெரும் பொறாமை ஏற்படுகின்றது, அதற்கு பின்னால் அதை காக்க அவர்கள் செய்யும் போராட்டமும் அதற்கான இழப்புகளும், வலிகளும் கற்பனைக்கெட்டாதவை .

அத்தகைய மனிதர்களுடைய துயரமும், அழகிய வாழ்வையும் அற்புதமாய் பதிந்திருக்கும் இரு படங்கள் தான் முறையே "Mountain Patrol: Kekelexi" மற்றும் "Story of the Weeping Camel". இவை இரண்டும் உண்மைச்சம்பவங்களை அடிப்படையாகக்கொன்டவை என்பதில் சிறிதும் ஆச்சரியமில்லை.


இதில் "Mountain Patrol: Keklexi" எதிர்பாராமல் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு documentary படம் போல இருக்குமென்ற நினைப்போடு தொடங்கியவனுக்கு, அட்டகாசமான கேமரா கோணங்கள், மனதை மயக்கும் திபெத்தின் மலைமுகடுகள், காடுகள், அற்புதமான-வேகமான திரைக்கதை, அங்காங்கே அதிர்ச்சியூட்டும் உண்மைச்சம்பவங்கள், முற்றிலும் எதிர்பாராத நிகழ்வுகள் என மனதை கவர்ந்த விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதன் முடிவு cinematic-ஆக இருந்துவிடுமோ என்று வருத்தப்படுக்கொண்டிருந்த வேளையில் .. அதை ஏன் சொல்ல வேண்டும், பாருங்களேன்.

ஒரு சாவிற்கான அதிர்ச்சியூட்டும் திபெத்திய மதச்சடங்குகளுடன் தொடகுகின்றது படம், கொஞ்சம் கொஞ்சமாய் அந்த குழுவினருள் ஒருவனாய் நாமும் அவர்களுடன் பயணிக்கத்தொடங்குகின்றோம், ஓடுகின்றோம், மூச்சுவாங்க உயிர்பிழைக்கின்றோம்.

இதில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் படத்தில் வாழ்ந்திருக்கின்றனர் என்றுதான் சொல்லவேண்டும். Patrol செய்ய புறப்படும்போது அந்த குழுவினருடைய உணர்ச்சிகள், நூற்றுக்கணக்கான மான்கள் கொல்லப்பட்டு கிடக்கும் அந்த தருணம், அதைக்காணும் அவர்களின் உணர்வு, கைதிகளை மேற்கொண்டு செல்ல முடியாமலும் கொல்ல முடியாமலும் அவர்களை விட்டுச்செல்வதும், உணவின்றி, எரிபொருளின்றி குழுவில் சிலரை நடுவே வேறு வழியின்றி பனிபொழியாது என்ற நம்பிக்கையுடன் விட்டுச்செல்லும்போதும், சரியான அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களுக்கு கூட பணமின்றி, அவர்கள் மனசாட்சிக்கு விரோதமாய் செயல்படுவதைத்தவிர வேறு வழியின்றி சூழ்நிலை அமைவதும்.

கட்டாயம் பாருங்கள் !!!!


ஒரு அதிரடி ஆக்க்ஷன் படம் பார்த்து படம் வேண்டும் என்பவர்கள் மேலுள்ள படம் பார்க்கையில், இப்போதைக்கு ஒரு அழகிய கவிதைபோல, வித்தியாசமான, சுவாரசியமான படம் ஒன்று பார்க்கும் மனநிலைக்கொரு படம் வேண்டுமென்றால் நீங்கள் பார்க்க வேண்டியது, "Story of the Weeping Camel".

இதெல்லாம் அறிவியல்பூர்வமான உண்மையா ?, இப்படியெல்லாம் நடக்குமா என்றெல்லாம் ஆராய்ந்து யோசிப்பதை விட்டு பார்க்கத்துவங்கினால் நிச்சயமாய் இரசிப்பீர்கள். நடக்கும் நிகழ்வுகளை மிக கவிதைத்துவமாய் விஷுவலாய் காமிப்பதும், அதை போர் அடிக்காமல் கொண்டுசெல்வதும்.. மிகவும் சந்தோசத்தை வரவழைக்கும் படம் இது.

நம் ஊர்பக்கம்,அனுபவம் மூலமும், instinct மூலமும் பெரியவர்கள் செய்யும் சில விஷயங்களை பார்த்திருப்போம், இதுபோலதொரு நிகழ்வுஐ நாம் பார்த்திராத ஒரு பிரதேசத்திளுள் காமிக்கும்போதுதான், இதுபோன்ற பிரதேசங்களுக்கு பயணம் செய்யும் விருப்பம் மிகவும் அதிகரிக்கின்றது.


இறுதியில் அந்த முடிவை காண்பவர்கள் இசைப்பிரியர்களாய் இருந்தால் இன்னும் இரசிப்பார்கள் :-)

இசையென்னும் இன்பவெள்ளம்

Published by யாத்ரீகன் under , on சனி, ஆகஸ்ட் 23, 2008
இப்படித்தான் இருக்க வேண்டுமென்று அவ்வளவு எளிதாய் ஒரு கட்டுக்குள் அடைக்க இயலாத வாழ்வின் சில விஷயங்களில் இசையும் ஒன்று.

தெய்வீகமானது என்று சொல்லும் பழம்பெரியவர்களுக்கும், வார்த்தை தெளிவாய் இரைச்சல் குறைவாய் இருக்கும் பெரியவர்களுக்கும், மனதை வருடுவதுபோல இருக்கவேண்டும் என்று சொல்லும் முதியவர்களும், நினைவை சுகமாய் மீட்டவேண்டும் எனச்சொல்லும் நடுத்தரவயதினருக்கும், நம் கவலைகளை மறக்கடித்து உற்சாகப்படுத்த வேண்டும் என்று சொல்லும் இளைஞர்களுக்கும்.. என அனைவருக்கும் இசையின் வடிவம் வெவ்வேறு ஆனால் அனைத்தும் இசையே.

இப்படிப்பட்ட பறந்து விரியும் இசையின் சாம்ராஜியத்தில், நம்மில் பெரும்பான்மையினர் மேற்கத்திய நாடுகளின் இசை என்றாலே இரைச்சல் என்று குறுகிய வட்டத்தினுள் அடைத்துக்கொள்வோம். பொதுவாய் பத்திரிகைகளும், அந்த இசையை பெரிதாய் கேட்டிராதவர் முதற்கொண்டு, ஆங்கில இசை என்றதும்.. "யப்பா ஒரே சப்தம்.." என்று முந்திக்கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்வதில் எத்தனை ஆர்வம்.

ஆரம்பத்தில் கேட்டிருந்த சில புகழ் பெற்ற பாடல்களில் (சாமானியன் வகுத்து வைத்திருக்கும் விதிகளின்படி இறைச்சல்களிலாமல்) ஆர்வம் வந்தாலும், அதில் வரும் ஒரு வரியும் புரியாததால் அதை தொடர்ந்து தேடிக்கேட்கும் ஆர்வம் என்றுமே இருந்ததில்லை. என்னதான் இசை அத்தனை வசிகரமாயிருந்தாலும் , அதில் கலந்திருக்கும் வரிகளை உதடுகள் உச்சரிக்கும்போதுதான், அந்த இசையினுள் முழுதாய் நுழைந்தெலும் மகிழ்ச்சி பொங்குவதை உணரமுடிகின்றது.

இசையை கேட்கும்போதும், அதை காதினுள் நுழைய விடுவதைவிட, அறையெங்கும் பரவவிட்டு அதில் மிதக்கும் அனுபவமே தனி. முடிந்தவரை முன்னதை தவிர்த்துவிட்டு, அறையெங்கும் இரைச்சலோ, இசையோ அதை முழுவதுமாய் பரவவிட்டு இரசித்துக்கொண்டிருப்பேன்.







சென்ற ஞாயிறு அறை நண்பரின் தேர்வில், விருப்பத்தில் அருகே நடந்த "Linkin Park"-இன் நிகழ்ச்சிக்கு செல்வதாக கிளம்பினோம். பீட்டர் பாட்டின்மேல் ஆர்வமிலாத நானும், அதன் மேல் கடும் கிரேஸ் கொண்ட இருவரும் என.. எப்படி 5 மணி நேரத்தை போக்குவது என்ற குழப்பத்துடனே சென்றேன்.


சென்றதும் முதலில் தெரிந்தது மகிழ்ந்தது , அங்கிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் அதிகபட்சம் 8 desi மக்களை மட்டும் கண்டிருப்போம் (அதில் 3 பேர் நாங்கள் ;-) , அடுத்து அங்கு வந்திருக்கும் கூட்டத்தின் சராசரி வயது :-D , அவர்களின் வித்தியாச பேஷன் உடைகளும், அலங்காரங்களும் என சாரசரியான high excited அமெரிக்க இளைஞர் கூட்டம். கொஞ்சம் அதிர்ந்து போனது, Linkin Park வரப்போவது 9 மணிக்குத்தான் அதுவரை சிறு சிறு band-கள் என்பது.


மேடையில் கண்ணுக்கு தெரிந்த மிகப்பெரிய 67 ஸ்பீக்கர்களை கண்டதும் அதில் இன்னும் இசை வராமலே அதிர்ந்து போனேன். ஒன்னும் புரியாததுடன் காது செவிடாகபோகுது என்றுதான் நினைத்தேன்.


சின்ன சின்ன Band-கள் ஆரம்பிக்க கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டத்தினுள் உற்சாகம் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது, ஆனாலும் வரிபுரியா அந்த இசையில் ஏனோ ஆர்வமே வரவில்லை. அவ்வப்போது முழு பாடலிலும், சிறு சிறு பகுதிகள் அட்டகாசமாய் இருந்தது. எப்போடா முடியுமென lemonade-களும், french fries-களும் படுவேகமாய் உள்ளே போய்க்கொண்டிருந்தது.


சரியாய் 9 மணிக்கு தொடங்கியது "Linkin Park"-இன் வரவு, அட்டகாசமான பில்டப்களுடன், தீப்பொறி பறக்க, நூத்துக்கணக்கான விளக்குகளின் ஒளிவிளையாட்டுடன் தொடங்கியது. அப்படியென்ன band இது என நினைத்திருக்கையில், கடல் மணலில் பெயரை எழுதிஇருக்கையில் எதிர்பாராமல் வரும் அலையின் ஈரம் பெயரை அழித்து மணலில் வேகமாய் இறங்கும் பாருங்கள், அதுபோலத்தான் அதிரடியான இசை உள்ளத்தில் உற்சாகத்தையும், பரவசத்தையும் பரப்பத்தொடங்கியது.


வீட்டில் இருக்கும் இரண்டு கம்ப்யூட்டர் ஸ்பீக்கர்ககளில் வரும் அட்டகாச இசைக்கு பரவசப்படும் நான், அந்த 67 ஸ்பீக்கர்களுக்கு எவ்வளவு சந்தோஷப்பட்டிருபேன் என விவரிக்க முடியவில்லை. அதிரடியான எலெக்ட்ரிக் கிதாரும், டிரம்சும் வெட்டியாய் அதிரவில்லை.. அட்டகாசமான இசை... 2:30 மணி நேரம், எப்படி போனதே என்று தெரியவில்லை.. அத்தனை நேரமும் எங்களில் எல்லோருக்கும் உற்சாகம் கூடிக்கொண்டிருந்ததே தவிர கொஞ்சமும் குறையவில்லை.


இறுதியில் அவர்களின் "In the End" பாடலுடன் முடித்தது சரியான சாய்ஸ். ஆனால் உற்சாகத்தில் கரைபுரண்டுகொண்டிருந்த எங்களுக்கு அதில் விருப்பமில்லை, கூட்டத்தோடு குரல் கொடுக்கத்துவங்கினோம்.. 15 நிமிடங்கள் போட்ட சப்தத்திற்கும், கூச்சலுக்கும் பலன்.. "What have i done" என்ற அந்த சூழலுக்கு பொருத்தமான பாடலுடன் அட்டகாசமாய் மீண்டும் ஒரு இறுதி பாடலுக்கு வந்தார்கள், வென்றார்கள்.


இப்போது youtube-இல் அவர்களின் பாடல்களாக (பாடல் வரிகளுடன் தேடி) முணுமுணுக்க துவங்கியிருக்கிறேன்.. இதுவும் இசைதான், வித்தியாசமானதொரு பரவசம்..






I'll face myself
To cross out what I've become
Erase myself
And let go of what I've done
What I've done
Forgiving what I've done!!!

Whatzup Bro

Published by யாத்ரீகன் under , on செவ்வாய், ஆகஸ்ட் 19, 2008
Life is one long insane trip. Some people just have better directions.

Oh, I dunno. I mean I'd like to believe I'm not but I just... I've just never seen any proof so I... I just don't debate it anymore, you know? It's like I could spend my whole life debating it over and over again, weighing the pros and cons and in the end I still wouldn't have any proof so I just... I just don't debate it anymore. It's absurd

ஒலிம்பிக்ஸ் - தங்கம் - தோல்வி

Published by யாத்ரீகன் under , on செவ்வாய், ஆகஸ்ட் 12, 2008
அதீத பொறுப்புணர்வுடன் கூடிய நாட்டுப்பற்றை ஊறுகாயாய் ஊட்டும் விளம்பரங்களின்போதும், இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளின்போதும், திரைப்படங்களில் நம் தேசியக்கொடி எறிய அல்லது கிழே விழ அதை கதாநாயகன் தடுக்கும்போது இசைக்கப்படும் பின்னணி இசையின்போதும் நமக்கு அடிக்கடி சிலிர்த்துக்கொள்ளும் அந்த சாமானியனின் தேசபக்தியை, அவ்வப்போது கிடைக்கும் வெண்கலங்களும், எப்போதாவது கிடைக்கும் தங்கங்களும் உரசிவிட்டு குத்தீட்டுக்கொள்ளச்செய்யும்..

அப்படி ஒரு நிகழ்வாகத்தான் அபினவின் வெற்றியை வணிகமாக்கும் மீடியாக்களின் செயலும், அதை வாக்குகளாக்கும் அரசியல்வாதிகளின் செயலும், அதை பணமாக்கும் அதிகாரிகளின் செயலும் தெரிகின்றது. நம் தேசபக்தியில் குளிர்காயத்தான் இவர்கள் அனைவரும் பார்க்கின்றார்களே தவிர, அதில் ஒரு உணர்வை தேடித்தேடி களைத்துபோய்விட்டேன்..

இப்படி பதக்கங்கள் வெல்லும்போது தான் சாமானியர்களுக்கும் இப்படி ஒரு விளையாட்டு இருப்பது நியாபகம் வரும், அதை அங்கீகரிக்காத அரசாங்க இயந்திரமும், அந்த இயந்திரத்தின் பல்சக்கரங்களும் நியாபகம் வரும்.

நேர்மையாகச்சொல்லுங்கள், நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகளின் எதிர்காலம் ஒரு விளையாட்டு வீரனாக இருக்கச்செய்ய முயலுவோம்? (அது அந்த குழந்தையின் ஆர்வமாக இருக்கும்பட்சத்தில்), தினமும் படிக்கும் பாடத்தை அன்றன்றே படித்து மனனம் செய்துவிடு என்று சொல்வதை விட்டு, விளையாட்டில் வாங்கி வந்திருக்கும் ஒரு consolation சான்றிதழில் அந்த குழந்தையின் ஆர்வத்தை கண்டு எத்தனை பேர் சரியான தீனி போட்டிருப்போம் ?

நம் அரசாங்கம் மற்றும் மீடியா மட்டுமல்ல, சமூகம் இதை பார்க்கும் விதமும் குறைபட்டுக்கொள்ளவேண்டியதாகவே இருக்கின்றது. இதை நாம் நேர்மையாக ஒப்புக்கொள்வதில் தான் இப்பிரச்சனைக்கான தீர்வு இருக்கின்றது.

பொதுவாக எந்த ஒரு சமூகத்திலும் வெற்றியை கொண்டாடுவதில் சிறிதும் குறையிருப்பதில்லை, ஆனால் அந்த வெற்றிக்கான அடிப்படையாகும் ஆரம்பகால தோல்விகளை ஒரேடியாய் ஒதுக்கும் குணம் நம் சமூகத்துக்கு சிறிது அதிகம் உண்டென்று நினைக்கின்றேன். இதற்கு மக்களின் மனநிலை, அவர்கள் வாழ்வை அணுகும்விதமே முக்கிய காரணம்.

இங்கு, மதிப்பெண்களில் முதலில் வரும் மாணவி, வித்தியாசமான முயற்சியாயினும் வெற்றி பெரும் இயக்குனர்கள், சிறு அல்லது மிக வித்தியாசமான தொழிலாயினும் கோடியில் வெற்றி பெரும் தொழிலதிபர்கள், பதக்கங்கள் வெல்லும் வீரர்கள் .. என வெற்றியை மட்டுமே கொண்டாடும் சமூகமாக இருக்கின்றதோ என்று ஒரு சந்தேகம். இதில் சமூகத்தின் அங்கீகாரம் என்பது அவரவர்களின் குடும்பத்திலிருந்து துவங்குகிறது..

வெற்றி காண்பவர்களுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரத்தின் சிறு பங்கு கூட தோல்வியுற்றவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை, தீண்டத்தகாதவர்களைப்போல் நடத்தப்படுவதும், இவையாவும் நல்ல விளையாட்டு வீரர்களை உருவாக்கப்போவதில்லை.

முதல் தோல்வியிலேயே ஊக்கமில்லாமல் கருகிவிடும் மொட்டுக்கள் நம் தோட்டங்களில் எத்தனையோ?. வெற்றி பெற்றவர்களை அதீத உற்சாகப்படுத்த தயங்காதவர்கள், தோல்வி கண்டவர்களை ஊக்குவிக்க தயக்கம்கொள்வதேனோ?

அடுத்த காரணம் தேர்வில் நடக்கும் அரசியல், அதை பலரும் துவைத்து, பிழிந்து அலசி காயவைத்துவிட்டார்கள், அங்கு அப்படி நடந்துகொள்பவர்களில் கணிசமான பங்கு அதிகாரிகள் அல்லவா? அவர்களும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வர்க்கத்தினர் தானே? அவர்களை போன்ற மாற்ற அதிகாரிகள் மற்ற விஷயங்களில் செய்யும் அரசியல் இவர்களை பாதிப்பதே இல்லையா? பெரிய வட்ட மேஜையில் ஒருவர் கைமாற்றி கைமாற்றி வரும் பனிக்கட்டியை போல இறுதியில் வந்துசேரும்போது வெறும் தண்ணீர் இருந்ததற்கான அறிகுறி என்பது போலத்தான் இவர்கள் நிதி ஒதுக்கீட்டில் செய்யும் அரசியல்.

மிகமுக்கியமான பலரும் கவனிக்கத்தவருகின்ற அல்லது வசதியாய் மறந்துவிடும் காரணம், விளையாட்டை சரியாக மார்க்கெட்டிங் பண்ணுவது. இன்னும் கூட டிடியில் அலுப்பூட்டும் வர்ணனையுடன் வரும் ஒலிம்பிக்ஸ்-ஐ எந்த சிறுவர்களும் இளைஞர்களும் பார்க்கப்போவதில்லை. ஒலிம்பிக்ஸ்-க்கே இந்த கதியென்றால், லோக்கலில் நடக்கும் விளையாட்டு போட்டிகளை நினைத்துப்பாருங்கள்? பின் Sponser இல்லையென்றும், யாரும் முன்வராததால் விளையாட்டை முன்னேற்றமுடிவதில்லை என்றும் குறைகூட மட்டும் அனைவரும் முன்வந்துவிடுவர். Sponser செய்பவர்கள் யாரும் சேவை செய்யப்பிறந்தவர்கள் இல்லை, அவர்களுக்கு அது ஒரு வியாபார மூலதனம்.

என் நண்பன் ஒருவன் கல்லூரியில் மிகச்சிறந்த discus thrower ஆனால் அவனும் சரி, அவனின் குடும்பத்தினரும் சரி தெளிவாய் இருந்தனர், இது வாழ்க்கைக்கு உதவப்போவதில்லை என.இதில் நாம் குற்றம் சாட்டப்போவது யாரை? சத்தியமாய் அவர்களை அல்ல, இப்படிப்பட்ட திறமைகளை ஊக்குவிக்காத விளையாட்டு அமைப்பின்மீது தான், ஒரு விளையாட்டை ஒரு profession-ஆக நம்மை தேர்ந்துடுக்க விடாத அளவுக்கு இருப்பது அதன் financial returns. அது மிகப்பெரும் வெற்றி அடைபவர்களையே சேருகின்றது.

என் தம்பி ஒருவன் athletics-லும், discus throw-விலும் பள்ளியில் மிகச்சிறப்பாய் விளையாடிக்கொண்டிருந்தவன், இப்பொழுது விளையாடிக்கொண்டே படிப்பை கோட்டை விட்டவன் என்ற பெயர்தான் அவனுக்கு வீட்டில் பலரிடம் மிச்சம் (இத்தனைக்கும் அவன் பெற்றது ஒரு descent enough percentage).

யாரிடமாவது சொல்லிப்பாருங்கள், நான் ஓவியனாக இருக்கிறேன், செஸ் விளையாடுவது என் தொழில் என்று, எம்.எப். ஹுசைன்-ஐயும், விஸ்வநாதன் ஆனந்தையும் கேலி செய்ய துணியாதவர்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்று.. சிறு வயதிலிருந்தே, விளையாட்டு ஒரு hobby என்று மட்டுமே சொல்லி வளர்க்கப்பட்டவர்கள் நம்மில் பெரும்பாலானவர்கள்.

சில வருடங்களுக்கு முன் படித்த குற்றாலீஸ்வரனின் பேட்டி ஒன்று நியாபகம் வந்து தொலைக்கின்றது, நிதர்சனத்தின் மறுஉருவம் என்று சொல்லுமளவுக்கு அமைந்திருந்தது அந்த பேட்டி.. மீடியாவின் வெளிச்சத்திலிருந்த ஒருவருக்கே இந்த நிலைமை என்றால் மற்றவருக்கு ?
இத்தனையும் தாண்டி 110 கோடி மக்கள் தொகையில் ஒரு தங்கம் மட்டுமா ? (ஒலிம்பிக்கில் என்ன இத்தனை பேருக்கு ஒரு தங்கம் என்று திட்டமா இருக்குது) , சிறிய நாடுகள் குவிக்கவில்லையா ? என சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கு விடைகாண முயற்சிப்போம்.


பி.கு:
அபினவின் இந்த பதிவை பார்த்ததும் ஏற்கனவே இருந்த எண்ணங்களை பகிர்ந்துகொள்ளவேண்டும் என தோன்றியதின் விளைவு.

Whatzup Bro

Published by யாத்ரீகன் under on திங்கள், ஆகஸ்ட் 04, 2008
ஞாயிறு காலை, சுடச்சுட, மிளகு காரம் தொண்டைஎங்கும் இறங்க, பொங்கல் சாப்பிட்டுவிட்டு வெளியே வர, அற்புதமான மேகமூட்டத்துடனான வெயில் வெளியே.. refreshing-ah என்ன பண்ணலாமென யோசிக்கையில் ரிதம் படம் கையில் தட்டுப்பட்டது.. Netflix-இல் OldBoy மூலம் போனவாரம் போட்டுக்கொண்ட சூடு நியாபகம் வர.. வேறு யோசனையின்றி போட்டுவிட்டேன்..

வஸந்தின் படங்கள் எல்லாம் ஒரு மாதிரி feel good படங்கள், மெல்லிய நீரோடை மாதிரி, ரொம்ப ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஓடிவிடும்.. ஆனால் என்ன பேசி பேசி கதாபத்திரங்களுக்கு மூச்சு வாங்குகிறதோ இல்லையோ பார்க்கும் நமக்கு களைப்பாகிவிடுகின்றது.. அப்போ அப்போ அலுக்கும் streotype காட்சிகளும் இதோடு சேர்ந்து கொள்ள.. (அத்தனையும் தெரிந்தும் தியேட்டரில் பார்ப்பதற்கு நான் முயற்சி எடுத்து சூடுபட்டுக்கொண்ட படம் சத்தம் போடாதே மட்டும் தான்)...

ரஹ்மானின் இசை, அழகான ஜோ, அமைதியான அர்ஜுன், Nostalgic தனியே தன்னந்தனியே பாடலும் மயக்கும் ஷங்கர் மஹாதேவனின் குரலும்.. நிஜமாவே refreshing தான்.. ஒரு கட்டத்தில் இன்னும் எவ்வளவு நேரம் படம் இருக்குன்னு பார்க்கையில் இன்னும் ஒரு மணிநேரமா என அலுத்துத்தான் போனது.. ஆனால் மோசமில்லை its so refreshing.. ஒரே யோசனையில் சொல்வேன் இசைதான் காரணம் :-)

கொல்கத்தா நாட்கள் - சோனாகாச்சி - 2

Published by யாத்ரீகன் under , , on வியாழன், ஜூலை 24, 2008
வெளிச்சம்கூட மூச்சுத்திணறும் அளவுக்கு நெருக்கியடித்துக்கொண்டிருக்கும் கட்டிடங்கள் கொண்ட மெயின் ரோட்டிலிருந்து பிரியும் மற்றுமொரு சிறிய ரோடு அது. ரோடு தான் சிறியதே தவிர அதை பெரும் கூட்டம் அடைத்துக்கொண்டிருக்கின்றது. திருவிழாக்கூட்டத்திற்கு சிறிதும் குறையாத கூட்டம் எங்கும் பாங்களா (Bangala) கூச்சல்கள்.

ரோட்டின் இருபுறமும், ஒவ்வொரு வீடுகளின் முன்னிலும் குறைந்தது 4/5 பெண்கள், முன்னே சொன்ன அடையாளங்களுடன். யாரும் யாரையும் தேவையின்றி தொந்தரவு செய்வதில்லை, ரோட்டின் நடுவே வற்றிப்போக வாய்ப்பிலாத இரவு நேர ஜீவநதி, நாட்டில் ஆண்களாய் உருவகம் செய்யத்தக்க ஒரே நதியென்று நினைக்கிறேன். சாரை சாரையாய் ஆண்கள், குமாஸ்தாக்கள், கூலி வேலை செய்து களைத்தவர்கள், ரிக்க்ஷா இழுத்து வியர்வையில் குளித்தவர்கள் என ஊரின் வறுமைக்கோட்டு ஆண்களிலிருந்து மத்தியதர ஆண்கள் வரை ஒரே இரவில் குவிந்து விட்டார்களோ என்று நினைக்குமளவிற்கு.

எவரும் நிற்பதாய் தெரியவில்லை, நடந்து கொண்டே இருக்கிறார்கள். நடந்து கடப்பதா இவர்களின் நோக்கம் என்று சந்தேகிக்கும் வேளையிலே அவர்களின் வேலையும் நடந்துகொண்டே இருக்கின்றது.

இருபுறமும் நிற்பவர்களை மெல்ல பார்த்த எங்களுக்கு இங்கிருந்து தான் அதிர்ச்சி தொடங்கியது. இதுவரை பாலியல் தொழில் என்று கிளு கிளுப்பான சாதரண பார்வையிலிருந்த எங்களுக்கு,அங்கிருந்த 4/5 பெண்களில் குறைந்தபட்சம் இருவராவது சிறுமிகள் என்பதே முதலில் ஜீரணிக்க முடியவில்லை.

சிறுமிகள் என்ற வார்த்தை சாதரண பயன்பாடை போலேவே தோன்றுகிறது, அதன் முழுமையான அதிர்வை கொடுக்க தவறுகின்றது. 15 வயதை கூட தொடாத குழந்தைகள் போலத்தான் இருந்தார்கள், அவர்களை அரைகுறை ஆடைகளில் பார்க்கவே எங்கள் மேல் எங்களுக்கு அருவருக்கத்துவங்கியது. சாதரணமாய் பார்த்தால் பள்ளி ஆண்டுவிழாவில் மேக்கப் போட்டு மேடையேரத்தயாராய் இருக்கும் குழந்தைகள் போல இருக்கும் அவர்கள், அடுத்த சில வினாடிகளில் அவர்கள் கடக்கப்போகும் நிகழ்வைக்குறித்த பிரக்ங்கை சிறிதும் இன்றி, அருகில் ஒருவரை ஒருவர் சீண்டிக்கொண்டு, தங்களை பார்பவர்களிடம் சைகைகள் காட்டிக்கொண்டு... சத்தியமாய் மிகக்கொடுமையான தருணங்கள் அவை. மீண்டும் கற்பனை செய்து பார்க்கவே வலிக்கின்றது.

இவர்களுடன் நிற்கும் இளவயது பெண்கள், கண்களில் எந்த ஒரு உணர்ச்சியுமின்றி, அங்கு நிற்பது அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமை என்பதுபோல நின்றிருக்கிறார்கள். இப்பெண்களில் சிலர் தங்கள் கைக்குழந்தைகளில் இருந்து சிறு குழந்தைகளை கவனித்துக்கொண்டே நிற்கின்றனர்.

அடுத்து பார்த்தது வயதானவர்கள், வாழ்வின் கடைசி 15 வருடங்களில் இருப்பவர்களை போன்று இருப்பவர்கள், அவர்களும் இந்த வரிசையில் நிற்பதை என்னவென்று சொல்லத்தெரியவில்லை, பரிதாபமா இல்லை இவர்களையுமா வதைக்க வேண்டுமா என்று கோபமா தெரியவில்லை.

இவர்களுடன் பல திருநங்கைகளும் உண்டு.

தெரு செல்லச்செல்ல குறுகிக்கொண்டே போனது, கூட்டம் இருபுறமும் நின்று கொண்டிருந்தவர்களை இலவசமாய் உரசிச்சென்று கொண்டிருந்தது. எங்களுக்குள் இருந்த குறுகுறுப்போ போய், அருவருப்பு தொடங்கியது. அந்த வயதும், அதுவரை தெரிந்திருந்த கற்பனை உலகமும், எங்களை எதையோ எதிர்பார்த்து அழைத்து வந்திருந்தது.. ஆனால் அங்கே நடந்ததோ, உண்மையின் கசப்பும், குரூரமும் ஒன்று சேரத்தாக்க கொஞ்சம் கொஞ்சமாய் உடைந்து போய்க்கொண்டிருந்தோம். அங்கு நடந்துகொண்டிருக்கும் எதையும் எங்களால் கனவல்ல நிஜம் என்று ஜீரணிக்க முடியவில்லை.

மேலும் குறுகிய தெருக்களின் இருட்டிலும் எங்கள் கண்களின் மிரட்சியையும் பயத்தையும் எளிதாய் இனங்கண்டு கொண்ட நபர்கள் தரகர்களைப்போல எங்களை இழுத்துக்கொண்டு அப்பெண்களருகே நிறுத்தி விலை பேசத்துவங்கி விட்டனர். உதறிக்கொண்டு விலகும் எங்களை பார்த்ததற்கு காசு என மிரட்டவும் துவங்கிவிட்டனர்.

இன்னும் உள்ளே செல்லச்செல்ல, பார்க்கும் விஷயங்களின் வீரியம் அதிகமாகிப்போனது, அதற்கு மேல் எதையும் கவனிக்கும் மனநிலையில் எவரும் இல்லை. உடனே திரும்பிப்போகத்துவங்கினோம்.

வீட்டிற்கு வந்து சேரும்வரை மௌனத்தை மட்டுமே பரிமாறிக்கொண்டோம், அதற்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளக்கூட தயங்கினோம். ஒருவழியாய் வீட்டினில் நுழைந்தும் இரவு முழுவதும் அத்தனை குளிரிலும் மனப்புழுக்கம் தாங்காமலா, இல்லை குற்றஉணர்ச்சியா, அருருவருப்பா என புரியவில்லை, மயான அமைதியாய் நிசப்தத்துடன் அன்றிரவு மட்டுமல்ல அடுத்த 4/5 நாட்கள் கழிந்தன.

இந்த நிகழ்வுகளை அன்றைய நாட்குறிப்பில் குறிக்கையில் பல எண்ணங்கள். இங்கே எனக்கு வந்திருப்பதென்ன உணர்ச்சி ?

அழகான பெண்களை எதிர்பார்த்துச்சென்று அவலட்ச்சணமாணவர்களை பார்த்த அருவெறுப்பா ? இல்லை அந்த குழந்தைகளை பார்த்து, இவர்களை பயன்படுத்தும் இடத்துக்கு சென்று விட்டோமே என்று வருத்தமா/குற்றஉணர்ச்சியா ?, இல்லை திருநங்கைகளையும் வயதானவர்களையும் கூட பயன்படுத்திக்கொள்ள நினைப்பவர்களும் உண்டா என்ற அதிர்ச்சியா ? ஒன்றும் உடனடியாய் புரியவில்லை.

உண்மையை வெட்க்கமில்லாமல் ஒப்புக்கொள்வதானால், அருவருப்பில்தான் தொடங்கியது சிந்தனை. தவறுதான், இந்த சிந்தனையில் இருப்பவனுக்கும், அங்கு தெருக்களில் தன் வேட்க்கையை தனித்துவிட திரிபவனுக்கும் பெரிய வித்தியாசமில்லைதான், ஆனால் அப்படித்தான் தொடங்கியது. பின் அந்த குழந்தைகளை நினைக்கையில், எப்படி இவர்களால் முடிகின்றது, குழந்தைகள் என்ற எண்ணம் வரவே வராதா, இங்கிருந்து திரும்பி வீட்டுக்குத்திரும்புகையில் குற்ற உணர்ச்சியின் ஒரு துளிகூட இருக்காதா என தோன்றியது. இதில் வறுமைக்கோட்டுக்கு கிழே உள்ளவர் மட்டும் என்றில்லை என்று Park Street-இல் இரவு 10 மணிக்கு மேல் சென்றால் தெரிந்தது.

அந்த நேரத்தில்,ஆண்டாள் ப்ரியதர்ஷினியின் "மன்மத எந்திரம்" என்ற கவிதைத்தொகுப்பு படிக்க வாய்ப்பமைந்தது. மனதில் தோன்றியிருந்த முடிவில்லாக்கேள்விகளுக்கு புதியதாய் ஒரு கோணம் அமைந்தது. தோன்றிய கேள்விகள் அனைத்தையும் இப்பொழுது அந்த பாலியல் பெண்களின் பார்வையில் யோசிக்க இன்னும் கொடுமையை இருந்தது. புத்தகத்தின் தலைப்பே அதன் கதை சொல்லியது.

அங்கிருக்கும் எவர்க்கும் அதில் ஈடுபாடு இருக்கப்போவதில்லை, ஆனால் அதையும் ஒரு தொழிலாக கருதிக்கொண்டு வாழும் மனநிலைக்கு தள்ளப்பட்டுவிடுகின்றனர். இவர்கள் இல்லையேல் மற்ற பெண்கள் தைரியமாய் நடமாட முடியாது என்று சொல்பவர்களுக்கு, இவர்களை பலிகடாக்களாக்க யாருக்கு யார் அதிகாரம் தந்தது.

10 ரூபாயிலிருந்து இங்கு உங்களுக்கு தேவையானது கிடைக்குமென சொல்லும் தரகர்களின் உறுதியான குரலில் தெரிந்தது என்ன ? எப்படியாயினும் எனக்குத்தேவை சிறிது நேரத்துக்கு ஒரு உடல் என்று வெறி கொண்டு அலையும் ஆண்களின் மேல் உள்ள நம்பிக்கையா ?

எங்களால் என்ன செய்துவிட முடியும் என்ற மனநிலைக்கு வந்துவிட்ட அங்கு நடமாடும் காவல்துறை. இவர்களை மீட்டெடுப்பது என்பது நடக்கக்கூடிய விஷயமில்லை, அதைத்தவிர உருப்படியாய் இவர்களுக்கு பாலியல் நோய்களைப்பற்றிய விழிப்புணர்வு கொண்டுவரத்துடிக்கும் சமூக அமைப்புகள். என அத்தனை பேரும் இவர்களைச்சுற்றி இயங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களுடன், இத்தகைய இடமொன்று தங்களிடையே உண்டென்பதை தங்கள் கொல்கத்தா வாழ்வின் மற்றுமொரு அங்கமாக எடுத்துக்கொண்டு அருவருக்காமல்/தயங்காமல், தனக்கும் அந்த இடத்திற்கும் சம்பந்தமில்லாததைபோல நாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன பெங்காலி நண்பர்கள்தான் சராசரியான ஒரு நடுத்தரவர்க்க பெங்காலி.

இதற்குப்பின் சோவாபஜாரை கடக்கும்பொழுதெல்லாம் எங்களையுமறியாமல் ஒரு குற்ற உணர்வில் எங்கள் மனம் கணக்கத்துவங்கியது மட்டுமின்றி இத்தகைய விஷயங்களில் எங்களின் பார்வை மாறியது.

பி.கு:
2 வருடங்களுக்கு பிறகு ஒரு விடுமுறையில் துர்கா பூஜை காண சென்றிருந்தபோது, துர்க்கா சிலை வடிக்கும் சிற்பிகள் முதல் சிலையை இப்பெண்களின் காலடி மண்கொண்டு செய்வது தெய்வீகம் என்ற நம்பிக்கை இன்னும் பயன்பாட்டில் உள்ளது என்று கண்டு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. துர்கா பூஜையின் 3 முக்கிய நாட்களில் கொல்கத்தா நகரெங்கும் விழாக்கால பக்தி மயமாக, அன்றும் சோனாகாச்சியில் கூட்டத்துக்கு குறைவில்லை, பலத்த போலிஸ் காவலும் அங்கிருந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருப்பதை கண்டதும் என்ன மதம், என்ன நம்பிக்கை, என்ன சமூகம் என்று கோபங்கள் அதிகமாகிப்போனது.

கொல்கத்தா நாட்கள் - சோனாகாச்சி - 1

Published by யாத்ரீகன் under , , on புதன், ஜூலை 23, 2008
கொல்கத்தா போகப்போகிறோம் என்று முடிவானதும் நண்பர்கள் குறுகுறுவென பேசிக்கொண்ட விஷயம் "சோனாகாச்சி". கல்லூரி முடித்திருந்த நேரம், எதை பார்க்கும் போதும் அதன் பின்புலத்திலிருக்கும் வலிகளோ/வேதனைகளோ உடனே உணராத வயது.

>>> சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்ட விளிம்புநிலையில் வாழும் சிறுவர்கள் வாழ்வின் யதார்தத்தை எளிதில் உணர்ந்து கொள்கிறார்கள். தங்களைச் சுற்றியுள்ள உலகம் குறித்தான புரிதலை அவர்களின் குடும்பமும் சமூகச் சூழ்நிலையும் சிறுவயதிலேயே ஏற்படுத்திவிடுகின்றன. சமூகம் அவர்களைக் கண்டும் காணாதது போல் தலையைத் திருப்பிக் கொள்கிறது. புறக்கணிப்புகளும் ஏமாற்றங்களுமே வாழ்வாகிப் போனாலும் அவை அச்சிறுவர்களின் ஆசைகளையும் கனவுகளையும் ஒருபோதும் அசைத்துப் பார்ப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களின் நிலையிலிருந்து வெளிவரவேண்டுமென்ற உத்வேகமும் தன்னோடு தன் சமூகமும் மேலெழ வேண்டுமென்ற லட்சியமும் சிறுவயதிலேயே மனதில் ஊன்றிவிடுகின்றன. ஆனால் அதற்கான வழிகளைச் சமூகம் எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி அடைத்துவைத்திருக்கின்றது. <<<

கப்பியின் இந்த பதிவில் வரும் மேற்கூறிய வாசகங்களில் உள்ள நிதர்சனம் நம் முகத்திலறையும். இதில் சமூகம் என பொதுப்படையாய் கூறியிருந்தாலும் அதிலொரு பங்கு நமக்கும் தொடர்பு உண்டு என்பது கசக்கும் உண்மை. எங்கோ நடக்கும் துயருக்கு நான் எப்படி பொறுப்பாவேன் என்று கேள்வி எழுப்பினால், பின் உங்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கேதிறாய் உங்களுக்காக குரல் கொடுக்ககூட யாரும் இருக்கப்போவதில்லை.

When the Nazis came for the communists, I said nothing; I was, of course, no communist.
When they locked up the Social Democrats, I said nothing; I was, of course, no Social Democrat.
When they came for the trade unionists, I said nothing; I was, of course, no trade unionist.
When they came for me, there was no one left who could protest.

கப்பியின் இந்த பதிவில் Born into Brothels என்ற ஆவணப்படத்தை குறிப்பிட்டிருந்ததை படித்ததும், இதற்கு முன் தேடி கிடைத்திராத DVD தற்போது NetFlix-இன் உதவியுடன் பார்த்து முடித்ததும், மனக்குரங்கு சட சடவென கொல்கத்தாவின் நினைவுகளுக்கு தவ்வத்தொடங்கியது.

கொல்கத்தா போகப்போகிறோம் என்று முடிவானதும் நண்பர்கள் குறுகுறுவென பேசிக்கொண்ட விஷயம் "சோனாகாச்சி". கல்லூரி முடித்திருந்த நேரம், எதை பார்க்கும் போதும் அதன் பின்புலத்திலிருக்கும் வலிகளோ/வேதனைகளோ உடனே உணராத வயது.

வேலை துவங்கி, கொல்கத்தாவின் புகழ்பெற்ற இடங்களாக போகத்துவங்கியதும், எப்போது எப்போது என நேரம் கிடைத்தபோதெல்லாம் பர பரத்துக்கொண்டிருந்தோம். யாவருக்கும் அங்கே செயலில் ஈடுபடுவதில் மனமில்லை என்பதோடு தைரியமுமில்லை என்று எங்களுக்குள் தெரிந்திருந்தாலும், இங்கிருக்கும்போதே எப்படி இருக்கும் என்று பார்த்துவிடவேண்டும் என்று ஏதோ ஒரு குறுகுறுப்பு. என்னதான் "மஹாநதி, குணா.." என்று படங்களில் பார்த்திருந்தாலும், அப்படி என்னதான் மச்சான் பண்றாங்கன்னு பார்த்திரலாம்டானு காத்துக்கொண்டிருந்தோம்.

எங்களுடன் 6 தோழியரும் இருந்த நேரம் என்பதனால் அவர்களை கழட்டி விட்டு விட்டு சென்று வர சரியான சந்தர்ப்பம் வாய்க்க காத்துக்கொண்டிருந்தோம். சோனாகாச்சி என்பது கொல்கத்தாவின் புகழ்(?) பெற்ற இடமாயினும் அது ஒன்றும் மேப்பில் உள்ள ஒரு இடமல்ல, சகவயது பெங்காலி நண்பர்களிடம் அரட்டியடிக்கும்போதும், "சோனாகாச்சி"-யின் சரியான இடமேது என்பதில் எங்களின் தேடல் துவங்கியது. கேட்ட பெங்காலி நண்பர்களும் அதிர்ச்சியோ அருவருப்போ எதுவும் தராமல், தவறாமல் சரியான விடை தெரியாமல் நாக்கை பிதுக்கிகொண்டிருந்தனர் அல்லது ஆளுக்கு ஒரு இட எல்லையை சொல்லிக்கொண்டிருந்தனர் அதுவும் உறுதியாகச்சொல்லாமல்.

ஒவ்வொரு முறையும், நிரம்பி வழியும் மேக்கப்புடன் ஒரு பெண்ணை மெட்ரோ இரயில் நிலையத்தின் இடுக்கில் பார்ப்பதும், இந்த இடமாய் இருக்குமோ என்று ஏகப்பட்ட யூகங்கள் வேறு. ஒரு வழியாய் "சோனாகாச்சி" என்பது சோவாபஜார் (Shova Bazar) மெட்ரோ நிலையத்தினருகே தொடங்கி எம்.ஜி ரோடு (Mahatma Gandhi Road) மெட்ரோ வரையிலான நிழற்ப்பகுதியே என உறுதிசெய்தோம்.

அதன் பின்னர் இவ்விரு இடங்களை கடந்து செல்லும்போதேலாம் கண்கள் அலைபாயும், 10 பேரும் தோழியருடன் அந்த இடங்களை இரவில் கடக்கும்போதெல்லாம் ஏதோ ஒரு பயம் உரசிவிட்டுப்போகும்.

ஒருநாள் அலுவலகத்திலிருந்து 10 பேரும் கிளம்புவதற்கு பதிலாக நாங்கள் நால்வர் மட்டும் தங்கிவிட்டு பின்னர் தனியே புறப்பட்டோம். இரவு 10 மணிக்குள் அந்த பகுதியில் இருந்து வெளியே வந்துவிடுங்கள், பயத்தை கண்களில் தவறியும் காட்டாதீர்கள், கைப்பிடித்து இழுப்பவரை உதறுவதில் சிறிதும் தயக்கம் காட்டாதீர்கள் என பல அறிவுரைகள் வேறு.

சோவாபசாரில் இறங்கியதும், இடதா வலதா எங்குபோவது, தெரியாத ஊராயினும் வெட்க்கம்விட்டு கேட்க்க முடியாத இடம். ஒருவழியாய் ரோட்டில் ஜால்மூரி (பொறி ) விற்பவரை கேட்டு (அவர் எங்களை மேலும் கீழும் பார்த்து வழி சொன்னது வேறு கதை), நடக்க ஆரம்பித்தோம். எவனாவது ஒருவன் சஞ்சலமாவது போல் தெரிந்தாலும் மீதி மூவர் அவனை இழுத்துக்கொண்டு வெளியேறுவது என்று ஒரு ஒப்பந்தம் வேறு எங்களுக்குள்.

நடக்க ஆரம்பித்து பல அடிகள் கடந்திருந்தாலும், எதற்கான ஒரு அறிகுறியும் இன்றி, வழக்கமான பரபரப்புடன், அதிக பொதுமக்கள் (சாதரண பெண்கள்,குழந்தைகள் உட்பட) நடமாட்டத்துடன், அங்காங்கே பயனில் இருக்கும் டிராம் தடங்களுடன் இருந்த கொல்கத்தாவின் மற்றுமொரு குறுகிய பழந்தெருக்கள் போலவே தோன்றியது. இரு பொட்டலமாவது வாங்கி இருக்கலாம் அந்த ஜால்மூரி விற்பவரிடம் சரியான வழியாவது காண்பித்திருப்பான் என்று புலம்பிக்கொண்டே நடந்துகொண்டிருந்தோம்.

போகப்போக தெரு மேலும் குறுகத்துவங்கியது, கடைகளில் வெள்ளை வெளிச்சம் போய் மஞ்சள் நிற தெருவிளக்குகள் மட்டுமே அதிகமானது. வாழ்வின் அதிர்ச்சியான கட்டங்களை நோக்கித்தான் செல்கின்றோம் எனத்தெரியாமல், வழக்கமான அபத்தமான காமேன்ட்டுகளுடன் சிரித்துக்கொண்டே தான் சென்றோம் ஒரு வீட்டின் வாசலில், அதீத மேக்கப்புடன் நிற்கும் அந்த நான்கு பெண்களை பார்க்கும்வரை.

நான்கு பெண்கள், அலைபாயும் கண்கள் எங்கும் மை, பளபளக்கும் உடை, உதட்டில் வழியும் சிவப்பு, கைகளின் மாநிறத்திற்கு பொருந்தாத பிங்க் கன்னங்கள் என அடையாளங்களை கண்டதும் நுழைந்துவிட்டோம் என்று தோன்றியது. அடுத்த வெகுதூரத்துக்கு நடந்தும், சம்பந்தமிலாமல் ஒரு நல்ல ஏரியாவில் இந்த வீடா என்று தோன்றியது. இன்னும் குறுக்கு சந்துகளுக்குள் புகுந்து செல்லச்செல்ல அங்கிருந்தது வெளியில் நாங்கள் கண்டதற்கு சம்பந்தமில்லா உலகம் கண்டு ஒரு நொடி அரண்டு போயிருந்தோம்.

வரிசையாக வீடுகள், வாசல்களில் கும்பல் கும்பலாக பெண்கள். ஒவ்வொரு வீட்டின் முன் ஆண்கள் ஒரு சில நொடிகள் நிற்பது போலத்தோன்றும், அதற்குள் எல்லாம் பேசி முடித்து, புறாக்கூண்டு போலிருக்கும் ஒண்டுக்குடித்தன வீடுகளுக்குள் அழைத்துச்சென்றனர். நடைபாதையில் சில போலிஸ் கான்ஸ்டபிள்கள் வாய்நிறைய ஜால்மூரியும் கைநிறைய கலைக் ஷனுமாய் ரவுண்ட்ஸ் வேறு. அவர்கள் கண்முன்னே நடக்கும் செயலுக்கும் தங்களுக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லாத மாதிரி அவர்கள் சென்ற விதம் எங்களுக்கு பெரும் அதிர்ச்சிதான். என்னதான் படங்களில் போலீஸ்காரர்களின் கண்முன்னே தவறுகள் நடக்கும்போது சாதரணமாய் போவது போல பார்த்திருந்தாலும் , கேட்டிருந்தாலும்.. நேரில் பார்த்தபோது அதிர்வதை தவிர்க்க இயலவில்லை.

ஒரு வீட்டின் எதிரே ரோட்டுக்கடையில் Chowmien வாங்கி சாப்பிட்டுக்கொண்டே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம், பின்னே மானமுள்ளவர்களுக்கு வெறுமனே வெறித்துப்பார்ப்பது கூச்சமாயிருக்காதா :-( .. ஒவ்வொரு வீட்டிலும் வருவதும் போவதும், சில நிமிடங்களில் வாசல் காலியாவதும் வாடிக்கையாய் நடந்துகொண்டிருந்தது.

வாங்கிய Chowmien தீர்ந்ததும் மீண்டும் நடக்க ஆரம்பித்தோம், இந்த முறை பக்கத்தில் சென்று பார்த்துவிடுவதாய் திட்டம், ஒரு இடத்தில் கூட்டமாய் சிறு சந்து ஒன்று, உள்ளே செல்ல முடிவிடுத்து செல்லத்தொடங்கினோம். விளையாட்டாய் தொடங்கிய விஷயங்களுள் இத்தனை கூரூரம், வேதனை என வாழ்வின் அத்தனை கஷ்டங்களுக்கும் ஆளானவர்கள் இவர்கள் என உணரவைத்த தருணம் அது.

வெள்ளம்

Published by யாத்ரீகன் under , on புதன், ஜூலை 02, 2008
வெள்ளம் வந்ததற்கான அறிகுறிகள் முற்றிலும் மறைந்துபோய்விட்டன, சிலவாரங்களுக்கு முன் கடும் வெள்ளம் வந்த ஊரா எனும் எண்ணும் வண்ணம் வெயில் கொளுத்துகின்றது. மூடப்பட்டிருந்த சாலைகள், அலுவலகங்கள் எனமுழுமையாய் திறந்து செயல் படத்துவங்கி விட்டன. வெயிலின் புழுக்கம்அதிகமாகி, ஒரே இரவில் Tornado warning என்பதும் thunderstom warning என்பதும் மிகவும் நெருக்கமாய்விட்டது.

100 வருடங்கள் கழித்து இப்படி ஒரு கடும் பாதிப்பு என்பதாலோ என்னவோ, உடனடி உதவிக்கு வந்தவரிலிருந்து தீயணைப்புத்துறையினர் வரை திகைத்துப்போய் விட்டனர்... எங்கிருந்து தொடங்குவது , யாரை எப்படி கவனிப்பது, யாருக்கு முதலிடம் குடுப்பது என அத்தனை குழப்பம்.. ஆனால் மிகவிரைவாய் மீண்டு, ஒரு ஒழுங்கு முறையோடு மீட்பு பணிகளை நடத்தியவர்களை பாராட்டித்தான் ஆகவேண்டும்.

கால்வாயின் படுகையினோரம் இருந்ததால் அலுவலகம் உச்சகட்டபாதிப்புக்குள்ளானது. இருந்த Test Engines , Prototypes, Servers, Wirings என அத்தனையும் வெள்ளம் வாரிக்கொண்டு போய்விட, இன்றுவரை 150 பேர் இராப்பகலாக உழைத்தும் அலுவலகம் முழுமையாய் செயல்படத்துவங்கிய பாடில்லை. வெகுசில இடங்களில் மட்டும் மின்சாரம், காற்றும் வெளியில் இருந்து generator மூலமாக பம்ப் செய்யப்பட்டு, குடிதண்ணீரும் இலவசமாய் பாட்டில்-களில் விநியோகிக்கப்பட்டு இன்று முதல் இங்கு மீண்டும் வேலை தொடங்கினோம்.

வெள்ளத்தின் சூழல் அறியாமல் Volleyball விளையாண்டு முடிக்கையில் எங்களை சுற்றி கால்வாயில் வழிந்த உபரி நீர், சூழ்ந்திருந்த நீரில் விளையாண்டு வீட்டுக்கு திரும்பிவிட்டோம். வரும் வழியில் ஆங்கிலம் தெரியுமா, உதவிக்கு வர முடியுமா என்று அழைத்தவரிடம் சென்றால், எங்கோ ஒரு முதியோர் இல்லத்தை காலி செய்து வீட்டினருகே இருக்கும் பள்ளியில் தஞ்சம் புகுந்துகொண்டிருந்தனர். அதுவரை வெள்ளத்தின் விபரீதம் புரியாமல் தான் விளையாண்டுகொண்டிருந்தோம்.

எத்தனை முதியோர்கள், சும்மா இல்லை குறைந்தது 85-95 வரை இருந்திருப்பார்கள். தொட்டாலே வலிக்குமோ என்பது போல மெல்லிய தோல். இருவரை கவனமாய் இறக்கி பள்ளியில் விட்டபின் நம்ம வீடு என்னாச்சு பார்ப்போம் என்று புறப்பட்டாச்சு.

நள்ளிரவில் மின்சாரமும் முழுமையாய் தடைபட்டு போனது (பாதுகாப்புக்காரணங்களுக்காக), வீட்டைக்காலி செய்ய அறிவிப்பு வந்ததும்தான் மெழுகுவத்தியும் தீப்பெட்டியும் வீட்டில் இல்லாதது உரைத்தது :-) , இருந்த கைபேசி வெளிச்சத்தில் பாஸ்போர்ட், சில துணிகள் தூக்கிக்கொண்டு வெளியேற ஆரம்பித்தோம். அடுத்த நாள் விடியும் வரை இப்படியே திரிவோம் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

காரை கிடைத்த மேட்டில் ஏற்றிவிட்டு கடைசி ஆசாமி புறப்படுகையில் Apartment Complex-எ ஒரே ரணகளம்தான்.

அந்த முதியோர்களை ஏற்றும்போது இதே இடத்துக்குத்தான் நாமும் வருவோம்னும் கொஞ்சமும் எதிர்பார்க்கல :-) , மடக்கு படுக்கை, போர்வை, சிறிது தின்பண்டம்னு சட சட்னு விநியோகம் ஒரு பக்கம் ஆரம்பிச்சாச்சு. சரி இந்த நிலைமைல நம்ம ஊர் மக்களும் இந்த ஊர் மக்களும் என்னதான் பண்றாங்கன்னு பார்க்க ஆரம்பிச்சேன்.. ஹ்ம்ம்..

கொஞ்ச நேரத்திலேயே படார்னு பயங்கர சப்தம், பூட்டியிருக்கும் கதவை ஒடச்சிட்டு தண்ணிர் உள்ளே வருது.. ஏதோ ஆங்கில படம் பார்க்குற உணர்வு, 15 நிமிஷம் இடுப்பளவு தண்ணீர் இந்த பள்ளியினுள். அந்த இடத்துலதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எல்லா விநியோகமும் நடந்ததுனு நெனச்சுபார்த்தா, சரி ஏதோ பெருசா நடக்கபோகுதுனு தான் தோனுச்சு.. கீழ power lines எல்லாம் short circuit ஆகிகிட்டு இருக்கு, ஒரு பக்கம் படகுகள், life jacket-நு குவியுது.. குழந்தைகள் வச்சிருந்தவுங்க எல்லாம் பயப்பட ஆரம்பிச்சிட்டாங்க.. நம்ம bachelor பசங்க கோஷ்டி வழக்கம் போல மச்சான் அங்க பாருடா அந்த வயலட் கலர்னு இந்த ரணகளத்துலயும் ஒரு குதுகலமாத்தான் இருந்தாங்க :-) .. இத்தனை குழப்பத்துல , ஒரு அதிகாரியும் ஒரு அறிவிப்பும் வெளியிடுற மாதிரி தெரியல, வெளிய கொண்டுபோரதுக்கு எதுவும் நடவடிக்கை எடுக்குற மாதிரியும் தெரியல ..

நல்ல வேளை, தாமதமா ஆனாலும் மக்களை Panic அடையவிடாம அடுத்த பள்ளிக்கு எல்லோரையும் மாற்றி, அடுத்தநாள் காலை, மதியம் உணவுன்னு கொடுத்து நல்ல விதமாவே முடிஞ்சது.

அடுத்த ரெண்டு நாளைக்கு வீட்ல வர்ற தண்ணியில குளிக்க கூட கூடாதுன்னு கடும் அரசாங்க உத்தரவு, மின்சாரம் இல்லை, மின்சார அடுப்புனால எதுவும் சமைக்க முடியல, refridgerator-உம் வேளை செய்யாததால எல்லா கூத்தும் முடியும்போது இருந்த எல்ல பொருட்களையும் வெளில தான் தூக்கி போட வேண்டி வந்தது. ஊர்ல இருந்த கடைகள் எல்லாத்திலையும் தண்ணீர் பாட்டில் காலி, ஊருக்கு உள்ள வர்ற I-65/US-31 ஹைவேக்களும் மூடியாச்சு. வீட்ல இருந்த கேன்ஐ உலுக்கி உலுக்கி கடைசி துளி வரை பொறுப்பா பயன்படுத்துன நாட்கள் அவை :-)

மொத்தத்தில ரொம்ப வித்தியாசமான அனுபவம், நம்மூர்ல வெல்லம் மட்டுமே பார்த்தவனுக்கு இங்க வந்து வெள்ளம் பார்த்ததுல சிறுபுள்ளத்தனமான திருப்தி :-) , வீட்ல இருந்தே வேளை பாக்குறேன்னு NetFlix-ல வரிசையா படமா பார்த்து தள்ளின சந்தோசம் :-)

வித்தியாசமான அனுபவம்னு போக பல விஷயங்களை யோசிச்சு பார்க்க வைத்தது, அதையெல்லாம் பதிவு பண்ண, மனதில் தோன்றும் எண்ணங்களை அதே வேகத்தில் Blogger-இல் பதிவு செய்ய ஒரு சாதனம்தான் வேண்டும்.
(இதை பதிவு பண்றதுக்குள்ள அடுத்த வெள்ளமே வந்திருக்கும் போல :-)

வெள்ள இடமாற்றம்

Published by யாத்ரீகன் under on திங்கள், ஜூன் 09, 2008
வெள்ளம் - இடமாற்றம் - பாதுகாப்பு - அடுத்த இரண்டு நாட்கள் மீண்டும் வெள்ள அறிவிப்பு - வித்தியாச அனுபவம்

Kung Fu Panda

Published by யாத்ரீகன் under on சனி, ஜூன் 07, 2008


ரொம்ப எளிமையான கதை, அதை வழக்கமான சைனீஸ் டைப் திரைக்கதை. ஆனால் அதை படமாக்கிய விதம் கலக்கியிருக்காங்க. நகைச்சுவையை அங்க அங்க தூவாம , படம் முழுக்க, கடைசி நொடி வரை சிரிச்சிகிட்டே இருக்க வைக்கும் அளவுக்கு இருக்கு. அசத்தலான பின்னணி இசை, டைமிங் டயலாக், நுணுக்கமான அசைவுகளை துல்லியமாய் காமிக்கும் அனிமேஷன். சொல்லிகிட்டே போலாம், போய் பாருங்க.

எல்லாத்தையும் விட இன்னும் ஆச்சர்யப்பட வைத்த விஷயம், இந்த 1:30 மணி நேர படத்துக்கு பின்னால இருந்த மனிதர்கள், எத்தனை பேர், எத்தனை வித விதமான வேலைகள்... டைட்டில் போடுறாங்க போடுறாங்க போட்டுட்டே இருக்காங்க.

அட நம்ம ஜாக்கி ஜான் கூட பேசி இருக்காரே !!!

முணுமுணுப்பு

Published by யாத்ரீகன் under , on வெள்ளி, ஜூன் 06, 2008




அன்பே என் அன்பே
உன்விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன் ....

கனவே கனவே
கண்ணுரங்காமல் உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சி குளிர் பனிக்காலம்
அன்றில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்




யாரோ... மனதிலே.....
ஏனோ... கனவிலே...
நீயா... உயிரிலே...
தீயா... தெரியலே....